privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்நந்தினியை குதறிய இந்து முன்னணி மணிகண்டன் - நேரடி ரிப்போர்ட்

நந்தினியை குதறிய இந்து முன்னணி மணிகண்டன் – நேரடி ரிப்போர்ட்

-

நந்தினியை குதறிய இந்து முன்னணி மணிகண்டன் – நேரடி ரிப்போர்ட் – 1

கைபேசியில் எடுக்கப்பட்ட அந்தக் காணொளித் துண்டின் காட்சிகள் நடுக்கத்தோடு விரிகின்றது. கவிழ்த்துப் போட்ட நாடாக் கட்டில் ஒன்றின் மேல் வெள்ளுடை போர்த்தப்பட்ட உடல் கிடக்கிறது. காவல் துறை அதிகாரிகள் சிலர் கலைந்து நிற்கின்றனர். ”ஐயோ சாமீய்ய்.. ஐயோ சாமீய்ய்.. ஐயோ சாமீய்ய்… கொன்னுட்டானுகளே… கொண்டுட்டுப் போன அன்னிக்கே கொன்னுட்டானுகளே” – வயதான பெண் ஒருவரின் ஓலம் அந்தக் காட்சியில் பின்னணியாக ஒலித்துக் கொண்டேயிருக்கிறது. கையறு நிலையில் தன்னறியாமல் ஒலிக்கும் அந்தக் குரல் நமது செவிப்பாறைகளைக் கடந்து இதயத்தைப் பிளக்கிறது.

Nandhiniயாரோ ஒருவர் வெள்ளுடை போர்த்தப்பட்ட அந்த உடலை நீல நிற தார்பாய் ஒன்றினுள் புரட்டிப் போடுகிறார். தலை குப்புற கிடத்தப்பட்டிருக்கும் அந்த உடல் சில நொடிகள் கண்களில் விழுகின்றது. முழு நிர்வாணமான அந்த உடலின் மேல் முதுகு கருத்துப் போய் அதன் மீது வெள்ளைப் புழுக்கள் நெளிந்து கொண்டிருக்கின்றன. இடது கீழ் முதுகில் காயம் பட்ட அடையாளம் தெரிகின்றது. உடலைப் புரட்டிப் போடுகிறார் அந்த மனிதர். கருநீலத் துணி ஒன்றால் அந்தப் பெண்ணின் வாய் கட்டப்பட்டுள்ளது. சற்றே மேடிட்ட வயிறு.. அவளது பெண்ணுறுப்பு சிதைக்கப்பட்டுள்ளது.

ஐயோ ஐயோவென்ற ஓலம் அதிகரிக்க, சட்டென்று அந்த உடல் நீலத் தார்பாயால் மூடப்பட்டு அருகில் நின்று கொண்டிருந்த வெள்ளை ஆம்புலஸ் வேனுக்குள் திணிக்கப்படுகிறது. உணர்ச்சியற்ற முகங்களோடு நின்று கொண்டிருந்த போலீசு அதிகாரிகளிடம் ஒருவர் வாதிட்டுக் கொண்டிருக்கிறார்..

”சார்.. இதே ஒரு எஸ்.சி பையன் வன்னியர் பிள்ளைய அழைச்சிட்டுப் போயிருந்தா நடவடிக்கை எடுக்காம இருந்திருப்பீங்களா?” அந்தக் குரலில் வெளிப்பட்ட ஆற்றாமையின் உள்ளேயும் அவருக்கு முகம் கொடுத்து நின்று கொண்டிருந்த காவலதிகாரியின் கள்ள மௌனத்தின் உள்ளேயும் ஏராளமான அர்த்தங்கள் பொதிந்து கிடக்கின்றன. பதினேழே வயதான ஒரு சிறுமியின் கனவுகளும் அவளது பெற்றோரின் நிறைவேறாத ஆசைகளும் ஏமாற்றங்களும் மட்டுமின்றி ஆதிக்க சாதித் திமிரும் இந்து பயங்கரவாத வெறியின் ஆணவமும் அந்தக் காணொளித் துண்டின் ஒவ்வொரு காட்சியிலும் உறைந்து கிடக்கின்றன.

அவள் நந்தினி.

நந்தினியின் குடும்பத்தார் அவளை “பாப்பா” என்றே அழைக்கின்றனர். பதினேழு வயதான அவள், தந்தையில்லாத அந்தக் குடும்பத்தின் கடைக்குட்டி. நந்தினிக்கு ஒரு சகோதரனும் சகோதரியும் உண்டு. மூத்த சகோதரிக்குத் திருமணமாகி விட்டது. அந்தப் பிள்ளைகளில் எவருமே மேல்நிலைக் கல்வியைக் கூட எட்டாதவர்கள்; பிள்ளைகள் தோளுக்கு வளர்ந்ததும் கூலி வேலை செய்தால் தான் சாப்பாடு எனும் அளவுக்கு வறுமை. தாய் ராசக்கிளியும் கூலி வேலைக்குத் தான் செல்கிறார்.

“இந்திரா ஆவாஸ் யோஜனா” என்கிற அரசின் வீட்டு வசதித் திட்டம் ஒன்றின் மூலம் கட்டி முடிக்கப்பட்ட அவர்கள் வீட்டில் தரைத்தளம் இல்லை; சாணியால் மொழுகப்பட்ட மண் தரை. புழங்குவதற்காக தற்காலிக தடுப்பு வைத்து இரண்டாக பிரிக்கப்பட்ட ஒரே நீண்ட கூடம் கொண்ட அந்த வீட்டில், தாயின் பராமரிப்பில் வளர்ந்துள்ளார் நந்தினி. எட்டாம் வகுப்புடன் நந்தினியின் படிப்பை நிறுத்தி விட்ட அவளது தாயார், கிடைக்கும் சிறு சிறு கூலி வேலைகளுக்கு அவளுக்கு ஒத்த வயதுடைய தோழி தேவியுடன் அனுப்பி வைத்துள்ளார்.

கொலை செய்யப்பட்ட நந்தினின் தாய் இராசக்கிளி
கொலை செய்யப்பட்ட நந்தினின் தாய் இராசக்கிளி

கடந்த 29-ம் தேதி தேவியுடன் வீட்டை விட்டுச் சென்ற நந்தினி 14-ம் தேதி பிணமாகத் தான் கிடைத்துள்ளார். இது வெறும் மரணமல்ல; திட்டமிட்ட பச்சைப் படுகொலை. நந்தினி ஏன் கொல்லப்பட்டாள்? யாரால் கொல்லப்பட்டாள்? எப்படிக் கொல்லப்பட்டாள்? எதற்காக கொல்லப்பட்டாள்?

சிதைக்கப்பட்ட அந்தச் சிறுமியின் உடல் புதையுண்டு போனாலும், இந்தக் கேள்விகள் முக்கியமானவை. ஏனெனில், மீண்டும் ஒரு நந்தினி கொல்லப்படுவதைத் தடுக்க வேண்டுமென்றால் நமக்கு இந்தக் கேள்விகளுக்கு விடை தெரிய வேண்டும்.

29-ம் தேதி இரவு நந்தினி வீடு திரும்பவில்லை; ஆனால், அன்று இரவு 8:30 மணிக்கு ராசக்கிளியின் அக்காள் மகள் வெண்ணிலாவுக்கு _____ என்கிற தொலை பேசி எண்ணிலிருந்து ஒரு அழைப்பு வருகிறது. நந்தினி தான் பேசியிருக்கிறார். தான் செந்துறை அருகில் உள்ள வெல்லூரைச் சேர்ந்த தமிழரசன் என்பவரைக் காதலிப்பதாகவும், அவரைத் திருமணம் செய்து கொள்ளும் முடிவில் வீட்டை விட்டு வெளியேறி விட்டதாகவும், தனது தாயார் ராசக்கிளியை நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள் எனவும் தெரிவித்து விட்டு உடனே அந்த அழைப்பைத் துண்டித்துள்ளார் நந்தினி. வெண்ணிலா இந்த விசயத்தை உடனடியாக தனது சித்தி ராசக்கிளியிடம் தெரிவித்துள்ளார். அவர்கள் மீண்டும் அந்த எண்ணுக்கு அழைத்துள்ளனர்; ஆனால் அந்தக் கைபேசி அணைத்து வைக்கப்பட்டிருக்கிறது.

உடனே ராசக்கிளியும், உறவினர்களும் நந்தினியின் தோழி தேவியிடம் விசாரித்துள்ளனர். தனக்கு ஏதும் தெரியாது என தேவி மறுத்து விடவே, உடனே இரும்புலிகுறிச்சி காவல் நிலையத்துக்கு ஓடியுள்ளனர். தங்கள் மகள் கடத்தப்பட்டதாக புகார் தெரிவித்துள்ளனர். காவல் நிலையத்திலிருந்த அதிகாரிகள் எதுவாக இருந்தாலும் நாளை காலை வந்து பார்த்துக் கொள்ளும்படி மிரட்டி விரட்டியடித்துள்ளனர்.

பார்க்க:
♦ நந்தினியைக் கொன்ற இந்து முன்னணி – ஆவணப்படம்

மறுநாள் மீண்டும் புகாரளிப்பதற்குச் சென்ற போது, காவல் நிலையத்திலிருந்த அதிகாரி மணிவண்ணன் என்பவர், “உன் பிள்ளை எவனோடோவோ ஓடிப் போயிருச்சி… இதையெல்லாம் கடத்தல் புகாரா வாங்க முடியாது. கேர்ள் மிஸ்ஸிங் என்று எழுதிக் கொடுங்க” என்று எழுதி வாங்கியுள்ளார். பொதுவாக பதினெட்டு வயதுக்கு மேலான பெண்கள் வீட்டை விட்டு சொல்லாமல் கொள்ளாமல் வெளியேறி அது புகாரானால் மட்டுமே ”கேர்ள் மிஸ்ஸிங்” என புகாரைப் பதிவு செய்வது வழக்கம் – பதினெட்டு வயதுக்கு உட்பட்ட பெண்ணை ஒருவர் பெற்றோரின் சம்மதமின்றி அழைத்துச் சென்றால் “கடத்தல்” என்றே புகார் பதியப்பட்டிருக்க வேண்டும்.

Nandini (20)
தாய் ராசாக்கிளியின் புகார் மனு

இதற்கிடையே 30-ம் தேதி தங்கள் உறவினர் ஒருவரை வெல்லூருக்கு அனுப்பி விசாரித்ததில், அந்த ஊரில் இருக்கும் ஒரே தமிழரசனும் மனநிலை சரியில்லாதவர் எனத் தெரிய வருகின்றது. ஆக, நந்தினியைக் கடத்திச் சென்றவர்கள் அவளது வீட்டாரைக் குழப்ப வேண்டுமென்பதற்காக தவறான தகவலை நந்தினியை விட்டே சொல்ல வைத்துள்ளனர் என்பது தெரிய வருகின்றது. உடனே நந்தினியின் குடும்பத்தார் தேவியிடம் விசாரிக்கின்றனர்; அவர் மீண்டும் மறுக்கவே ஊர் பஞ்சாயத்தை கூட்டி விசாரிக்கின்றனர்.

விவகாரம் பெரிதாவதைக் கண்டு பயந்த தேவி உண்மையை பஞ்சாயத்தில் தெரிவித்து விடுகிறார். இந்து முன்னணியின் செந்துறை கிழக்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன் கடந்த ஆறேழு மாதங்களாக நந்தினியை காதலித்ததாகவும், அவனே நந்தினியை அழைத்துச் சென்றதாகவும் தேவி தெரிவித்துள்ளார். மணிகண்டன் வன்னியர் என்பது தெரிந்தவுடன் நந்தினியின் உறவினர்கள் பதறியுள்ளனர். மணிகண்டன் ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர் என்பதோடு, மணிகண்டன் கொலை செய்யவும் அஞ்சாதவன் என்பதையும் அப்படிச் செய்தாலும் அவனை தண்டனையிலிருந்து தப்புவிக்க இந்து முன்னணி என்கிற பயங்கரவாத அமைப்பு அவனுக்குப் பின் உள்ளது என்பதையும் அவர்கள் அறிந்திருந்தனர்.

இதற்கிடையே அரியலூர் மாவட்ட காவல் துறை உயரதிகாரிகளை அணுகும் இந்து முன்னணி மாவட்ட தலைவர் ராஜசேகர், தனது பெயருக்கு களங்கம் கற்பிக்கும் முயற்சி நடப்பதாகவும், மணிகண்டன் தங்களது அமைப்பில் இருந்து டிசம்பர் 29 தேதியன்றே விலகி விட்டாரென்றும் மனு ஒன்றை அளித்துள்ளார். “எங்கப்பன் குதிருக்குள் இல்லை” என்கிற ரீதியிலான மேற்படி மனுவை கர்ம சிரத்தையுடன் பெற்றுக் கொண்ட காவல்துறை, இன்று வரை ராஜசேகரை விசாரிக்க மறுத்து வருகின்றது.

நந்தினியின் உறவினர்கள் சிலர் காவல் துறையில் கீழ்நிலை பொறுப்புகளில் உள்ளனர். இவர்களுக்கு இந்து முன்னணியின் பயங்கரவாத முகம் நன்கு தெரியும் என்பதால் நந்தினியின் குடும்பத்தை எச்சரிக்கை செய்து உடனே மீண்டும் இரும்புலி காவல் நிலையத்தை அணுகுமாறு ஆலோசனை கொடுத்துள்ளனர். 30-ம் தேதியே மீண்டும் காவல் நிலையத்துக்கு ஓடிச் சென்ற இவர்களை அதிகாரிகளின் அலட்சியமும் திமிரும் வரவேற்றுள்ளது. சிறீரங்கத்துக்கு பந்தோபஸ்து பணிக்காக காவலர்கள் செல்ல வேண்டியுள்ளதைச் சொல்லி இந்தக் குடும்பத்தை மீண்டும் விரட்டியடித்துள்ளனர்.

Nandini (12)
மாவட்ட காவல் கண்கானிபாளரிடம் நடவடிக்கை எடுக்கக்கோரி கொடுக்கப்பட்ட புகார் மனு

அடுத்த ஓரிரு நாட்கள் ஏற்கனவே கணவனை இழந்திருந்த ராசக்கிளி உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு காத்திருந்துள்ளார். காதல் விவகாரத்தில் மகள் வெளியேறியிருப்பதால், எப்படியும் திரும்பி வந்து விடுவாள்; எங்கிருந்தாலும் நன்றாக இருப்பாள் என்கிற மெல்லிய நம்பிக்கை அந்தத் தாயின் மனதில் இருந்துள்ளது. எந்தத் தகவலும் கிடைக்காத நிலையில் மீண்டும் ஜனவரி 3-ம் தேதி காவல் நிலையத்தை அணுகியுள்ளார். இம்முறை தேவியையும், மணிகண்டனையும் அழைத்து விசாரித்துள்ளனர்.

காவல் நிலையத்தில் வைத்து மணிகண்டன் தான் நந்தினியை அழைத்துச் சென்றதாகத் தெரிவித்துள்ளார் தேவி. மேலும் ஆறு மாதங்களுக்கு முன் மணிகண்டன் நந்தினிக்கு தொடர்ந்து ‘லவ் டார்ச்சர்’ கொடுத்ததாகவும், நண்பர்களோடு எந்நேரமும் அவளைப் பின்தொடர்ந்ததாகவும் தெரிவித்த தேவி ஒரு கட்டத்தில் மணிகண்டன் ஏதேதோ ஆசை வார்த்தைகளைச் சொல்லி நந்தினியை தன் வலையில் வீழ்த்தியதாகவும் இதன் காரணமாக நந்தினி கருவுற்றதாகவும், அந்தக் கரு ஐந்து மாதத்திற்கும் மேல் வளர்ந்து விட்ட நிலையில் தன்னைத் திருமணம் செய்து கொள்ள நந்தினி மணிகண்டனைக் கேட்ட நிலையிலேயே அவன் நந்தினியை அழைத்துச் சென்றதாகவும் தேவி காவல் நிலையத்தில் விரிவாக சாட்சியளித்துள்ளார்.

இவ்வளவு விரிவான சாட்சிக்குப் பிறகும், மணிகண்டனிடம் பெயருக்கு விசாரித்து விட்டு ஜாமீனில் அனுப்பியுள்ளனர் இரும்புலி போலீசார். அந்த விசாரணைகளில் முன்னுக்குப் பின் முரணாக மணிகண்டன் உளறியதோடு தனக்கு ஏதும் தெரியாது என்றும் மறுத்துள்ளான். இந்நிலையில் ஜாமீனில் வெளிவந்த உடனேயே தலைமறைவாகிறான் மணிகண்டன்; அவனுக்கு ஜாமீன் கையெழுத்து போட்டு அழைத்து வந்த கிருஷ்ணமூர்த்தி என்பவன் பயந்து போய் மருந்தைக் குடித்து விடவே போலீசாருக்குத் தலைவலி துவங்குகிறது.

மணிகண்டனின் குடும்பத்தார் மற்றும் நண்பர்கள் ஒவ்வொருவராக அழைத்து விசாரிக்கத் துவங்குகிறார்கள், இரும்புலிகுறிச்சி போலீசார். எனினும், தங்களது நடவடிக்கைகளில் மெத்தனத்தையும் அலட்சியத்தையும் போலீசார் தொடர்ந்து காட்டி வந்துள்ளனர். இதற்கிடையே நந்தினி கடத்தப்பட்ட வழக்கும் இதில் இந்து முன்னணிக்கு இருக்கும் தொடர்பும் போலீசாரின் அலட்சியமும் பொன்பரப்பி மற்றும் செந்துறை பகுதிகளில் இந்து முன்னணியின் அராஜகங்களைத் தொடர்ந்து தட்டிக்கேட்டு வந்த தோழர்கள் சிலரின் கவனத்துக்கு வருகின்றது.

Nandini (19)
மணிகண்டனை கைது செய்யக் கோரி ஒட்டப்பட்ட் BSP – சுவரொட்டி

பகுஜன் சமாஜ், விடுதலைச் சிறுத்தைகள் போன்ற தலித் அமைப்புகள் இந்த விவகாரத்தைக் கையிலெடுத்து சுவரொட்டி பிரச்சாரமும், ஆர்பாட்டங்களையும் செய்யத் துவங்கவே காவல் துறைக்கு நெருக்கடி அதிகரிக்கிறது. இதற்கிடையே 8-ம் தேதி மாவட்ட எஸ்.பியிடம் மணிகண்டன் மற்றும் அவனது கிரிமினல் நடவடிக்கைகளை வழிகாட்டி இயக்கும் இந்து முன்னணி மாவட்டத் தலைவர் ராஜசேகரின் பெயர்களைக் குறிப்பிட்டு புகார் அனுப்பப்படுகின்றது.

வெளியே விவகாரம் முற்றி வருவதை உணர்ந்து திசை திருப்பும் சதித்திட்டத்துடன் 12-ம் தேதி மருந்தைக் குடிக்கும் மணிகண்டனை உறவினர்கள் மருத்துவமனையில் சேர்க்கிறார்கள். 13-ம் தேதி இந்து முன்னணியைச் சேர்ந்தவர்களும் மணிகண்டனின் கூட்டாளிகளுமான மணிவண்ணன், திருமுருகன் மற்றும் ராஜதுரை ஆகியோரைத் தூக்கி வந்து விசாரிக்கும் காவல்துறை, 14-ம் தேதி நந்தினியின் பிணத்தை மணிகண்டனின் கிராமமான கீழமாளிகையில் அவனது உறவினர் ஒருவருக்குச் சொந்தமான நிலத்தில் உள்ள கிணற்றில் இருந்து கைப்பற்றுகிறது.

29-ம் தேதி நந்தினியை நண்பர்கள் துணையுடன் கடத்திய மணிகண்டன் தடயத்தையும் எடுத்துச் சென்றிருக்கிறான். அவனது செல்போன் அடுத்த ஓரிரு நாட்களில் கீழமாளிகையில் இருந்து முப்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ள பென்னாடம் டவரின் எல்லையில் பதிவானதாக (Tower login) காவல்துறை அதிகாரி ஒருவர் தனிப்பட்ட முறையில் பகுஜன் சமாஜ் கட்சிப் பிரமுகரிடம் தெரிவித்துள்ளார்.

நந்தினியைக் கடத்திய மணிகண்டன் அவளைத் தனது சகாக்களின் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு கருவைக் கலைக்க முயற்சித்துள்ளான். இதற்காக சில மருத்துவமனைகளுக்கு அவளை அழைத்துச் சென்றுள்ளான். ஆறு மாதக் கருவைக் கலைக்க முடியாது என்பது தெரிய வந்தவுடன், அவளைக் கொல்லும் முடிவை எடுத்துள்ளான். கடத்தப்பட்டதற்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் கழித்து நந்தினியின் வாயைத் துணியால் கட்டி தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்துள்ளான். ஒருவேளை காவல்துறையினர் புகார் கிடைத்ததும் 29-ம் தேதி இரவே தங்கள் நடவடிக்கையைத் துவங்கியிருந்தால் அந்தப் பெண் காப்பாற்றப்பட்டிருக்கலாம்.

மயங்கிய நிலையில் கிடந்த நந்தினியின் உடலைச் சிதைத்த மணிகண்டனும் அவனது கூட்டாளிகளும் பிளேடால் அவளது பெண்ணுறுப்பைக் கிழித்துள்ளனர்; பின்னர், பெண்ணுறுப்பின் வழியே கையை விட்டு உள்ளேயிருந்து சிசுவை எடுத்து எரிக்க முயற்சித்துள்ளனர். மணிகண்டனும் அவனது கூட்டாளிகளும் நந்தினியின் வயிற்றிலிருந்த சிசுவைத் துணியில் சுற்றி எரித்து விட்டதாகவே பகுதி மக்கள் பேசிக் கொள்கின்றனர்.

கொடுக்கூர் கிராமத்திற்கு அருகில் உள்ள கல்லுக்குழியில் வைத்து இந்த பயங்கரத்தை அரங்கேற்றிய அவர்கள், அவளது துணியை அங்கேயே எரித்து விட்டு நிர்வாண உடலை மறைக்க இடம் தேடி ஒரு வெள்ளை எஸ்.யூ.வி மாடல் ஜீப்பில் போட்டுக் கொண்டு அலைந்துள்ளனர். பின்னர் கொடுக்கூரிலிருந்து ஏழு கிலோமீட்டர் தொலைவில் உள்ள கீழமாளிகையே பிணத்தை மறைப்பதற்கு தோதான இடம் என முடிவெடுத்துள்ளனர்.

Nandini (3)
கொலை செய்யப்பட்ட நந்தினி வீசப்பட்டிருந்த கிணறு

கிணற்றில் வீசினால் அதன் நாற்றம் அக்கம் பக்கத்திலிருப்பவர்களுக்கு சந்தேகம் ஏற்படுத்தும் என நினைத்து பக்கத்திலேயே ஒரு நாயை அடித்துப் போட்டு விடலாம் என முடிவெடுத்துள்ளனர். செத்த நாயின் நாற்றம் பிண வாடையை அமுக்கி விடும் எனத் திட்டமிட்டுள்ளனர். மணிகண்டனும் கூட்டாளிகளும் வெள்ளை ஜீப் மற்றும் இரண்டு சக்கர வாகனங்களில் இரவு நேரத்தில் நாயைத் தேடி அலைந்ததை கீழமாளிகை கிணற்றுக்குப் பக்கத்திலிருந்த வயதான பெண் பார்த்ததாகத் தெரிவித்துள்ளார். நாய் கிடைக்காமல் போகவே நந்தினியின் பிணத்துடன் கல்லைக் கட்டி எரிந்து விட்டுப் போயிருக்கிறார்கள்.

ஒரு தேர்ந்த தொழில்முறை கொலைவெறிக் கும்பலின் தொழில் நேர்த்தியுடன் நந்தினி கொல்லப்பட்டிருக்கிறாள். மனதில் எந்தக் கிலேசமோ நடுக்கமோ இன்றி அவளைக் கொன்றுள்ளனர் இந்து முன்னணியைச் சேர்ந்த பயங்கரவாதிகள். காமவெறியேறிய சொறிநாய் கூட கர்ப்பம் தரித்த பெண் நாயை உறவுக்கு நாடாது… ஆனால் இந்த மிருகங்களோ ஒரு கர்ப்பினிப் பெண்ணைக் கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்து கேட்பவர் நெஞ்சம் பதறும் வகையில் கொன்று போட்டுள்ளனர்.

நினைத்தாலே குலை நடுங்கும் இந்தக் காரியங்களைச் செய்ய இவர்களுக்கு எப்படித் துணிவு வந்தது? இவர்களின் குற்றப் பின்னணி என்ன? இவர்களின் பின்னே யார் யாரெல்லாம் இருக்கிறார்கள்? இந்து மாபியா கும்பலான இவர்களின் உள்ளூர் மற்றும் வெளியூர் தலைவர்கள் யார்? நந்தினியின் கொலையில் மூளையாகச் செயல்பட்ட இந்து முன்னணியின் முக்கிய பிரமுகர் யார்? அவன் ஏன் இன்னும் கைது செய்யப்படவில்லை? அரியலூர் போலீசார் இவர்களின் குற்றங்களுக்கு உடன்பட்டுப் போவது ஏன்?

மிக முக்கியமாக… இந்து முன்னணிக் காமவெறிக் கொலையாளிகளுக்கு இது புதிதல்ல என்பதும் எமது விசாரணையில் தெரியவந்துள்ளது.

( தொடரும்… )

– வினவு செய்தியாளர்கள்

இரண்டாம் பாகம் :
♣ நந்தினியைக் கொன்ற இந்துமுன்னணியின் பின்னணி – நேரடி ரிப்போர்ட் 2 ( நிறைவுப் பாகம் )
♣ நந்தினியைக் கொன்ற இந்து முன்னணி – ஆவணப்படம்

  1. என்ன ஒரு கொடூரம் !

    இன அடையாளத்தை, ஜல்லிக்கட்டை காக்க நடந்த போராட்டம் போல , இந்த சமூக சாதி கொடுமைக்கு எதிராக ஒரு போராட்டம் நடக்குமா !! பெருமூச்சுடன் …..

    • நடக்க வேண்டும்! அதுவும்நாடு தழுவிய போராட்டமாக இருக்கவேண்டும்! தலித் பிரச்சினை , அவர்கள் பார்த்து கொள்வார்கள் என மற்ற சாதியினர் ஒது ங்கி கொள்ள கூடாது! பாதிக்க பட்ட பெண் தலித் மட்டுமல்ல; இந்தியா முழுவதுமான ஏமாந்த அபலைகளில் ஒருவர் என , அனைத்து பிரிவினரும் , பெண்ணுரிமை இயக்கத்தினரும் , திராவிட கழகத்தவரும் இணைந்து போராட முன்வரவேண்டும்! ஆனால் தமிழக அரசு ஏன் மவுனித்திருக்கிறது? இப்படிப்பட்ட அடிமை அரசுநமக்கு தேவையா? பக்கத்து வீட்டில்தானேநெருப்பு ,நமக்கு என்ன என்று என இருக்க முடியாது!

  2. செந்தில்,

    மணிகண்டனைக் குறித்து தேவையில்லாத ஒரு கருத்தை உள்ளே திணிக்கவேண்டாம்.நன்கு விவாதம் செய்யக்கூடிய நீங்களே இப்படி உணர்ச்சிவசப்பட்டு பேசலாமா?

    மணிகண்டன் என்னதான் எதிர்கருத்து கொண்டவராயிருந்தாலும்,நம்மைப் பற்றி, குறிப்பாக கம்யூனிசம் குறித்து விமர்சனம் முன்வைத்தாலும் அதை கருத்து ரீதியில் முறியடிப்பது மட்டுமே நம் கடமை என்று எண்ணுகிறேன்.

  3. செந்தில்குமரன் இதெல்லாம் கொஞ்சம் ஓவருங்க.கிண்டலாக இருந்தாலும் வேண்டவே வேண்டாம்.வருவார் மணிகண்டன். கடற்கரை போராட்டம் ,மதம் கடந்த தமிழனின் எழுச்சி இந்துத்துவர்களை நிறைய கலங்கடித்திருக்கிறது.அது மணிகண்டனின் சிந்தனையை தூண்டி உண்மையை நியாயத்தை உணர்ந்தவராக அவரை வரவழைக்கலாம். நம்புவோம்.

  4. கிண்டல் செய்யவோ அல்லது நான் உணர்ச்சிவசப்பட்டோ அந்த பின்னுட்டத்தை எழுதலைங்க! RSS-ஹிந்து முன்ன்னணி கும்பலின் உண்மையான முகத்தை அதனை ஆதரிக்கும் நபர்களின் கொடுர சிந்தனை செயல்பாடுகளை வெளிக்காட்டவே இந்த பின்னுட்டத்தை எழுதினேன்… இந்த பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட ,தலித் சிறுமியை கொன்ற மணிகண்டன் என்பவர் தான் வினவிலும் பின்னுட்டம் இடுகின்றாரா என்ற சந்தேகத்தை தான் எழுப்பியுள்ளேன்.

    இந்த மணிகண்டனும் அந்த மணிகண்டனும் ஒருவேளை வேறு வேறாக இருந்தாலும் அவர்களின் நோக்கம் பார்பன பண்பாட்டை முன்நிருத்தி இந்தியாவின் பூர்வ குடிகளை சிதைத்து அழிக்கவேண்டும் அல்லது அடிமைப்டுத்தவேண்டும் என்பது தான் அவர்களின் முதன்மையான நோக்கமாக உள்ளது என்பதனை யாராவது மறுக்க முடியுமா? அப்படி இருக்க இருவரும் பொருளால்(physically) வேறுபட்டவர்கள் என்றாலும் கருத்தால் ஒன்றாக தானே இருகின்றார்கள்?

    RSS கட்சியின் நோக்கமே பார்பனர்களின் பண்பாட்டை முத்மைபடுத்தி அவர்களுக்கு கீழ் இந்திய பூர்வகுடிகளை அடிமைப்டுத்தவேண்டும் என்பது தான் ! இதனை யாராவது மறுக்கமுடியுமா?

    மணிகண்டன் தங்களது அமைப்பில் இருந்து டிசம்பர் 29 தேதியன்றே விலகி விட்டாரென்றும் மனு ஒன்றை கொடுக்கும் இந்து முன்னணி மாவட்ட தலைவர் ராஜசேகர் என்பவருக்கும் மணிகண்டனுக்கும் இது வரையில் இருந்த தொடர்புகளை யாராவது மறுக்க முடியுமா?

    சென்னையில் கொடுரமாக கொலை செய்யபட்ட சுவாதியும் பெண்தான் ,நந்தினியும் பெண்தான் என்ற நிலையில் சுவாதியை கொலை செய்த குற்றவாளியை பிடிக்க இந்த சட்டம் எடுத்துக்கொண்ட முன் முயற்சிகளை ஏன் நந்தினி விசயத்தில் சட்டம் சும்மா இருக்கிறது என்ற விசயத்தை அம்பலபடுத்த வேண்டாமா?

    பார்பனர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் இந்த சட்டம் மண்டியிட்டு வேலை செய்கின்றது என்றால் அதே சட்டம் தலித் மக்களுக்கும் ஒரு பிரச்சனை ஏற்படும் போது அது வேலை செய்ய தடையாக இருக்கும் காரணத்தை நாம் அறியவேண்டாமா?

  5. செந்தில்குமரன்…

    இரண்டு கேள்விகள் உங்களுக்கு….ஆனால் ஒரு கோரிக்கை மட்டும்…ஒன்றை முடித்துவிட்டு மற்றொன்றிற்கு சென்றால் விவாதம் சிறப்பாக இருக்கும்….கேள்விக்கான பதிலை முடிந்தவரை எளிமையாகத் தரவும்.

    1.

    இங்கு யாரும் ஆர்.எஸ்.எஸ் குறித்தோ, இல்லை இந்துமத வெறி குறித்தோ உங்களுடைய புரிதல் தவறு என்று சொல்லவில்லை.

    நீங்கள் தேவையில்லாமல், அதுவும் குற்றம் சாட்டப்பட்ட ஜெயங்கொண்டம் இந்துமுன்னணி வெறியன் மணிகண்டனும் இங்கே பின்னூட்டமிடும் மணிகண்டனும் ஒரே நபரா என்று எகத்தாளமாகக் கேட்டிருந்தீர்கள். நீங்கள் செய்தது தவறு எனும் பட்சத்தில் ஒரு சுயவிமர்சனம் ஏற்றிருந்தால் நாம் அடுத்த விவாதத்திற்குச் சென்றிருக்கலாம். நீங்கள் என்ன நினைத்தீர்கள் என்று யாரும் இங்கே சந்தேகம் எழுப்பவில்லை. அதைவிட்டு விட்டு முறையாக பதில் சொல்லாமல் உங்கள் புரிதல் மட்டத்தையும், பொது அறிவையும் வெளிப்படுத்த முயல்வதும் ஒருவித இயலாமையே….

    மணிகண்டன் அவர்கள் இங்கு பின்னூட்டமிடும்போது அதைப்பற்றி மேலும் விவாதிப்போம்.

    2.நீங்கள் செய்த இரண்டாவது தவறு…வினவு புலனாய்வுக்குழு ஏன் மணிகண்டன் 10 நாட்களாக விவாதத்திற்கு வரவில்லை என்று கண்டுபிடிக்க வேண்டும் என்று கோரியது…..
    முதல் கேள்விக்கான விவாதத்தை முடித்துக்கொண்டு, பிறகு இதைப்பற்றி விவாதிப்போம்.

    • செந்தில்குமரன் அரியலூர் மணிகண்டனையும், வினவில் பின்னூட்டமிடும் மணிகண்டனையும் ஒருவரா எனக் கேட்டதை சில நண்பர்கள் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

      இது தேவையற்றது என்பது என் கருத்து.

      1) செந்தில்குமரனுக்கு உண்மையிலேயே அப்படி ஒரு சந்தேகம் இருந்து அப்படிக் கேட்டிருக்கலாம்.
      2) அல்லது, செந்தில்குமரன் “எகத்தாளமாக” கூட கேட்டிருக்கலாம்.

      இதில் எந்தக் காரணமாக இருந்தாலும் அதில் குறைகாண ஏதுமில்லை எனவே நினைக்கிறேன்.

      நண்பர்கள் சுட்டிக்காட்டும் ‘நாகரீகத்துக்கு’ வினவில் பின்னூட்டமிடும் ஆர்.எஸ்.எஸ் Paid internet coolie மணிகண்டன் தகுதியற்றவர்.

      செந்தில் எகத்தாளமாகவே கேட்டிருந்தாலும் கூட அதைப் பகடியென நினைத்துக் கடக்கலாம்; பதிவில் பொருளைச் சார்ந்தே விவாதிக்கலாம்.

      இது ஒரு சல்லி மேட்டர் மக்களே.

    • இதுல என்ன எகத்தாளம் இருக்குங்க? என்னுடைய சந்தேகம் அது. ஒருவேளை என்னுடைய சந்தேகம் தப்பா இருந்தா கூட இப்படி எடுத்துக்குங்க என்னுடைய பின்னுட்டத்தை…… வினவு இந்த கட்டுரையை முடிக்கும் தருணத்தில் இருந்து என்னுடைய பின்னுட்டம் தொடங்குவதாக வைத்துகொள்ளுங்கள் ….எப்படி வினவு கட்டுரை முடியுது தெரியுமா? (மிக முக்கியமாக… இந்து முன்னணிக் காமவெறிக் கொலையாளிகளுக்கு இது புதிதல்ல என்பதும் எமது விசாரணையில் தெரியவந்துள்ளது.) இப்படி தாங்க முடியுது. இராக் நாட்டில் உள்ள ஒரு ஊரில் IS தீவிரவாதிகள் மக்களை கொன்று குவிகின்றார்கள் என்றால் பக்கத்து ஊரில் உள்ள அதே IS திவிரவாதியை நல்லவரு என்று கூருவிங்களா? அவனும் அந்த குற்றத்துக்கு உடந்தை என்று கூருவிங்க்களா? இருவருக்கும் கொள்கை ஒன்று தானே? அப்ப இருவருமே குற்றத்துக்கு உடந்தை தானே? இப்ப என்னுடைய கருத்தை (அந்த மற்றும் இந்த) மணிகண்டங்களுக்கு apply செய்து பாருங்கள்! என்னுடைய பின்னுட்டம் சரியானதாக பொருள் போதிந்தகாக இருக்கும்.

      //நீங்கள் தேவையில்லாமல், அதுவும் குற்றம் சாட்டப்பட்ட ஜெயங்கொண்டம் இந்துமுன்னணி வெறியன் மணிகண்டனும் இங்கே பின்னூட்டமிடும் மணிகண்டனும் ஒரே நபரா என்று எகத்தாளமாகக் கேட்டிருந்தீர்கள்.//

  6. செந்தில் உங்களுக்கு பைத்தியம் தான் பிடித்து இருக்கிறது, நான் மகாத்மா காந்தியின் அகிம்சை வழியை முழுமையாக நம்புபவன், என்னை போன்ற ஆட்களை எல்லாம் இந்த விவகாரத்தில் இழுப்பது தேவையில்லாத ஒன்று…

    • ம..ம..ம..மகாத்மாவா..ஆ..
      அகிம்சையா..ஆ…

      Oh my Devil

      இதை சட்னி என்று சொன்னால் இட்லி கூட நம்பாதே ப்ரோ..

      @செந்தில்குமரன்,

      இந்த மணிகண்டன் ரேப்பிஸ்ட்டா இல்லையான்னு எனக்குத் தெரியாதுங்க.. ஆனா, இவரு அரியலூர் மணிகண்டன் இல்லைன்னு மட்டும் உறுதியா தெரியும்.. ஏன்னா அவன் இப்ப பொலீஸ் கட்டுப்பாட்டில் இருக்கான்.

      நம்ம தமிழ்நாட்டு கட்ட டுப்பாக்கி பொலீஸ் மாமா அரெஸ்ட் பன்ன அக்கூஸ்டுக்கு இண்டெர்நெட் வசதி செய்து குடுக்கிற அளவுக்கு இன்னும் மாடர்ன் ஆகியிருக்காதுன்னு நீங்களும் ஏத்துக்குவீங்க தானே?

    • கொலை வெறியும் , பாலியல் விகார எண்ணங்களும் கூடிய மனதுடன் திரிவது இந்து மதவெறியர்கள் என்று அந்த மணிகண்டன் நிருபித்து உள்ளான்…. இந்த நிலையில் சாத்தான் வேதம் ஓதுவது போன்று இங்கு இந்த மணிகண்டன் அவர்கள் தான் காந்தியின் அகிம்சையை பின்பற்றுவதாக பிதற்றுகின்றார்…முதல் விஷயம் தாயை கொன்று தாயின் கருவில் உள்ள சிசுவை வெளியே எடுத்து சிதைக்கும் முறையை அந்த மணிகண்டனுக்கு சொல்லிகொடுத்தது யார்? குஜராத் ஹந்து வெறியர்கள் அன்றிவேறு யார்? குஜராத்தில் முஸ்லிம் பெண்ணின் உயிரை எடுத்து அவரின் வயிற்றில் இருந்த கருவையும் சிதைத்த அதே முறையில் தான் அந்த மணிகண்டனும் மிக கொடுரமாக செயல்பட்டு தலித் சிறுமியின் உயிரையும் கருவையும் சிதைத்து உள்ளான். இவைகள் எல்லாம் எந்த கொள்கை அடிபடையில் நடைபெறுகின்றன என்று இந்த மணிகண்டன் அவர்கள் சிந்திக்கவேண்டும்!

  7. வாருங்கள் மணிகண்டனே,

    சைக்கிள் கேப்ல அதானி பாக்கெட்ல பல ஆயிரம் கோடி போட்டுக்கொடுத்து குஜராத்தையே ஆட்டைய போட்ட மோடி மாதிரியே பேசுறீங்களே….

    காந்திக்கும் ஆர்.எஸ்.எஸ்- க்கும் என்ன தொடர்பு இருக்கிறது…காங்கிரஸ் காந்தியை எதிர்க்கத்தானே, உங்கள் 56 இன்ச் வகையறாவெல்லாம், அதே காங்கிரசில் இருந்த ஆர்.எஸ்.எஸ் வெறியன் பட்டேலை காந்திக்கு மாற்றாக முன்வைக்கிறது.

    ஓ…நீங்க அகிம்சை வழியை நம்புவன் என்று மட்டும் சொல்ல விரும்புகிறீர்களா?

  8. வினவு நிர்வாகிகளுக்கு …..

    ஏற்கனவே நான் பல முறை உங்களிடம் வைத்த கோரிக்கை என்றாலும், தாங்கள் இது தொடர்பாக நிச்சயம் நடவடிக்கை எடுப்பீர்கள் என்ற நம்பிக்கையில் வினவு வாசகர்கள் சார்பாக மீண்டும் எங்களின் கோரிக்கையை முன் வைக்கிறோம்.

    தங்களின் பின்னூட்ட பெட்டி சில நபர்களால் மிகவும் தரம் தாழ்ந்து சென்று கொண்டிருக்கிறது என்பதை தெரிவித்து கொள்கிறேன். தாங்கள் அளிக்கும் கருத்து சுதந்திரம் எனும் ஜனநாயகத்தை இங்கு சிலர் தங்களின் தனிப்பட்ட வெறுப்பினை தீர்த்து கொள்ளும் இடமாக பயன்படுத்த நீங்கள் அனுமதிப்பது மிகவும் வேதனையான ஒன்று. மணிகண்டன் என்னதான் மாற்றுக் கருத்து கொண்ட நபராக இருந்தாலும், அவரை இந்த அளவு தரம் தாழ்ந்து விமர்சித்ததை நீங்கள் அரவே அனுமதித்திருக்க கூடாது. மறுமொழிகள் அனைத்தும் உங்கள் பார்வைக்கு வந்த பிறகு தான் இங்கு பிரசுரிக்க படுகிறது எனும்பொழுது மணிகண்டன் தொடர்பான மேற்படி அவதூறு பின்னூட்டத்தை தாங்கள் அனுமதித்தது மிக பெரிய நாகரீக முரண்பாடு .

    வினவு நிர்வாகத்தின் மீதுள்ள நம்பிக்கையில் தான் வாசகர்கள் அனைவரும் விவாதத்தில் கலந்து கொள்கிறார்கள், அந்த நம்பிக்கையை காக்கும் பொருட்டு தங்களின் செயல்பாடுகள் இருக்க வேண்டும். இனி எதிர்காலத்தில் அவ்வாறு இருக்கும் என்று நம்புகிறேன். அதன் அடிப்படையில் பின்னூட்டம் எண் ஒன்றை தாங்கள் தடை செய்ய வேண்டும்(நீக்க வேண்டும்)அவ்வாறு முடியாது எனில் குறைத்த பட்சம் அநாகரீகமாக அவதூறு சேற்றை வாரி இறைத்த மேற்படி நபருக்கு தாங்கள் கடுமையான கண்டனங்களையாவது தெரிவிக்க வேண்டும். இந்த இரண்டில் ஏதாவது ஒன்றினை செய்து வினவின் மாண்பினை காப்பீர்கள் என்று நம்புகிறேன். நன்றி.

    • சகோதரி ரெபெக்காமேரி அப்ப்டியே தயவு செய்து உங்களின் ஆருயிர் சகோதரர் ஜோசப்பின் கண்ணியமிக்க நாகரீக கருத்து ஒன்று என்னைப்பற்றி இதே தளத்தில் வேறொரு தலைப்பில் இடம் பெற்றிருக்கிறது.அதையும் உங்கள் நடுநிலை கண்களால் பார்க்க வேண்டுகிறேன்.

      • மீரான் ………..

        ஜோசப் எந்த கட்டுரையின் விவாதத்தில் அவ்வாறு கூறினார் என்று எனக்கு தெரியவில்லை, நீங்கள் அதன் லிங்க்கை அனுப்பி இருக்கலாம். எது எப்படி ஆயினும் ஜோசப் உங்களை பற்றி அவதூறாக பேசி இருந்தால் கண்டிக்க பட வேண்டியது தான். ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் கோபத்தில் தடித்த வார்த்தைகளை பேசுவது என்பது வேறு, அவதூறை அள்ளி வீசுவது என்பது வேறு. இரண்டிற்கும் பாரிய வேறுபாடுகள் உண்டு. பின்னூட்டம் எண் ஒன்றில் இருப்பது போல அநாகரீகமாக உங்களின் மீது அவதூறை அள்ளி வீசி இருந்தால் முதல் ஆளாக நிச்சயமாக நான் ஜோசப்பை கண்டித்திருப்பேன். அதில் சந்தேகம் வேண்டாம். நன்றி.

        • வினவு நிர்வாகத்திற்கு…….

          நீங்கள் பின்னூட்டம் எண் ஒன்றை தடை செய்ய மாட்டீர்கள் என்பது எனக்கு தெரியும். இருந்தாலும் நியாய உணர்ச்சியின் அடிப்படையில் நீங்கள் அதற்கான நடவடிக்கையை எடுப்பீர்கள் என்று எதிர் பார்த்தேன். தவறு என்னுடையது தான். நீங்கள் அந்த பதிவை படித்து விட்டு தான் வெளியிட்டிருக்கிறீர்கள் எனும் பொழுது, அதை தடை செய்ய வேண்டும் என்று கேட்டது என் அறியாமை தான். நடுவுநிலை என்பது வினவிடம் ரொம்பவே மிஸ்ஸிங்????!!!!!வெறும் வெறுப்பை மட்டுமே முதலாக வைத்துக் கொண்டு செய்யும் எந்த செயலும் இறுதியில் பாழாக தான் முடியும், சொல்வதற்கு வேறொன்றுமில்லை.

          • Rebecca Mary அவர்களே , முதலில் நான் கொடுத்து உள்ள பின்னுடங்களுக்கு பதில் அளிக்க முயற்ச்சிக்கவும்….குறிப்பாக உங்களுக்கு நான் எழுதியுள்ள பின்னுடங்களுக்கும், மற்றும் 6.2 , 7.2 ஆகியவருக்கு பதல் அளியுங்கள்… அல்லது பதில் அளிக்க முயற்சியாவது செய்யுங்கள்…. !

        • அக்கா ரபேக்கா மேரி அவர்களே மீரா சாகிபுவை பற்றி எந்த அவதூறையும் சொல்லவில்லை பார்ப்பனியத்தை பற்றி நீட்டி முழங்கும் மீரா சாகிபே ***இசுலாமும் பார்ப்பனியம் பொன்ற கருத்தையே போதிக்கின்றது என்ற உண்மையை குரானிலிருந்தும் இசுலாமிய முத்தொகுப்பு நூல்களில் இருந்தும் எடுத்துக்காட்டி விட்டால் நீர் என்ன தூக்கு போட்டு செத்தா விடுவீர் என்று கேட்டேன் அவ்வளவே

    • Rebecca Mary க்கு ஒரு ஆட்டோ டிரைவர் உடன் ஏற்பட்ட பிரச்சனைக்காக ஒட்டுமொத்த தொழிலாளர் வர்கத்தையும் பார்த்து “இதற்க்கு பெயர் தான் பாட்டாளி வர்க்க பொறுக்கி தனமோ” என்று எகத்தாளமாக குற்றம் சாட்டிய Rebecca Maryக்கு இருக்கும் நாகரிகத்தை விட என்னுடைய நாகரிகம் அதிகமானது தான்… மேலும் ஏன் நான் அவரையும்-இவரையும் (மணிகண்டன்கள்) ஒன்றாய் இணைத்து பேசுகின்றேன் என்பதற்கும் விளக்கம் கொடுத்து உள்ளேன்… முடிந்தால் என்னுடைய பின்னுட்டம் 6.2 மற்றும் 7.2 ஆகியவருக்கு இவர் பதில் அளிக்கட்டும்….

      https://www.vinavu.com/2014/06/17/auto-drivers-protection-assciation-general-meeting/
      Pls Ref : feedback No 7

    • Rebecca Mary உங்களுக்கு ஒட்டு மொத்த தொழிலாளர் வர்க்கமும் பொறுக்கிகளாக தெரியும்… அடுத்து ஆட்டோ ஓட்டுபவர்கள் வர்கம் பொறுக்கிகளாக தெரியும் …, அடுத்து அந்த ஆட்டோ ஓட்டுனர்களில் 80% பேர் உங்க பார்வையில் பொறுக்கிகளாக தெரியும் …, ஆனா பாருங்க நான் என்ன கூறுகின்றேன் என்றால் இந்த ஹிந்து வெறியர்கள் 100% பேருமே அவர்கள் பாப்பன பண்பாட்டு ஹிந்துத்துவா கொள்கை அடிப்டையில் பொறுக்கிகள் தான் என்கின்றேன்…பாலியல் வக்கிர மனம் படைத்தவர்கள் என்று கூறுகின்றேன்… முஸ்லிம் மற்றும் தலித் பெண்களின் வயித்துல இருக்கும் குழந்தையை உருவி எடுத்து எரிக்க அவர்களுக்கு அவர்களின் ஹிந்துத்துவா அமைப்புகள் பயிற்சி கொடுத்தது உள்ளது என்று நேரடியாகவே குற்றம் சாட்டுகின்றேன்… அப்படி இருக்க அந்த மணிகண்டனுக்கும் இந்த மணிகண்டனுக்கும் என்ன வேறுபாட்டை கண்டீர்கள்!?

      Rebecca Mary //இப்போதும் சொல்கிறேன் ஆட்டோ ஓட்டுனர்களில் 80% அனைவரும் பொறுக்கிகள் தான்.
      பொத்தம் பொதுவாக இந்த வார்த்தையை கூறியமைக்கு நான் மன்னிப்பு கூறுகிறேன். அதை மாற்றி ஆட்டோ ஓட்டும் வர்கத்தின் பொறுக்கி தனம் என்று கூறுகிறேன் இனி.//

      https://www.vinavu.com/2014/06/17/auto-drivers-protection-assciation-general-meeting/
      Pls Ref : feedback No 16

    • Rebecca Mary அவர்களே,

      ஹிந்து முன்னணி – மணிகண்டன் கும்பலின் பாலியல் வக்கிர கொடுர கொலையை கண்டிக்க துப்பு இல்லாமல் எனக்கும் மணிகண்டனுக்கும் இடையே வந்து பஞ்சாயத்து செய்ய வந்து இருக்கிங்களே! உங்களுக்கு ஒரு கேள்வி மட்டும் தான்… ஆம் ஒரே ஒரு கேள்வி மட்டும் தான்…. கொள்கை அளவில் இருவருமே ஒரே மணிகண்டன்கள் தான்….! அவர்கள் கொள்கையே ஒன்றாக இருக்கும் போது (முஸ்லிம் மற்றும் தலித் பெண்களை கொல்வது பாலியல் பலாத்காரம் செய்வது ) இருவருக்கும் என்ன வேறுபாடு கண்டீர்கள்! உங்கள் பார்வையில் பெண்கள் என்றால் அவர்களில் முஸ்லிம் பெண்களும் தலித் பெண்களும் வரமாட்டார்களா?

  9. எல்லாரும் கொஞ்சம் பொறுங்களங்க.மணிகண்டன் திருந்தி வரலாம் என்று நம்பச்சொன்னேன்.வந்தவரும் தான் காந்தியின் அகிம்சை வழியை முழுமையாக நம்புபவன் என் கிறார்.ஆர் எஸ் எஸ்சை முழுமையாக ஆதரித்து பல விவாதங்களில் மல்லுகட்டி வந்தவர்,நேற்று காந்தியின் கொலையை கொண்டாடி அரசின் அனுமதியோடு அணிவகுத்த சில ஆர் எஸ் எஸ் பிடாரிகளை வெறுக்கிறார் என்றுதானே பொருள்.வெறுப்பார்..மாறிவிட்டார் மணிகண்டன்.பொய்யிக்கு பலியானவர் மீண்டிருக்கிறார் என்று மீண்டும் நம்புகிறேன்.

    • meeran Sir give full details about this insidant…pls… Give some web link pls…
      //நேற்று காந்தியின் கொலையை கொண்டாடி அரசின் அனுமதியோடு அணிவகுத்த சில ஆர் எஸ் எஸ் பிடாரிகளை வெறுக்கிறார் என்றுதானே பொருள்.//

  10. தனிமனிதனின் மன வக்கரம் செயலை எல்லாம் ஒரு இயக்கம் அல்லது மதம் அல்லது ஜாதியை கொண்டு வருவது சரியல்ல. இந்த மாதிரியான காரியங்களை டெல்லியில் நிரபாயவுக்கும் சிலர் செய்தனர், இந்த மாதிரியான செயல்கள் தமிழகத்தில் பல பகுதியிலும் நடந்து தான் இருக்கிறது, தனி மனிதனின் வக்கர (ஆணாதிக்க)மனப்பான்மை தான் காரணம். இதை எப்படி சரி செய்வது என்று தான் பார்க்க வேண்டும் உடனே இது தான் சாக்கு என்று ஒரு இயக்கம் அல்லது மதம் அல்லது ஜாதியின் மீது வெறுப்பை தூண்டுவது சரியல்ல.

    • மணிகண்டனின் செயலை தனி மனித வக்கிரமாக எப்படி பார்கின்றீர்கள் மணிகண்டன்? அவன் இருக்கும் ஹிந்து முன்னணியின் அமைப்பை சேர்ந்தவர்களும் (இந்து முன்னணியைச் சேர்ந்தவர்களும் மணிகண்டனின் கூட்டாளிகளுமான மணிவண்ணன், திருமுருகன் மற்றும் ராஜதுரை) இந்த பாலியல் வக்கிர பாலாத்கார கொலைக்கு கூட்டாளிகள் தான் என்கின்றபோது அவனை மட்டும் தனிமை படுத்த எந்த ஒரு காரணமும் இல்லையே! தாயின் வயிற்றில் உள்ள சிசுவை கூட உருவி எடுத்து எரிக்க மணிகண்டனுக்கு நேரடியாக துணைபோன ஹிந்து முன்னணி அமைப்பை சேர்ந்தவர்கலும் (ராஜசேகர்) மறைமுகமாக துணை நிற்கும் ஏனைய ஹிந்து முன்னணி அமைப்பை சேர்ந்தவர்களும் குற்றவாளிகள் தானே? அப்படியாக இருக்கும் போது ஹிந்து முன்னனியை தமிழ் நாட்டில் இருந்து தடை செய்வது தானே சரியான பொருத்தமான தீர்வாகும்?

    • ஹிந்து முன்னனணி குப்பலை ஏன் தடை செய்யக்கூடாது மணிகண்டன்? கோவையில் குண்டுவெடிப்புகளை நிக்ழத்திய அல்உமா இயக்கத்தவர்கள் சட்டத்தால் தண்டிக்கபட்டு இருகின்றார்கள்… அவர்களின் இயக்கமும் தடை செய்யபட்டு இருக்கிறது… அப்படி பட்ட நிலையில் கூட்டு கொலை மற்றும் கூட்டு கற்பழிப்பு , குற்றத்துக்கான தடையங்களை மறைத்தால் ஆகிய குற்றங்களில் ஈடுபட்டவர்கள் ஹிந்து முன்னணி இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்பதால் ஏன் அந்த இயக்கத்தை தடை செய்யகூடாது மணிகண்டன்..?

    • தவறுக்கு மேல் தவறு செய்கிறீர்கள் மணிகண்டன்! டெல்லிநிர்பயா, சென்னை சுவாதி கொலை , மற்றும்நாடெங்கும்நடக்கும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள்நடப்பதால்,நந்தினி குரூர கொலையை கண்டுகொள்ளாமல் இருக்க வேண்டுமா? தனி மனிதனின் வக்கிர மனப்பன்மை என்பது சரிதான், ஆனால் அந்த வக்கிரத்தை சில குறிப்பிட்டநலிந்த பிரிவினரின் மீது காட்டுவதையும், அத்தகையநபரை வெறுத்து ஒதுக்காமல், அரசியலாக்குவதையும் சகித்து கொள்ள முடியுமா?

      மீரான் சொன்னது சரியே! காந்தியின் கொலையை, கோட்சேயின் வீரமாக கொண்டாடும் , கேவலமான ஒரு அமைப்பும், அதற்கு அனுமதி கொடுத்து பாதுகாப்பும் கொடுத்த அடிமை அரசும் வேறெங்கும் காண முடியுமா? தாங்கள் உண்மையிலேயே காந்தியை மதிக்க துவங்கியிருந்தால் இந்த வன்முறை கூட்டத்திற்கு கண்டனம் தெரிவிக்கவும்!

  11. கோயம்புத்தூரிலும் சென்னை எழும்பூரிலும் நடந்த பயங்கரவாத ஆர் எஸ் எஸ் சின் அணிவகுப்பைத்தான் சொன்னேன்.காந்தி இறந்த நாளில் அவரின் இறப்பை கொண்டாடித்தானே ஊர்வலம் போயிருக்கிறார்கள் பயங்கரவாதிகள்.மெரினா கடற்கரையில் பொதுமக்கள் கூட 144 தடை உத்தரவு.போன வருடம் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அணிவகுப்புக்கு இந்த வருடம் காவல்துறை பாதுகாப்போடு அரசு அனுமதி.

  12. தலித்துன்னா மட்டும் எப்படி நீங்கள் விவாதம் நடத்தி நீதி கேட்க வந்துவிடுகீறீர்கள். தலித் பொறுக்கியால் கொடூரமாக எரித்து கொல்லப்பட்ட நவீனா அப்போ எங்கடா போச்சு உங்க நடுநிலை. உங்களுக்கு தலித் செத்ததால்தான் கண் தெரியுது மத்த சதிகாரன் சாகும் போது நவத்துவரமும் மூடி கொள்கிறதே எப்படி.

Leave a Reply to கி.செந்தில்குமரன் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க