பரந்தூர்: கார்ப்பரேட் சேவைக்காக நீர் வழித்தடங்களை மாற்றியமைக்கும் திமுக அரசு

விமான நிலையத்திற்காக நீர் வழித்தடத்தை மாற்றியமைக்கு இதே தி.மு.க அரசு தான் அனகாபுத்தூரில் ஆற்று நீர்நிலை வழித்தட ஆக்கிரமிப்பு எனக் கூறி மக்களை வெளியேற்றிக் கொண்டிருக்கிறது

ரந்தூர் விமான நிலையம் திட்டத்திற்கு எதிராக பரந்தூர் மக்கள் தொடர்ந்து விடாப்பிடியாக ஆயிரம் நாட்களையும் கடந்து போராடி வருகின்றனர். பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான கொள்கை அளவிலான ஒப்புதலை ஒன்றிய விமான போக்குவரத்து அமைச்சகம் கடந்த ஏப்ரல் 7 ஆம் தேதி தமிழ்நாடு அரசுக்கு வழங்கியது. இந்த அரசாணைகளை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பூவுலகின் நண்பர்கள் பெற்றனர்.

இவ்வனுமதி வழங்குவது தொடர்பாக 12.03.25 அன்று ஒன்றிய விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் வழிகாட்டுதல் குழு (Steering Committee) கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இக்கூட்டத்தின் பிரத்தியேக ஆவணங்களையும் பூவுலகின் நண்பர்கள் ஒன்றிய அரசிடம் இருந்து பெற்றனர். இந்த ஆவணங்களின் அடிப்படையில் பரந்தூர் விமான நிலையத் திட்டத்திற்கு ஒன்றிய பாதுகாப்பு அமைச்சகம், பொருளாதார விவகாரங்களுக்கான துறை, விமான நிலையங்களுக்கான பொருளாதார ஒழுங்குமுறை ஆணையம், இந்திய வானிலை ஆய்வுத்துறை, வருவாய்த் துறை, ஒன்றிய பாதுகாப்பு இயக்குநரகம், நிதி ஆயோக், சுற்றுச்சுழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம், உள்துறை அமைச்சகம், உள்ளிட்ட ஒன்றிய அரசின் அனைத்து துறைகளும் முதற்கட்ட இசைவளித்துள்ளதுள்ளனர்.

வழிகாட்டுதல் குழு கூட்டத்தில் சில நிபந்தனைகளையும் கோரிக்கைகளையும் இந்திய விமான நிலையங்கள் ஆணையம் (AAI) தமிழ்நாடு அரசிடம் முன்வைத்துள்ளது. அவை:

* சென்னை விமான நிலையம் ஆண்டுக்கு 3.5 கோடி பயணிகளைக் கையாளும் நிலையை அடையும் முன்பே பரந்தூர் விமான நிலையம் செயல்பாட்டுக்கு வந்துவிட்டால் 3.5 கோடி பயணிகள் என்கிற நிலையை எட்டும் வரையிலான காலத்திற்கு இந்திய விமான நிலைய ஆணையத்துக்கு தமிழ்நாடு அரசு இழப்பீட்டுத் தொகையைச் செலுத்த வேண்டும்.

* சென்னை விமான நிலையத்தில் புதிய முனையம் கட்டுவதற்கான உரிமையைத் தமிழ்நாடு அரசு இந்திய விமான நிலையங்கள் ஆணையத்துக்கு வழங்கக் கோரிக்கை வைத்துள்ளது.

* சென்னை விமான நிலையத்தில் உள்ள சரக்குகள் கையாளும் பகுதியை விரிவாக்கம் செய்ய பள்ளிகள், குடியிருப்புகளைக் கொண்டிருக்கும் 90 ஏக்கர் பரப்பளவிலான பகுதியைத் தமிழ்நாடு அரசு இந்திய விமான நிலையங்கள் ஆணையத்துக்கு வழங்கக் கோரிக்கை வைத்துள்ளது.


படிக்க: 1,000 நாட்களைக் கடந்த பரந்தூர் மக்களின் தொடர் போராட்டம்!


இதில், இழப்பீடு தொடர்பான நிபந்தனையை தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. தற்போதுள்ள விமான நிலையத்தின் கொள்ளளவு பற்றக்குறை எனக் கூறிதான் புதிய விமான நிலையம் கட்டப்போவதாக தமிழ்நாடு அரசு அறிவித்து பரந்தூரில் பணிகளைத் தொடங்கியது. ஆனால், இந்திய விமான நிலையங்கள் ஆணையம் இழப்பீடு கோரிக்கையைப் பார்க்கும் போது, புதிய விமான நிலையம் கட்டி செயலுக்கு வந்தாலும் தற்போதுள்ள விமான நிலையம் முழு கொள்ளளவை எட்டுவதற்கு அதிக காலம் ஆகும் என கருதித்தான் இழப்பீடு கேட்டுள்ளதாக உணர முடிகிறது.

மேலும், வழிகாட்டுதல் குழு கூட்டத்தில் தொழிற்சாலைகளின் சிம்னிகள், கிராமங்கள், நீர்நிலைகள், தண்டவாளங்கள், மின்னிணைப்புகள் எல்லாம் பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்குத் தடைகளாக இருப்பதாகவும் இவற்றை நீக்கிவிடுவதாகவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. அடுத்து இந்த திட்டத்திற்கு நீர் தேங்குவது, வெள்ள பாதிப்பு போன்ற பிரச்சினைகள் உள்ளன. இதனைக் களைய உயர்மட்ட குழு அமைத்து, அந்த உயர்மட்ட குழு சில பரிந்துரைகளை வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ’பிரச்சினை’களைக் களைய ஆற்று, ஏரிகளின் நீர் வழித்தடங்களை மாற்றியமைக்கப் போவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. விமான நிலையத்திற்காக நீர் வழித்தடத்தை மாற்றியமைக்கு இதே தி.மு.க அரசு தான் அனகாபுத்தூரில் ஆற்று நீர்நிலை வழித்தட ஆக்கிரமிப்பு எனக் கூறி மக்களை வெளியேற்றிக் கொண்டிருக்கிறது. சட்டமும் சரி விதிமுறைகளும் சரி உழைக்கும் வர்க்கத்திற்கு மட்டும் தானே ஒழிய கார்ப்பரேட் வர்க்கத்திற்கோ ஆளும் வர்க்கத்திற்கோ கிடையாது என்பது மீண்டும் நிரூபணமாகிறது.

நன்றி: பூவுலகின் நண்பர்கள்


ஹைதர்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க