privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஇந்தியாஉ.பி : கறி பிரியாணி பரிமாறிய ‘குற்றத்துக்காக’ 23 இசுலாமியர்கள் மீது வழக்கு !

உ.பி : கறி பிரியாணி பரிமாறிய ‘குற்றத்துக்காக’ 23 இசுலாமியர்கள் மீது வழக்கு !

முசுலீம்களின் ஊர்ஸ் திருவிழாவின்போது இந்துக்களுக்கு அசைவ பிரியாணி பரிமாறப்பட்டதற்காகக் கூறி 23 முசுலீம்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

-

த்தர பிரதேச மாநிலத்தின் மகோபா மாவட்டத்தில் நடந்த முசுலீம்களின் ஊர்ஸ் திருவிழாவின்போது இந்துக்களுக்கு அசைவ பிரியாணி பரிமாறப்பட்டதற்காக 23 முசுலீம்கள் மீது ‘மதத்தின் அடிப்படையில் இரு குழுக்களிடையே பகைமை ஊக்குவித்தல் மற்றும் மத உணர்வுகளை புண்படுத்துதல்’ என்ற பிரிவின் கீழ் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற ‘சம்பவங்களுக்கு’ பின்னணியில் நிச்சயம் காவிகள் இருப்பார்கள் என்பது தனியாகச் சொல்லி தெரிய வேண்டியதில்லை. அதுவும் சாமியார் ஆளும் உ.பி.யில் அவர்கள் வைத்ததுதான் சட்டம்! பாஜக எம்.எல்.ஏ. பிரிஜ்பூஷன் ராஜ்புத்தின் கட்டாயப்படுத்தலின் பேரில்தான் இந்த வழக்கு பதியப்பட்டுள்ளது.

BRIJBHUSHAN-RAJPUT
பாஜக எம்.எல்.ஏ. பிரிஜ்பூஷன் ராஜ்புத்

ஆகஸ்டு 31-ம் தேதி சலாத் கிராமத்தில் கடந்த ஆறு ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் ஊர்ஸ் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவுக்கு அருகில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த இந்துக்களும்கூட கலந்துகொள்வதுண்டு. விழாவின்போது பெரிய பந்திகளில் உணவு பரிமாறுவதும் நடக்கும். அசைவம் உண்பவர்களுக்குத் தனியாகவும் சைவம் உண்பவர்களுக்குத் தனியாகவும் பந்திகளில் உணவு பரிமாறப்படுவதுண்டு.

இந்த ஆண்டு சைவர்களுக்கு பூரி சப்ஜியும் அசைவம் உண்பவர்களுக்கு பிரியாணியும் பரிமாறப்பட்டிருக்கிறது. அசைவம், பிரியாணி ஆகியவை காவிகளின் திரைக்கதைக்கு போதுமான வார்த்தைகள். எம்.எல்.ஏ. புனைந்ததைப் படியுங்கள்:

“சலாத் கிராமத்தில் சனிக்கிழமை ஊர்ஸ் திருவிழா நடைபெற்றது. இந்துக்கள் அதிக அளவில் உள்ள இந்தப் பகுதியில் நடத்தப்படும் இந்த விழாவுக்கு அவர்களும் நன்கொடை வழங்குவதுண்டு. ஒவ்வொரு ஆண்டும் 13 கிராமங்களைச் சேர்ந்த பத்தாயிரம் பேர் விழாவுக்கு வருவார்கள்.

படிக்க:
நூல் அறிமுகம் : வைக்கம் போராட்ட வரலாறு
♦ அசாம் – தேசிய குடிமக்கள் பட்டியல் குறிப்புகள் : முசுலீம்களுக்கு எதிரான சதி !

இந்த ஆண்டு பாபாவின் பிரசாதமாக சாதம் பரிமாறப்பட்டது. அதை உண்ணத் தொடங்கியபோது அதிலிருந்து எலும்பும் கறித்துண்டுகளும் கிடந்திருக்கின்றன. இந்தப் பிரச்சினை வெளிவந்தபோது, எருமை மாட்டுக்கறியை தெரியாமல் பரிமாறிய பஞ்சாயத்தைச் சேர்ந்தவர் அழைக்கப்பட்டார். உடனடியாக அவர் தன்னுடைய குற்றத்தை ஒப்புக்கொண்டு 50,000 ரூபாய் அபராதம் கட்டுவதாக சொன்னார். ஆனால் சிலர் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. என்னிடம் வந்தார்கள்.

நான் அந்த கிராமத்துக்குச் சென்று தெரிந்தே எங்களுடைய மத உணர்வுகளைப் புண்படுத்தியதற்காக சிலர் மீது வழக்குப் பதியப்போவதாகச் சொன்னேன்”. இதுதான் பாஜக எம்.எல்.ஏ. சொல்லும் கதை.

சலாத் கிராமத்துக்கு உட்பட்ட சர்காரி காவல் நிலையத்தில் நிலைய அதிகாரி அனூப் குமார் பாண்டே சொல்வதோ முற்றிலும் வேறொன்றாக உள்ளது.

“பூரி சப்ஜி உண்பவர்களுக்கு தனி பந்தியும், பிரியாணி மற்றொரு பந்தியிலும் பரிமாறப்பட்டது. அசைவ உணவு உண்பவர்கள் பிரியாணி உண்டார்கள். அதற்கு பிரியாணியில் எருமை மாட்டிறைச்சி போடப்பட்டதாக வதந்தி கிளம்பியது. நான் அங்கே சென்று நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தேன்.

எம். எல். ஏ. வந்த பிறகு, மீண்டும் பிரச்சினை கிளம்பியது. ஏதேனும் தவறு நடந்திருந்தால் புகார் அளியுங்கள் என்றேன். இப்போது அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்துள்ளோம்” என்கிறார்.

இந்திய தண்டனை சட்ட பிரிவுகள் 153ஏ, 295ஏ, 420, 506 ஆகியவற்றின் கீழ் 23 முசுலீம்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வேண்டுதல் நிறைவேறிய காரணத்துக்காக பிரியாணி பரிமாறிய பப்பு அன்சாரி மீதும், மற்ற 22 பேரின் மீது அவருக்கு உதவியதாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாஜக எம்.எல்.ஏ-வின் தூண்டுதலால் இவர்கள் மீது வழக்கு போட்டதாக உள்ளூர்காரர் ராஜ்குமார் ரெய்க்வார் தெரிவித்துள்ளார். “என்னதென்றே தெரியாமல் எங்களை இந்த வழக்கில் எம்.எல்.ஏ. கையெழுத்திட வைத்துவிட்டார்” என்கிறார் அவர்.

எப்போதெல்லாம் முசுலீம்களின் திருவிழாக்கள் நடக்கிறதோ அப்போதெல்லாம் அங்கே ஏதாவது மதப் பிரச்சினை கிளப்பி வன்முறையை தூண்ட வேண்டும் என்பதுதான் காவிகளின் திட்டம். அதன்படி பாஜக எம்.எல்.ஏ. திட்டமிட்டு மதங்களைக் கடந்த ஒரு திருவிழாவை குலைக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். இனி உ.பி-யில் அவருடைய அரசியல் ஏறுமுகமாகத்தான் இருக்கும்.

இதே நிலை நீடித்தால், இனி காவிகளின் ரவுடி ராஜ்ஜியத்தில் முசுலீம்கள் சற்று வேகமாக மூச்சு விட்டால்கூட பொதுமக்களின் அமைதிக்கு ஊறு விளைவித்தார்கள் என்ற பிரிவின்கீழ் அவர்கள் மீது வழக்கு தொடுப்பார்கள்.

ஒரு பக்கத்தில் மாட்டுக்கறி பிரியாணியை பிரச்சினையாக்கிக் கொண்டே மறுபுறத்தில் பிரியாணி அண்டாவைத் திருடித் திண்ணும் கும்பலிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?


அனிதா
நன்றி
: இந்தியன் எக்ஸ்பிரஸ்.