privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்சேலம் இரும்பாலை தொழிலாளர்கள் நேர்காணல்

சேலம் இரும்பாலை தொழிலாளர்கள் நேர்காணல்

-

“புவியியல் ரீதியில் கனிமவளம் மிகுந்த பகுதி இது தோழர். சேலம் இரும்பாலையை தனியார்மயப்படுத்துவதை வெறும் ஒரு அரசுப் பொதுத்துறை ஆலையோட பிரச்சினையாவோ, அங்கே வேலை செய்கிற தொழிலாளர்கள் தொடர்பான பிரச்சினையாவோ பார்ப்பது சரியில்லை. அரசு கிட்டே ஒருங்கிணைத்த ஒரு திட்டம் இருக்கு. அது இந்த பூமிக்கு கீழே புதைந்து கிடக்கும் வளங்களை மொத்தமாக அள்ளி தனியார் முதலாளிகள் கிட்ட கொடுக்கிறது. அவன் அந்த வளங்களை வெட்டி எடுக்கிறது ஒரு புவியியல் பேரழிவையே உண்டாக்கப் போகிறான்” என்றார் சுரேஷ் குமார். சேலம் இரும்பாலையில் செயல்படும் சி.ஐ.டி.யு தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளராக இருக்கிறார் சுரேஷ்.

“பூமிக்குக் கீழே உள்ள வளங்களை வெட்டியெடுப்பதால் எப்படியும் இயற்கையின் சமநிலை குலையத்தான் போகுது.. அதை அரசே செய்தாலும் அது தானே நிலைமை?”

சேலம் இரும்பாலை சி.ஐ.டி.யு தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் சுரேஷ் குமார்.

“உண்மை தான். ஆனால், அரசு செய்யும் போது அந்த நடவடிக்கையின் மேல் ஒரு கட்டுப்பாடும் கண்காணிப்பும் இருக்கும். தனியார் முதலாளிகளுக்கு லாபமே பிரதான நோக்கம் என்பதோடு அவனுக்கு  மண்ணின் மீதோ அங்கே வசிக்கும் மக்களின் மீதோ எந்தவொரு பிடிப்பும் கிடையாதே? இதே அரசாங்கம் செய்யும் போது வரம்பு மீறிப் போகும் நிலையில் தேர்தல் வெற்றி, அதிகாரம்னு குறைந்தபட்சம் சுயநல நோக்கோடவாவது ஒரு கட்டுப்பாடு இருக்கும் இல்லையா?”

“இந்த பகுதியில் எந்த மாதிரியான கனிமங்கள் கிடைக்கின்றன?”

“ஒரு விசயம் புரிந்து கொள்ளுங்கள் தோழர்… இந்தியாவில் பூமிக்குக் கீழே என்ன இருக்கு என்பதைப் பற்றி முழுமையான ஆய்வோ, தரவுகளோ அரசாங்கத்து கிட்டயே இல்லை. இது வரை கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் கனிம வளங்கள் ஒரு பத்து சதவீதம் தான் இருக்கும். வெள்ளைக்காரன் போட்டுக்கொடுத்த வரைபடங்களே இப்ப வரைக்கும் வழிகாட்டியா இருக்கு… சேலம் பகுதியை எடுத்துக்கிட்டீங்கன்னாக்க… இங்கே இரும்புத் தாது இருக்கு அப்புறம் பாக்சைட், மேக்னசைட், புளூ மெட்டேல் எல்லாம் இருக்கிறதா கண்டு பிடிச்சிருக்காங்க…”

மேநிலம் – தென் சஹ்யாதிரி பகுதிகள் மற்றும் கிழக்குக் கடற்கரைப் பகுதிகள் என தமிழ்நாட்டை புவியியல் ரீதியில் இரண்டு பகுதிகளாகப் பிரித்த வெள்ளை ஆட்சியாளர்கள், இதில் மேநிலம் – தென் சஹ்யாதிரி பகுதிகளாக தர்மபுரி, சேலம், கோவை, திருவண்ணாமலை, வேலூர், மதுரை வடக்கு மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களை இனம் பிரித்தனர். மைசூர் பீடபூமியின் தொடர்ச்சியாக அறியப்பட்ட சேலம் தர்மபுரி மாவட்டங்களை பாரோமகால் பகுதியாக ஆங்கிலேயர்கள் இனங்கண்டனர்.

சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பிரதேசங்களின் கனிம வளங்களை அறிந்து கொண்ட ஸ்டெர்லைட், ஜிண்டால் போன்ற பெரும் முதலாளிகள் கடந்த பல பத்தாண்டுகளாகவே இப்பகுதியில் சிறிதும் பெரிதுமாக இயங்கி வருகின்றனர். எனினும், சேலத்துக்குக் கீழே புதைந்து கிடக்கும் இரும்புத் தாது இன்னமும் வெட்டியெடுக்கப்படாமல் உள்ளது.

“இந்தப் பகுதியில் உள்ள இரும்புத் தாதுவை வெட்டி அந்த மூலப் பொருளில் இருந்தே சேலம் இரும்பாலையில் உற்பத்தி செய்திருக்கலாமே? ஏன் அதற்கான முயற்சிகள் எடுக்கப்படவில்லை?”

“சேலம் இரும்பாலையானது மறிநிலை ஒருங்கிணைவு (Reverse integration) முறையில் துவங்கப்பட்டது. அதாவது உருகிய இரும்புக் கூழை இரும்புப் பாளங்களாக்கி வெப்ப உருட்டாலை, குளிர் உருட்டாலைகளில் ப்ராசஸ் செய்து அதன் இறுதி வடிவத்துக்கு கொண்டு வருவார்கள். இந்த செயல்முறையில் பின் பகுதியில் வரும் யுனிட்டுகள் முதலிலும், முன் பகுதியில் வரும் யுனிட்டுகள் பிற்காலத்திலும் துவங்கப்பட்டன. இங்கேயே தாதுவை அகழ்வாய்வு செய்வதெல்லாம் நீண்டகால திட்டங்கள். ஆனால், மொத்தமாக அனைத்தையும் தனியார் முதலைகளின் கையில் ஒப்படைக்கும் திட்டத்தோடு மத்திய அரசு செயல்பட்டு வருகிறது” என்றார் சுரேஷ் குமார்.

“இரும்பாலை நட்டத்தில் இயங்குவதைப் பற்றி ஊடகங்களில் வந்துள்ள செய்திக்கட்டுரைகளில், இதன் வணிகப் பிரிவு கொல்கத்தாவுக்கு மாற்றப்பட்டதையும் அரசின் ஆர்டர்கள் திட்டமிட்டுக் குறைக்கப்பட்டதையும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன…” என்கிற கேள்வியை முன்வைத்தோம்.

“அந்தக் காரணங்கள் உண்மை தான் என்றாலும் அவை மட்டுமே முழு உண்மைகள் அல்ல” என்றார்..

“வேறு காரணங்களைக் கொஞ்சம் விளக்க முடியுமா?”

“முதலில், இரும்பாலைக்கென கையகப்படுத்தப்பட்ட நிலம் பெருவாரியாக பயன்படுத்தப்படாமல் கிடக்கின்றது. இதில் ஒரு ஒருங்கிணைந்த தொழிற்பூங்கா – அதாவது அரசின் கட்டுப்பாட்டில் ஸ்டீல் பொருட்களை தயாரிக்கும் சிறப்புப் பொருளாதார மண்டலம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என நீண்டகாலமாக கோரி வருகிறோம். இன்று வரை அதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கவில்லை. அப்படியான தொழிற்பூங்கா இருந்திருந்தால், எங்களிடம் மூலப்பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் அதை நாட்டின் வெவ்வேறு பகுதிகளுக்கு தரைமார்க்கமாக எடுத்துச் செல்லும் செலவும் குறையும், இங்கே வேலை வாய்புகளும் பெருகும்” என்றவர் மேலும் தொடர்ந்தார்…

“அடுத்து, குறைந்தபட்ச இறக்குமதி விலைக் கொள்கை சரியாக பின்பற்றப்படாத காரணத்தால் எங்களை விட குறைந்த விலைக்கு இரும்பு இறக்குமதி செய்யப்படுகிறது – குறிப்பாக சீனாவில் இருந்து. மேலும் வியாபாரப் போட்டிகளை முறைப்படுத்தும் கமிசனின் (Competitive commision of India) விதிகள் ஒன்று முடமாக்கப்பட்டன, அல்லது ஓரளவுக்கு காகிதத்தில் உள்ள விதிகளையும் கூட அமல்படுத்தவில்லை”

“மேலும் 2000-மாவது ஆண்டில் நடந்த விரிவாக்கப் பணிகளுக்கான நிதியை வங்கிகளில் கடன் வாங்கியே ஒதுக்கினர். சேலம் இரும்பாலை இந்தியாவின் மகாரத்தினங்களில் ஒன்று என்பதுடன், தனது லாபத்தைக் கையாளும் உரிமையும் அதற்கு உள்ளது. கடந்த ஆண்டுகளில் இந்த ஆலையின் மூலம் ஈட்டப்பட்ட பலநூறு கோடி லாபம் அரசிடம் அப்படியே இருந்த நிலையில் விரிவாக்கப் பணிகளுக்கு வங்கியில் வாங்கிய 2000 கோடி கடனுக்கான வட்டியையும் நாங்கள் முறையாக கட்டி வருகிறோம். நல்லா கவனிங்க.. மல்லையா, அம்பானி, அதானி மாதிரி பெரிய முதலாளிகள் வங்கிகள்ல கடன் வாங்கிட்டு நாமம் போட்டுட்டு போறான். நாங்க முறையா வட்டி கட்டிட்டு வர்றோம். இதனால் கடந்த ஆண்டுகளில் லாபம் குறைந்தது. இப்ப அதையே காரணமா வைத்து தனியார்மயமாக்க பார்க்கறாங்க…”

“உண்மையில் இப்போது நடப்புக் காலாண்டில் மீண்டும் லாபமீட்டத் துவங்கியிருக்கிறோம். அடுத்து ஓரிரு ஆண்டு இந்த நிறுவனத்தின் நிதி நிலைமை பழையபடி வலுப்பெற்றுவிடும். இவ்வாறு நாங்கள் எதிர்பார்த்திருந்த சமயத்தில் தான் தனியார்மயமாக்கல் நடவடிக்கையை மீண்டும் தூசிதட்டியெடுத்து துரிதப்படுத்துகின்றனர்” என்றார்.

சேலம் இரும்பாலையைக் கபளீகரம் செய்ய தனியார் முதலாளிகளுக்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. ஆலையுடன் அதனுடன் இணைந்துள்ள நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களையும் தொழில்நுட்ப அறிவில் தலைசிறந்து விளங்கும் தொழிலாளர்களையும் அபகரித்துக் கொள்வது; சேலத்தின் பூமிக்கடியில் புதைந்து கிடக்கும் இரும்புத் தாதுவை சுரண்டும் போது சேலம் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் உள்ள ஆலையும் அவர்களுக்குத் தேவைப்படுகின்றது. வளங்களைக் கொள்ளையிடும் இடத்திலேயே அதைக் கொண்டு தொழில் செய்யும் வசதியும் இருக்க வேண்டுமென்பதற்காகவே மத்திய அரசின் துணையுடன் சேலம் இரும்பாலையைக் குறிவைத்துள்ளனர்.

மிகுந்த தனிச்சிறப்புடனும் உயர்மதிப்புடனும் குறிப்பிடப்படும் ஆலைத் தொழிலாளர்களின் தொழில்நுட்ப அறிவு குறித்து ஓய்வு பெற்ற தொழிலாளி திரு மாதவனிடம் பேசினோம்.

விஸ்வகர்மா ராஷ்ட்ரீய புரஸ்கார் விருது

“இங்கே உள்ள காயில் வெட்டும் இயந்திரத்தை நாங்கள் மறுவடிவமைப்பு செய்து அதைக் கொண்டே வைண்டிங் செய்தோம்.. இயந்திரத்தை எங்களுக்கு சப்ளை செய்த ஜெர்மன் நிறுவனத்தின் பொறியாளர்களே அசந்து போனார்கள்” என்றார் மாதவன். இவர் சிறந்த தொழிலாளிக்கான மத்திய அரசின் விஸ்வகர்மா ராஷ்ட்ரீய புரஸ்கார் விருது பெற்றவர்.

“இதே போல் வேறு என்ன மாதிரியான புதிய கண்டுபிடிப்புகளைச் செய்திருக்கிறீர்கள்?”

“எத்தனையோ சொல்லலாம் சார்… பிளாங்கிங் லைனில் உள்ள இயந்திரங்களை மறுவடிவமைப்பு செய்து அதில் இருந்து வெளியேறும் கழிவுகளின் அளவைக் குறைத்திருக்கிறோம். இங்கே உள்ள தகடுகள் வெட்டும் இயந்திரம் அதிகபட்சம் 4 மீட்டர் தகடுகளைத் தான் வெட்டும்; அதை மறுவடிவமைப்பு செய்து 6.2 மீட்டர் தகடுகள் வெட்டும்படி செய்திருக்கிறோம். அப்புறம் சிலிட்டிங் லைனில் ஒரு சிப்டுக்கு அதிகபட்சம் 10 டன்கள் தான் கையாள முடியும். நாங்கள் அதில் சில தொழில்நுட்ப மறுவடிவமைப்பு செய்தோம்.. இன்று அதே லைனில் ஒரு சிப்டுக்கு 200 டன்கள் கையாளப்படுகின்றது”

“பொதுவா அரசுத் துறை, பொதுத்துறை அப்படின்னா வேலை செய்யாத சோம்பேறிகள் தான் இருப்பாங்கன்னு வெளியே ஒரு கருத்து..”

இது எங்கள் தொழிற்சாலை –  உழைப்பின் பெருமிதத்துடன் சொல்லும் முன்னாள் ஊழியர் மாதவன்

“யார் சார் சொன்னது..? இது எங்களோட ஆலை. உள்ளே போயி கேட்டுப் பாருங்க; ஒரு தொழிலாளியாவது சோம்பேறியா உட்கார்ந்து இருக்க மாட்டான். லேட்டா வர்றது, சீக்கிரம் போறது எல்லாம் இங்கே கிடையாதுங்க. தோ பக்கத்து வீட்டுக்காரன், என்னோட நண்பன் தான். சிப்டு நேரம் தாண்டி வேலை செய்துட்டு வந்து படுத்திருக்கான்..”

தொழிலாளர்களின் முன்முயற்சிகளைக் கட்டவிழ்த்து விடப்பட்டிருப்பதையும், அதனால் அவர்கள் உற்சாகத்துடன் செயல்படுவதையும் மாதவன் விவரித்தார்.

“சரிங்க.. தனியார் நிறுவனம் வந்தாலும் இது தானே நடக்கப் போகுது?”

“இல்லை சார்.. இப்பவே நிறைய ஒப்பந்த தொழிலாளிகளை எடுக்கிறாங்க. அவங்களுக்கு இது தங்களோட நிறுவனம்ங்கற நினைப்பு இல்லை. எப்படி இருக்கும்? சம்பளமும் குறைவு, மற்ற வசதிகளும் இல்லை. இதே தனியார் முதலாளி வந்தாச்சின்னா அவன் லாபத்துக்காக இஸ்டத்துக்கு ஒப்பந்த தொழிலாளிகளை எடுத்துப் போடுவான்… தொழிலாளிக்கு எப்படி நிறுவனத்து மேல் ஒரு பிடிப்பு வரும்? ஏதோ வந்தமா வாங்குற சம்பளத்துக்கு ஒப்பேத்திட்டுப் போனமான்னு தானே இருப்பான்?”

எனினும், மத்திய அரசு சேலம் இரும்பாலையைத் தனியார் முதலாளிகளுக்கு சல்லிசான விலையில் தள்ளி விடுவதில் குறியாக இருப்பதை தொழிலாளர்கள் சிலரிடம் பேசிய போது புரிந்து கொள்ள முடிந்தது. கடந்த சில ஆண்டுகளும் சுமார் 450 நிரந்தரத் தொழிலாளிகள் ஓய்வு பெற்றுள்ள நிலையில் அந்தப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் கிடக்கின்றன. ஆட்பற்றாக்குறை நிலவும் நிலையிலும் தொழிலாளர்கள் உற்பத்தியைக் குறையவிடாமல் பார்த்து வருகின்றனர்.

ஆனாலும் நீண்ட நாட்களுக்கு இந்த நிலை தொடர முடியாது என்பதை பலரும் வெளிப்படுத்தும் சலிப்பான வார்த்தைகளில் புரிந்து கொள்ள முடிந்தது.

ராஜேந்திரன் தனது காது கேளாத தனது குழந்தையை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று விட்டு பணிக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்..

“சார் பையனுக்கு உடம்பு சரியில்லைன்னு சொல்லிப் பார்த்தேன்.. ஆனாலும், லீவு கொடுக்கலைங்க.. நேத்து ரெண்டாவது சிப்டு முடிச்சிட்டு அப்படியே காலைல பையன ஆஸ்பத்திரிக்கு அழைச்சிட்டு போயிட்டு தூங்காம ஓடியாறேன்” என்றார்.

“இந்த ஆலையில் புதிதாக ஊழியர்கள் எவரையுமே சேர்த்துக் கொள்வதில்லையா?”

“ஏன் சேர்க்காம? ஏகப்பட்ட மேனேஜர்களை எடுத்து வச்சிருக்கான். கணக்குப் போட்டுப் பார்த்தா நாலு தொழிலாளிக்கு ஒரு மேனேஜர்னு வருது. பல பேருக்கு என்ன பதவி கொடுக்கிறதுன்னு கூட தெரியாம புதுசா பதவிகளை உருவாக்கறாங்க.. இப்ப கூட புதுசா ஒரு மேனேஜர் வந்திருக்கார்… Employee pool manager அப்படின்னு ஒரு பதவி. அவருக்கெல்லாம் எந்த வேலையும் கிடையாதுங்க. சும்மா வருவாரு போவாரு. நல்ல வசதியான அப்பார்ட்மெண்டு ஏகப்பட்ட சலுகைகள். 40 வகையான அலவன்ஸ் (சலுகைகள்)  கொடுக்கிறாங்க சார். சொன்னா  சிரிப்பீங்க.. ஜன்னல் திரைச்சீலைகள் மாத்துறதுக்கு கூட அலவன்ஸ் குடுக்குறாங்க..” என்றவர் தொடர்ந்து பேசினார்.

ஆலை தனியார்மயமாவதை தடுக்கப் போராடிவரும் தொழிலாளிகள் ( கோப்புப் படம் )

“ஒரு அதிகாரிக்கு குடுக்கும் சம்பளத்தில் பத்து தொழிலாளிகளை எடுக்கலாம்… ஆனா செய்ய மாட்டானுக. எப்படியாவது இந்த  ஃபாக்டரி நட்டத்துல போகுதுன்னு கணக்கு காட்டி தனியார்ட்ட குடுத்துடலாம்னு பார்க்கறாங்க. நாங்களும் விடாம உழைச்சிட்டு இருக்கோம். ஓட்ட வாளில தண்ணி அள்ற மாதிரி. சரிங்க, லேட் ஆயிடிச்சி… போகனும்” என்று சொல்லி விட்டு நகர்ந்தார்.

தனியார்மயமாக்கள் நடவடிக்கை தொழிலாளர்களைத் தட்டியெழுப்பியுள்ளது. தொடர்ச்சியான போராட்டங்களை அவர்கள் முன்னெடுத்து வருகின்றனர். எனினும், இன்று வரை அந்தப் போராட்டங்களும் எதிர்ப்பியக்கங்களும் ஒரு ஆலை மற்றும் அதன் தொழிலாளர்கள் என்கிற வரம்புக்குள் தான் நிற்கின்றன. போராட்டங்கள் மக்கள் மயமாவதும் சேலம் இரும்பாலைத் தொழிலாளர்கள் தங்களது கோரிக்கைகளுக்கு ஆதரவாக பகுதிமக்களைத் திரட்டுவதும், மக்கள் ஆதரவின் மேல் தங்களது போராட்டங்களைக் கட்டியமைப்பதன் மூலமே மோடி எனும் கார்ப்பரேட் கைக்கூலி அரசாங்கத்தை வீழ்த்த முடியும்.

கடினமான இரும்பை உருக்கி விரும்பும் வண்ணம் வளைத்துப் பழகிய தொழிலாளர்களின் முன் இருமாப்பில் தடித்துப் போன ஒரு அரசு இயந்திரம் மறுவார்ப்பு செய்யப்படுவதற்காக காத்துக்கிடக்கிறது.

-வினவு செய்தியாளர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க