03.06.2025
தாரைவார்க்கப்படும் சென்னைப் பல்கலைக்கழக வளாகம்:
பல்கலைக்கழகத்தில் தோழி விடுதி கட்டாதே!
பத்திரிகை செய்தி
சென்னைப் பல்கலைக்கழகத்தின் சேப்பாக்கம் “இராமானுஜம் வளாகத்தில்” அமைந்திருந்த சென்னைப் பல்கலைக்கழக மாணவியருக்கான விடுதி இரண்டு ஆண்டுகளாகச் செயல்படாமல் உள்ளது. தற்காலிகமாக தரமணி விடுதியில் மாணவியர்களுக்கு குறுகிய எண்ணிக்கையில் விடுதி அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தாலும் அது போதுமானதாக இல்லை. இதன் காரணமாக சென்னைப் பல்கலைக்கழக மாணவிகள் பாதுகாப்பு குறைபாடுகளையும் கல்வி சிக்கல்களையும் எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் விடுதியைக் கட்டித்தர வேண்டி சென்னைப் பல்கலைக்கழகம் சார்பாக தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனையடுத்து 2024 மானியக் கோரிக்கையின் போது தமிழ்நாடு முதலமைச்சர் பல்கலைக்கழகத்தின் முதுகலை மாணவியர்களுக்கான விடுதி கட்டுவதற்கு சுமார் 53 கோடி வழங்குவதாக அறிவித்திருந்தார். அப்போது, சமூக நலத்துறை முன்வைத்த கோரிக்கையின் அடிப்படையில் நகரங்களில் பணிபுரியும் பெண்களுக்கு “தோழி” என்ற பெயரில் விடுதி காட்டுவதாகவும் அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், சென்னைப் பல்கலைக்கழக மாணவியர் விடுதி அமைந்திருந்த இராமானுஜம் வளாக இடத்தில் சமூக நலத்துறை சார்பாக “தோழி” விடுதியைக் கட்ட அடிக்கல் நாட்ட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி சென்னைப் பல்கலைக்கழக மாணவர்களிடையே எதிர்ப்பை கிளப்பியது.
இந்நிலையில், கடந்த மே 21 அன்று தமிழ்நாடு முழுவதும் 14 இடங்களில் தோழி விடுதி கட்டுவதற்கு காணொளி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. சென்னைப் பல்கலைக்கழக மாணவர்களின் எதிர்ப்பை மீறி ராமானுஜம் வளாகமும் இதில் இடம்பெற்றுள்ளது. இதனை புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது.
மேலும், அடிக்கல் நாட்டப்பட்டுள்ள 14 இடங்களில் சென்னை தரமணியும் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், இரண்டு வாரங்களுக்கு முன்பு சென்னைப் பல்கலைக்கழகத்தின் தரமணி விடுதி வளாகத்தை (IBMS) சென்னைப் பல்கலைக்கழக பதிவாளரும் சில அரசு அதிகாரிகளும் பார்வையிட்டுள்ளனர். இது சென்னைப் பல்கலைக்கழகத்தின் தரமணி விடுதி வளாகத்திலும் தோழி விடுதி கட்டுவதற்கான முயற்சி நடக்கிறதோ என்ற சந்தேகத்தையும் அச்சத்தையும் கிளப்புகிறது.
சென்னைப் பல்கலைக்கழக மாணவர்களுக்கான இடம் வேறு துறைக்கு தாரைவார்க்கப்படுவது என்பது கண்டிக்கத்தக்கதாகும். மேலும், ஒரு கல்வி நிறுவனத்தில் மாணவர்கள் தங்குவதற்கு பிரத்தியேகமான விடுதி கட்டாமல், தோழி விடுதி கட்டுவது என்பது அடிப்படையிலேயே அர்த்தமற்றது என்பதுடன் கல்வி நிறுவனத்தின் கட்டமைப்பைச் சிதைக்கும் நடவடிக்கையுமாகும்.
எனவே, சென்னைப் பல்கலைக்கழக இடத்தில் தோழி விடுதி கட்டும் நடவடிக்கையைக் கைவிட வேண்டுமென புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது. சென்னைப் பல்கலைக்கழக இராமானுஜம் வளாகத்தில் மாணவியர் விடுதியை மீண்டும் கட்டிக் கொடுக்குமாறும் சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறது.
மாநில ஒருங்கிணைப்புக் குழு,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு.
9444836642.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram