பொதுப் போக்குவரத்தை கார்ப்பரேட் கம்பெனிகளிடம் தாரை வார்க்கும் மோடி அரசின் சதி – வேலூரில் பு.ஜ.தொ.மு பிரச்சாரம்
“நாட்டின் பொதுப் போக்குவரத்தை கார்ப்பரேட் கம்பெனிகளிடம் தாரை வார்க்கும் கார்ப்பரேட் கைக்கூலி மோடி அரசின் சதியை முறியடிப்போம்” என்கிற முழக்கத்தின் கீழ் ஆர்ப்பாட்டம் நடத்துவும் இந்த அபாயத்தை பெரும்பான்மை உழைக்கும் மக்களிடம் கொண்டு செல்லுவும் ஆட்டோ ஓட்டுநர்கள், லாரி ஷெட், மெக்கானிக் ஷெட், சிறு உதிரி பாகங்கள் செய்யும் தொழிலாளர்களை சந்தித்த, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி வேலூர் நகரில் பரவலாக பிரச்சாரம் மேற்கொண்டது.
கோடிக்கணக்கான உழைக்கும் மக்களின் வாழ்வாதாரங்களை குறிவைக்கும் இந்த சட்டம் குறித்த தமது ஆதங்கங்களை மக்கள் பல்வேறு வழிகளில் வெளிப்படுத்தினர்.
“இந்தச் சட்டம் நடைமுறைக்கு வராது, வீணாக ஏன் பேசுறிங்க” என்று தைரியம் கூறிக் கொண்டார் ஒருவர்.
ஆனால், பெரும்பான்மை தொழிலாளர்கள், பொதுமக்கள், “இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தால் என்ன செய்வது” என புலம்பினார்கள்.
78 வயதான ஒரு தொழிலாளி, “அரசியல் கட்சிகள் எவனும் சரியில்லை, இந்த அரசாங்கம் மக்களுக்கானது இல்ல” எனக் கடுமையாக திட்டினார்.
“இனி மேலும் இவர்களை நம்பக் கூடாது. அதே நேரம் மக்களிடம் இந்த விழிப்புணர்வு இல்லை” என்றார், இன்னொரு தொழிலாளி.
இன்னும் ஒரு சிலர், “மோடி நல்லவர் என்று நம்பி ஓட்டு போட்டோம், இனி எவனையும் நம்பக்கூடாது” என்றனர்.
“இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தால், அனுபவம் வாய்ந்தவர்கள், திறமையானவர்கள் எல்லாம் வேலையில்லாமல் போய்விடும்” என்றனர்.
இன்னும் ஒரு சிலர், “இப்படிப்பட்ட சட்டங்களை, இவர்கள் எங்கிருந்து கொண்டு வருகிறார்கள்” என்று கேட்டனர்.
பெரும்பாலானவர்கள் தங்கள் கருத்துக்களை கூறிய பின் தங்களால் முடிந்த நிதி கொடுத்து உதவினார்கள்.
பேருந்து பிரச்சாரத்தின் போது ஓட்டுனர் நடத்துனர்கள் பிரச்சாரத்தை ஆதரித்து நிதி கொடுத்தனர்; பேருந்தை நிறுத்தி, பிரச்சாரத்திற்க்கு ஆதரவு தெரிவித்தனர்.
வேலூர் தலைமை தபால் நிலையம் அருகில் 08-06-2015 அன்று காலை 11 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆட்டோ தொழிலாளர்கள், தரைக்கடை வியாபாரிகள் மற்றும் பல பகுதிகளிலிருந்தும் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆட்டோ ஒட்டுனர் பாதுகாப்பு சங்க செயலாளர் தோழர் ஆல்வின் தலைமை தாங்கினார். தரைக் கடை வியாபாரிகள் நலச்சங்கத் தலைவர் தோழர் தாமோதரன், செயலாளர் சரவணன், ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்க பொருளாளர் சரவணன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
தோழர் சிவா சிறப்புரையாற்றினார். இறுதியாக லோகேஷ்குமார் நன்றியுரை கூறினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நகரத்தின் பல்வேறு பகுதியிலிருந்து தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
வேலூர்
_______________
விருத்தாசலம் கல்வி தனியார் மய ஒழிப்பு மாநாடு : அரசு பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள்
விருத்தாசலத்தில் ஜூன் 13-2015 அன்று நடைபெறவிருக்கும் கல்வி தனியார் மய ஒழிப்பு மாநாடு ஒட்டி அரசு பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.
மக்கள் உரிமை பாதுகாப்பு மையமும், மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கமும் வரும் ஜூன் 13 ம் தேதி அன்று விருத்தாசலத்தில் கல்வி தனியார் மய ஒழிப்பு மாநாடு, நடத்துகிறோம். இதற்காக மே மாதம் முழுவதும் விருத்தாசலம் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கல்வி தனியார் மயத்தின் கொடூர விளைவுகளையும், அரசுப் பள்ளிகளை காக்க வேண்டியதன் அவசியத்தையும் விளக்கி சைக்கிள் விழிப்புணர்வுப் பேரணி நடத்தப்பட்டது. மேலும், அரசுப் பள்ளி மாணவர்களின் திறனை வெளிப்படுத்தும் விதமாக 06-06-2015 மற்றும் 07-06-2015 ஆகிய இரு தினங்களும் விருத்தாசலம், அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சதுரங்க போட்டி (Chess), ஓவியப் போட்டி மற்றும் பேச்சுப் போட்டி நடத்தப்பட்டது.
போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்காக 5 தினங்களுக்கு முன்பே சுற்று வட்டாரத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை சந்தித்து போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்காக இலவச நுழைவுச் சீட்டு அச்சடித்து வழங்கப்பட்டது. இரு தினங்களுக்கு பிறகு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டன. சதுரங்க விளையாட்டு போட்டி நடத்துவதற்காக கடலூரில் இருந்து திரு பிரேம்குமார் என்பவர் விருத்தாசலம் வந்திருந்து மூன்று தினங்கள் குறிப்பிட்ட பள்ளிகளுக்குச் சென்று காணொலி காட்சி மூலம் சதுரங்க விளையாட்டு சட்டதிட்டங்கள், விளையாட்டு முறை பற்றி விளக்கம் அளித்து மாணவர்களுக்கு ஆர்வமூட்டினார்.
06-06-2015 சனிக்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு சதுரங்க போட்டி தொடங்கியது. மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு ராஜூ, மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கத்தின் தலைவர் வை.வெங்கடேசன், சிறுதொண்ட நாயனர், வீரகாந்தி, ஆடியபாதம், ஆனந்த்குமார், வழக்கறிஞர் புஷ்பதேவன், செல்வம், அசோக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
சதுரங்க போட்டியை திரு பிரேம்குமார் முறைப்படுத்தி 5 சுற்றுகளாக போட்டி திட்டம் வகுக்கப்பட்டு நடத்தப்பட்டது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகள் 158 பேர் போட்டியில் கலந்து கொண்டனர். பிள்ளைகளின் பெற்றோர்களும் வந்திருந்தனர். அனைவருக்கும் டீ, பிஸ்கெட், மதிய உணவாக தக்காளி சாதம் தயார் செய்து வழங்கப்பட்டது. மாலை 5.30 மணி அளவில் போட்டி நிறைவு பெற்றது. 30 மாணவ மாணவிகள் பரிசுக்குரியவர்களாக திரு பிரேம்குமார் தேர்வு செய்தார்.
மறுநாள் 07-06-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று ஓவியப்போட்டி நடத்தப்பட்டது. ஓவியப்போட்டியை தலைவர் வை.வெங்கடேசன், அசோக், வீரகாந்தி, ஆடியபாதம் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு நடத்தினர்.
ஆசிரியர் திரு ராஜன் மேற்பார்வையில் போட்டி நடத்தப்பட்டது. ஓவியப்போட்டிக்கு “விவசாயம் நாட்டின் முதுகெலும்பு” என்ற தலைப்பு வழங்கப்பட்டிருந்தது. மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று, ஓவியங்களை வரைந்தனர்.
பேச்சுப்போட்டியை ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் சிவராம சேது, தலைமை ஆசிரியர் சிற்றரசு ஓய்வு பெற்ற உதவி தொடக்கக் கல்வி அலுவலர் கோ.சீனுவாசன் நடுவர்களாக இருந்து நடத்தி கொடுத்தனர். பேச்சுப் போட்டிக்கு வள்ளுவர் நோக்கில் சமுதாய மேன்மைக்கு அடிப்படை “அறமா? பொருளா?” என்ற தலைப்பு வழங்கப்பட்டிருந்த்து. போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் டீ, பிஸ்கட் வழங்கப்பட்டது.
மாநாட்டை ஒட்டி நடத்தப்பட்ட இந்த போட்டிகள் அரசுப் பள்ளி மாணவர்களிடத்திலும், பெற்றோர்களிடத்திலும் மிகுந்த உற்சாகத்தையும் பெரும் வரவேற்பையும் பெற்றது. விளையாட்டுப் போட்டிகள் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக மட்டுமே நடத்தப்பட்டது. போட்டியில் கலந்துகொள்ள வந்த தனியார் பள்ளி மாணவர்களிடம் அரசு பள்ளியின் முக்கியத்துவத்தை விளக்கி அனுமதி மறுக்கப்பட்டது.
பல பகுதிகளை சேர்ந்த அரசுப் பள்ளி மாணவ மாணவிகள் ஒன்றாக ஒரே இடத்தில் சந்தித்து போட்டியில் கலந்து கொண்டது, மிகுந்த மகிழ்ச்சியாகவும், ஆர்வமூட்டுவதாகவும் இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.
தகவல்
மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம்,
கடலூர் மாவட்டம்