டேய் சங்கிகளா… உங்க அட்டகாசத்துக்கு ஒரு அளவே இல்லையா?

இந்த செய்தியைப் பாருங்கள்.

மத்திய பிரதேச மாநில கல்வித்துறை, மாநிலத்தின் அனைத்துப் பள்ளிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதன்படி, இனிமேல் பள்ளிக்கூடங்களில் காலை வருகைப் பதிவின் போது ‘யெஸ் சார்’, ‘யெஸ் மேம்’ ‘ஆஜர் சார்’ எல்லாம் சொல்லக் கூடாது. அதற்குப் பதிலாக மாணவர் பெயர் வாசிக்கப்பட்டதும் ‘ஜெய்ஹிந்த்’ என்று சொல்ல வேண்டும்.

வியாபம் ஊழல் விவகாரத்தில் பலருக்கு மலர் வளையம் வைத்த சிவ்ராஜ்சிங் சௌகான் மாணவர்களை வாழ்த்தி மலர் தூவுகிறார்…. (கோப்புப் படம்)

சிவ்ராஜ்சிங் சௌகான் தலைமையிலான பா.ஜ.க. அரசு கடந்த செவ்வாய்க்கிழமை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. அம்மாநிலத்தின் பள்ளிக்கல்வித் துறை துணைச் செயலர் பிரமோத் சிங் என்பவர் கையெழுத்திட்டுள்ள இந்த உத்தரவில், பள்ளி பருவத்திலேயே தேச பக்தியை அழுத்தமாக மனதில் பதிய வைப்பதற்காக மாநில அரசு இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. தினமும் ரெண்டு தடவை ‘ஜெய்ஹிந்த்’ சொன்னால் தேசபக்தி பொத்துக்கிட்டு ஊத்துமென்று இந்த மாட்டுமூளைகள் சிந்திக்கிறதோ?

இந்த உத்தரவு அரசுப் பள்ளிகளுக்கு மட்டும்தான் பொருந்துமாம். ‘தனியார் பள்ளிகள் விரும்பினால் இதை செயல்படுத்தலாம். இல்லையெனில் விட்டுவிடலாம்’ என பம்முகிறது அந்த உத்தரவு. அப்போ, தனியார் பள்ளியில படிச்சா தேசபக்திக்கு லீவா?

இதுக்குப் பேசாம, போலீஸ்காரர்கள் வாக்கிடாக்கியில் பேசும்போது ஒவ்வொரு வாக்கியம் முடியும்போதும் ‘ஓவர், ஓவர்’ என்று சொல்வதைப் போல, பள்ளிக்கூடங்களில், ‘சார் நான் பாத்ரூம் போகனும் ஜெய்ஹிந்த், ‘டீச்சர், என்னை சுரேஷ் கிள்ளிட்டான் ஜெய்ஹிந்த்’- என்று பேச வேண்டும் என்பதாக உத்தரவு போட்டு விடலாம். வருகைப் பதிவு எடுக்கும்போது ஜெய்ஹிந்த் சொல்லி தேசபக்தியை வளர்க்க முடியும் என்றால், அதை எதற்கு கொஞ்சமாய் வளர்க்க வேண்டும்? எக்கச்சக்கமாய் வளர்த்து விடலாமே?

இப்படித்தான் சினிமா தியேட்டரில் தேசியகீதம் ஒளிபரப்புவது கட்டாயம் என்றார்கள். அப்படி எழுந்து நிற்காதவர்கள் மீது கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் தாக்குதல், வழக்கு என டார்ச்சர் செய்தார்கள் பா.ஜ.க. சங்கிகள்.

பிறகு ‘தேசியகீதம் கட்டாயம் இல்லை’ என்ற நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு இப்போது நிலைமை கொஞ்சம் பரவாயில்லை. இருந்தாலும், தேசபக்தியை காப்பாற்றியே தீருவது என்ற முனைப்போடு இருக்கும் ஐநாக்ஸ், AVM ராஜேஸ்வரி உள்ளிட்ட சில சென்னை திரையரங்குகளிலும், மேலும் பல ஊர்களின் திரையரங்குகளில் இப்போதும் தேசியகீதம் ஒலித்துக் கொண்டிருக்கிறது. ‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’ படமும் இதற்குத் தப்பவில்லை. ‘ஜெயகே.. ஜெயகே… ஜெய ஜெய ஜெய ஜெயகே’ முடிந்ததும், இருட்டு அறையில் முரட்டு குத்து தொடங்குகிறது.

தேசிய கீதத்தை பாடி தேச பக்தியை வளர்ப்பது, ஜெய்ஹிந்த் சொல்லி தேசபக்தியை வளர்ப்பது, தேசியக் கொடியை நெஞ்சில் குத்திக்கொண்டு தேச பக்தியை வளர்ப்பது, 28 எம்.எல்.ஏ.க்கள் வைத்திருந்த காங்கிரஸை பத்திவிட்டு வெறும் 2 எம்.எல்.ஏ. மட்டும் வைத்துக் கொண்டு மேகாலயாவில் ஆட்சியைப் பிடித்து தேசபக்தியை தாறுமாறாக வளர்ப்பது… என பி.ஜே.பி. மாடல் தேசபக்திக்கு ஊருப்பட்ட உதாரணங்கள் உண்டு.

ஆனால், இதே மத்திய பிரதேச மாநிலத்தின் பள்ளிக்கல்வித் தரம், ரெட்டி பிரதர்ஸின் பெல்லாரி சுரங்கத்துக்கும் கீழே இருக்கிறது.

கீழே உள்ளது, ம.பி.யின் கல்வித்தரம் குறித்த தினமலர் செய்தியின் ஒரு பகுதி…

மத்தியபிரதேசத்தில் 15 முதல் 16 வயது வரை உள்ள மாணவிகள் 29 சதவீதம் பேர் படிப்பை நிறுத்திவிட்டார்கள். 8-ம் வகுப்பு மாணவர்களில் 2.9 சதவீதம் பேருக்கு எழுத்துக்களை கூட படிக்க தெரியவில்லை. இவர்களில் 13.5 சதவீதம் பேருக்கு 1-ம் வகுப்பு பாடத்தைதான் படிக்க முடிகிறது. 8-ம் வகுப்பு மாணவர்களில் 64.3 சதவீதம்பேருக்கு 2-ம் வகுப்பு புத்தகத்தைதான் படிக்க முடிகிறது.

5-ம் வகுப்பில் 6.7 சதவீதத்தினரும், 8-ம் வகுப்பில் 1.6 சதவீதத்தினரும் ஒன்று முதல் ஒன்பது வரையிலான எண்களை கூட சொல்லதெரியவில்லை. 8-ம் வகுப்பில் 8.1 சதவீத மாணவர்களுக்கு ஆங்கில கேபிடல் எழுத்துக்களை படிக்க தெரியவில்லை. 5.6 சதவீத பள்ளிகளில் கழிப்பறைகள் இல்லை. பள்ளிகளின் 35.9 சதவீத கழிப்பறைகள் பயன்படுத்தப்படாத நிலையில் இருக்கிறது. 23.4 சதவீதம் பள்ளிகளில் மாணவிகளுக்கு தனி கழிப்பறை இல்லை.

இதை சரிசெய்வது எப்படி என்று பார்ப்பதற்குப் பதிலாக ஜெய்ஹிந்த் சொல்லி தேசபக்திக்கு முட்டுக் கொடுக்கிறது பா.ஜ.க.

இவ்வளவு கூவுகிறார்களே.. இவர்கள்தான் தேசபக்திக்கு ஹோல்சேல் ஏஜெண்டானு பார்த்தால் அதுவும் இல்லை. கோல்வாக்கர் தொடங்கி சாவர்க்கர், வாஜ்பேயி, வரையிலும் அத்தனை பேரும் ஆங்கிலேயர்களுக்கு மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்த தேசத் துரோகிகள். மோடியோ நாடு நாடாக பாரத மாதாவை கார்ப்பரேட்டுகளுக்கு விற்கும் வேலையை செய்து வருகிறார்.

நம்ம ஊர் பஸ்ஸில பர்ஸ் திருடுறவன் மாட்டிக்கிற மாதிரி தெரிஞ்சா, ‘திருடன், திருடன்’னு முதல்ல கூவுறது அவன்தான். அப்படித்தான் தேசபக்தியின் பெயரால் கூவிக் கொண்டிருக்கிறது இந்த தேசத் துரோக கும்பல்.

– வினவு செய்திப் பிரிவு.

மேலும் :