ரகசிய ஆவணங்கள் மூலம் நீதிபதிகளை மிரட்டும் மோடி அரசு

இந்தியாவின் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரகசிய ஆவணங்கள் மூலம் மோடி அரசால் மிரட்டப்படுவதாகவும் நீதிபதிகளின் பிள்ளைகளை சிறையில் அடைத்துவிடுவதாக அச்சுறுத்தப்படுவதாகவும் பிரஷாந்த் பூஷண் அம்பலப்படுத்தியுள்ளார்.

ந்திய அமெரிக்க முஸ்லிம் கவுன்சில் (IAMC) என்ற நிறுவனத்தின் சார்பாக கடந்த ஜூன் 6 அன்று அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில், “இந்தியாவில் ஜனநாயகத்தின் நிலை” என்ற தலைப்பில் உச்சநீதிமன்ற வழக்குரைஞர் பிரஷாந்த் பூஷண் சிறப்புரையாற்றினார். அவ்வுரையில், இந்தியாவின் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரகசிய ஆவணங்கள் மூலம் மோடி அரசால் மிரட்டப்படுவதாகவும் நீதிபதிகளின் பிள்ளைகளை சிறையில் அடைத்துவிடுவதாக அச்சுறுத்தப்படுவதாகவும் பிரஷாந்த் பூஷண் அம்பலப்படுத்தியுள்ளார்.

அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வுப் பிரிவு (சி.பி.ஐ), வருமான வரித்துறை (ஐ.டி), தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) மற்றும் உள்ளூர் போலீசுதுறை வரை அனைத்து அமைப்புகளை கொண்டும் முக்கிய நீதிபதிகளுக்கு, குறிப்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக வரக்கூடிய நீதிபதிகளுக்கு எதிராக ரகசிய ஆவணங்களை மோடி அரசு உருவாக்கி வருகிறது; இதில் நீதிபதிகளுக்கு எதிராக ஏதேனும் கண்டறியப்பட்டால் அதனை நீதிபதிகளை மிரட்டுவதற்கு மோடி அரசு பயன்படுத்துகிறது என்று பிரஷாந்த் பூஷண் அம்பலப்படுத்தியுள்ளார்.

“நீங்கள் எங்கள் வழியில் செல்லவில்லை என்றால், நாங்கள் உங்களை அம்பலப்படுத்துவோம் அல்லது உங்கள் பிள்ளைகளை சிறையில் அடைப்போம்” என்று நீதிபதிகளிடம் கூறப்பட்டதாகவும் “இது வதந்தி அல்ல, இது நடக்கிறது” என்றும் பிரஷாந்த் பூஷண் தெரிவித்துள்ளார். இந்த ரகசிய உத்தி இந்தியாவின் நீதித்துறை சுதந்திரத்தை சிதைத்து வருவதாகவும், நீதித்துறையின் சுதந்திரத்தை கீழ்ப்படுத்துவதற்கான மிகவும் கொடூரமான வழி இது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

மேலும், மோடி அரசாங்கம் நீதித்துறை நியமனங்கள் தொடர்பான சட்ட விதிமுறைகளை மீறும் அதேவேளையில், உச்சநீதிமன்றம் தனது அதிகாரத்தைப் பாதுகாக்கத் தவறிவிட்டது என்றும் பிரஷாந்த் பூஷண் குற்றஞ்சாட்டியுள்ளார். “துரதிர்ஷ்டவசமாக, உச்சநீதிமன்றமும் அதன் நீதிபதிகளும் அவர்களின் அவமதிப்புக்கு எதிராக விசாரிக்கத் துணிவதில்லை. இதன் விளைவாக, நீதிமன்றத்தின் கொலீஜியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட சில சுயாதீன நீதிபதிகளின் தேர்வை அரசாங்கத்தால் தடுக்க முடிந்தது. குறிப்பாக சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த நீதிபதிகளின் தேர்வை தடுத்துள்ளது. கொலீஜியம் அவர்களின் பெயர்களை மீண்டும் வலியுறுத்திய போதும்கூட சிறுபான்மை சமூகத்தைச் சார்ந்த நீதிபதிகள் புறக்கணிக்கப்படுகின்றனர்” என்று பிரஷாந்த் பூஷண் குற்றஞ்சாட்டினார்.

மோடியின் பாசிச அரசாங்கம் பல நேர்மையான நீதிபதிகளை அச்சமடையச் செய்ததாகவும், அரசியலமைப்பு உரிமைகள் வெளிப்படையாக மீறப்பட்ட போதும், நீதிபதிகள் அரசாங்கத்திற்கு எதிராக செயல்பட விரும்பாத அளவிற்கு ஒரு பயம் பரவலாக உள்ளதாகவும் பிரஷாந்த் பூஷண்  தெரிவித்துள்ளார்.


படிக்க: வக்ஃப் சட்டத் திருத்தத்திற்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை; மக்கள் போராட்டங்களே முதன்மைக் காரணம்!


நீதித்துறை மட்டுமின்றி கடந்த பத்து ஆண்டுகளில், தேர்தல் ஆணையம் அரசாங்கத்தின் “ஆம்-மேன்” அமைப்பாக மாறிவிட்டது; தலைமை கணக்கு தணிக்கையாளர் (CAG) அரசாங்கத்தின் கணக்குகளைத் தணிக்கை செய்வதை நிறுத்திவிட்டது, தணிக்கைகள் முன்பு இருந்ததை விட நான்கில் ஒரு பங்கிற்கும் குறைந்துவிட்டன; அமலாக்கத்துறை, சி.பி.ஐ., ஐ.டி. என்.ஐ.ஏ., போலீசு போன்ற அமைப்புகள் மோடி அரசாங்கத்தின் கருவிகளாக மாறிவிட்டன; பிரதான ஊடகங்கள் பெருமளவில் சமரசம் செய்து கொண்டவையே; பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் உள்ள வழக்குகளில் 90 சதவிகிதத்திற்கும் அதிகமானவை எதிர்க்கட்சி அரசியல்வாதிகளுக்கு எதிரானவை, அவர்கள் பா.ஜ.க-வில் இணைந்தால் அவர்களுக்கு எதிரான வழக்குகள் உடனடியாகக் கைவிடப்படும்; தேர்தல் பத்திரத் திட்டத்தின் கீழ் வாங்கப்பட்ட 16,000 கோடி ரூபாய் மதிப்பிலான தேர்தல் பத்திரங்களில், பா.ஜ.க. மட்டும் பாதிக்கும் மேற்பட்டவற்றை (8,000 கோடி ரூபாய்க்கு மேல்) பெற்றுள்ளது என இந்தியாவின் அனைத்து அமைப்புகளின் சொல்லிக்கொள்ளப்பட்ட அதிகாரங்களும் பறிக்கப்பட்டுவிட்டதை பிரஷாந்த் பூஷன் தனது உரையில் அம்பலப்படுத்தியுள்ளார்.

இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. பாசிச கும்பல் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள நிலையில், அனைத்து அமைப்புகளின் பெயரளவிலான சுதந்திரத்தையும் அதிகாரத்தையும் பறித்து பாசிச சர்வாதிகாரத்தை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது. ஆனால், எதிர்க்கட்சிகள் இதனை அம்பலப்படுத்துவதற்கு பதிலாக, நீதிமன்றங்களின் மீதான மாயையான நம்பிக்கையை மக்களிடத்தில் உருவாக்கவே முயற்சிக்கின்றன. இதன் மூலம் மாற்று கட்டமைப்பை நோக்கி மக்களை நகர விடாமல் இந்த கட்டமைப்பிற்குள்ளேயே இருத்தி வைப்பதற்கு எத்தனிக்கின்றன. ஆனால், உச்சநீதிமன்றமும் அதன் நீதிபதிகளும் பாசிஸ்டுகளின் கட்டுப்பாட்டில் இருப்பதை பிரஷாந்த் பூஷணின் உரை மீண்டும் அம்பலப்படுத்தியுள்ளது.

ஒருபுறம், நீதித்துறை முழுவதும் காவி பாசிஸ்டுகள் புகுத்தப்பட்டுவரும் நிலையில், பிற நீதிபதிகளும் பாசிஸ்டுகளால் ஆட்டுவிக்கப்படுகின்றனர். இது இக்கட்டமைப்பு பாசிச கும்பலால் முற்றுமுழுதாக சிதைக்கப்பட்டு, பாசிச கட்டமைப்பு நிறுவப்பட்டு வருவதையேக் காட்டுகின்றது. எனவே, பாசிசத்திற்கு மாற்றான உண்மையான ஜனநாயகத்தை கொண்ட பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசுக்காக போராடுவதே நம்முன்னுள்ள தீர்வாகும்.



சோபியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க