15வது ஊதிய ஒப்பந்தத்தைப் பேசி முடிக்க வேண்டும், போக்குவரத்துக் கழகத்தின் வரவுக்கும் செலவுக்குமான வேறுபாட்டை அரசே ஈடுகட்ட வேண்டும், ஓய்வுபெற்ற தொழிலாளர்களின் பணப்பலன்களை ஓய்வு பெறும் நாளிலேயே வழங்க வேண்டும், ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு 8 ஆண்டுகளாக வழங்கப்படாத அகவிலைப்படியை உடனே வழங்க வேண்டும், பண்டிகைக் காலங்களில் தனியார் வண்டிகளை காண்ட்ராக்ட் அடிப்படையில் இயக்க அனுமதிக்கக் கூடாது, ஓட்டுநர், நடத்துநர், தொழில்நுட்பப் பணியாளர் ஆகிய பணிகளுக்கு நிரந்தரப்பணி அடிப்படையில் ஆட்களை எடுக்க வேண்டும், ஜெர்மனியில் இருந்து வாங்கப்படும் பேட்டரி பேருந்துகளை தனியார் இயக்க அனுமதிக்காமல் அரசே இயக்க வேண்டும், தனியார் ஆம்னிப் பேருந்துகளைக் கட்டுப்படுத்த வேண்டும், போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு விரோதமாக அ.தி.மு.க ஆட்சியில் கொண்டுவரப்பட்ட எட்டு அரசாணைகளை இரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட போக்குவரத்து தொழிலாளர்களின் முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என CITU, AITUC, TTSF ஆகிய சங்கங்கள் மே 27 அன்று உண்ணாநிலைப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தன.
உடனே தி.மு.க அரசாங்கம் பேச்சுவார்த்தைக்கு அழைத்த காரணத்தால் உண்ணாநிலைப் போராட்டம் திரும்பப்பெறப்பட்டது.
மே 29 அன்று நடந்த பேச்சுவார்த்தையில் 88 சங்கங்கள் கலந்து கொண்டன. ஆனால், மேற்சொன்ன தொழிலாளர்களின் அடிப்படையான கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு எந்த உத்தரவாதத்தையும் தி.மு.க அரசு அளிக்கவில்லை. இந்த நிலையில், LPF உள்ளிட்ட 64 சங்கங்கள் தி.மு.க அரசின் பதிலுக்கு ஆதரவளித்தன. CITU, AITUC உள்ளிட்ட 24 சங்கங்கள் அடிப்படையான கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும் பெரும்பான்மை 64 சங்கங்கள் என்ற வகையில் பெருவாரியான தொழிலாளர்களின் கோரிக்கைகள் தோல்வியடைந்தன.
அரசின் தனியார்மயக் கொள்கைகளை முறியடிக்காமல் இப்பிரச்சினைக்குத் தீர்வு ஏற்படாது என்பது அடிப்படையான விடயம்தான். இதை விரிவாக விவாதிப்பது இக்கட்டுரையின் நோக்கமல்ல. அரசு எவ்வாறு குயுக்தியான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு தனக்குச் சாதகமான நிலையை உருவாக்குகிறது என்பதை வெளிக்கொணர்வதே இதன் நோக்கமாகும்.
படிக்க: போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் : நாம் எப்படி பார்ப்பது? | தோழர் மருது
இக்கட்டுரையின் விவாதப் பொருள், தி.மு.க அரசுக்கு ஆதரவளித்த பெரும்பாலான சங்கங்கள் எவை என்பதைப் பற்றியது. அவை லெட்டர்பேட் சங்கங்கள். அதாவது இத்தகைய சங்கங்களை அதிகாரிகள் மற்றும் அரசின் துணையோடு உருவாக்குவது, பயன்படுத்துவது என்ற அடிப்படையில் ஆளும் அரசாங்கங்களால் திட்டமிட்ட வகையில் தொழிலாளர்களுக்கு துரோகம் இழைக்கப்படுகிறது. இப்படித்தான் துரோகம் தொடர்கிறது.
இந்த லெட்டர்பேட் சங்கங்களின் தலைவர்களுக்கு போக்குவரத்துக் கழகங்களில் சிரமமில்லாத வேலைகளை ஒதுக்கி செல்லப் பிள்ளையாகப் பராமரிப்பது, அதன் மூலம் தங்களது கையாட்களாக மாற்றிக் கொள்வது என்பதுதான் போக்குவரத்துக் கழக அதிகாரிகளின் நடைமுறையாக உள்ளது.
பகுதியளவில் CITU உள்ளிட்ட முக்கிய சங்கங்களின் கோரிக்கைகளை நிராகரிப்பது, இந்த லெட்டர் பேட் சங்கங்களின் வாயிலாக தொழிலாளர்களின் சில கோரிக்கைகளை நிறைவேற்றுவதைப் போல நடிப்பது என்பது அதிகாரிகளின் முக்கியமான நடவடிக்கைகளாகும். இதில் முக்கியமான விசயம் என்னவென்றால், தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற தொழிலாளர்கள் லஞ்சம் கொடுக்க வேண்டும். இவ்வாறு போக்கு போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் மீது மிகப்பெரும் சுரண்டலாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கான தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையில், கழக ஆட்சி மலர்ந்தவுடன் ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் அனைத்துப் பிரச்சினைகளும் தீர்க்கப்படும், பழைய ஓய்வூதியத் திட்டம் முழுமையாக அமல்படுத்தப்படும், போக்குவரத்துத் தொழிலாளர்கள் அனைவரும் பணிநிரந்தரம் செய்யப்படுவர் என்று அளித்த வாக்குறுதிகளை எல்லாம் காற்றில் பறக்கவிட்டுவிட்டு எப்படித் தொழிலாளர்களை வஞ்சிப்பது என்று தீவிரமாகச் செயல்படுவதுதான் ’திராவிட மாடல்’ ஆட்சி போலும்.
இந்த ஜாடிக்கேற்ற மூடிகள்தான் தொழிலாளர் துரோக லெட்டர் பேட் தொழிற்சங்கங்கள் ஆகும்.
தமிழன்பன்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram