எல்கர் பரிஷத் வழக்கில் கைது செய்யப்பட்டு சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் வழக்கறிஞர்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் புதன்கிழமை அன்று தங்களது பரஸ்பர ஆதரவை தெரிவித்து தங்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தினர். மேலும் கடுமையான ஊபா சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.
“மக்களின் உரிமைகளை பறிப்பதற்கான” அரசாங்கத்தின் முயற்சிகள் குறித்து மக்கள் தங்களது மவுனத்தை கலைக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.
அக்டோபர் 8-ம் தேதி, பழங்குடி மக்களின் உரிமைகளுக்காக போராடக்கூடிய 83 வயதான சமூக செயற்பாட்டாளர் ஸ்டான் சுவாமி கைது செய்யப்பட்டார். எல்கர் பரிஷத் வழக்கில் தேசிய புலனாய்வு அமைப்பின் சமீபத்திய கைது இதுதான். ஸ்டான் சுவாமி பக்கவாத நோயாளி மட்டுமின்றி வேறு பிற உடல்நல குறைபாடுகளாலும் துன்புற்றுக் கொண்டிருக்கையில் கொரானா தொற்று காலத்தில் அவர் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டிருப்பதையொட்டி, சமூக செயற்பாட்டாளர்களும், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
குடிமக்கள் உரிமைக்கான மக்கள் நடுவம் (பி.யூ.சி.எல்) ஏற்பாடு செய்த செய்தியாளர் கூட்டத்தில் பேசிய ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், விளிம்பு நிலை மக்களின் குரல்வளையை நெறிப்பதற்கு மத்திய அரசாங்கம் முயற்சிப்பதாகக் கூறினார். ஒரு வீடியோ காணொளி செய்தியில், தற்போதைய மத்திய அரசாங்கத்தின் கீழ், ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் ஜனநாயக கட்டமைப்புகள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக அவர் குற்றம் சாட்டினார்.
“இன்று மத்தியில் அமர்ந்திருக்கும் என்டிஏ அரசாங்கமானது, ஆதிவாசிகள், தலித்துகள் மற்றும் பிற விளிம்பு நிலை மக்கள் என ஏழை எளிய மக்களுக்காக பேசுவோரின் குரல்களை நெறிக்கிறது, பாஜக அல்லாத பிற கட்சிகள் ஆளும் மாநிலங்கள் துன்புறுத்தப்படுகின்றன, ஒரு மறைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலின் கீழ் அதன் சொந்த அரசியல் நலனுக்காக”வெவ்வேறு குழுக்கள் மற்றும் அமைப்புகளை வைத்துக்கொண்டு அதன் மூலம் இன்று நம் நாட்டு அரசியலமைப்பின் அனைத்து இயந்திரங்களையும் பலவீனமடைய செய்து வருகின்றது..
“நாடு எங்கு செல்கிறது என்பதைப் பற்றி சிந்திக்க இது நம்மை நிர்ப்பந்திக்கிறது. ஸ்டான் சுவாமியைப் போன்ற முக்கியமானவர் ஒருவர் கைது செய்யப்பட்டபோது அது இன்று எல்லா வரம்புகளையும் தாண்டிவிட்டது.. அவர் ஜார்கண்டில் உள்ள, தொலைதூர கிராமங்களில், காடுகளில் அலைந்து, இங்குள்ள ஆதிவாசிகள், தலித்துகள் மற்றும் சிறுபான்மை மக்களுக்கு உதவி கிடைக்க செய்யும் பொருட்டு பல ஆண்டுகளாக அம்மக்களுக்காக செயல்படக்கூடியவர். இவரின் கைது என்பது மிகவும் வேதனையளிக்கிறது. ஸ்டான் சுவாமி பல நோய்களால் பாதிக்கப்பட்டிருக்க கூடியவர். ”என்று சோரன் கூறினார்.
மத்திய அரசால் தெளிவாக இலக்கு வைக்கப்பட்ட மக்கள் விரோத வழிமுறையை எல்லா தரப்பட்ட எதிர்கட்சிகளும் ஒன்றிணைந்து எதிர்கொள்ள நமக்குள் எந்த பிரச்சினையும் இருக்க கூடாது. “இன்று ஸ்டான்சுவாமி கைது செய்யப்பட்டிருக்கிற முறையானது நாளை நம்மில் எவருக்கும் நிகழக்கூடும். அல்லது மக்களை கொல்ல இது அவர்களுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.” என்றார் சோரன்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி மற்றும் திமுகவின் கனிமொழி ஆகியோர் சிவில் சமூகக் குழுக்களையும் பொதுமக்களையும் “மக்களின் உரிமைகள் மீதான அரசாங்கத்தின் தாக்குதல்கள்”குறித்த தங்களின் அமைதியை கலைந்து கொண்டு போராடத் தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
“என்ன நடக்கிறது என்பதை அமைதியாக ஏற்றுக் கொள்வதா அல்லது அமைதி காத்ததது போதும் என்று கூறி ஒன்றாக இணைந்து அவர்களை எதிர்த்துப் போராட வேண்டுமா என்பதை நாம் அரசியல் கட்சிகளாக, முழு சமூகமாக ஒரு முடிவை எடுக்கவேண்டும். இந்த அடக்குமுறையை ஏற்றுக்கொண்டால், சில ஆண்டுகளில் நாம் அறிந்த ஒரு ஜனநாயக இந்தியாவைப் பார்க்க மாட்டோம். இந்த அரசாங்கம் நிறைவேற்றிய ஒவ்வொரு சட்டமும் மக்களின் உரிமைகளை பறித்துவிட்டது. அமைதியை கலைக்க வேண்டிய நேரம் இது ”என்று வீடியோ சந்திப்பு மூலம் கனிமொழி கூறினார்.
முழுமையாகவே தவறாகப் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளதால், ஊபா சட்டம் திரும்பப் பெற வேண்டும் என்கிறார், சீத்தாராம் யெச்சூரி. “பாசிச, சகிப்புத் தன்மையற்ற மற்றும் சர்வாதிகார இந்துத்துவ தேசத்திற்கு” வழி வகுக்க, “பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்-ன் பெரிய திட்டத்தின்” ஒரு பகுதியாகத்தான் ஊபா, தேசத்துரோக சட்டம் மற்றும் தேசிய பாதுகாப்பு சட்டம் ஆகியவை இருப்பதை ஒன்றாக இணைத்துப் பார்க்க வேண்டும் என்று அவர் கூறினார். வன்முறையின் உண்மையான குற்றவாளிகளைக் காப்பாற்றும் அதே நேரத்தில் , அரசியலமைப்பைக் பலவீனப்படுத்துவதற்கு மத்திய அரசின் மைய அமைப்புகளை பிஜேபி அரசு தவறாக பயன்படுத்துகிறது என்று அவர் குற்றம் சாட்டினார்.
படிக்க :
♦ மிரட்டும் பாஜக : தமிழகத்திலும் வருகிறது என்.ஐ.ஏ கிளை !
♦ 75% விவசாயிகளுக்கு மோடி அறிவித்த 6,000 ரூபாய் கிடைக்கவில்லை !
ஒட்டுமொத்தமாக 16 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் கபீர் கலா மஞ்சின் (கே.கே.எம்) மூன்று கலாச்சார ஆர்வலர்கள் – ரமேஷ் கெய்சோர், சாகர் கோக்ரே மற்றும் ஜோதி ஜக்தாப் மற்றும் மக்கள் உரிமை ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் கல்வியாளர்கள் ஆனந்த் டெல்டும்ப்டே, கவுதம் நவலகா, ஷோமா சென், ஹானி பாபு, வழக்கறிஞர்கள், சுதா பரத்வாஜ், சுரேந்திர காட்லிங், வெர்னான் கோன்சால்வ்ஸ், சுதிர் தவாலே, மகேஷ் ரவுத், ரோனா வில்சன் மற்றும் அருண் ஃபெரீரா ஆகியோர் அடங்குவர்.
“பொடாவைப் போலவே, ஊபா மிகவும் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்தச் சட்டமும் நமது சட்ட புத்தகத்திலிருந்து அகற்றப்பட வேண்டும். இருப்பினும், இது ஒரு சட்டத்தின் பிரச்சினை அல்ல. இந்த கடுமையான சட்டங்கள் அனைத்தும் அரசாங்கத்திற்கு எதிரான கருத்துடையவர்களை அடக்குவதற்கு பயன்படுத்தப்படுகின்றன. இந்த கைதுகள் தனிப்பட்ட வழக்குகள் அல்ல; இவை ஆரம்பத்தில் இருந்தே அவர்களின் திட்டமாக இருந்த ஒரு தீவிரமான இந்துத்துவ ராஷ்டிரத்தை நிறுவுவதற்கான நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாகும். இதை ஏற்க முடியாது. நமது இந்த மவுனத்தை நாம் உடைக்க வேண்டும். தீமை வெற்றிபெற வேண்டுமானால் நன்மை அமைதியாக மட்டுமே இருக்க வேண்டிய தேவையை கோருகிறது. மதச்சார்பற்ற ஜனநாயகத்தை மக்கள் மீட்டெடுக்க போராட வேண்டும்” என்று யெச்சூரி குற்றம் சாட்டினார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர், சுவாமி சிறை தண்டனை கொடுக்கப்பட வேண்டியவர் அல்ல. அவர், “நமது மரியாதை மற்றும் ஆதரவுக்கு” தகுதியானவர் என்றார். “ஏசுவை பின்பற்றும் எந்தவொரு நபரும் வன்முறையில் ஈடுபடமாட்டார் அல்லது வன்முறையை நோக்கி யாரையும் இழுக்க மாட்டார்” என்று தரூர் கூறினார். “இது நிறுத்தப்பட வேண்டும். நான் மத்திய அரசை நியாயமாக நடந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன், குறைந்தபட்சம் அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும், நாங்கள் ஸ்டான் சுவாமிக்கு எங்கள் ஆதரவை தெரிவித்து அவருடன் ஒன்றுபட்டு நிற்கிறோம்”, என்று அவர் கூறினார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா, ஜனவரி 1, 2018 அன்று பீமா கோரேகான் வன்முறை மற்றும் ஆயிரக்கணக்கான தலித்துகள் எவ்வாறு தாக்கப்பட்டனர் என்பது மட்டுமல்லாமல் அவர்கள் மீது எவ்வாறு பொய்வழக்குகள் பதிவு செய்யப்பட்டன என்பதையும் மக்களுக்கு நினைவுபடுத்தினார். “மத்திய அரசு ஒரு இரக்கமற்ற அரசாங்கம்; அதற்கு, அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தில் நம்பிக்கையில்லை, பி.ஆர்.அம்பேத்கர் கொண்டுள்ள பார்வை மற்றும் அவர் உருவாக்கிய விழுமியங்களுக்கு அது எதிரானது.” என்று அவர் கூறினார்.
கபீர் கலா மஞ்ச் என்ற கலாச்சார அமைப்பைச் சேர்ந்த ரூபாலி ஜாதவ் என்ற பெண் செயற்பாட்டாளரும் இந்நிகழ்ச்சியில் பேசினார். இந்த வழக்கில் மூன்று கே.கே.எம் உறுப்பினர்கள் தற்போது சிறையில் உள்ளனர், மேலும் இந்த குழு தடைசெய்யப்பட்ட மாவோயிஸ்ட் அமைப்புகளுடன் இணைந்திருப்பதாக என்.ஐ.ஏ கூறியுள்ளது. கே.கே.எம் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராக எப்போதும் குரல் எழுப்பி வருகிறது. கைது செய்யப்பட்ட தன் சகாக்கள் கைது அச்சுறுத்தலின் கீழ் தவறான ஆதாரங்களை வழங்க என்.ஐ.ஏ.-வால் கட்டாயப்படுத்தப்படுவதாக அவர் கூறினார். ஏற்கெனவே கைது செய்யப்பட்ட மற்றவர்களை வழக்குகளில் சிக்க வைக்க அவர்களை பயன்படுத்த என்.ஐ.ஏ. முயற்சிக்கிறது. அவர்கள் அதை செய்ய மறுத்து, கைதாவதற்கு தயாராக உள்ளனர் என்று ஜாதவ் கூறினார்.
குடியுரிமைக்கான மக்கள் நடுவம் மத்திய அரசுக்கு மூன்று கோரிக்கைகளை முன்வைத்துள்ளது:
- 80 வயதைக் கடந்தவர்களானஸ்டான் சுவாமி மற்றும் பீமா கோரேகான் வழக்கில் சிறை வைக்கப்பட்டுள்ள வரவர ராவ் மற்றும் நாக்பூர் மத்திய சிறையில் உள்ள ஆண்டா செல்லில் சிறைவைக்கப்பட்டுள்ள 95 சதவீதம் ஊனம் அடைந்துள்ள பேராசிரியர் சாய்பாபா ஆகியோரை உடனே விடுதலை செய்ய வேண்டும். இவர்களுக்கு மனிதாபிமான முறையில் அவர்கள் விருப்பப்படி மருத்துவ மனைகளில் சேர்த்து அவர்களை காப்பாற்ற வேண்டும்.
- பீமா கொரேகான் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 16 பேருக்கும் எதிரான குற்றச்சாட்டுகளை கைவிட வேண்டும். அவர்களை விடுதலை செய்து பீமா கோரேகான் சதி வழக்கை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.
- சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம், (ஊபா) 1967 ஐ ரத்து செய்ய வேண்டும்.
தமிழாக்கம் : முத்துக்குமார்.
நன்றி : தி வயர்