குஜராத்தின் மோர்பி நகரில் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்ட தொங்கு பாலம் அக்டோபர் 30, மாலை இடிந்து விழுந்ததில் குறைந்தது 141 பேர் மச்சு ஆற்றில் விழுந்து இறந்துள்ளனர்.

தொங்கு பாலம் ஐந்து நாட்களுக்கு முன்பு ஒரு தனியார் நிறுவனத்தால் பழுதுபார்க்கும் பணியின் பின்னர் பொதுமக்களுக்காக மீண்டும் திறக்கப்பட்டது, ஆனால் நகராட்சியின் “தகுதி சான்றிதழை” பெறவில்லை.

கிட்டத்தட்ட 400 பேர் பாலத்தில் இருந்ததாக ஊகங்கள் கூறுகின்றன. மாலை 6.30 மணியளவில் பாலம் இடிந்து விழுந்தபோது அதில் 150 பேர் இருந்ததாக குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி கூறியுள்ளார்.

“இந்தப் பாலம் 15 ஆண்டுகளாக இயக்க மற்றும் பராமரிப்புக்காக ஒரேவா நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. மார்ச் மாதம், புனரமைப்புக்காக பொதுமக்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டு பாலம் மூடப்பட்டது. அக்டோபர் 26 அன்று புதுப்பிக்கப்பட்ட பிறகு பாலம் மீண்டும் திறக்கப்பட்டது. ஆனால் உள்ளூர் நகராட்சி இதுவரை எந்த தகுதி சான்றிதழும் (புதுப்பிப்பு பணிக்குப் பிறகு) வழங்கவில்லை” என்று மோர்பி நகராட்சியின் தலைமை அதிகாரி சந்தீப்சிங் ஜாலா கூறினார்.

“இருப்பினும், தனியார் நிறுவனம் எங்களுக்குத் தெரிவிக்காமல் பாலத்தை பார்வையாளர்களுக்குத் திறந்துவிட்டது, எனவே, பாலத்தின் பாதுகாப்பு தணிக்கையை எங்களால் நடத்த முடியவில்லை” என்று ஜாலா தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறினார்.

படிக்க : நெல்லை கல்குவாரி விபத்து : கார்ப்பரேட் இலாப வெறிக்கு பலியிடப்பட்ட தொழிலாளர்கள் !

இடிந்து விழுந்த பிறகு, பாலத்தில் எஞ்சியிருப்பது உலோக வண்டிப்பாதையின் ஒரு முனை நீரில் தொங்கியது, அதன் தடிமனான கேபிள்கள் சில இடங்களில் துண்டிக்கப்பட்டன. சிலர் உடைந்த கட்டமைப்பை ஏறி ஆற்றங்கரைக்கு செல்ல முயன்றனர், மற்றவர்கள் பாதுகாப்பாக நீந்தினர்.

பலியானவர்களில் ஏராளமான குழந்தைகளும் அடங்குவர். பாலத்தில் இருந்து விழுந்து ஆற்றங்கரைக்கு நீந்திய பிரதீக் வாசவா, 24 ஹவர்ஸ் குஜராத்தி மொழி செய்தி சேனலில் பல குழந்தைகள் ஆற்றில் விழுந்ததைக் கண்டதாகக் கூறினார். “நான் அவர்களில் சிலரை என்னுடன் இழுக்க விரும்பினேன், ஆனால் அவர்கள் நீரில் மூழ்கிவிட்டனர் அல்லது அடித்துச் செல்லப்பட்டனர்” என்று அவர் கூறினார். சில நொடிகளில் பாலம் இடிந்து விழுந்தது என்றார்.

எவ்வாறாயினும், ஒரேவா குழுமத்தின் செய்தித் தொடர்பாளர், பாலத்தின் நடுப்பகுதியில் பல நபர்கள் பாலத்தை ஒரு வழியிலிருந்து மற்றொன்றுக்கு மாற்ற முயற்சித்ததால் பாலம் இடிந்து விழுந்ததாகக் கூறினார். மேலும் தகவல்களுக்காக நிறுவனம் காத்திருப்பதாகவும் அவர் கூறினார்.

19 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் ஆட்சியின்போது 230 மீட்டர் நீலம் கொண்ட இப்பாலம் கட்டப்பட்டது.

உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாய் வழங்கப்படும். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 4 லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும் வழங்கப்படும் என முதலமைச்சர் பூபேந்திர படேல் அறிவித்துள்ளார்.

காணாமல் போனவர்களைக் கண்டறிய தேசிய பேரிடர் மேலாண்மைக் குழுவுடன் உதவி செய்வதற்காக ஐம்பது கடற்படை மற்றும் 30 விமானப் படை வீரர்கள் அழைக்கப்பட்டதாக அரசாங்கம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. பேரிடர் குறித்து விசாரணை நடத்த 5 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டது.

படிக்க : சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து : இதற்கு முடிவே இல்லையா ?

இது பொதுமக்களுக்கு திறக்கப்படுவதற்கு முன்பு அரசாங்கம் முழுமையான தொழில்நுட்ப மதிப்பீடு மற்றும் சுமை தாங்கும் திறனை சோதிக்கவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டினர்.

ஒரேவா என்ற தனியார் நிறுவனம் தொங்கு பாலத்தை மறுசீரமைப்பு செய்யும் தகுதிவுடையதாக என்று முதலில் அரசு நிர்வாகம் சோதித்திருக்க வேண்டும். பாலம் சீரமைக்கப்பட்டதாக கூறிய பிறகு பாலத்தையாவது சோதித்திருக்க வேண்டும். எதுவுமே செய்யாமல் அலட்சியமாக இருந்த அரசுத் துறை நிர்வாகமும், தரமற்ற முறையில் பாலத்தை பழுதுபார்த்த ஒரேவா தனியார் நிறுவனமும்தான் 140-க்கும் மேற்பட்ட மக்கள் குழந்தைகள் இறப்பிற்கு காரணமாகவும் – பொறுப்பேற்கவும் முடியும். தரமற்ற தொங்கு பாலத்தில் பொதுமக்களையும் குழந்தைகளையும் ஏற்றிவிட்டு சாகடித்த இவர்களுக்கு என்ன தண்டனை? தனியார்மயத்தை ஊக்குவிக்கும் குஜராத் மாடல், எப்போதுமே உழைக்கும் மக்களுக்கு எதிரானதாகத்தான் இருக்க முடியும்.

கல்பனா