நேற்றுடன் (ஜூன் 11, 2025) ஒடிசாவில் பா.ஜ.க. அரசு தனது ஆட்சியின் முதல் ஆண்டை நிறைவு செய்கிறது. ஒரு அரசின் செயல்திறனை மதிப்பிடுவதற்கு ஓர் ஆண்டு என்பது போதுமானது. இருப்பினும், வளர்ச்சியின்மை, நிர்வாகத் தோல்வி, தீவிரமான இந்துத்துவப் பிளவுவாத அரசியல் ஆகியவையே பா.ஜ.க-வின் இந்த ஓராண்டு ஆட்சியின் அடையாளங்களாக உள்ளன.
கடந்த இருபது ஆண்டுகளாக ஒடிசாவை தொடர்ந்து ஆட்சி செய்துவந்த நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் (BJD) ஆட்சிதான் அம்மாநிலத்தின் வளர்ச்சியின்மைக்கான காரணம் என குற்றஞ்சாட்டி பா.ஜ.க. ஆட்சியைப் பிடித்தது. மாநிலம் மற்றும் ஒன்றியம் இரண்டிலும் பா.ஜ.க. தலைமையிலான ‘இரட்டை எஞ்சின்’ அரசாங்கம் அமையும் போது, அதிக சித்தாந்த ஒத்திசைவு, கொள்கை சீரமைப்பு மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றை உறுதி செய்ய முடியும் என்றும், இதன் மூலம் பிரதமர் நரேந்திர மோடியின் கீழ் ஒன்றிய அரசாங்கத்தின் ஆதரவுடன் மாநிலத்தில் வளர்ச்சியைத் துரிதப்படுத்த முடியும் என்றும் பா.ஜ.க. பிரச்சாரம் செய்தது.
ஆனால், பா.ஜ.க. ஆட்சியின் இந்த ஓராண்டில் ஒடிசாவில் அரசாங்கமே இல்லை என்பது போன்ற உணர்வுதான் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. இரட்டை எஞ்சின் அரசாங்கம் என்பது மக்களை ஏய்ப்பதற்கான ஏமாற்று பிரச்சாரம் என்பது ஒடிசாவில் மீண்டும் அம்பலமாகியுள்ளது.
ஒடிசாவில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு சட்டம் – ஒழுங்கு தினசரி அடிப்படையில் தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. தனிநபர் குற்ற விகிதம் 3.8 சதவிகிதம் அதிகரித்து, தற்போது தனிநபர் குற்ற விகிதத்தில் நாட்டில் 8-வது இடத்தில் ஒடிசாவில் உள்ளது. பாலியல் வன்கொடுமை போன்ற கொடூரமான குற்றங்கள் ஒடிசாவில் திடீரென கடுமையாக அதிகரித்துள்ளன. கொள்ளை மற்றும் திருட்டு சம்பவங்களும் மாநிலத்தில் அதிகரித்து வருகின்றன.
படிக்க: ஒடிசா: கிறிஸ்தவர்களின் பிணங்களையும் வேட்டையாடும் காவி கும்பல்
குற்றம் என்பது இயல்பான நிகழ்வு அல்ல. அது சுரண்டல் மற்றும் சமத்துவமற்ற நிலைமைகளிலிருந்து உருவாகிறது. ஓரங்கட்டப்படுதல், இழப்பு மற்றும் மனித கண்ணியம், சமத்துவம், பாதுகாப்பான சூழலை உத்தரவாதப்படுத்தத் தவறுவது போன்றவற்றின் விளைவே குற்றச் செயல்கள் அதிகரிப்பதாகும். ஒடிசாவில் பா.ஜ.க தலைமையிலான அரசாங்கம் சட்டம் மற்றும் ஒழுங்கைப் பராமரிக்கத் தவறி நிர்வாகம் தோல்வியடைந்திருப்பது, குற்றச் சம்பவங்கள் அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாகும். அதனைக் காட்டிலும், சாதி ஏற்றத்தாழ்வு, பெண்ணடிமைத்தனம், ஜனநாயகமின்மை, சுரண்டல் ஆகியவற்றைத் தனது உட்சாரமாக கொண்ட பார்ப்பனித்தை தனது சித்தாந்தமாகக் கொண்டுள்ள பாசிச பா.ஜ.க. கும்பல் ஆட்சியிலிருப்பது அனைத்து விதமான குற்ற சம்பவங்களுக்கும் ஊற்றுக்கண்ணாக உள்ளது.
பொருளாதாரத் துறையில், மோடி தலைமையிலான ஒன்றிய அரசிடமிருந்து 18.19 சதவிகிதம் நிதி குறைந்துள்ளது. மேலும், ஒடிசாவிற்கான நிதியை நிறுத்தியும் வைத்துள்ளது. மறுபுறம் மாநிலத்தில் கார்ப்பரேட் சேவை தீவிரமாக நடந்து வருகிறது. உழைக்கும் மக்கள் மீதான பொருளாதார தாக்குதலால் மக்கள் அவதியுறுகின்றனர். இது ‘இரட்டை எஞ்சின்’ அரசாங்கம் வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்பது வெறும் கட்டுக்கதை என்பதை நிரூபித்திருக்கிறது.
ஒன்றிய மற்றும் மாநில பா.ஜ.க. அரசாங்கங்கள் ஒடிசாவில் உள்ள பட்டியல் பழங்குடி மற்றும் பட்டியல் சாதி சமூகங்களின் வளர்ச்சியை நோக்கமாகக் கொண்ட வீட்டுவசதி மற்றும் நலத்திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட மானியங்களைக் குறைத்துள்ளன. இதன் விளைவாக, மிகவும் ஓரங்கட்டப்பட்ட சமூகங்களும் கிராமப்புற உழைக்கும் ஏழைகளும் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். புறக்கணிப்பும் விலக்கலும்தான் இரட்டை எஞ்சின் மாதிரியின் வடிவம் என்பதை இது காட்டுகிறது. இது ஏமாற்றத்தை மட்டுமே இரட்டிப்பாக்கும் மாதிரியாகும்.
படிக்க: ஒடிசா: ஓர் ஆண்டைக் கடந்த சிஜிமாலி சுரங்க எதிர்ப்பு போராட்டம்!
ஒடிசாவில் சுகாதாரம் மற்றும் கல்வியின் நிலையும் மோசமடைந்துள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பயிற்சிபெற்ற ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் கடுமையான பற்றாக்குறை நிலவுகிறது. இதேபோல், மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள், அத்தியாவசிய மருந்துகள் மற்றும் நோயறிதல் மற்றும் சிகிச்சைக்குத் தேவையான அடிப்படை மருத்துவ உபகரணங்களுக்கான பற்றாக்குறையும் கடுமையாக உள்ளது. ஒடிசாவில் உள்ள பா.ஜ.க. அரசு இந்த முக்கியமான துறைகளின் தேவையை நிவர்த்தி செய்யவோ அல்லது மேம்படுத்தவோ முயல்வதில்லை. இதனால் பொதுக் கல்வி மற்றும் சுகாதார அமைப்புகள் புறக்கணிக்கப்பட்டு நெருக்கடியில் உள்ளன.
ஒடிசாவில் பா.ஜ.க. தலைமையிலான ஆட்சியில் பழங்குடியினர், தலித்துகள், கிராமப்புற ஏழைகள், பெண்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் வாழ்க்கை நிலைமைகள் மோசமடைந்துள்ளன. மாநிலத்தில் இந்துமுனைவாக்கம் செய்து மக்களை பிளவுபடுத்துவதற்காக கிறிஸ்தவ மக்கள் மீதான பாசிசத் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. மாநிலம் முழுவதும் வறுமை, வேலையின்மை மற்றும் உணவுப் பாதுகாப்பின்மை தீவிரமடைந்து வருகிறது. அரசு மக்களுக்கு அன்றி கார்ப்பரேட்டுகளுக்கே சேவை செய்கிறது. கனிம வளங்களை கார்ப்பரேட் கொள்ளைக்குத் திறந்து விடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.
மொத்தத்தில், ஒடிசாவில் பா.ஜ.க. அரசாங்கத்தின் முதல் ஆண்டு ஏமாற்றங்கள், திறமையின்மை மற்றும் தோல்விகள் மட்டுமல்ல, இந்துத்துவ அரசியலின் கோர விளைவுகளும் நிறைந்துள்ளது. அடுத்த நான்கு ஆண்டுகளில் இந்நிலை மேலும் மோசம்டையும் என்பது திண்ணம்.
ஒன்றியத்தில் பா.ஜ.க-வின் 11 ஆண்டுக்கால பாசிச ஆட்சி ஒட்டுமொத்த இந்திய மக்களையும் பேரழிவிற்குள் தள்ளியுள்ளது. இந்நிலையில், இரட்டை எஞ்சின் ஆட்சி எனும் பெயரில் மாநிலங்களிலும் பா.ஜ.க. ஆட்சி அமைவது மக்கள் மீதான பேரழிவை இரட்டிப்பாக்குகிறது. மக்களை அணிதிரட்டி பாசிச எதிர்ப்பு போராட்டங்களைக் கட்டியமைப்பது மட்டுமே மக்களை இப்பேரழிவிலிருந்து மீட்டெடுக்கும்.
நன்றி: கவுண்டர் கரண்ட்ஸ்
மொழிபெயர்ப்பு: சோபியா
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram