வெடிகுண்டுகள், ஏவுகணைகள், டிரோன்கள் மூலம் காசா மக்களை கொத்து கொத்தாகக் கொன்று குவித்துவரும் இனவெறி இஸ்ரேல், கடந்த மார்ச் 2-ஆம் தேதி முதலாக காசா மக்களுக்குத் தேவையான உணவு, குடிநீர், மருந்துப் பொருட்கள் போன்றவற்றையும் தடுத்து நிறுத்தி மக்கள் மீது பட்டினி போரைத் தொடுத்து வருகிறது. காசா மக்கள் மீதான இந்த இருமுனை தாக்குதலைக் கண்டித்தும் இஸ்ரேலின் முற்றுகையை முறியடித்து காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கும் உலகம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான தன்னார்வலர்கள் நிவாரணப் பொருட்களுடன் காசாவை நோக்கிய பயணத்தைத் தொடங்கியுள்ளனர்.
“காசாவிற்கான உலகளாவிய அணிவகுப்பு” (Global March to Gaza) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த இயக்கத்தில் உலகம் முழுவதிலுமிருந்து 50-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றுள்ளனர். தொழிற்சங்கங்கள், ஒற்றுமை இயக்கங்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் என பல்வேறு தேசிய, சர்வதேச அமைப்புகள் இந்த அணிவகுப்பில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளன.
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தன்னார்வலர்கள் நேற்று (ஜூன் 12) எகிப்து தலைநகர் கெய்ரோவிற்கு வருகை புரிந்து எகிப்தின் அரிஷ் நகரத்திற்குச் சென்றடைவது; அங்கிருந்து ஜூன் 15-ஆம் தேதி காசாவின் எல்லைப் பகுதியான ரஃபாவை நோக்கிய நடைப்பயணத்தைத் தொடங்குவது என்பது அணிவகுப்பின் திட்டமாகும். ரஃபாவை அடைந்த பின்னர் எல்லையில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபடுவதன் மூலம் எல்லையைத் திறந்துவிடச் செய்து காசாவிற்குள் நிவாரணப் பொருட்களை அனுமதிக்கச் செய்வதே அணிவகுப்பின் நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், எகிப்தின் தலைநகரிலிருந்து காசாவை நோக்கிய பயணம் நேற்று தொடங்கியுள்ளது.
ஏற்கெனவே, கடந்த ஜூன் 9 அன்று துனிசியாவிலிருந்து காசாவை நோக்கி பேருந்து வழி பேரணி ஒன்று தொடங்கியது. இப்பேரணியில், தொழிற்சங்கவாதிகள், மருத்துவர்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் அனைத்து வயதையும் சார்ந்த சமூக ஆர்வலர்கள் உள்ளனர். துனிசியாவிலிருந்து எகிப்து தலைநகர் கெய்ரோவை சென்றடைந்து மேற்குறிப்பிட்ட உலகளாவிய பேரணியில் இணைவது என்பது இப்பேரணியின் திட்டமாகும். பாலஸ்தீன விடுதலையே இப்பேரணியின் நோக்கம் என்று இதன் ஏற்பாட்டாளர்கள் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், வழியெங்கும் பேரணிக்கு மக்கள் ஆதரவு பெருகி வருவதுடன் தங்கள் பங்கிற்கு காசாவிற்கான பங்களிப்புகளையும் செய்து வருகின்றனர்.
படிக்க: காசா மீது பட்டினிப் போரை தொடுத்திருக்கும் பாசிச இஸ்ரேல் அரசு! | தோழர் அமிர்தா
தொடக்கத்தில், ஐரோப்பிய, ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த தன்னார்வலர்களும் இஸ்லாமிய மக்களுமே அதிகளவில் இணைந்த இந்த அணிவகுப்பிற்கு தற்போது உலகம் முழுவதிலுமிருந்து ஆதரவு பெருகி வருகிறது. பல்வேறு நாடுகளைச் சார்ந்த மக்கள் இந்த அணிவகுப்பில் தங்களை இணைத்துக்கொள்ளப் புறப்படுகின்றனர். இந்தியாவிலிருந்தும் ஒரு குழு இந்த அணிவகுப்பில் இணைய உள்ளதாக முன்னரே செய்திகள் வெளியாகின. அந்தவகையில், அணிவகுப்பு தனது இலக்கை அடைவதற்கு முன்னர் மக்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தாங்கள் காசாவிற்குள் அனுமதிக்கப்படாவிட்டாலும், காசா மீதான போரை நிறுத்துவதற்கு இனவெறி இஸ்ரேலுக்கும் அதற்குத் துணைநிற்கும் உலக நாடுகளைச் சேர்ந்த ஆட்சியாளர்களுக்கும் அழுத்தம் கொடுப்பதற்கும் காசாவுக்கு ஆதரவாக உலக மக்களின் ஆதரவைத் திரட்டுவதற்கும் அணிவகுப்பு உதவும் என்று ஏற்பாட்டாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
“இங்குள்ள மக்கள் உலகிற்கு அனுப்ப விரும்பும் செய்தி என்னவென்றால், நீங்கள் கடல் அல்லது வான் வழியாக எங்களைத் தடுத்தாலும், ஆயிரக்கணக்கானோராக, நிலம் வழியாக நாங்கள் வருவோம். பசியால் மக்கள் இறப்பதைத் தடுக்க, நாங்கள் பாலைவனங்களைக் கடப்போம்” என்று பேரணியில் கலந்துகொண்ட மக்கள் தெரிவிப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. காசாவை நோக்கி அலைகடலெனத் திரண்டுவரும் மக்கள் அணிவகுப்பின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து “ஆம், நாங்கள் தனியாக இல்லை” என்று பாலஸ்தீன மக்கள் மகிழ்ச்சி பொங்க தெரிவிக்கின்றனர்.
மறுபுறம், உலகளவில் மிகப்பெரிய ஆதரவைத் திரட்டிவரும் இப்பேரணியைக் கண்டு இனவெறி இஸ்ரேலும் அதற்குத் துணைநிற்கும் ஆளும் வர்க்கங்களும் பீதியில் உறைந்துள்ளன. அணிவகுப்பைத் தடுப்பதற்கும் குலைப்பதற்கும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நேற்று கூட எகிப்தில் பேரணியில் கலந்துகொள்வதற்காகச் சென்ற 200 பேரை எகிப்து அரசு கைது செய்துள்ளது. மேலும், அணிவகுப்பையும் இடைநிறுத்தியுள்ளது. எகிப்தை கடந்து ரஃபா எல்லையை அடைவதற்கான அனுமதிகளும் இன்னும் வழங்கப்படவில்லை.
ஆனால், இவையெல்லாம் காசா மக்களுக்கான ஆதரவைச் சீர்குலைத்து விடாது, மனிதம் உயிரோடிருக்கும் வரை காசா மீதான இஸ்ரேலின் முற்றுகையைத் தகர்த்தெறிவதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.
படிக்க: இஸ்ரேலின் நரவேட்டையால் ’நரக’மாகும் காசா
முன்னதாக, காசாவிற்கான நிவாரணப் பொருட்களுடன் மட்லீன் படகு வாயிலாக சூழலியலாளர் கிரேட்டா தன்பர்க் உள்ளிட்ட 12 செயற்பாட்டாளர்கள் காசாவை நோக்கிப் புறப்பட்டனர். உலகம் முழுக்க மிகப்பெரும் வரவேற்பைப் பெற்ற இப்பயணத்தைக் கண்டு அதிர்ந்துபோன இனவெறி இஸ்ரேல் காசாவிற்கு 200 கி.மீ. தூரத்திற்கு முன்பே மட்லீன் படகை சிறைபிடித்து செயற்பாட்டாளர்களைக் கடத்திச் சென்றது. இதற்கு உலகம் முழுக்க எதிர்ப்பு கிளம்பியதாலும் செயற்பாட்டாளர்களை விடுதலை செய்யுமாறு போராட்டங்கள் வெடித்ததாலும் வேறுவழியின்றி அவர்களை சொந்த நாடுகளுக்கு அனுப்பி வருகிறது. இதில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இருவர் இஸ்ரேல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மட்லீன் கப்பலைத் தடுத்துவிட்டோம் என்று இனவெறி இஸ்ரேல் நிம்மதி பெருமூச்சு விடுவதற்குள்ளாகவே உலகம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான தன்னார்வலர்கள் நிவாரணப் பொருட்களுடன் காசாவை நோக்கிப் புறப்பட்டிருக்கின்றனர். ஒரு கடல்வழி மட்லீனிற்கு பதிலாக ஆயிரக்கணக்கான தரைவழி மட்லீன்கள் காசாவை நோக்கிப் படையெடுத்து இனவெறி இஸ்ரேலுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன.
உலகம் முழுவதும் நடந்து கொண்டிருக்கும் இத்தகைய போராட்டங்களே இனவெறி இஸ்ரேல்-அமெரிக்காவிற்கு சம்மட்டி அடி கொடுக்கும். காசா மீதான போர் நிறுத்த பேச்சுவார்த்தை இழுபறியான நிலையை எட்டியுள்ள நிலையில், இஸ்ரேலையும் அமெரிக்காவையும் பணிந்துவரச் செய்யும்!
சோபியா
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram