Thursday, January 16, 2025
முகப்புகட்சிகள்அ.தி.மு.கஇதுதாண்டா அம்மா போலீசு !

இதுதாண்டா அம்மா போலீசு !

-

சந்திரா
வக்கிரமான சித்திரவதைகளால் நடைப்பிணமாக்கப்பட்ட சந்திரா

ரண்டு ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியில் ஓடும் பேருந்தில் நடந்த நிர்பயா பாலியல் வல்லுறவு சம்பவத்தையொட்டி நடுத்தர வர்க்கத்தினரும் முதலாளித்துவ அறிவுத்துறையினரும் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளைத் தடுக்க சட்டத்தைக் கடுமையாக்க வேண்டும் எனக் குரல் கொடுத்துக் கொண்டிருந்த சமயத்தில், “இந்தியப் பெண்களின் முதன்மையான, அபாயகரமான எதிரி இந்த அரசமைப்புதான்; குறிப்பாக, சட்டத்தை அமல்படுத்தும் அதிகாரத்தைக் கொண்டிருக்கும் காக்கிச்சட்டை கிரிமினல்கள்தான்” என்பதை விளக்கி சிறப்புக் கட்டுரையொன்றை புதிய ஜனநாயகம் இதழில் வெளியிட்டிருந்தோம். அம்மா ஆட்சியில் தமிழக போலீசும்; போலீசு யார், ரவுடி யார் எனப் பிரித்துப் பார்க்க முடியாதபடி ஆட்சி நடந்துவரும் புதுச்சேரியில் அம்மாநில போலீசும் சம்பந்தப்பட்டுள்ள இரண்டு சம்பவங்கள் நமது கூற்றை நிரூபிக்கும் இன்னொரு சான்றாக அமைந்துள்ளன.

உடுமலைப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் உணவகத்தில் சமையல் உதவியாளராகப் பணிபுரிந்து வந்த சந்திராவை, அவர் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக விசாரிப்பதற்கு கடந்த ஆகஸ்டு 14 அன்று உடுமலைப்பேட்டை போலீசார் அழைத்துச் சென்றனர். விசாரணை என்ற போர்வையில் குற்றத்தை ஒப்புக்கொள்ளச் சொல்லி அவரை போலீசார் அச்சுறுத்தினர். சந்திரா அதற்குப் பணிய மறுக்கவே, அவர் மீது பாலியல் வல்லுறவு உள்ளிட்ட கொடூரமான சித்திரவதைகளை ஒன்றன்பின் ஒன்றாக ஏவியது, போலீசு.

முதலில் அவரது நகக்கண்கள் அனைத்தும் ஊசிகளால் துளைக்கப்பட்டன. அதற்குப் பிறகும் போலீசார் சொன்னபடி சந்திரா வாக்குமூலம் அளிக்க மறுக்கவே, சந்திரா நடுத்தர வயதை எட்டிய ஒரு தாய் என்றுகூட பாராமல், அவர் மீது பாலியல் வக்கிரம் நிறைந்த வன்முறை ஏவிவிடப்பட்டது. அவர் முழுமையாக நிர்வாணப்படுத்தப்பட்டு, தலைகீழாகத் தொங்கவிடப்பட்டு, பி.வி.சி. பைப்பால் தாக்கப்பட்டுள்ளார். அக்காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்குப் பிறகும்கூட சந்திராவிடமிருந்து போலீசாரால் ஒப்புதல் வாக்குமூலத்தைப் பெற முடியவில்லை. அதன்பின் அவர் பாலியல் பலாத்காரப்படுத்தப்பட்டதோடு, அவரது பிறப்புறுப்பில் லத்தியைச் சொருகி சித்திரவதை செய்தது போலீசு. அவரது பிறப்புறுப்பிலிருந்து உதிரப் போக்கு ஏற்பட்டு அவர் மயங்கிச் சரியும் நிலை வரை இந்த சித்திரவதை நடந்திருக்கிறது. ஒரு நாள் இரண்டு நாட்கள் அல்ல, தொடர்ந்து ஐந்து நாட்கள் சந்திராவைச் சட்டவிரோதக் காவலில் அடைத்து வைத்து, சித்திரவதை செய்து, செய்யாத கொலையைச் செய்ததாக சந்திராவிடமிருந்து ஒப்புதல் வாக்குமூலத்தைப் போலீசார் பெற்றுள்ளனர்.

மதுரை மாவட்டம், மேலூரில் வசித்துவரும் சந்திராவின் மகள் ராஜகுமாரி சிறைச்சாலையில் உடலெங்கும் காயங்களோடு தனது தாயைப் பார்த்த பிறகுதான் உடுமலைப்பேட்டை போலீசார் பாலியல் வக்கிரத்தோடு நடத்தியிருக்கும் இக்காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் வெளியுலகுக்குத் தெரிந்தது. இச்சித்திரவதை குறித்து நீதிமன்ற விசாரணை கோரி ராஜகுமாரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில், உடுமலை போலீசாரால் சந்திரா பாலியல் ரீதியாகச் சித்திரவதை செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. பாதிக்கப்பட்ட சந்திராவிற்குத் தமிழக அரசு இரண்டு இலட்ச ரூபாய் நட்ட ஈடு தர வேண்டும் என்றும், இது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி வழக்குப் பதிவு செய்ய வேண்டுமெனவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்திராவின் மகள் ராஜகுமாரி
சந்திராவின் மகள் ராஜகுமாரி

தமிழகத்தில் நடந்திருப்பது வக்கிரமும் காட்டுமிராண்டித்தனமும் நிறைந்தது என்றால், புதுச்சேரியில் நடந்துள்ள சம்பவம் வெட்கக்கேடானது. பள்ளிக்கூடத்தில் பயிலும் ஏழைச் சிறுமிகள் சிலரைப் பாலியல் தொழிலில் தள்ளிவிட்ட வழக்கில் 2 ஆய்வாளர்கள், 8 போலீசாருக்குத் தொடர்பிருப்பது அம்பலமாகி, அவர்கள் அனைவரும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்த புகாரைக் குழந்தைகள் மற்றும் மகளிர் நலத்துறை அதிகாரிகளிடம் பாதிக்கப்பட்ட சிறுமிகள் கடந்த மே மாதமே நேரடியாகத் தெரிவித்த பிறகும்கூட சம்பந்தப்பட்ட பாலியல் தரகுக் கும்பல் மீதும் போலீசார் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அக்கும்பல் மீது நடவடிக்கை எடுக்க முயன்ற டி.ஜி.பி.காமராஜ், திடீரெனப் பணியிடை மாற்றம் செய்யப்பட்டார். பாலியல் தரகர்கள்-போலீசு-ஓட்டுக்கட்சி அரசியல்வாதிகள் என்ற இந்த முக்கூட்டணிக்கு எதிராக மகளிர் அமைப்புகள் ஆளுநர் மாளிகை முற்றுகை உள்ளிட்டுப் பல போராட்டங்களை நடத்திய பிறகுதான், பாலியல் தரகர்கள் கைது செய்யப்பட்டனர்; அவர்களுக்கு உடந்தையாக இருந்த போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்த இரண்டு வழக்குகளிலும் சட்டம் தானாகவே தன் கடமையை ஆற்றிவிடவில்லை. சந்திரா மீதான தாக்குதல் வழக்கில் போலீசுக்கு எதிராக ராஜகுமாரி நடத்திய சட்டப் போராட்டமும், புதுவையில் மகளிர் அமைப்புகள் நடத்திய தெருப்போராட்டங்களும் இல்லையென்றால், இவ்வழக்குகள் அரசின் இருட்டறைகளில் புதையுண்டு போயிருக்கும். சந்திரா வழக்கில் சம்பந்தப்பட்ட போலீசாரைக் காப்பாற்ற அத்துறை உயர் அதிகாரிகளே முன்நின்றனர். “குற்றவாளிகளிடமிருந்து உண்மையை வரவழைக்க இரண்டு தட்டு தட்டுவது சகஜமானதுதான்” என இச்சித்திரவதையைப் பத்திரிகையாளர்களிடம் நியாயப்படுத்தினார், டி.ஜி.பி. அஜய்குமார் சிங். “சந்திராவை உடுமலைபேட்டை போலீசார் கைது செய்யவில்லை. சந்திராவே குற்றத்தை ஒப்புக்கொண்டு கிராம நிர்வாக அதிகாரியிடம் சரணடைந்த பிறகுதான் போலீசு நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவர் உடலில் இருந்த காயங்கள் அனைத்தும் குடித்துவிட்டுப் போதையில் கீழே விழுந்ததால் ஏற்பட்டவை என்பதை அவரே ஒப்புதல் வாக்குமூலமாக அளித்திருக்கிறார்” என போலீசு துறை நீதிமன்றத்திடம் அறிக்கை அளித்தது.

இந்த அறிக்கை ஒருபுறம் போலீசின் முட்டாள்தனத்தைப் பறைசாற்றுகிறதென்றால், இன்னொருபுறம் தமது குற்றத்தை மறைக்க எந்த எல்லைக்கும் செல்லும் அதனின் கிரிமினல் புத்தியை எடுத்துக் காட்டுகிறது. போலீசு நடத்திய சித்திரவதை வதையால் சந்திராவின் பிறப்புறுப்பிலிருந்து உதிரம் கொட்டத் தொடங்கியவுடன், “உண்மையிலேயே நீ உழைச்சு சம்பாரிச்சு இருந்தா இப்படி ரத்தம் கொட்டுமா?” என இரக்கமின்றியும் வக்கிரமாகவும் நக்கலடித்துள்ளனர். நகக்கண்களெல்லாம் வீங்கிப் போய், உதிரப் போக்கினால் நடக்கவே முடியாத நிலையில்தான் சந்திரா கோவை மாவட்ட இரண்டாவது குற்றவியல் நீதிமன்ற நீதிபதியின் முன் நிறுத்தப்பட்டுள்ளார். அந்நீதிமானோ அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல உத்தரவிடுவதற்குப் பதிலாக, சிறையில் அடைக்கும்படி உத்தரவிட்டுத் தனது கடமையை ஆற்றியுள்ளார்.

அம்மா போலீஸ்

இந்தச் சம்பவத்தைப் பரபரப்பு செய்தியாக வெளியிட்ட பத்திரிகைகள் சந்திரா போலீசாரால் பாலியல் பலாத்காரப் படுத்தப்பட்டதை திட்டமிட்டே மறைத்துவிட்டன. பாதிக்கப்பட்டிருப்பவர் ஒரு பெண் என்று தெரிந்த பின்னும் போலீசு துறையைக் கையில் வைத்திருக்கும் ‘அம்மா’, விசாரணை நடத்துவோம் என்ற காகித அறிக்கையைக்கூட வெளியிடவில்லை. உயர்நீதி மன்ற உத்தரவுக்குப் பிறகும் சம்பந்தப்பட்ட காக்கிச்சட்டை கிரிமினல்களைப் பணியிடை நீக்கம் செவதற்கும் அவரது அரசு முன்வரவில்லை. “காசு பறிக்கும் நோக்கத்தில்தான் போலீசார் மீது பாலியல் பலாத்காரக் குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன” என போலீசாரின் குற்றங்களை நியாயப்படுத்திய ஜெயாவிடமிருந்து கருணையையும் நியாயத்தையும் எதிர்பார்க்க முடியுமா?

சட்டத்தைக் கடுமையாக்கினால் ஒரு சில நேரங்களில் சாதாரண குற்றவாளிகள் தண்டிக்கப்பட வாய்ப்புண்டு. ஆனால், அதிகாரத்தைத் தமது கையில் வைத்துள்ள காக்கிச்சட்டை கிரிமினல்கள் தண்டிக்கப்படுவார்கள் என்பதற்கு எந்த உத்திரவாதமும் கிடையாது. பெண்களுக்கு எதிராக போலீசும் இராணுவமும் நடத்தியிருக்கும் சித்திரவதைகளில், பாலியல் வன்முறைகளில் எத்தனை பேர் தண்டிக்கப்பட்டுள்ளனர் என்ற புள்ளிவிவரத்தை எடுத்து வைத்துப் பார்த்தால் இந்த உண்மையைப் புரிந்துகொள்ள முடியும். இதற்கும் மேலாக, கடுமையான சூழல்களில் பணியாற்றிவரும் போலீசு, இராணுவத்தினர் மீது நடவடிக்கை எடுத்தால், அவர்களின் தார்மீக பலம் குலைந்துபோகும் என வாதாடி வரும் துக்ளக் சோ போன்ற பாசிஸ்டுகளை ஆதரிப்பவர்கள், சந்திராவின் இடத்தில் தமது மனைவியையும், விபச்சாரத்தினுள் தள்ளப்பட்ட அந்த ஏழைச் சிறுமிகளின் இடத்தில் தமது மகளையும் வைத்துப் பார்த்தால்தான் போலீசின் யோக்கியதையைப் புரிந்துகொள்ள முடியும்.

– அழகு
____________________________________
புதிய ஜனநாயகம் – அக்டோபர் 2014
____________________________________

  1. 2 நாட்களுக்கு முன்பு கூட சையது என்ற வாலிபரை விசாரனைக்கு அழைத்து சென்று துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து இருக்கிறார்கள் கொலை கொள்ளை வழிப்பறி செயின் பறிப்பு டிரைவரை கொன்று விட்டு கார்களை கடத்துவது என்ற செய்திகளே இல்லாமல் நாழிதல்கள் வருவது இல்லை இருந்தாலும் அம்மா ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக செயல்படுவதாக கூறி தமிழக மக்களை எமாற்றுகிறது அம்மா போலீஸு…..

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க