கார்டியனில் 08-04-2016 அன்று வெளிவந்த புகைப்படம், ஜப்பானின் ‘புகழ்’ பெற்ற கார் உற்பத்தியின் இன்றைய நிலையைக் காட்டுகிறது. அசெம்பிளி லைனில் எந்த தொழிலாளியுமின்றி ரோபோக்கள் மட்டுமே காரின் உப பாகங்களை கோர்த்து பொருத்துகின்றன. குட்டி நாடு ஜப்பான் ‘தொழில் வளர்ச்சியில் என்னமா அடிச்சு போறான் பாத்தியா?’ என்று முதலாளித்துவ அறிஞர் பெருமக்கள் வியப்பது உடன் நினைவுக்கு வருகிறதா?
ஆனால் தொழில் நுட்ப வளர்ச்சியின் பெயரில் போற்றப்படும் ஜப்பானின் மறுபக்கம் என்ன?
இந்து ஆங்கில நாளேட்டில் 03-04-2016 அன்று மறுபிரசுரமான ராய்ட்டர்ஸின் கட்டுரை ஜப்பானில் ஓவர்டைம் பார்ப்பதால் கசக்கிப் பிழியப்படும் தொழிலாளர்களின் மரணம் மிகப்பெரும் அளவில் அதிகரித்திருப்பதாக சொல்கிறது. அதுவும் பணிச்சுமையால் இறந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்களும் இளைஞர்களும் ஆவர்.
ஜப்பானில் கடந்த வருடத்தில் (மார்ச் 2015 வரை) மட்டும் ஓவர்டைம் பார்த்து மரணமடைந்தன் மூலம் கரோஷி காப்பீடுக்கு (Karoshi-பணிச்சுமையால் மரணமடைந்தவர்களுக்கான காப்பீடு) விண்ணப்பித்தவர்கள் 1,456 பேர் என்கிறது அந்நாட்டு தொழிலாளர் அமைச்சகம். ஆனால் அரசின் புள்ளிவிவரத்தை விட பத்து மடங்கு தொழிலாளிகள் ஓவர்டைம் பார்த்து மரணமடைந்திருப்பதாகச் சொல்கிறார் பணிச்சுமையால் மரணடமடைந்தவர்களுக்கான தேசிய பாதுகாப்பு பேரவையின் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் ஹிரோஷி கவகைட்டோ.
ஜப்பானில் தொழிலாளர்களுக்கான வரையறுக்கப்பட்ட வேலை நேரம் என்ற குறைந்தபட்ச அடிப்படை உரிமை கூட கிடையாது என்கிறார் ஹிரோஷி. இது தொழிலாளிகள் வகைதொகையின்றி சுரண்டப்படுவதற்கு வாய்ப்பாக இருக்கிறது. இலாப வெறியால் கசக்கிப் பிழியப்படுகிற தொழிலாளி ஒருவேளை பணிச்சுமையால் இறந்துபோனால் இரண்டுவிதமான காப்பீடுகள் ஜப்பானில் இருக்கின்றனவாம்.
முதல் வகையில் பணிச்சுமையின் காரணமாக மாரடைப்பு போன்ற இதய நோய்களால் ஒரு தொழிலாளி இறந்துபோனால் காப்பீடு பெறுவதற்கு இறப்பதற்கு முன் கடைசிமாதத்தில் 100 மணிநேரம் ஓவர்டைம் பார்த்திருக்க வேண்டுமாம். அல்லது இறப்பதற்கு முன் ஆறுமாதங்களில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாதங்களில் தொடர்ச்சியாக 80 மணிநேர ஓவர்டைம் பார்த்திருக்க வேண்டுமாம். வேறு விதமாக சொல்வதென்றால் ஜப்பானில் ஒரு தொழிலாளி ஒருமாதத்தில் 100மணி நேரம் ஓவர் டைம் பார்த்தால் அவர் மாரடைப்பால் செத்துப்போவது உறுதி என்பதை ஜப்பானிய தொழிலாளர் அமைச்சகம் ஒரு விதியாகவே அறிவிக்கிறது.
இரண்டாவது வகையில் பணிச்சுமையின் காரணமாக ஒரு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டால் காப்பீடு பெறுவதற்கு தற்கொலைக்கு முந்தைய மாதத்தில் 160 மணிநேரத்திற்கும் மேல் ஓவர்டைம் பார்த்திருக்க வேண்டுமாம். அல்லது கடைசி ஆறுமாதத்தில் மூன்றுமாதங்களுக்கு மேல் தொடர்ச்சியாக 100 மணிநேரத்திற்கும் மேல் ஓவர்டைம் பார்த்திருக்க வேண்டுமாம். அதாவது ஜப்பானில் ஒரு தொழிலாளி ஒருமாதத்தில் 160 மணிநேரத்திற்கும் மேல் ஓவர்டைம் பார்த்தால் அவர் தற்கொலை செய்யப்படுகிறார் என்றாகிறது!
ஜப்பான் தொழிலாளர் அமைச்சக தகவலின் படி, கடந்த நான்கு வருடங்களில் வேலை தொடர்பாக தற்கொலை செய்து கொண்ட இளைஞர்கள் 49% பேர். இதில் 39% பேர் பெண்களாவர்! தொழில்நுட்பத்தின் உச்சம் என்று சொல்லப்படுகிற ஜப்பான்தான் உலகிலேயே அதிகம் தற்கொலை செய்துகொள்கிறவர்களின் நாடு!
முதலாளித்துவ உற்பத்தி முறையில் தொழிலாளி எட்டுமணி நேரம் செய்கிற வேலையை இயந்திரங்கள் நான்குமணி நேரத்தில் செய்கிற பொழுது தொழிலாளி ஒன்று வேலையிழப்பார் அல்லது அவரது வேலை நேரம் இன்னும் கூடுதலாகி பன்னிரெண்டு, பதினான்கு மணிநேரம் உழைக்க வேண்டியிருக்கும். இதனால் சுரண்டலின் கொடுமை கூடுமே தவிர குறையாது.
எடுத்துக்காட்டாக ஜப்பானில் தொழிலாளர்கள் நிரந்தரத் தொழிலாளிகள், ஒப்பந்த தொழிலாளிகள் என இரும் பெரும் பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருக்கிறார்கள். வரையறுக்கப்படாத ஒப்பந்த வேலைகளில் பெரும்பாலும் இளைஞர்களும் பெண்களும் பணியர்மத்தப்படுகின்றனர். ஜப்பானில் 1990-ல் 20% ஆக இருந்த ஒப்பந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை, 2015-ல் 38% ஆக அதிகரித்திருக்கிறது. இதில் 68% பெண்கள் ஆவர். ஜப்பான் வழக்கறிஞர்கள் மற்றும் போராளிகளின் கருத்துப்படி பெரும்பாலான ஒப்பந்த தொழிலாளர்களுக்கு இடைவேளையும் ஓவர் டைம் பார்ப்பதற்கான ஊதியமும் வழங்கப்படுவதில்லை என்கின்றனர். இளைஞர்கள் வேறுவேலையில் சேர்வதற்கான அனுபவமின்மை காரணமாகவும் பிரசவ கால விடுப்பு எடுக்கும் பெண்கள் மீண்டும் பணியில் வேறு எங்குமே சேர்த்துக்கொள்ளப்படுவதற்கு வாய்ப்பில்லை என்ற நிலையிலும் இவர்கள் இடைவேளை குறித்தோ ஓவர்டைம் ஊதியம் குறித்தோ வாய்திறப்பதில்லை என்கின்றனர்.
திருமதி. எமிக்கோ தரோநிஷி பணிச்சுமையால் தற்கொலை செய்துகொண்ட தன் கணவரின் நினைவாக பணிச்சுமையால் தற்கொலை செய்துகொள்ளும் பிற தொழிலாளிகளுக்கு காப்பீடு பெற்றுத் தருவதில் இறங்கியிருக்கிறார். இவர் கம்பெனிகளின் மூர்க்கத்தனமான சுரண்டல் எத்தகையது என்பதை அம்பலப்படுத்துகின்றார். இவரது கருத்தின்படி சில கம்பெனிகள் சம்பளத்தோடு 80 மணி நேர ஓவர்டைம் பார்ப்பதையும் கட்டாயமாக்குகின்றனவாம். 80 மணி நேர டார்கெட்டை நிறைவு செய்யவில்லையென்றால் கூலியை திருப்பித்தர வேண்டுமென கம்பெனிகள் நிர்ப்பந்திப்பதை எடுத்துக்காட்டுகிறார். இத்தகைய முறையால் தொழிலாளிகள் பலரால் குறைந்த பட்ச கூலியைக் கூட பெறமுடிவதில்லை என்கிறார்.
முதலாளித்துவ சமூகத்தில் இராக்கெட் விட்டாலும் சரி ரோபோ வேலை செய்தாலும் சரி இலாபத்தை நிர்ணயிப்பது தொழில்நுட்பத்தின் வளர்ச்சியல்ல. பாட்டாளிகளின் கூலியுழைப்புதான் இலாபத்தை நிர்ணயிக்கிறது. ஆகையால் தான் ரோபோக்கள் கார் உற்பத்தி செய்வது தொழில்நுட்பத்தின் உச்சம் என்று வியக்கிற நாட்டில் தொழிலாளிகள் ஓவர்டைம் பார்ப்பதால் தற்கொலை செய்துகொள்கிறார்கள்! மாரடைப்பால் சாகிறார்கள். இந்தவகையில் ஜப்பானை மனிதர்களைக் கொல்லும் ரோபோக்களின் நாடு என்று சொல்லலாம். ரோபோக்கள் வளர்ச்சி பெற்று செயற்கை அறிவைக் கண்டடைந்து மனித குலத்தை கட்டுப்படுத்துவதாகவும், அதை சில சூப்பர் ஹீரோக்கள் தடுத்து நிறுத்துவதாகவும் நிறைய ஹாலிவுட் படங்களை வெளிவந்திருக்கின்றன. உண்மையில் அந்த ரோபோக்கள் முதலாளித்துவ வர்க்கமாகவும், தடுத்து நிறுத்தி இந்த உலகைக் காப்பாற்றப் போவது தொழிலாளி வர்க்கம் மட்டுமே.
கேள்வியும் தொடர்ச்சியும்: தொழில்நுட்ப வளர்ச்சி தொழிலாளிக்கு எதிரானதா? இல்லை. சமூகத்தில் நிலவும் உற்பத்தி முறையில் தொழிலாளிகள் என்ன பாத்திரம் வகிக்கிறார்கள் என்பது தான் தொழிலாளிகளின் வாழ்நிலையை நிர்ணயிக்கிறது. இதை அடுத்த பதிவில் பார்க்கலாம்.
இப்பொழுது வாசகர்கள் விவாதிப்பதற்கு ஒரு செய்தி: முதல் தொழிற்புரட்சியில் நீராவி இயந்திரம் மற்றும் மின்சாரம், இரண்டாவது தொழிற்புரட்சியில் கன்வேயர் பெல்ட் மூன்றாவது தொழிற்புரட்சியில் கணிணிமயமாக்கம் நான்காவது தொழிற்புரட்சியில் தானியங்குதல் (Automation-ரோபோக்கள் மயமாவது) என்று தொழில்நுட்ப சகாப்தத்தை வரையறுக்கிறார்கள். ஆனால் தற்பொழுது உலகில் வெறும் 62 பேரிடம் இருக்கும் சொத்து, உலகில் 360 கோடி பேர் வைத்திருக்கும் சொத்திற்கு சமம் என்கிறது ஆக்ஸ்பம் வெளியிட்ட அறிக்கை. முதலாளித்துவம் கார், செல்போன் வீடியோகேம் வழங்கியது என்று வாதிட்டவர்கள் 66க்குள் இருக்கிறார்களா? 400 கோடிக்குள் இருக்கிறார்களா?
– இளங்கோ
செய்தி ஆதாரம்.
அருமை. சுரண்டலின் உச்ச வேதனை.
பிரான்ஸும் ஒரு முதலாளித்துவ நாடு தான். ஆங்கு தினமும் 7 மணி நேரம், வாரம் இரண்டு தினம் விடுமுறை, என்று வாரம் 35 மணி நேரமே வேலை :
France reviews its 35-hour working week
http://www.telegraph.co.uk/news/worldnews/europe/france/12120927/France-reviews-its-35-hour-working-week.html
ஆனால் ’சோசியலிச’ நாடான வட கொரியாவில் (அது சோசியலிசமோ அல்லது என்ன எழவோ, ஆனால் அங்கு முதலாளிகளோ, தனியார் நிறுவனங்களோ கடந்த 60 ஆண்டுகளாக கிடையாது) forced labour and terrible working conditions பற்றி பேச மாட்டீற்களே :
‘They are intentionally starved and worked to death’: The horrific conditions in North Korean labor camps
http://www.businessinsider.com/they-are-intentionally-starved-and-worked-to-death-the-horrific-conditions-in-north-korean-labor-camps-2016-3?IR=T
இன்னமுமா வளரவில்லை அதியமான்?
ரோபோ ஜப்பானில் தொழிலாளி ஏன் சாக வேண்டும்? என்ற கேள்விக்க பதிலளிக்க முடியாமல் இன்னும் லிங்க் பகவானை நம்பி வாழும் உங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்! பட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால் கெட்டிச் சட்டினிக்கு சமையல் குறிப்பு சொல்லும் உங்களையும் ஒரு அறிஞராக அங்கீகரித்திருக்கும் அப்பாவிகளுக்கும் அனுதாபங்கள்! எனினும் நீங்கள் சொல்லும் பிரான்சில்தான் அன்றாடம் தொழிலாளிகளும், விவசாயிகளும் போர்க்குணத்தோடு போராடுகிறார்கள்! வேலை நிறுத்தம் செய்கிறார்கள்! அலுவலகங்களை முடக்குகிறார்கள்! முதலாளித்துவ முடை நாற்றத்தில் முக்குளிப்பது உங்களது உரிமை என்றாலும் சக மனிதர்களின் மீது உங்களுக்கு இவ்வளவு வெறுப்பு இருப்பது கவலையைத் தருகிறது!
வினவு,
///சமையல் குறிப்பு சொல்லும் உங்களையும் ஒரு அறிஞராக அங்கீகரித்திருக்கும் அப்பாவிகளுக்கும் அனுதாபங்கள்! /// :)) உங்களுக்கு தான் அனுதாபம் தேவை. இத்து போன் பழைய பல்லவியை விடாமல் பாடி, புரட்சிக்கு வழி செய்வதாக நினைத்து கொண்டிருக்கிறீர்கள். யார் உண்மையில் அறிஞர் யார் நுனிப்புல் மேயும் அரைவேக்காடு என்பதை நாமே பேசுவது சரியல்ல. Let the readers decide. உண்மையில் கடந்த 120 வருடங்கள் நடந்த வரலாற்று மாறுதல்கள், முக்கியமாக 1989க்கு பின் கிழக்கு அய்ரோப்பியா, ரஸ்ஸியாவின் வீழ்ந்த வரலாறுகள் பற்றி இன்று வரை தரவுகளுடன் அலசி, விளக்கம் அளிக்கவோ, பாடங்கள் கற்க்கவோ துப்பிலாதவர்கள் இங்கு வெத்து வார்த்தை தனிமனித கீறல்களை செய்து கொண்டிருக்கிறார்கள். முதலாளித்துவ இயங்கியல், அதற்க்குள் இருக்கும் சோசியலிச பாணி distortions (like fiat currency, interest rate distortions, exchange rate controls, chronic fiscal deficits which distort price signals, etc) பற்றி எல்லாம் வகுப்பெடுத்தாலும் உங்களை போன்ற வறட்டு இழுப்பு கேஸ்களுக்கு புரியாது. தொடர்ந்து முதலாளித்துவ தோல்வி, etc என்று தட்டையாக, மார்ச்கிய சட்டகத்தில் இருந்து கொண்டே கதைப்பீர்கள். Carry on…
Vinavu writes about the introduction of robots in assembly line of production and premature death of workers due to overtime in Japan.Adhiyaman immediately laments about conditions in North Korea.What is his logic?Since the workers are dying in North Korea,does he mean that death of Japanese workers should be ignored.
இந்த கட்டுரை எதைபற்றி பேசுகின்றது அதியமான்? ஜப்பானிய மிகை வேலை நேரங்களால் மன உளைச்சலுக்கு ஆளாகும் தொழிலாளர்கள் முதலாளித்துவ லாபவெறியால் கொலை செய்யப்படுவது பற்றி! ஆனால் நீங்கள் எதனை பற்றி பேசிக்கொண்டு உள்ளீர்கள் ?
வினவு,
ஜப்பானில் தற்கொலை செய்பவர்கள் blue collar workers அல்ல. white collar office workers. தொழிற்சாலைகளில் உள்ள ரோப்பக்களுக்கும் இதற்க்கும் தொடர்பு அல்ல. அலுவலக வேலைகளுக்கு அங்கு காலக்கெடு சட்டப்படி இல்லாததால் இந்த பிரச்சனை. மேலும் அவர்களின் கலாச்சாரமும் ஒரு காரணம். குறைகளே இல்லாத அமைப்பு எங்கும் சாத்தியமில்லை. ஆனாலும் இதே ஜப்பானுக்கு வேலை கிடைத்தால் புலம் பெயர உங்கள் தோழர்கள் பலரும் தயார். ஏற்கெனவே அங்கு பல ஆயிரம் இந்தியர்கள் வேலை செய்கிறார்கள். 1945இல் அழிந்த ஜப்பான் மீண்டு வந்த வரலாற்றை எல்லாம் பேச உமக்கு துப்பில்லை. லிங்க் போட்டால் அதை பெரிசா பேசும் நீங்களும் இந்த கட்டுரையை ஒரு ஆங்கில லிங்க்கில் இருந்து தான் எடுத்து மொழிபெயர்த்திருக்கிறீர்கள். இரட்டை வேசம். May be I should keep away from this site. விவாதங்களே இப்ப எல்லாம் இங்கு நடப்பதில்லை. யாரும் சீந்துவதில்லை..
///எனினும் நீங்கள் சொல்லும் பிரான்சில்தான் அன்றாடம் தொழிலாளிகளும், விவசாயிகளும் போர்க்குணத்தோடு போராடுகிறார்கள்! வேலை நிறுத்தம் செய்கிறார்கள்! அலுவலகங்களை முடக்குகிறார்கள்! /// ஆம். காரணம் அங்கு முதலாளித்துவ பொருளியல் கொள்கைகளை ஒழுங்கா செயல்படுத்தாமல், சோசியலிச சக்திகளின் பல ஆண்டு பாதிப்பினால் பல distortions and imbalances. இதை பற்றி விரிவாக எழுதினாலும் புரிந்து கொள்ள முடியாத தட்டையான பார்வை கொண்டவர்கள் நீங்கள். சரி, இங்கு விவாதப்பொருள் working hours vs leisue time in France and other nations. வட கொரியா சோசியலிச பாதையில் 1953 முதல் செல்ல துவங்கி அங்கு என்ன நடந்தது (தென் கொரியாவுடன் ஒப்பிடும் போது) என்ற வரலாற்றையும் பேசலாம். ஆனால் உமக்கு துப்பு கிடையாது. அரைச்ச மாவையே அரைத்து, hysteria patient போல சித்திரம் வரைவீக. Keep going. Who cares. _____________ !! :))
வினவில் கட்டுரைகளும், அதன் மீதான விதாதங்களும் சொம்மையாக தான் உள்ளன என்பதனை அதியமானுக்கு தெரிவித்துக்கொள்கின்றேன்….. இவர் விலகுவதால் யாதொரு குறையும் வினவுக்கு ஏற்படபோவது இல்லை… பூனை கண்ணை மூடினால்……!
அதியமான், காலக்கெடு சட்டப்படி இல்லாததால் இந்தப் பிரச்சனை என்று சர்வசாதாரணமாகச் சொல்லிவிட்டால் ஜப்பானில் வெறும் மன அழுத்தத்தால் மட்டும் தான் மக்கள் சாகிறார்கள்; மற்றபடி ஜப்பானில் தேனாறும் பாலாறும் தான் ஓடுகிறது என்று நீங்கள் சொல்கிறீர்களா நண்பரே ? ரிசெஷன் ரிசெஷன் என்பது ஏன் ஒரு நாளைக்கு 12 மணி நேரத்துக்கும் மேல் மனிதர்கள் வேலை செய்யும் ஜப்பானிலும் வந்து தொலைக்கிறது? ரோபோட்டுகளை 24 மணி நேரமும் வேலை செய்யவைத்து பொருளாதாரத்தை நட்டாம நிப்பாட்ட முடியாமல் ஏன் போகிறது ?
கேப்பிட்டலிஸம் மனிதர்களை உறிஞ்சிச் சாகடிப்பதைக் கூட சிரிச்சுகிட்டே சொல்ல உங்களால் தான் முடியும் பாஸ். நீங்களும் என்ஜாய் பண்ணுங்க உங்க குரூரமான ஆர்க்யூமன்ட்டை.
https://mishtalk.com/2016/02/15/japanese-economy-shrinks-yen-weakens-nikkei-soars-over-1000-points/
////விவாதங்களே இப்ப எல்லாம் இங்கு நடப்பதில்லை./////
விவாதம் தேவையில்லை என்றே நினைக்கிறேன்.
ஜப்பானிய எதார்த்தத்தின் பிரதிநிதியாய் சில வார்த்தைகள் பகிர்ந்து கொள்கிறேன்.
////ஜப்பானில் தற்கொலை செய்பவர்கள் blue collar workers அல்ல. white collar office workers.///
I think Mr. Athiyaman has taken tips from this wiki link https://en.wikipedia.org/wiki/Japanese_blue_collar_workers
let it be.no issue.
////மேலும் அவர்களின் கலாச்சாரமும் ஒரு காரணம். குறைகளே இல்லாத அமைப்பு எங்கும் சாத்தியமில்லை. ////
கண்டிப்பாக கலாச்சாரம் மிகமுக்கியக் காரணம்.
////ஆனாலும் இதே ஜப்பானுக்கு வேலை கிடைத்தால் புலம் பெயர உங்கள் தோழர்கள் பலரும் தயார். ஏற்கெனவே அங்கு பல ஆயிரம் இந்தியர்கள் வேலை செய்கிறார்கள்.////
சத்தியமான வார்த்தை.
வருஷா வருஷம் ரெண்டு மூணு மாசம் வெகேஷன் எடுத்துட்டு இந்தியா வந்து ரெஸ்ட் எடுத்துட்டு ஜப்பானைத் தலை முழுகிடலாம்ன்னு அங்குள்ள இந்தியகம்பெனீஸ்லே ஸ்லைட் பண்ணிட்டு செட் ஆகாமே ஜப்பானே பெட்டர் ன்னு திரும்பி ஓடி வந்துடுறேன்.
கிட்டத்தட்ட அஞ்சாறு வருஷமா இப்பிடிப் பண்ணிட்டுருக்கேன்.
காரணம் ஒரு மாசத்திலே 200 hour க்கும் மேலே ஓவர்டைம் பார்த்த அனுபவங்கள் உண்டு.
சின்னக் கம்பெனிகளில் பெர்மனென்ட் வேலைகளில் இப்படி சிக்கல்கள் அதிகம் உண்டு.
ஒரு சின்ன ஆறுதல் என்னன்னா நான் என் கோ வொர்க்கர்ஸ விட கம்மியான வொர்கிங் hours வேலை பார்த்தவன்.
இன்ஜினியரிங் ஃபீல்ட்லே மெஷினிங் சைடிலே even if it is high end technical computer aided CAM programming(சின்னக் கம்பெனிகளிலே ப்ளூ/வைட் ன்னு லாம் பிரிச்சுப் பார்க்க முடியாது.on the job
நின்னு சாதிச்சாத்தான் அந்த வேலை நிச்சயம்.எங்க கம்பெனிலே பிரச்சினை என்னன்னா வருஷத்துலே ஒரு குவாட்டர் மட்டும்தான் பல்க் ஆர்டர்ஸ் இருக்கும்.மத்த நேரமெல்லாம் சும்மா ஸ்டாக் ரிலேடேட் தான்.
சோ, பீக் டைம் வொர்க் லோடை ஷேர் பண்ணிக்க ஆளுங்களை ரெடி பண்ண முடியாது.ஒன் மேன் ஷோ தான் பாஸ்சிபில்.
முதலாளிக்கு வேலை தெரியாது.ஆனா கம்பெனி அவருது.அஸ் பெர் கம்பெனி ரெகுலேஷன்ஸ் சோசியல் செக்யுரிட்டி பாக்கேஜ் ன்னு என்ரோல் ஆகணுமின்னா ஒரு மினிமம் டீம் மெய்ண்டைன் பண்ணியாகணும்.
அத மெய்ண்டைன் பண்ணுறார்.
கம்பெனி நிதி நிர்வாகம் முழுக்க முழுக்க அவரும் அவர் குடும்ப உறுப்பினர்களும் மட்டும்.
லாபமா நஷ்டமா ஒரு மண்ணும் தெரியாது. தெரிஞ்சுக்கவும் முடியாது.வேணும்னா இருக்கலாம்.இல்லேன்னா நடையைக் கட்டலாம்.
ஏகப்பட்ட சிக்கல்களுக்கு நடுவிலே எல்லோருமே ஒரு குடும்பமாக(?) செயல்படுகிறோம். (தமிழகத்து இரண்டு எதிரெதிர் துருவ கட்சிகளின் குடும்ப அரசியலில் இறுக்கும் நிலையை ஒப்பிதம் செய்து கொள்ளவும்) (என்னைத் தவிர மத்த எல்லோருமே ஜாப்பனீஸ்தான்)
நான் கழண்டுக்கிட்டால் அந்தக் கம்பெனி அம்பேல் ஆகும் அளவுக்கு கிரிடிகல்லான நிலைமை.
ஒரு டன் வெயிட் கொண்ட ஒரு வீலை மெஷினிங் பண்ணி அன்லோட் பண்ணும்போது தவறி விழுந்து உடன் வேலை செய்த 28 வயது ஜாப்பனீஸ் பையன் காலில் விழுந்து தொடை எலும்பு இரண்டாகப் பிளந்தும் பாத எலும்புகளை சின்னாபின்னப் படுத்தியும் நான்கு மாதங்கள் ஆகிறது.இப்போது சரியாகி அவன் காலை இழுத்துக் கொண்டே எங்களுடன் வேலையில் சேர்ந்தாகி விட்டது.
கம்பெனியில் இருந்து ஒன்றும் நஷ்ட ஈடு இல்லை. சோசியல் செக்யுரிட்டி பாக்கேஜ் தவிர ரோசை (ரோடோஷா சாய்கை)என்று தொழிலாளர் விபத்து காப்பீடு அடிப்படையில் கவர் ஆன தொகை மட்டுமே. பல சமயங்களில் இப்படி ஆட்கள் தற்கொலை செய்துகொள்ளும் முகாந்திரங்கள் இல்லவே இல்லை என்று சொல்லவே முடியாது.
யானை இறந்தாலும் ஆயிரம் பொன் என்று அவன் தவறினால் 40000000யென் லைஃப் இன்சூரன்ஸ் சொந்த செலவில்தயாராகத்தான் இருந்தான். (ஒரு பவுன் 20ஆயிரம் என்று கணக்கிட்டால் சரியாக ஆயிரம் பொன்)
பீக் லோட் இருந்த போது இப்படி ஆகி அந்த லோடையும் சேர்த்து நானும் சிலரும் ஷேர் பண்ண வேண்டியதாகிப் போய்விட்டது.அவன் திரும்பி வேலைக்குச் சேரும் வரை வேறு ஆள் எடுக்காது காத்திருந்தது கம்பெனி நிவாகத்தின் தனிச்சிறப்பு என்று சொல்லலாம்.இப்படி வேறு ஆள் கிடைக்கவேமாட்டான் என்றும் சொல்லலாம்.
முதலாளியை ஓநாய் ஆகவும் மற்றையோரை ஆடுகளாகவும் சித்தரித்து வேகப் படுவதில் அர்த்தமில்லை என்று நினைக்கிறேன்.
இந்த பர்மனெண்ட் செக்யுரிட்டி கவுன்சில் மெம்பர்ஷிப் கிடைக்க என்னென்ன ஜித்து வேலைகள் ஒவ்வொரு ஆளும் செய்திருப்பார்கள் என்று ஒவ்வொருத்தருக்கும் தெரியும்.
அப்படி சில ஜித்து வேலைகள் செய்து கொண்டுதான் அவரும் (முதலாளி) உலாவந்து கொண்டிருக்கிறார்.
அவர் ஒரு முக்கியத்தூண். அவ்வளவுதான்.இதை அவர் புரிந்து வைத்திருக்கிறார் என்றாலும் வெளிக்காட்டிக் கொள்வதில்லை என்ற போதிலும் உண்மையான தூண்களாக நாங்கள் அவரையும் சேர்த்துத் தாங்கிக் கொண்டிருக்கிறோம்.
சிக்கலான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகி நடைபிணமாய் வாழும் பலர் இங்கு இருக்கிறார்கள்.
பல்வேறு முதலாளித்துவ தொழிலாளிப் பிரச்சினைகளுக்கு நடைமுறைத் தீர்வு என்பது கேள்விக்குறிதான் என்ற போதிலும் அப்படிப்பாதிக்கப்பட்டவர்களுக்கான ஆறுதலான விஷயமாகத்தான் இப்படி உண்மையான உணர்வுப் பூர்வமான வலைப்பதிவுகளை பார்க்கிறேன்.