privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஇந்தியாமூளை செயலிழப்பு : மந்திரம் தீர்வு தருமா | மத்திய அரசு ஆய்வு !

மூளை செயலிழப்பு : மந்திரம் தீர்வு தருமா | மத்திய அரசு ஆய்வு !

மூளை செயலிழப்பால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற மகாமிருத்யுஞ்சயா மந்திரத்தை உச்சரிக்கும் ‘சிகிச்சை’யை டெல்லியில் உள்ள ராம் மனோகர் லோஹியா மருத்துவமனை தொடங்கியுள்ளது.

-

மூளை செயலிழப்பால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற மகாமிருத்யுஞ்சயா மந்திரம் : இந்திய மருத்துவ கவுன்சில் நிதியுதவியுடன் ஆய்வு !

றிவியலை புறக்கணித்து பல்வேறு இந்துத்துவ கட்டுக்கதைகளை அறிவியலென சொல்லி வந்த காவி அரசாங்கம், அடுத்த கட்டத்துக்கு தாவியுள்ளது. மூளை செயலிழப்பால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற மகாமிருத்யுஞ்சயா மந்திரத்தை உச்சரிக்கும் ‘சிகிச்சை’யை டெல்லியில் உள்ள ராம் மனோகர் லோஹியா மருத்துவமனை தொடங்கியுள்ளது. இந்த ‘புதிய சிகிச்சை’ முறையின் ஆய்வுக்கு இந்திய கவுன்சில் நிதியுதவி அளித்துள்ளது.

எய்ம்ஸ் மருத்துவமனையில் நரம்பியல் மருந்தியலாளரான டாக்டர் அசோக் குமார், 2014-ஆம் ஆண்டு, ‘கடுமையான மூளை காயத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரார்த்தனை எந்த அளவுக்கு பலன் தரும்’ என்பது பற்றிய ஆய்வை செய்யும்படி பரிந்துரைத்தார். இந்த பிரார்த்தனை மூளை செயலற்ற நிலையில் இருப்பவர்களுக்காக மற்றவர்களால் செய்யப்பட வேண்டும் என்றும் இந்த பிரார்த்தனையில் ரிக் வேதத்தில் சொல்லப்பட்ட மகாமிருத்யுஞ்சயா மந்திரத்தை உச்சரிக்க வேண்டும் என்றும் அவருடைய பரிந்துரை கூறியது.

RML Hospitalதலையில் பலத்த காயமுற்ற, குறிப்பாக கார் விபத்து போன்றவற்றால் கடுமையான மூளை காயம் (severe traumatic brain injury) ஏற்படக்கூடும். டாக்டர் அசோக் குமார், மிருத்யுஞ்சயா மந்திரத்தை உச்சரிப்பதைக் கேட்டால், கடுமையான மூளை காயத்தால் பாதிக்கப்பட்டவர்களின் நிலையில் முன்னேற்றம் இருக்குமா என்பதை ஆராய்ந்தார்.

இந்த ஆய்வுக்காக குமார், இந்திய மருத்துவ கவுன்சிலின் ஆய்வு நல்கைக்கு விண்ணப்பித்தார். மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய மருத்துவ கவுன்சில் அவருடைய ஆய்வுக்கு மாதந்தோறும் ரூ. 28,000 -ஐ வழங்குவதாக அங்கீகரித்தது. அக்டோபர் 2016-ம் ஆண்டு முதல் ஓராண்டுக்கு இந்த நல்கை அளிக்கப்பட்டது. அதன்பின், மேலும் ஆய்வை இரண்டாண்டுகளுக்கு நீட்டித்தது.

குமார் பணியாற்றும் எய்ம்ஸ் மருத்துவமனையிலேயே இந்த ஆய்வு செய்யப்படுவதாக முதலில் சொல்லப்பட்டது. ஆனால், எய்ம்ஸ்-ல் உள்ள நெறிமுறை குழு, இந்த ஆய்வில் ‘அறிவியல்தன்மையற்று’ இருப்பதாகச் சொல்லி நிராகரித்திருக்கிறது. அதன்பின், ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் இந்த ஆய்வை பரிந்துரைத்திருக்கிறார்.

படிக்க:
” போலி அறிவியலில் பாதிப்பில்லாதது எதுவுமில்லை ” | ஐஐடி இயக்குனருக்கு ஒரு கடிதம் !
♦ உ.பி : கறி பிரியாணி பரிமாறிய ‘குற்றத்துக்காக’ 23 இசுலாமியர்கள் மீது வழக்கு !

ஆர்.எம்.எல் மருத்துவமனை நெறிமுறை குழுவிடம் குமார் அளித்த ஆய்வின் நோக்கம் பற்றிய விளக்கத்தில், “சுயநினைவில்லாமல் இருக்கும் மூளை காயத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அளிக்கப்படும் ‘பிரார்த்தனை’ சிகிச்சை நேரடியாகவோ மறைமுகமாகவோ ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்துகிறதா என்பதே ஆய்வின் நோக்கம். உளவியல் அழுத்தத்தைக் குறைத்து மூளைகளில் செல்களிடையே தொடர்பை உண்டாக்கும் கைடோகைன் என்ற புரதத்தின் அளவை கூட்டுமா என்பது குறித்து ஆராயப்படும்” எனவும் தெரிவித்திருந்தார்.

“ராமாயணத்தில் இலங்கைக்கு ராமர் பாலத்தை கட்டும்போது மிருத்யுஞ்சயா மந்திரத்தை சொன்னார்” என்கிறார் குமார்,

“பழங்கால இந்தியாவில் போரின்போது காயம்பட்ட வீரர்களை காப்பாற்ற இந்த மந்திரம் சொல்லப்பட்டது. மார்பக புற்றுநோய் மற்றும் இதய நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கிறித்துவ பிரார்த்தனை முறைகள் ஏதேனும் மாற்றத்தை ஏற்படுத்துகின்றனவா என்பது குறித்து ஏராளமான ஆய்வுகள் உள்ளன. இந்து கலாச்சாரம் கிறித்துவத்தைவிட பழமையானது. எனவே இந்த ஆய்வுத் திட்டத்தின் நோக்கம் இந்து நம்பிக்கைகளுக்கு அறிவியல் அடிப்படை உள்ளது என்பதை நிரூபிப்பதே ஆகும்” எனவும் தனது காவித்துவ ஆய்வுக்கு ‘அறிவியல்’ பின்புலம் உள்ளதெனவும் அவிழ்த்து விடுகிறார் குமார்.

traumatic-brain-injuryஅக்டோபர் 2016 முதல் ஏப்ரல் 2019 வரை 40 நோயாளிகளிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு நோயாளிக்கும் மிருத்யுஞ்சய் மந்திரம் 1.25 இலட்சம் முறை ஏழு நாட்களுக்கு ஓதப்பட்டுள்ளது.

மந்திரங்களை உச்சரிக்க மருத்துவமனையில் ஆட்கள் இல்லாத நிலையில் மத்திய அரசின் கீழ் இயங்கும் லால் பகதூர் சாஸ்திரி ராஸ்த்ரிய சமஸ்கிருந்த வித்யாபீடத்தைச் சேர்ந்த ஆசிரியர்களின் உதவியை நாடியுள்ளார் இந்த ‘ஆய்வாளர்’.

இந்த வித்யா பீடத்தைச் சேர்ந்த ‘மருத்துவ ஜோதிடவியல்’ துறையின் தலைவர் இந்த ஆய்வு திட்டத்தில் ஆர்வமாக இருந்ததாகவும் இந்த மந்திரத்துடன் நோயாளியின் பிறந்தநாள், பிறந்த இடம், கோத்திரம் போன்றவற்றையும் சேர்த்து உச்சரித்ததாகவும் குமார் கூறுகிறார். மந்திரத்தை உச்சரிக்க தேர்வு செய்யப்பட்ட நோயாளியை சுத்திகரிக்கும் விதமாக கங்கை நீர் தெளிக்கும் சடங்கையும் இவர்கள் செய்துள்ளனர்.

சரி ஆய்வுதான் முடிந்துவிட்டதே, முடிவு என்ன ஆயிற்று? எனக் கேட்டால் குமாரிடமருந்து வருகிறது மழுப்பல் பதில். ஆர்.எம்.எல். மருத்துவமனையில் தலைமை நரம்பியல் நிபுணர் டாக்டர் அஜய் சவுத்ரி, எச்சரிக்கையுடன் ஆய்வின் முடிவு குறித்து கூறுகிறார்.

“ஆரம்பக்கட்ட ஆய்வுகள் இந்த பிரார்த்தனைகளால் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை என தெரியவந்துள்ளது. ஆனால், இறுதியான முடிவுகள் இன்னும் வரவில்லை” என்கிறார் அவர்.

படிக்க:
குழந்தைகளிடம் வாசிப்பு பழக்கத்தை உண்டாக்குவது எப்படி ?
♦ சிந்துச் சமவெளி நாகரீகத்தின் குடிகள் யார் ? புதிய ஆதாரங்கள் !

2014-ம் ஆண்டு பாஜக மத்தியில் ஆட்சி அமைத்ததிலிருந்து புராணங்களில் அறிவியலை தேடி அலைந்துவிட்ட கதைகளை அறிவோம்.

“ஆட்சியதிகாரத்தில் இருப்பவர்கள் சொல்லும் தவறான அறிக்கைகள், சாதாரண மனிதர்களை நம்ப வைக்கும். ஏனெனில் அவர்கள் அதிகாரத்தில் இருப்பவர்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கை அப்படிப்பட்டது. இந்த அதிகார மையம் அரசியல் அதிகார மையமா அல்லது மத அதிகார மையமா என்பது குறித்து அவர்கள் கவலை கொள்வதில்லை” என்கிறார் டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் அபூர்வானந்த். அறிவியலில் தனக்குள்ள தாழ்வு மனப்பான்மையை மறைக்க இத்தகைய போலி அறிவியலை இந்துத்துவ அரசாங்கம் ஊக்குவிப்பதாகவும் அவர் கூறுகிறார்.


தமிழாக்கம் : கலைமதி
நன்றி: கேரவன் இதழ்