புதுடெல்லி ஜங்புராவில் வசித்துவரும் தமிழர்களின் குடியிருப்புகள் ஆக்கிரமிப்பு என்று கூறப்பட்டு ஜூன் 1 ஆம் தேதி முதல் பலத்த போலீசு பாதுகாப்புடன் இடிக்கப்பட்டு வருகிறது. இதனால், பல தலைமுறைகளாக வசித்து வரும் மக்கள் வாழ்வாதாரம் இழந்து நிர்க்கதியாக நிற்கின்றனர்.
நிஜாமுதீன் இரயில் நிலையத்திற்கு அருகில் தென் கிழக்கு டெல்லி மாவட்ட நிர்வாகத்திற்கு உட்பட்ட இடத்தில் அமைந்துள்ள மதராஸி முகாமில் (Madrasi Camp) 370 வீடுகளில் தமிழர்கள் வசித்து வருகின்றனர். கடந்த 2024 ஆம் ஆண்டு பருவமழையின் போது பாராபுல்லா வடிகாலில் (Barapullah drain) அடைப்பு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் புகுந்தது. இந்த குடியிருப்பு முகாம் பாராபுல்லா வடிகாலை அடைத்துவிடுகிறது எனக் குற்றம்சாட்டி ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்றுமாறு டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதனையடுத்து, கடந்த செப்டம்பர் 5, 2024 அன்று பொதுப்பணித் துறை மக்கள் வெளியேற வேண்டும் என்று நோட்டீஸ் வழங்கியது. இந்த நடவடிக்கை மக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தவே செப்டம்பர் 8,2024 அன்று அப்போதைய டெல்லி முதலமைச்சர் அதிஷி இதில் தலையிட்டு இடிப்பு சட்டவிரதோமானது எனத் தெரிவித்தார். இதேநாளில் பாராபுல்லா கால்வாயின் நீர் ஓட்டத்தை மதராஸி முகாம் தடுத்துள்ளது என்ற தனது கூற்றை டெல்லி மேம்பாட்டு ஆணையம் நீருபிக்க வேண்டும் என உத்தரவிட்டு மக்களை வெளியேற்றுவதை நிறுத்தி வைத்தது டெல்லி உயர்நீதிமன்றம்.
நீர்ப்பாசன மற்றும் வெள்ளக் கட்டுப்பாட்டுத் துறை (IFCD) தனது அறிக்கையை அக்டோபர் 5, 2024 ஆம் தேதி சமர்ப்பித்தது. குடியிருப்பால் வடிகாலில் அடைப்பு ஏற்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், டெல்லி மற்றும் பாம்பே ஐ.ஐ.டி-யைச் சேர்ந்த பொறியாளர்கள் அடங்கிய உண்மையறியும் குழு வெளியிட்ட அறிக்கை மேம்பாலங்கள் மற்றும் பாலங்களால் தான் வடிகாலில் அடைப்பு ஏற்படுகிறதே தவிர குடியிருப்பால் அல்ல என அம்பலப்படுத்தியது. இருப்பினும், டெல்லி உயர்நீதிமன்றம் குடியிருப்பை இடிக்க உத்தரவிட்டது. டெல்லியிலிருந்து 50 கி.மீ தொலைவில் உள்ள நரேலா பகுதியில் மக்களைக் குடியமர்த்தவும் உத்தரவிட்டது. அதிலும் 189 நபர்கள் மட்டுமே வீடுகளைப் பெறுவதற்குத் தகுதியானவர்கள் என்று கூறப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களைத் தகுதியற்றவர்கள் எனக் கூறி டெல்லி அரசு கைவிட்டுவிட்டது.
படிக்க: வனநிலத்தை ஆக்கிரமித்து அனல் மின்நிலையம் கட்டிவரும் அதானி குழுமம்
மதராஸி முகாமில் உள்ள தமிழர்கள் ஒரே நாளில் இரண்டு அல்லது மூன்று வேலைகளுக்குச் சென்று தான் தங்களது வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நகரத்திலிருந்து 50 கி.மீட்டர் தொலைவில் குடியமர்த்துவதன் மூலம் மக்களின் வாழ்வாதாரம் சிதைக்கப்படுகிறது.
நரேலாவில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை பார்வையிட்டு வந்த மக்கள், “அங்கு எந்த வசதியும் இல்லை; குடிநீரைக் கூட பணம் கொடுத்துத் தான் வாங்க வேண்டியுள்ளது. அங்கு 12 லிட்டருக்கு ரூ.30 கேட்கின்றனர்” எனத் தெரிவிக்கின்றனர். குழந்தைகளுக்கான கல்வியும் பெரிய அளவில் பாதிக்கப்படுகிறது.
உரிய மறுவாழ்வு திட்டங்கள் ஏதுமில்லாமல் தற்போது குடிசைப் பகுதிகள் இடிக்கப்பட்டு வருகின்றன. மறுவாழ்வு திட்டங்களின்றி குடிசைகள் இடிக்கப்படுவதால் ஏழைகள் கட்டாயமாக மாநகரத்திலிருந்து வெளியேற்றப்படுகின்றனர். இதனால் அம்மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு நிர்க்கதியாகியுள்ளனர். பா.ஜ.க-வின் தேர்தல் அறிக்கையில் குடிசைகள் இருக்கும் இடத்திலேயே வீடுகள் கட்டித்தரப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. அவையெல்லாம் வெற்று வாக்குறுதிகள்தான் என்பது தற்போது மீண்டும் நிரூபணமாகியுள்ளது.
ஹைதர்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram