அதானியின் கொள்ளைக்குத் துணைபோன செபி தலைவரை விடுவித்த லோக்பால்!

லோக்பால் போன்று இன்னும் எத்தனை விசாரணை அமைப்புகள் அமைக்கப்பட்டாலும் அவை கார்ப்பரேட் கொள்ளை கும்பல்களை தண்டிக்காது என்பதே எதார்த்தமான உண்மை.

ந்தியாவில் ஊழல் வழக்குகளைக் கண்காணித்து விசாரிக்கும் “லோக்பால்”, இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் (SEBI) முன்னாள் தலைவரான மாதபி பூரி புட்ச் மீதான ஊழல் வழக்குகளை அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் என்று கூறி மே 28 அன்று தள்ளுபடி செய்துள்ளது.

லோக்பால் தலைவர் நீதிபதி ஏ.எம். கான்வில்கர் தலைமையிலான ஆறு பேர் கொண்ட அமர்வு வெளியிட்டுள்ள 116 பக்கங்கள் கொண்ட உத்தரவில் “செபி தலைவர் மீதான குற்றச்சாட்டுகள் அனுமானங்கள் மற்றும் ஊகத்தின் அடிப்படையில் அமைந்தவையாக இருக்கின்றன. மேலும் குற்றச்சாட்டுக்களை நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் வழங்கப்படவில்லை. எனவே இந்த வழக்கிற்கு முறையான விசாரணை தேவையில்லை” என்று தெரிவித்துள்ளது.

“கார்ப்பரேட் வரலாற்றிலேயே இதுவரை நடந்திராத மாபெரும் மோசடியை அதானி குழுமம் செய்துள்ளது” என்ற குற்றச்சாட்டை முன்வைத்து வெளிநாடுகளில் அதானியின் வரி ஏய்ப்பு உள்ளிட்ட பல்வேறு நிதி மோசடிகளை அம்பலப்படுத்தி ஜனவரி 2023ல் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்ட ஹின்டன்பெர்க் நிறுவனம், 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் மீண்டும் ஓர் அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையில் இந்தியாவில் பங்குச்சந்தையை ஒழுங்குபடுத்தும் அமைப்பான செபியின் தலைவர் மாதபி புட்ச் மற்றும் அவரது கணவர் தவால் புட்ச் ஆகிய இருவரும் வெளிநாடுகளில் உள்ள அதானி குழுமத்தின் பங்குகளில் கோடிக்கணக்கில் முதலீடு செய்துள்ளதாகவும், அதனாலேயே அதானியின் நிதி முறைகேட்டை விசாரணை செய்ய செபி மறுத்து வருவதாகவும் பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியுள்ளது. இந்த குற்றச்சாட்டுகளை அதானி மற்றும் மாதபி ஆகிய இருதரப்பினருமே மறுத்துள்ளனர்.

ஹின்டன்பெர்க் அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து இந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் செபி தலைவர் மீது மூன்று பேர் வழக்கு பதிவுசெய்துள்ளனர். அதில் திரிணாமூல் காங்கிரசு மக்களவை நாடாளுமன்ற உறுப்பினர் மஹூவா மொய்த்ராவும் ஒருவர்.


படிக்க: அதானிக்கும் செபிக்கும் உள்ள உறவு: நடப்பது அம்பானி-அதானிகளின் கும்பலாட்சி என்பதற்கான நிரூபணம்!


மாதபி மீதான குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் அதானி குழுமத்தை அம்பலப்படுத்த (அல்லது) ஓரங்கட்ட நினைத்த ஹிண்டன்பெர்க் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டே இருப்பதாக லோக்பால் தெரிவித்துள்ளது.

தான் விசாரித்து வந்த ஒரு நிறுவனத்திடமிருந்து வாடகை வருமானத்தைப் பெற்றதாக புட்ச் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய தனியார் கடன் வழங்குநர்களில் ஒன்றான ஐசிஐசிஐ வங்கியில் அவர் “லாபகரமான பதவியை” வகித்ததாகவும், அவர் பணியாளர் பங்கு உரிமையாளர் திட்டங்கள் (ஈசாப்ஸ்) மூலம் நீண்ட காலத்திற்குப் பிறகும் தொடர்ந்து பெரிய அளவில் பணம் சம்பாதித்து வந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அதானி குழும நிறுவனங்களில் முதலீடு செய்தது மற்றும் அதனை மூடிமறைத்தது குறித்த 5 முக்கியமான குற்றச்சாட்டுக்களில் கவனம் செலுத்துவதாக லோக்பால் அறிவித்தது:

”மஹிந்திரா & மஹிந்திரா” (எம்&எம்) மற்றும் ”பிளாக்ஸ்டோன் இன்க்” போன்ற நிறுவனங்களுக்கு ஆலோசனை சேவைகள் (Consultancy Services) வழங்குகிறோம் என்ற பெயரில் மாதபியின் நிறுவனம் ஒன்று அந்த இரு நிறுவனங்களிடமிருந்தும் திரைமறைவில் நிதி மோசடி செய்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சட்டவிரோதமான உள்வர்த்ததத்தில் (Illegal Insider Trading) ஈடுபட்டதற்காக செபியின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட ”கரோல் இன்ஃபோ சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட்” (வோக்ஹார்ட் லிமிட்டெட்) என்ற நிறுவனத்திடமிருந்து வாடகை வருமானம் பெற்றுவருவதாக சித்தரித்து நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஐ.சி.ஐ.சி.ஐ-யிலிருந்து பணி ஓய்வு பெற்ற பிறகும் கூட 2017 மற்றும் 2024-க்கு இடைப்பட்ட காலத்தில் (அந்த காலக்கட்டடத்தில் ஐ.சி.ஐ.சி.ஐ-யானது செபியுடன் ஒழுங்கு முறை சிக்கல்களைக் கொண்டிருந்தது) ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியிடமிருந்து ஊழியர் பங்கு உரிமைத் திட்டத்தின் (ESOP) மூலம் பலனடைந்து வந்ததாகக் கூறப்படுகிறது‌.

(ESOP என்பது நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கானது மட்டுமே. எனினும் மாதபி புட்ச் ஐசிஐசிஐ யிலிருந்து ஓய்வுபெற்று வெளியேறிய பிறகும் அந்த பலன்களை அனுபவித்து வந்ததாகவும் அதில் மோசடி நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது‌)

மேலும், தனக்குச் சாதகமான முடிவுக்காக செபியின் மற்ற முழுநேர உறுப்பினர்கள் மீதும் வாரியத்தில் ஆதிக்கம் செலுத்தியதாகவும் கூறப்படுகிறது.


படிக்க: மீண்டும் ஹிண்டன்பர்க் அறிக்கை: அதானியின் கைப்பாவையாக செபியின் தலைவர்


இந்த வழக்கின் தீர்ப்பு குறித்துப் பேசுவதற்கு முன் முதலில் மாதபி பூரி புட்ச் குறித்து சில தகவல்களைத் தெரிந்துகொள்வது அவசியமாகிறது.

மாதபி புட்ச் எனும் இவர் தனது கல்லூரிப் படிப்புகளை முடித்த கையோடு தனியார் வங்கியான ஐ.சி.ஐ.சி.ஐ குழுமத்தில் கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் வரை பணியாற்றியுள்ளார்‌. அதன்பிறகு சிங்கப்பூரில் உள்ள ”கிரேட்டர் பசிஃபிக்” என்ற பெரும் கார்ப்பரேட் நிறுவனத்தின் தலைவராக பணியாற்றியதுடன், ஷாங்காய் புதிய மேம்பாட்டு வங்கியிலும் பணியாற்றியுள்ளார். அதன்பிறகு ”அகோரா அட்வைசரி பிரைவேட் லிமிட்டெட்” என்ற நிறுவனத்தை நிறுவினார். இதுமட்டுமின்றி, ஐடியா, மேக்ஸ் ஹெல்த் கேர், ஜென்ஸ்டார் டெக்னாலஜீஸ், இன்னோவென் கேப்பிட்டல், கேப் ஹார்ன் உள்ளிட்ட பல கார்ப்பரேட் நிறுவனங்களில் இயக்குநர் பதவிகளை வகித்துள்ளார்.

செபி என்பது மத்திய நிதி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அமைப்பாகும். இதன் தலைவராக மத்திய அரசால் பரிந்துரைக்கப்படும் நபர் தேர்வு செய்யப்படுகிறார். மேலும் ஒன்றிய நிதி அமைச்சகத்திலிருந்து 2 உறுப்பினர்கள், ரிசர்வ் வங்கியிலிருந்து ஓர் உறுப்பினர் மற்றும் மீதமுள்ள 5 நபர்கள் மத்திய அரசால் பரிந்துரைக்கப்படுவார்கள். அந்த ஐந்து பேரில் குறைந்தது மூன்று பேர் முழுநேர உறுப்பினர்களாக இருக்கவேண்டும். அவ்வாறு ஒரு முழுநேர உறுப்பினராக 2017ஆம் ஆண்டு செபிக்குள் நுழைந்தவர் தான் இந்த மாதபி புட்ச்‌. இந்த நிலையில் கடந்த மார்ச் 1, 2022 அன்று செபியின் தலைவராக மாதபி புட்ச் மோடி அரசால் நியமிக்கப்பட்டார்.

இவர் பதவியேற்றவுடன், செபியின் இளம் தலைவர் மற்றும் செபியின் முதல் பெண் தலைவர் என்று பலரும் மாதபியை புகழ்ந்து தள்ளினர். ஆனால், இங்கு கவனிக்கத்தக்கது என்னவெனில், செபியின் வரலாற்றிலேயே தன் பணிக்காலம் முழுவதும் தனியார் நிறுவனங்களில் மட்டுமே, அதுவும் உயர்பதவிகளில், பணியாற்றிய ஒரே தலைவர் மாதபி மட்டுமே. அப்போதே பல தரப்பிலிருந்தும் இவருக்கு எதிர்ப்புகள் கிளம்பியது‌. பதவியேற்ற பிறகு கார்ப்பரேட் நிறுவனங்களில் செய்வதைப் போல செயல்திறன் இலக்குகளை (performance targets) வேகமாக அதிகரித்து ஊழியர்களுக்குக் கூடுதல் பணிச்சுமைகளை ஏற்படுத்தியது உள்ளிட்ட பல நடவடிக்கைகளால் செபியின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் புட்ச் மீது கடும் அதிருப்தி ஏற்பட்டிருந்தது‌.

இப்படி செபியில் தனது பதவிக்காலம் முழுவதும் தனது கார்ப்பரேட் லாபவெறி நோக்கத்துடன் பணியாளர்களை அடிமைகளாகவே நடத்திவந்துள்ளார். இதற்கு எதிராகப் பல ஊழியர்கள் மௌனப் போராட்டங்களை நடத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் இவர், ‘பிளாக்ஸ்டோன்’ உள்ளிட்ட பல கார்ப்பரேட் நிறுவனங்களுக்குச் சாதகமான வகையில் நடந்துகொண்டதும் இவர் யாருக்கானவர் என்பதை அம்பலப்படுத்துகிறது.


படிக்க: ஏமாற்றும் ரிலையன்ஸ், மயிலிறகால் தடவிக் கொடுக்கும் செபி ! | சு. விஜயபாஸ்கர்


இந்த பின்னணியிலிருந்து பார்த்தால் அதானி-அம்பானி கார்ப்பரேட்டு பெருமுதலாளிகளின் அடிவருடியான பாசிச மோடி கும்பல், இந்த கார்ப்பரேட்டுகள் எந்த தடையுமின்றி கொள்ளையடிப்பதற்கு ஏதுவாக திட்டமிட்டே மாதபி புட்ச்-ஐ செபியின் தலைவராக நியமித்துள்ளது தெளிவாகிறது. அவ்வாறான நோக்கம் ஏதுமில்லையெனில் அரசு நிறுவனங்களில் பணியாற்றி அனுபவம் இல்லாத ஒருவரைத் தலைவராக நியமிக்க வேண்டியதன் தேவை என்ன? இதனை மறைப்பதற்குத் தான் முதல் பெண் தலைவர், இளம் தலைவர் என்ற நாடகம் எல்லாம். இந்த சதித்திட்டத்திற்கான காய்நகர்த்தல், 2017ஆம் ஆண்டு மாதபியை செபியின் முழுநேர உறுப்பினராக மோடி கும்பல் பரிந்துரைத்தபோதே தொடங்கிவிட்டது.

கார்ப்பரேட்டுகளின் லாபவெறியை தீர்த்துக்கொள்ள உடந்தையாக மாதபி இருந்துள்ளார் என்பது இத்தனை அப்பட்டமாகத் தெரிந்தும், ஊழல் தடுப்பு அமைப்பான லோக்பால் நீதிமன்றம், “மாதபி புட்ச்சின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் அனுமானங்களின் அடிப்படையிலானவையே” என்று கூறியிருப்பதானது, லோக்பால் போன்று இன்னும் எத்தனை விசாரணை அமைப்புகள் அமைக்கப்பட்டாலும் அவை கார்ப்பரேட் கொள்ளை கும்பல்களை தண்டிக்காது என்பதே எதார்த்தமான உண்மை என்பதைக் காட்டுகிறது.

அரசு கட்டமைப்பினுள் இந்த பாசிச கும்பலின் ஊடுருவலும் ஆதிக்கமும் எந்தளவிற்கு ஆழமாக வேரூன்றியுள்ளது என்பதை இதுபோன்ற சம்பவங்கள் திரையிட்டுக் காட்டுகின்றன.

அதானி குழுமத்தை இயக்கிவருபவர்கள் மற்றும் அதானி குழுமத்தின் போலி நிறுவனங்களில் முதலீடு செய்து நிதி மோசடி செய்துவந்த பங்குதாரர்கள், இந்த மோசடிகளில் பங்கெடுத்து அதற்குத் துணைபோன செபி தலைவர் மாதபி புட்ச் மற்றும் அவரது கணவர் தவால் புட்ச் ஆகிய அனைவரையும் குற்றவாளிகள் பட்டியலில் சேர்த்து, உடனடியாக விசாரணை செய்து அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வைப்பது என்பது இந்த விவகாரம் குறித்து ஜனநாயக சக்திகள் மத்தியில் எதிர்ப்புக்குரல் வலுப்பெறுவதைப் பொறுத்தே சாத்தியப்படும்.

எனவே கார்ப்பரேட்டுகளையும் அதன் கைக்கூலிகளையும் எதிர்த்துக் களமிறங்குவது ஜனநாயக சக்திகள் மற்றும் புரட்சிகர இயக்கங்கள் அனைவரது கடமையாகும்!


ஜென்னி லீ

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க