privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்நந்தினியை குதறிய இந்து முன்னணி மணிகண்டன் - நேரடி ரிப்போர்ட்

நந்தினியை குதறிய இந்து முன்னணி மணிகண்டன் – நேரடி ரிப்போர்ட்

-

நந்தினியை குதறிய இந்து முன்னணி மணிகண்டன் – நேரடி ரிப்போர்ட் – 1

கைபேசியில் எடுக்கப்பட்ட அந்தக் காணொளித் துண்டின் காட்சிகள் நடுக்கத்தோடு விரிகின்றது. கவிழ்த்துப் போட்ட நாடாக் கட்டில் ஒன்றின் மேல் வெள்ளுடை போர்த்தப்பட்ட உடல் கிடக்கிறது. காவல் துறை அதிகாரிகள் சிலர் கலைந்து நிற்கின்றனர். ”ஐயோ சாமீய்ய்.. ஐயோ சாமீய்ய்.. ஐயோ சாமீய்ய்… கொன்னுட்டானுகளே… கொண்டுட்டுப் போன அன்னிக்கே கொன்னுட்டானுகளே” – வயதான பெண் ஒருவரின் ஓலம் அந்தக் காட்சியில் பின்னணியாக ஒலித்துக் கொண்டேயிருக்கிறது. கையறு நிலையில் தன்னறியாமல் ஒலிக்கும் அந்தக் குரல் நமது செவிப்பாறைகளைக் கடந்து இதயத்தைப் பிளக்கிறது.

Nandhiniயாரோ ஒருவர் வெள்ளுடை போர்த்தப்பட்ட அந்த உடலை நீல நிற தார்பாய் ஒன்றினுள் புரட்டிப் போடுகிறார். தலை குப்புற கிடத்தப்பட்டிருக்கும் அந்த உடல் சில நொடிகள் கண்களில் விழுகின்றது. முழு நிர்வாணமான அந்த உடலின் மேல் முதுகு கருத்துப் போய் அதன் மீது வெள்ளைப் புழுக்கள் நெளிந்து கொண்டிருக்கின்றன. இடது கீழ் முதுகில் காயம் பட்ட அடையாளம் தெரிகின்றது. உடலைப் புரட்டிப் போடுகிறார் அந்த மனிதர். கருநீலத் துணி ஒன்றால் அந்தப் பெண்ணின் வாய் கட்டப்பட்டுள்ளது. சற்றே மேடிட்ட வயிறு.. அவளது பெண்ணுறுப்பு சிதைக்கப்பட்டுள்ளது.

ஐயோ ஐயோவென்ற ஓலம் அதிகரிக்க, சட்டென்று அந்த உடல் நீலத் தார்பாயால் மூடப்பட்டு அருகில் நின்று கொண்டிருந்த வெள்ளை ஆம்புலஸ் வேனுக்குள் திணிக்கப்படுகிறது. உணர்ச்சியற்ற முகங்களோடு நின்று கொண்டிருந்த போலீசு அதிகாரிகளிடம் ஒருவர் வாதிட்டுக் கொண்டிருக்கிறார்..

”சார்.. இதே ஒரு எஸ்.சி பையன் வன்னியர் பிள்ளைய அழைச்சிட்டுப் போயிருந்தா நடவடிக்கை எடுக்காம இருந்திருப்பீங்களா?” அந்தக் குரலில் வெளிப்பட்ட ஆற்றாமையின் உள்ளேயும் அவருக்கு முகம் கொடுத்து நின்று கொண்டிருந்த காவலதிகாரியின் கள்ள மௌனத்தின் உள்ளேயும் ஏராளமான அர்த்தங்கள் பொதிந்து கிடக்கின்றன. பதினேழே வயதான ஒரு சிறுமியின் கனவுகளும் அவளது பெற்றோரின் நிறைவேறாத ஆசைகளும் ஏமாற்றங்களும் மட்டுமின்றி ஆதிக்க சாதித் திமிரும் இந்து பயங்கரவாத வெறியின் ஆணவமும் அந்தக் காணொளித் துண்டின் ஒவ்வொரு காட்சியிலும் உறைந்து கிடக்கின்றன.

அவள் நந்தினி.

நந்தினியின் குடும்பத்தார் அவளை “பாப்பா” என்றே அழைக்கின்றனர். பதினேழு வயதான அவள், தந்தையில்லாத அந்தக் குடும்பத்தின் கடைக்குட்டி. நந்தினிக்கு ஒரு சகோதரனும் சகோதரியும் உண்டு. மூத்த சகோதரிக்குத் திருமணமாகி விட்டது. அந்தப் பிள்ளைகளில் எவருமே மேல்நிலைக் கல்வியைக் கூட எட்டாதவர்கள்; பிள்ளைகள் தோளுக்கு வளர்ந்ததும் கூலி வேலை செய்தால் தான் சாப்பாடு எனும் அளவுக்கு வறுமை. தாய் ராசக்கிளியும் கூலி வேலைக்குத் தான் செல்கிறார்.

“இந்திரா ஆவாஸ் யோஜனா” என்கிற அரசின் வீட்டு வசதித் திட்டம் ஒன்றின் மூலம் கட்டி முடிக்கப்பட்ட அவர்கள் வீட்டில் தரைத்தளம் இல்லை; சாணியால் மொழுகப்பட்ட மண் தரை. புழங்குவதற்காக தற்காலிக தடுப்பு வைத்து இரண்டாக பிரிக்கப்பட்ட ஒரே நீண்ட கூடம் கொண்ட அந்த வீட்டில், தாயின் பராமரிப்பில் வளர்ந்துள்ளார் நந்தினி. எட்டாம் வகுப்புடன் நந்தினியின் படிப்பை நிறுத்தி விட்ட அவளது தாயார், கிடைக்கும் சிறு சிறு கூலி வேலைகளுக்கு அவளுக்கு ஒத்த வயதுடைய தோழி தேவியுடன் அனுப்பி வைத்துள்ளார்.

கொலை செய்யப்பட்ட நந்தினின் தாய் இராசக்கிளி
கொலை செய்யப்பட்ட நந்தினின் தாய் இராசக்கிளி

கடந்த 29-ம் தேதி தேவியுடன் வீட்டை விட்டுச் சென்ற நந்தினி 14-ம் தேதி பிணமாகத் தான் கிடைத்துள்ளார். இது வெறும் மரணமல்ல; திட்டமிட்ட பச்சைப் படுகொலை. நந்தினி ஏன் கொல்லப்பட்டாள்? யாரால் கொல்லப்பட்டாள்? எப்படிக் கொல்லப்பட்டாள்? எதற்காக கொல்லப்பட்டாள்?

சிதைக்கப்பட்ட அந்தச் சிறுமியின் உடல் புதையுண்டு போனாலும், இந்தக் கேள்விகள் முக்கியமானவை. ஏனெனில், மீண்டும் ஒரு நந்தினி கொல்லப்படுவதைத் தடுக்க வேண்டுமென்றால் நமக்கு இந்தக் கேள்விகளுக்கு விடை தெரிய வேண்டும்.

29-ம் தேதி இரவு நந்தினி வீடு திரும்பவில்லை; ஆனால், அன்று இரவு 8:30 மணிக்கு ராசக்கிளியின் அக்காள் மகள் வெண்ணிலாவுக்கு _____ என்கிற தொலை பேசி எண்ணிலிருந்து ஒரு அழைப்பு வருகிறது. நந்தினி தான் பேசியிருக்கிறார். தான் செந்துறை அருகில் உள்ள வெல்லூரைச் சேர்ந்த தமிழரசன் என்பவரைக் காதலிப்பதாகவும், அவரைத் திருமணம் செய்து கொள்ளும் முடிவில் வீட்டை விட்டு வெளியேறி விட்டதாகவும், தனது தாயார் ராசக்கிளியை நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள் எனவும் தெரிவித்து விட்டு உடனே அந்த அழைப்பைத் துண்டித்துள்ளார் நந்தினி. வெண்ணிலா இந்த விசயத்தை உடனடியாக தனது சித்தி ராசக்கிளியிடம் தெரிவித்துள்ளார். அவர்கள் மீண்டும் அந்த எண்ணுக்கு அழைத்துள்ளனர்; ஆனால் அந்தக் கைபேசி அணைத்து வைக்கப்பட்டிருக்கிறது.

உடனே ராசக்கிளியும், உறவினர்களும் நந்தினியின் தோழி தேவியிடம் விசாரித்துள்ளனர். தனக்கு ஏதும் தெரியாது என தேவி மறுத்து விடவே, உடனே இரும்புலிகுறிச்சி காவல் நிலையத்துக்கு ஓடியுள்ளனர். தங்கள் மகள் கடத்தப்பட்டதாக புகார் தெரிவித்துள்ளனர். காவல் நிலையத்திலிருந்த அதிகாரிகள் எதுவாக இருந்தாலும் நாளை காலை வந்து பார்த்துக் கொள்ளும்படி மிரட்டி விரட்டியடித்துள்ளனர்.

பார்க்க:
♦ நந்தினியைக் கொன்ற இந்து முன்னணி – ஆவணப்படம்

மறுநாள் மீண்டும் புகாரளிப்பதற்குச் சென்ற போது, காவல் நிலையத்திலிருந்த அதிகாரி மணிவண்ணன் என்பவர், “உன் பிள்ளை எவனோடோவோ ஓடிப் போயிருச்சி… இதையெல்லாம் கடத்தல் புகாரா வாங்க முடியாது. கேர்ள் மிஸ்ஸிங் என்று எழுதிக் கொடுங்க” என்று எழுதி வாங்கியுள்ளார். பொதுவாக பதினெட்டு வயதுக்கு மேலான பெண்கள் வீட்டை விட்டு சொல்லாமல் கொள்ளாமல் வெளியேறி அது புகாரானால் மட்டுமே ”கேர்ள் மிஸ்ஸிங்” என புகாரைப் பதிவு செய்வது வழக்கம் – பதினெட்டு வயதுக்கு உட்பட்ட பெண்ணை ஒருவர் பெற்றோரின் சம்மதமின்றி அழைத்துச் சென்றால் “கடத்தல்” என்றே புகார் பதியப்பட்டிருக்க வேண்டும்.

Nandini (20)
தாய் ராசாக்கிளியின் புகார் மனு

இதற்கிடையே 30-ம் தேதி தங்கள் உறவினர் ஒருவரை வெல்லூருக்கு அனுப்பி விசாரித்ததில், அந்த ஊரில் இருக்கும் ஒரே தமிழரசனும் மனநிலை சரியில்லாதவர் எனத் தெரிய வருகின்றது. ஆக, நந்தினியைக் கடத்திச் சென்றவர்கள் அவளது வீட்டாரைக் குழப்ப வேண்டுமென்பதற்காக தவறான தகவலை நந்தினியை விட்டே சொல்ல வைத்துள்ளனர் என்பது தெரிய வருகின்றது. உடனே நந்தினியின் குடும்பத்தார் தேவியிடம் விசாரிக்கின்றனர்; அவர் மீண்டும் மறுக்கவே ஊர் பஞ்சாயத்தை கூட்டி விசாரிக்கின்றனர்.

விவகாரம் பெரிதாவதைக் கண்டு பயந்த தேவி உண்மையை பஞ்சாயத்தில் தெரிவித்து விடுகிறார். இந்து முன்னணியின் செந்துறை கிழக்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன் கடந்த ஆறேழு மாதங்களாக நந்தினியை காதலித்ததாகவும், அவனே நந்தினியை அழைத்துச் சென்றதாகவும் தேவி தெரிவித்துள்ளார். மணிகண்டன் வன்னியர் என்பது தெரிந்தவுடன் நந்தினியின் உறவினர்கள் பதறியுள்ளனர். மணிகண்டன் ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர் என்பதோடு, மணிகண்டன் கொலை செய்யவும் அஞ்சாதவன் என்பதையும் அப்படிச் செய்தாலும் அவனை தண்டனையிலிருந்து தப்புவிக்க இந்து முன்னணி என்கிற பயங்கரவாத அமைப்பு அவனுக்குப் பின் உள்ளது என்பதையும் அவர்கள் அறிந்திருந்தனர்.

இதற்கிடையே அரியலூர் மாவட்ட காவல் துறை உயரதிகாரிகளை அணுகும் இந்து முன்னணி மாவட்ட தலைவர் ராஜசேகர், தனது பெயருக்கு களங்கம் கற்பிக்கும் முயற்சி நடப்பதாகவும், மணிகண்டன் தங்களது அமைப்பில் இருந்து டிசம்பர் 29 தேதியன்றே விலகி விட்டாரென்றும் மனு ஒன்றை அளித்துள்ளார். “எங்கப்பன் குதிருக்குள் இல்லை” என்கிற ரீதியிலான மேற்படி மனுவை கர்ம சிரத்தையுடன் பெற்றுக் கொண்ட காவல்துறை, இன்று வரை ராஜசேகரை விசாரிக்க மறுத்து வருகின்றது.

நந்தினியின் உறவினர்கள் சிலர் காவல் துறையில் கீழ்நிலை பொறுப்புகளில் உள்ளனர். இவர்களுக்கு இந்து முன்னணியின் பயங்கரவாத முகம் நன்கு தெரியும் என்பதால் நந்தினியின் குடும்பத்தை எச்சரிக்கை செய்து உடனே மீண்டும் இரும்புலி காவல் நிலையத்தை அணுகுமாறு ஆலோசனை கொடுத்துள்ளனர். 30-ம் தேதியே மீண்டும் காவல் நிலையத்துக்கு ஓடிச் சென்ற இவர்களை அதிகாரிகளின் அலட்சியமும் திமிரும் வரவேற்றுள்ளது. சிறீரங்கத்துக்கு பந்தோபஸ்து பணிக்காக காவலர்கள் செல்ல வேண்டியுள்ளதைச் சொல்லி இந்தக் குடும்பத்தை மீண்டும் விரட்டியடித்துள்ளனர்.

Nandini (12)
மாவட்ட காவல் கண்கானிபாளரிடம் நடவடிக்கை எடுக்கக்கோரி கொடுக்கப்பட்ட புகார் மனு

அடுத்த ஓரிரு நாட்கள் ஏற்கனவே கணவனை இழந்திருந்த ராசக்கிளி உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு காத்திருந்துள்ளார். காதல் விவகாரத்தில் மகள் வெளியேறியிருப்பதால், எப்படியும் திரும்பி வந்து விடுவாள்; எங்கிருந்தாலும் நன்றாக இருப்பாள் என்கிற மெல்லிய நம்பிக்கை அந்தத் தாயின் மனதில் இருந்துள்ளது. எந்தத் தகவலும் கிடைக்காத நிலையில் மீண்டும் ஜனவரி 3-ம் தேதி காவல் நிலையத்தை அணுகியுள்ளார். இம்முறை தேவியையும், மணிகண்டனையும் அழைத்து விசாரித்துள்ளனர்.

காவல் நிலையத்தில் வைத்து மணிகண்டன் தான் நந்தினியை அழைத்துச் சென்றதாகத் தெரிவித்துள்ளார் தேவி. மேலும் ஆறு மாதங்களுக்கு முன் மணிகண்டன் நந்தினிக்கு தொடர்ந்து ‘லவ் டார்ச்சர்’ கொடுத்ததாகவும், நண்பர்களோடு எந்நேரமும் அவளைப் பின்தொடர்ந்ததாகவும் தெரிவித்த தேவி ஒரு கட்டத்தில் மணிகண்டன் ஏதேதோ ஆசை வார்த்தைகளைச் சொல்லி நந்தினியை தன் வலையில் வீழ்த்தியதாகவும் இதன் காரணமாக நந்தினி கருவுற்றதாகவும், அந்தக் கரு ஐந்து மாதத்திற்கும் மேல் வளர்ந்து விட்ட நிலையில் தன்னைத் திருமணம் செய்து கொள்ள நந்தினி மணிகண்டனைக் கேட்ட நிலையிலேயே அவன் நந்தினியை அழைத்துச் சென்றதாகவும் தேவி காவல் நிலையத்தில் விரிவாக சாட்சியளித்துள்ளார்.

இவ்வளவு விரிவான சாட்சிக்குப் பிறகும், மணிகண்டனிடம் பெயருக்கு விசாரித்து விட்டு ஜாமீனில் அனுப்பியுள்ளனர் இரும்புலி போலீசார். அந்த விசாரணைகளில் முன்னுக்குப் பின் முரணாக மணிகண்டன் உளறியதோடு தனக்கு ஏதும் தெரியாது என்றும் மறுத்துள்ளான். இந்நிலையில் ஜாமீனில் வெளிவந்த உடனேயே தலைமறைவாகிறான் மணிகண்டன்; அவனுக்கு ஜாமீன் கையெழுத்து போட்டு அழைத்து வந்த கிருஷ்ணமூர்த்தி என்பவன் பயந்து போய் மருந்தைக் குடித்து விடவே போலீசாருக்குத் தலைவலி துவங்குகிறது.

மணிகண்டனின் குடும்பத்தார் மற்றும் நண்பர்கள் ஒவ்வொருவராக அழைத்து விசாரிக்கத் துவங்குகிறார்கள், இரும்புலிகுறிச்சி போலீசார். எனினும், தங்களது நடவடிக்கைகளில் மெத்தனத்தையும் அலட்சியத்தையும் போலீசார் தொடர்ந்து காட்டி வந்துள்ளனர். இதற்கிடையே நந்தினி கடத்தப்பட்ட வழக்கும் இதில் இந்து முன்னணிக்கு இருக்கும் தொடர்பும் போலீசாரின் அலட்சியமும் பொன்பரப்பி மற்றும் செந்துறை பகுதிகளில் இந்து முன்னணியின் அராஜகங்களைத் தொடர்ந்து தட்டிக்கேட்டு வந்த தோழர்கள் சிலரின் கவனத்துக்கு வருகின்றது.

Nandini (19)
மணிகண்டனை கைது செய்யக் கோரி ஒட்டப்பட்ட் BSP – சுவரொட்டி

பகுஜன் சமாஜ், விடுதலைச் சிறுத்தைகள் போன்ற தலித் அமைப்புகள் இந்த விவகாரத்தைக் கையிலெடுத்து சுவரொட்டி பிரச்சாரமும், ஆர்பாட்டங்களையும் செய்யத் துவங்கவே காவல் துறைக்கு நெருக்கடி அதிகரிக்கிறது. இதற்கிடையே 8-ம் தேதி மாவட்ட எஸ்.பியிடம் மணிகண்டன் மற்றும் அவனது கிரிமினல் நடவடிக்கைகளை வழிகாட்டி இயக்கும் இந்து முன்னணி மாவட்டத் தலைவர் ராஜசேகரின் பெயர்களைக் குறிப்பிட்டு புகார் அனுப்பப்படுகின்றது.

வெளியே விவகாரம் முற்றி வருவதை உணர்ந்து திசை திருப்பும் சதித்திட்டத்துடன் 12-ம் தேதி மருந்தைக் குடிக்கும் மணிகண்டனை உறவினர்கள் மருத்துவமனையில் சேர்க்கிறார்கள். 13-ம் தேதி இந்து முன்னணியைச் சேர்ந்தவர்களும் மணிகண்டனின் கூட்டாளிகளுமான மணிவண்ணன், திருமுருகன் மற்றும் ராஜதுரை ஆகியோரைத் தூக்கி வந்து விசாரிக்கும் காவல்துறை, 14-ம் தேதி நந்தினியின் பிணத்தை மணிகண்டனின் கிராமமான கீழமாளிகையில் அவனது உறவினர் ஒருவருக்குச் சொந்தமான நிலத்தில் உள்ள கிணற்றில் இருந்து கைப்பற்றுகிறது.

29-ம் தேதி நந்தினியை நண்பர்கள் துணையுடன் கடத்திய மணிகண்டன் தடயத்தையும் எடுத்துச் சென்றிருக்கிறான். அவனது செல்போன் அடுத்த ஓரிரு நாட்களில் கீழமாளிகையில் இருந்து முப்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ள பென்னாடம் டவரின் எல்லையில் பதிவானதாக (Tower login) காவல்துறை அதிகாரி ஒருவர் தனிப்பட்ட முறையில் பகுஜன் சமாஜ் கட்சிப் பிரமுகரிடம் தெரிவித்துள்ளார்.

நந்தினியைக் கடத்திய மணிகண்டன் அவளைத் தனது சகாக்களின் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு கருவைக் கலைக்க முயற்சித்துள்ளான். இதற்காக சில மருத்துவமனைகளுக்கு அவளை அழைத்துச் சென்றுள்ளான். ஆறு மாதக் கருவைக் கலைக்க முடியாது என்பது தெரிய வந்தவுடன், அவளைக் கொல்லும் முடிவை எடுத்துள்ளான். கடத்தப்பட்டதற்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் கழித்து நந்தினியின் வாயைத் துணியால் கட்டி தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்துள்ளான். ஒருவேளை காவல்துறையினர் புகார் கிடைத்ததும் 29-ம் தேதி இரவே தங்கள் நடவடிக்கையைத் துவங்கியிருந்தால் அந்தப் பெண் காப்பாற்றப்பட்டிருக்கலாம்.

மயங்கிய நிலையில் கிடந்த நந்தினியின் உடலைச் சிதைத்த மணிகண்டனும் அவனது கூட்டாளிகளும் பிளேடால் அவளது பெண்ணுறுப்பைக் கிழித்துள்ளனர்; பின்னர், பெண்ணுறுப்பின் வழியே கையை விட்டு உள்ளேயிருந்து சிசுவை எடுத்து எரிக்க முயற்சித்துள்ளனர். மணிகண்டனும் அவனது கூட்டாளிகளும் நந்தினியின் வயிற்றிலிருந்த சிசுவைத் துணியில் சுற்றி எரித்து விட்டதாகவே பகுதி மக்கள் பேசிக் கொள்கின்றனர்.

கொடுக்கூர் கிராமத்திற்கு அருகில் உள்ள கல்லுக்குழியில் வைத்து இந்த பயங்கரத்தை அரங்கேற்றிய அவர்கள், அவளது துணியை அங்கேயே எரித்து விட்டு நிர்வாண உடலை மறைக்க இடம் தேடி ஒரு வெள்ளை எஸ்.யூ.வி மாடல் ஜீப்பில் போட்டுக் கொண்டு அலைந்துள்ளனர். பின்னர் கொடுக்கூரிலிருந்து ஏழு கிலோமீட்டர் தொலைவில் உள்ள கீழமாளிகையே பிணத்தை மறைப்பதற்கு தோதான இடம் என முடிவெடுத்துள்ளனர்.

Nandini (3)
கொலை செய்யப்பட்ட நந்தினி வீசப்பட்டிருந்த கிணறு

கிணற்றில் வீசினால் அதன் நாற்றம் அக்கம் பக்கத்திலிருப்பவர்களுக்கு சந்தேகம் ஏற்படுத்தும் என நினைத்து பக்கத்திலேயே ஒரு நாயை அடித்துப் போட்டு விடலாம் என முடிவெடுத்துள்ளனர். செத்த நாயின் நாற்றம் பிண வாடையை அமுக்கி விடும் எனத் திட்டமிட்டுள்ளனர். மணிகண்டனும் கூட்டாளிகளும் வெள்ளை ஜீப் மற்றும் இரண்டு சக்கர வாகனங்களில் இரவு நேரத்தில் நாயைத் தேடி அலைந்ததை கீழமாளிகை கிணற்றுக்குப் பக்கத்திலிருந்த வயதான பெண் பார்த்ததாகத் தெரிவித்துள்ளார். நாய் கிடைக்காமல் போகவே நந்தினியின் பிணத்துடன் கல்லைக் கட்டி எரிந்து விட்டுப் போயிருக்கிறார்கள்.

ஒரு தேர்ந்த தொழில்முறை கொலைவெறிக் கும்பலின் தொழில் நேர்த்தியுடன் நந்தினி கொல்லப்பட்டிருக்கிறாள். மனதில் எந்தக் கிலேசமோ நடுக்கமோ இன்றி அவளைக் கொன்றுள்ளனர் இந்து முன்னணியைச் சேர்ந்த பயங்கரவாதிகள். காமவெறியேறிய சொறிநாய் கூட கர்ப்பம் தரித்த பெண் நாயை உறவுக்கு நாடாது… ஆனால் இந்த மிருகங்களோ ஒரு கர்ப்பினிப் பெண்ணைக் கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்து கேட்பவர் நெஞ்சம் பதறும் வகையில் கொன்று போட்டுள்ளனர்.

நினைத்தாலே குலை நடுங்கும் இந்தக் காரியங்களைச் செய்ய இவர்களுக்கு எப்படித் துணிவு வந்தது? இவர்களின் குற்றப் பின்னணி என்ன? இவர்களின் பின்னே யார் யாரெல்லாம் இருக்கிறார்கள்? இந்து மாபியா கும்பலான இவர்களின் உள்ளூர் மற்றும் வெளியூர் தலைவர்கள் யார்? நந்தினியின் கொலையில் மூளையாகச் செயல்பட்ட இந்து முன்னணியின் முக்கிய பிரமுகர் யார்? அவன் ஏன் இன்னும் கைது செய்யப்படவில்லை? அரியலூர் போலீசார் இவர்களின் குற்றங்களுக்கு உடன்பட்டுப் போவது ஏன்?

மிக முக்கியமாக… இந்து முன்னணிக் காமவெறிக் கொலையாளிகளுக்கு இது புதிதல்ல என்பதும் எமது விசாரணையில் தெரியவந்துள்ளது.

( தொடரும்… )

– வினவு செய்தியாளர்கள்

இரண்டாம் பாகம் :
♣ நந்தினியைக் கொன்ற இந்துமுன்னணியின் பின்னணி – நேரடி ரிப்போர்ட் 2 ( நிறைவுப் பாகம் )
♣ நந்தினியைக் கொன்ற இந்து முன்னணி – ஆவணப்படம்