தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களின் வராக் கடனும், ரிசர்வ் வங்கி சுற்றறிக்கையும், அதில் மோடியின் சாதனையும்!
இந்தியா முழுவதும் செயல்பாட்டாளர்கள் கைதுகள், மாட்டின் பெயரில் கொலைகள், சபரிமலைக்கும் வெள்ளத்துக்கு உள்ள தொடர்புகள், இன்னும் பல செய்திகளுக்கு மத்தியில் வேறு சில நிகழ்வுகளும் நடந்துகொண்டு இருக்கின்றது.
மார்ச்சில் ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கை ஒன்று வந்தது. 2000 கோடிக்கு அதிகமாக உள்ள கடன்களில், தவணை தேதி முடிந்து ஒரு நாள் கடன் தொகை கட்டாமல் இருந்தால் கூட அந்த கடன்களை அழுத்தத்தில் உள்ள கடன்கள் (stressed loans) என்று வகைப்படுத்தும்படி வங்கிகளுக்கு அந்த சுற்றறிக்கையின் மூலம் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது.
இவ்வாறு வகைப்படுத்தி 180 நாட்களுக்குள், அந்த கடன்களுக்கு ஒரு தீர்வு காணப்பட வேண்டும் என்றும் அந்த சுற்றறிக்கை கூறியது. அப்படி தீர்வு காண முடியவில்லை என்றால் அந்த கம்பெனியை திவாலான கம்பெனி என்று அறிவித்து அதை ஏலத்தில் விடுவதற்கான பணிகளை துவங்க வேண்டும்.
இந்த சுற்றறிக்கையை எதிர்த்து மின்சார உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு என்ற தனியார் கம்பெனிகளின் கூட்டமைப்பு அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தன. திங்கள் (27 Aug) அன்று ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கை செல்லும் என்று தீர்ப்பு வந்தது.
விளக்கமாக கூற வேண்டிய செய்தியின் முக்கிய விவரங்களை மட்டும் கூறி இருக்கிறேன்.
இந்த செய்தி தொடர்பான, முக்கியமான தகவல்கள் உள்ளது. கடனை திருப்பி செலுத்த தவறிய, அதாவது அந்த 180 நாட்களையும் கடந்துவிட்ட, மின் உற்பத்தி கம்பெனிகள் மொத்தம் 34. அந்த 34 கம்பெனிகளின் கடனை கூட்டினால், மொத்த தொகை 1.75 லட்சம் கோடி ரூபாய்.
கேரளா வெள்ளத்துக்கு யூனியன் அரசு கொடுத்த தொகை எவ்வளவு? கேரளா அரசு கேட்ட தொகை எவ்வளவு? எதுவாக இருந்தாலும் 1.75 லட்சம் கோடியுடன் ஒப்பிட்டால் சில்லறை காசு போல் தெரிகிறது.
இன்னொரு தகவலையும் தருகிறேன். ஆகஸ்ட் 27 படி, மொத்தம் அழுத்தத்தில் உள்ள கடன்கள் 70, அதாவது 70 கம்பெனிகள் வாங்கிய கடன் திருப்பி செலுத்தாததால் அழுத்தத்தில் உள்ளன. இந்த கடன்களின் கூட்டு தொகை 3.8 லட்சம் கோடி ரூபாய். (இதற்கு எத்தனை பூஜ்யங்கள் என்று கல்லூரி மாணவர்களின் தேர்வில் கேள்வியாக கேட்கலாம்!)
இதில் இன்னும் சுவையான செய்தி ஒன்று இருக்கிறது. குஜராத்தில் GSPC (Gujarat State Petroleum Corporation) என்ற ஒரு மாநில அரசு நிறுவனம் உண்டு. இது திருவாளர் மோடி அவர்கள் முதல்வராக இருந்த பொழுது, குஜராத்தின் வளர்ச்சிக்காக, வெளிநாட்டு கம்பெனிகளுடன் கூட்டு சேர்த்து பல திட்டங்களை செய்வதாக சொன்னது.
வழக்கம் போல இந்த கூட்டு ஒப்பந்தங்களில் பல முறைகேடுகள் நடந்துள்ளதாக பல கட்டுரைகள் வந்துள்ளன (One Big Jumla: ‘GSPC Is a Case of How Not to Do Business’).
இந்த ஒப்பந்தங்களை செயல்படுத்த GSPC ஏராளமாக கடன்களை வாங்கியது. அதிகமான முறைகேடுகள் நடந்தாலோ அல்லது வேறு காரணங்களாலோ இப்பொழுது பொது துறை வங்கிகளுக்கு GSPC ரூ. 12,519 கோடி ரூபாய் கடனை செலுத்தாமல் உள்ளது, அதாவது தவணை தேதி முடிந்தும் செலுத்தாமல் உள்ளது.
சுவையான செய்தி என்னவென்றால், மேலே கூறிய அலகாபாத் உயர்நீதி மன்ற வழக்கில், மோடி அரசு ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கைக்கு எதிராக தன்னையும் இணைத்துக் கொண்டது. அதாவது, ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கையை எதிர்த்து மோடி அரசு நீதி மன்றத்துக்கு சென்றுள்ளது.
ரிசர்வ் வங்கியை எதிர்த்து இந்திய அரசு நீதி மன்றம் சென்றது இதுவே முதல் முறை என்று காங்கிரஸ் குற்றம் சாட்டுகிறது. ஆக, இதுவும் திருவாளர் மோடிஜீ அவர்களின் சாதனைகளில் ஒன்று.
நன்றி : Arun Karthik முகநூல் பக்கம்
மேலும் :