தேசிய பணமாக்கல் திட்டம் : பொதுத்துறை நிறுவனங்கள் அழிப்பு ! நெடுஞ்சாலை, மின்சாரம், ரயில்வே, விமான நிலையம், நிலக்கரி, துறைமுகம், கனிமவளம் அனைத்தும் கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்ப்பு ! கார்ப்பரேட் காவி பாசிசத்தை ஒழிக்காமல் வாழ்வே இல்லை !!
என்ற முழக்கத்தின் கீழ் மக்கள் அதிகாரம் சார்பாக தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம் நேற்று (செப்டம்பர் 1, 2021) நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மக்கள் அதிகாரம் அமைப்பின் வட்டார ஒருங்கிணைப்பாளர் தோழர் சிவா தலைமை தாங்கினார்.
1 of 7
விடுதலை சிறுத்தைகள் கட்சி நகரச் செயலாளர் தோழர் லட்சுமணன், மக்கள் ஜனநாயக இளைஞர் முன்னணியின் தோழர் பெரியண்ணன், மக்கள் அதிகாரம் அமைப்பின் மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் முத்துக்குமார், பென்னாகரம் பகுதி மக்கள் அதிகாரம் அமைப்பின் தோழர் கோபிநாத் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
இறுதியாக மக்கள் அதிகாரம் மண்டலக் குழு உறுப்பினர் தோழர் அருண், நன்றி உரையாற்றினார்.
தகவல் மக்கள் அதிகாரம்
தருமபுரி மண்டலம்
9790138614
000
மதுரை :
ஒன்றிய அரசின் தேசிய பணமாக்கல் திட்டத்தை கண்டித்து செப்டம்பர் 1, 2021 அன்று காலை 10.30 மணி அளவில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மக்கள் அதிகாரம், மதுரை மண்டலம் சார்பாக ஒன்றிணைக்கப்பட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு ஜனநாயக முற்போக்கு இயக்கங்களின் பிரதிநிதிகளும் தோழர்களும் திரளாக கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் மக்கள் அதிகாரம் மாநில பொருளாளர் தோழர் குருசாமி தலைமை தாங்கி நடத்தினார். கார்ப்பரேட் காவி பாசிசத்தை வீழ்த்துவதற்கு தனித்தனியாக போராடினால் தீர்வு இல்லை ஒன்றிணைந்து போராடுவோம் என பேசி முடித்தார்.
அடுத்ததாக, CPI (M) கட்சியின் மதுரை மாநகர செயலாளர், தோழர் விஜயராஜன் கண்டன உரையாற்றும் போது, “இன்று எல்.ஐ.சி.-யை தனியார்மயமாக்க துடிக்கிறார்கள். வெறும் 5 கோடி ரூபாய் முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்ட எல்.ஐ.சி. நிறுவனம் இன்று 50 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வளர்ந்துள்ளது. அதற்கு காரணம் முக்கியமாக அது உழைக்கும் மக்களின் பணம், அதில் வேலை செய்த தொழிலாளர்களின் உழைப்பு. இது இரண்டையும் கார்ப்பரேட்டுகளுக்கு தூக்கிக் கொடுக்கிறார்கள். இப்படி ஒவ்வொரு துறைகளையும் தனியார்மயமாக்க விரைவாக செயல்படுகிறார்கள். இதற்கு எதிரான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்” என பேசி முடித்தார்.
1 of 8
திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த தோழர் திலீபன் செந்தில் பேசும்போது
அம்பானி அதானி போன்ற முதலாளிகளுக்கும், கார்ப்பரேட் கும்பலுக்கும் சேவை செய்வதே காவி பரிவாரத்தின் ஒரே வேலை என்பதை அழுத்தமாகப் பேசினார்.
தமிழ்ப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் பேரறிவாளன் ஆற்றிய கண்டன உரையில், எல்லா துறைகளையும் தனியார்மயம் ஆக்கும் காவிக் கும்பலை அதை விரிவாக மக்களிடம் அம்பலப்படுத்த வேண்டியுள்ளது என்பதை வலியுறுத்தும் விதமாக பேசினார்.
புரட்சிகர இளைஞர் முன்னணி அமைப்பைச் சேர்ந்த தோழர் குமரன், அவர்கள் பேசும்போது அம்பானி அதானிகளுக்கு இந்து மதவெறிக் கும்பலின் சேவையே இந்த பணமாக்கும் திட்டம். இத்திட்டத்தால் ஏற்படவிருக்கும் கட்டண உயர்வுகள் நேரடியாக மக்களை பாதிக்கும் என்பதை அம்பலப்படுத்தி பேசினார்.
அடுத்ததாக மக்கள் அதிகாரத்தின் போடி பகுதி பொறுப்பாளர் தோழர் கணேசன் அவர்கள் பேசுகையில், “வீடுதோறும் இந்த பிரச்சனையை எடுத்துச் சொல்லி அம்பலப்படுத்துவோம். கார்ப்பரேட் காவி பாசிசத்தை விரட்டியடிப்போம்” என்பதை வலியுறுத்தி பேசினார்.
மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர், தோழர் ராமலிங்கம் உரையாற்றுகையில், இந்த ஒட்டுமொத்த கட்டமைப்பும் தனியார்மயம் தாராளமயம் உலகமயத்தை பாதுகாக்கிறது. இதை வீழ்த்தாமல் நமக்கு வாழ்வில்லை என்பதை ஆழமாக விளக்கிப் பேசினார்.
தமிழ்தேச மக்கள் முன்னணி சார்பாக தோழர் மேரி அவர்கள் இந்த ஆர்ப்பாட்ட நிகழ்வில் கலந்து கொண்டார்.
மதுரை பகுதி புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி அமைப்பைச் சேர்ந்த தோழர் ரவி அவர்களின் நன்றியுரையுடன் கூட்டம் முடிந்தது.