privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்பா.ஜ.கசோமபானத்துக்கும் சுவயம் சேவக்குக்கும் போலீசு காவல் !

சோமபானத்துக்கும் சுவயம் சேவக்குக்கும் போலீசு காவல் !

-

திருப்பூர் ராதா நகர் 21-வது வார்டு ( டாஸ்மாக் கடை எண் : 1937 ) டாஸ்மாக் கடையை கடந்த 07.05.2017 அன்று அப்பகுதி பெண்களும், மக்கள் அதிகாரம் அமைப்பினரும் முற்றுகையிட்டு மதுபாட்டில்களை அடித்து நொறுக்கி போராட்டம் நடத்தினர். அதையொட்டி சுமார் நான்கு மணி நேரம் சாலை மறியல் நடத்தப்பட்டது. அதன் பின்னர் வந்த காவல் துறை துணைக் கண்கானிப்பாளர் அண்ணாதுரை மற்றும் திருப்பூர் வடக்கு தாசில்தார் பேச்சுவார்த்தை நடத்தி டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூடிவதாக உத்திரவாதமளித்து சீல் வைத்தனர். அதன் பிறகே மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இரண்டு நாள் கழித்து டாஸ்மாக் பார் உரிமையாளர் கடையைத் திறக்க வேண்டும் என கூலிக்கு மாரடிக்கும் குடிகாரர்களை வைத்து கடை முன் ‘போராடினார்’. இத்தகவல் அறிந்து அங்கு அப்பகுதி மக்கள் கூடிவிட்டனர். உடனே சாராயக் கடைக்கு காவலாக போலீசு வந்தது. அங்கு கூடியிருந்த பெண்களிடம் நைச்சியமாக பேசி சப்-கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து மனு கொடுங்கள் கடை நிரந்தரமாக மூடப்படும் என்று கூறி அப்பகுதி மக்களை போராடவிடாமல் கலைத்தனர்.

எதை செய்தாலும் சட்டப்படித் தான் செய்ய வேண்டும் என சட்டவாதம் பேசியுள்ளனர். அதன் பின்னர் மனு கொடுக்கச் சென்ற மக்களில் இருந்து 5-பெண்களை மட்டும் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அப்பெண்களிடம் காவல்துறை அக்கறையாக பேசுவது போல இனி குடிப்பவர்களால் உங்களுக்கு பிரச்சினை ஏற்படாதவாறு பார்த்துக் கொள்கிறோம் எனக் கூறியுள்ளனர்.

அதன் பின்னர் தனது இன்னொரு முகத்தைக் காட்டியது. மக்கள் அதிகாரம் அமைப்பினர் தீவிரவாதிகள். அவர்களுடன் இணைந்து போராடக் கூடாது. மீறி போராட்டம் செய்தால் உங்கள் அனைவரையும் 3-மாதம் வெளியில் வரமுடியாதபடி கேஸ் போடுவோம்.. எனவும் மிரட்டியுள்ளது போலீசு.

அரண் அமைத்து டாஸ்மாக்கை பாதுகாக்கும் போலீசு

மறுநாளே 20 போலீசு புடைசூழ பாதுகாப்புடன் டாஸ்மாக் திறக்கப்பட்டுவிட்டது. மேலும் போராட்டத்தில் முன்னணியாக இருந்த தோழர் காஞ்சனா உட்பட 6-பேர் மீது பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்ததாக PPDACT-ன் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது ( வழக்கு எண் CR:552 ).

தற்போது மீண்டும் பழையபடி டாஸ்மாக் குடிமகன்களின் அட்டகாசம் ஆரம்பித்துவிட்டது. இதனால் எப்படியேனும் அக்கடையை மூட வேண்டும் என மீண்டும் மக்கள் அதிகாரத்தை தொடர்பு கொண்டனர் அப்பகுதி பெண்கள். அதைத் தொடர்ந்து இந்த அரசும் போலீசும் நடத்திய நாடகத்தை அம்பலப்படுத்தி ஊர் முழுவதும் 19.05.2017 அன்று ராதா நகர், கஞ்சம்பாளையம், அறிவொளி நகர் ஆகிய பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. தோழர்கள் சுவரொட்டிகள் ஒட்டிவிட்டு நள்ளிரவு தாண்டி வீட்டுக்கு வரும் போதும் கூட அந்த டாஸ்மாக் கடையில் சரக்கு கேட்டு நான்கைந்து பேர் காத்திருக்கின்றனர்.

இதனால் பதறியடித்துக் கொண்டு போலீசு 20.05.2017 அன்று காலையே 30-க்கும் மேற்பட்ட காவலர்களைக் கொண்டு சுவரொட்டிகளை கிழித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் மக்கள் அதிகாரம் தொடர்பு எண்ணுக்கு உளவுப்பிரிவு போலீசார் பத்திரிக்கையாளர் என்ற பேரில் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். எப்ப சார் கடைய ஒடைப்பீங்க என கேட்டுள்ளனர். அதற்கு அப்பகுதி பெண்களிடம் தான் அதைக் கேட்க வேண்டும் என பதிலளித்தார் மக்கள் அதிகார தோழர்.

பெண்களும், பொதுமக்களும் தங்களைப் பிடித்த சனியனாக உள்ள டாஸ்மாக் ஒழிந்தால் சரி என உள்ளனர். காவல் துறையும், அரசும் டாஸ்மாக் கடைக்கு பாதுகாப்பாக நிற்கின்றனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
உடுமலை – 97885 58526.


தஞ்சை ஆர்.எஸ்.எஸ் காவி(லி) களுக்கு எதிராகப் போர்க்குரல்

றட்சியால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களை அக்கினி வெயில் மேலும் கருக்கிக் கொண்டிருந்தது. மக்கள் வாழவழியின்றி அல்லல்பட்டுக் கொண்டிருக்கும் வேளையிலும், பிள்ளையார் கும்பாபிஷேகத்திலிருந்து கர்நாடக சங்கீத மும்மூர்த்திகள் பிறந்தநாள் வரை கோலாகோலமாகக் கொண்டாடப்படுகிறது.

புதிது புதிதாகப் பிழைப்புவாத தர்மகர்த்தாக்கள் முளைத்துக் கொண்டிருக்கிறார்கள். கோயில் குளத்தைத் தூர்வாருகிறேன், களிமண்ணை (வண்டல் மண்) விற்கிறேன், கோயில் கட்டுகிறேன் லக்‌ஷார்சனை செய்கிறேன், பள்ளி திறக்கும் நேரத்தில் ஹயக்ரீவர் ஹோமம் செய்கிறேன், என்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் புனித கொள்ளை கிரானைட், மணல், PWD கான்ட்ராக்ட் கொள்ளைகளை விஞ்சிவிடும் போல் உள்ளது.

இதனை சுத்தசுயம் பிரகாசமான ஆர்.எஸ்.எஸ் பின்னிருந்து ஊக்குவித்து வளர்க்கிறது என்பது பலரும் அறியாத ஒன்று. நுண்அரசியல் ஆய்வாளர்களின் மைக்ரோஸ்கோப் சிந்தனைகளுக்கு இவைகள் எட்டுவதில்லை. பெரியார் பிறந்த மண் என்ற இறுமாப்பு எவ்வளவு காலம் கைகொடுக்கும் என்பது கேள்விக்குறியாகி இருக்கிறது.

ஆர்.எஸ்.எஸி-ன் இரண்டாம் ஆண்டு தக்க்ஷின மண்டல  சங்க சிக்‌ஷா (தென்மண்டல பயிற்சி முகாம்) முகாம் 28-04-2017 அன்று தொடங்கி 18-05-2017 அன்று முடிவுற்றது. 140 பேர் பயிற்சியில் சேர்ந்து சிக்‌ஷை(கல்வி) பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு முகாமில் 431பேர் பயிற்சி பெற்றதாக கூறப்படுகிறது.

தஞ்சை திருமலைசமுத்திரம் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் காஞ்சிமடம் மற்றும் ஜெயேந்திரனின் இரகசிய உலகமாக இருந்து வருகிறது. தற்போது இந்த ஆண்டு RSS பயிற்சிமுகாம் எடப்பாடி அரசின் போலீசு காவலுடன் நடைபெற்றுள்ளது. சாஸ்த்ரா பல்கலைக்கழக முதல்வர் வைத்தியா சுப்ரமணியன் குத்துவிளக்கேற்றி பயிற்சி முகாமை தொடங்கி வைத்துள்ளார்.

தஞ்சை வீரராகவா மேல்நிலைப்பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியரும், ராஜராஜசோழன் பண்பாட்டு மையத்தலைவருமான மணிமொழியான், வாண்டையார் பொறியியல் கல்லூரி தாளாளரும், ஜெயா அமைச்சரவையின் ஒருநாள் அமைச்சர் என்று புகழப்பட்ட அய்யாறு வாண்டையாரின் மகளுமான  கே.ஏ.வி.பொன்னம்மாளும் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்று உள்ளனர்.

ஆர்.எஸ்.எஸ் அகில இந்தியத் தலைவர் மோகன் பகவத் மூன்றுநாள் முகாமில் தங்கி பயிற்சியாளர்களுக்கு பாடம் நடத்தியிருக்கிறார். பயிற்சிமுகாமில் என்ன வெறுப்பு அரசியல் போதிக்கப்பட்டிருக்கும் என்பதைத் தத்துவஞானிகள் யாரும் கூறப்போவது இல்லை. ஊர் தேர்த்திருவிழா, சாதி மோதல், வினாயகர் ஊர்வல கலவரம் இவைகளின் வளர்ச்சியோடு ஒப்பிட்டுப் பார்த்தால் இதன் அபாயத்தைப் புரிந்து கொள்ள முடியும்.

பயிற்சி முகாமிற்கு 300 போலீசு காவல் காத்தது என்பதை விட 18-05-2017 அன்று சாகா பேரணி நிகழ்வு முக்கியமானது. 20 நாட்களாக நடைபெற்ற பயிற்சி முகாம் குறித்த செய்தி ஒருசில பத்திரிகைகளில் மட்டுமே வெளிவந்தது என்றாலும் அனைத்து முற்போக்காளர்கள், பகுத்தறிவாளர்களும் அறிந்த ஒன்றாகத்தான் இருந்தது. முள்ளிவாய்க்கால் முற்றத்தில் மே 18 நினைவுநாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ம.நடராசன் “காங்கிரஸ் செய்த தவறுகளை சரிசெய்து கொண்டிருக்கும் மோடி அரசு, ஈழப்பிரச்சனையில் காங்கிரஸ் அரசு செய்த தவறுகளை சரிசெய்ய வேண்டும்” என்று அடக்கி வாசித்து தூது விட்டார்.

ஊடகங்களின் இருட்டடிப்பு  இருந்தாலும் எதிர்ப்பும் வலுவாக இல்லை என்பதுதான் உண்மை. இந்திய மாணவர் சங்கம் ஒட்டியிருந்த கண்டன சுவரொட்டி மீது திட்டமிட்டே விளம்பர சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு மறைக்கப்பட்டது.

மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் ஒட்டியிருந்த சுவரொட்டிகளைக் காவல்துறை ஆள் வைத்து கிழித்தது. மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி ஒட்டிய சுவரொட்டிகள் கிழிக்கப்பட்டன. சுவரொட்டிகள் கிழிக்கப்பட்டவுடன் அடுத்தடுத்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு ம.க.இ.க, பு.மா.இ.மு தோழர்களுக்கும், போலீசுக்கும் சுவரொட்டி யுத்தம் நடைபெற்றது.

தஞ்சை கோர்ட்ரோட்டில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டியைக் கான்ஸ்டபிள் ஒருவர் கிழித்துக் கொண்டிருந்தார். புகைப்படம் எடுக்க முயற்சிப்பதைப் பார்த்தவுடன் வடிவேலு பாணியில் உதார்விட்டுப் பின்வாங்கி சென்றுவிட்டார்.

சாகா ஊர்வலம் நடந்த அன்று தஞ்சை நகர விடுதிகள் அனைத்திலும் ஆர்.எஸ்.எஸ் குண்டர்கள் தங்கவைக்கப்பட்டிருந்தனர். மாலை 4 மணிக்கு போலீசு பட்டாளம் குவிக்கப்பட்டு சாகா ஊர்வலம் நான்கு வீதிகளையும் சுற்றிவந்தது.

ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்தைத் தடை செய்! சாஸ்த்ரா பல்கலைக்கழக அங்கீகாரத்தை ரத்து செய்! என்ற முழக்கத்துடன் ம.க.இ.க, பு.மா.இ.மு தோழர்கள் 18-04-2017 அன்று காலை 10.30 மணிக்கு அணிதிரண்டனர். ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சிகளுக்குப் பாதுகாப்பு கொடுத்து காவல்காத்த எடப்பாடி அரசின் போலீசு ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்து தோழர்களைக் கைது செய்தது.

ம.க.இ.க மாநில இணைச் செயலர் காளியப்பன், ம.க.இ.க தஞ்சை கிளைச்செயலர் இராவணன், பு.மா.இ.மு தஞ்சை மாவட்ட அமைப்பாளர் சங்கத்தமிழன், பத்துப் பெண்கள் உள்ளிட்ண் தோழர்கள் 53 பேர் கைது செய்யப்பட்டு புறநகரில் உள்ள திருமணம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டனர். திருமண மண்டபம் பின்புறமாக யாரும் தப்பி ஓடிவிடக் கூடாது என்பதற்காகக் கக்கூசு ஓரம் அமர்ந்து ஒரு காவலர் காவல் காத்தார். ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் முடிந்து பயிற்சி முகாம் நடந்த இடத்திற்கு அனைவரும் சென்றபின் கைது செய்யப்பட்ட தோழர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

எதிர்ப்பின்றி இருந்த நிலையில் தோழர்களின் பிரச்சார கிளர்ச்சி நடவடிக்கைகள் ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி வாணரங்களுக்கு எரிச்சலூட்டியுள்ளது. சுவரொட்டியில் கொடுக்கப்பட்டிருந்த தொடர்பு எண்ணுக்குத் தொடர்பு கொண்டு ஆர்.எஸ்.எஸின் வசவு மொழிகளில் எரிச்சலை வெளிப்படுத்தியுள்ளனர். இதில் வெளிநாட்டு அம்பிகளின் போன்கால்களும் அடங்கும்.

சட்ட விரோதமாக கூடியதற்காகவும்,பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாகவும்,சுவரொட்டி ஒட்டியதற்காகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.இதுபோன்ற வழக்குகள் தோழர்களின் உணர்வுகளுக்கு உரம்போட்டு வளர்க்கும் என்பதில் அய்யமில்லை. திருவரங்கம் கருவறை நுழைவுப்போராட்டம், தியாகய்யர் கல்லறையில் தமிழில் பாடும் போராட்டம், சிற்றம்பல மேடையில் தேவாரம் பாடும் போராட்டம் என பார்ப்பனியத்திற்கெதிராக ம.க.இ.க,பு.மா.இ.மு தோழர்களின் போராட்டங்கள் தமிழ்மண்ணின் பார்ப்பன எதிர்ப்பு மரபை மீட்டெடுத்துள்ளது. மக்கள் அதிகாரத்தின் மூடு டாஸ்மாக்கை போராட்டங்கள் பெண்கள் கையில் கடப்பாரையை எடுக்க வைத்ததைப்போல ஆர்.எஸ்.எஸ்,சங்பரிவார் கருநாகப்புற்றுகளை அடித்து நொறுக்கி அகற்றும்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

-வினவு செய்தியாளர்.


அறிவிப்பு !

நேற்று 22.05.2017 அன்று சீர்காழியில் நடப்பதாக இருந்த விவசாயிகளை வாழவிடு பொதுக்கூட்டம் காவல்துறை அனுமதி மறுப்பால் இரத்து செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இன்று 23.05.2012 காலையில் சீர்காழியில் திரண்ட மக்கள் அதிகாரம் உறுப்பினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் தோழர் ராஜு தலைமையில் மறியல் போராட்டம் செய்தனர். அவர்களை கைது செய்து கொண்டு சென்றது போலீசு. பொதுக்கூட்டம் அனுமதி மறுப்புக்கு காரணம் கேட்டால் நீதிமன்றம் சென்று அனுமதி வாங்குங்கள் என்று போலீசு தட்டிக் கழிக்கப் பார்த்தது. அதை ஏற்காமல் மக்கள் அதிகாரம் தோழர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். போலீசு கைது செய்து வைத்திருக்கும் மண்டபத்தில் உண்ணாநிலைப் போராட்டத்தை ஆரம்பித்து பொதுக்கூட்டம் அனுமதி கிடைக்கும் வரை போராடுவோம் என்று போராடி வருகின்றனர்.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
சீர்காழி – 98434 80587.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க