புனேவில் இடிந்து விழுந்த பாலம்: விபத்தல்ல, பா.ஜ.க. அரசின் படுகொலை!

புதிய பாலம் கட்ட வேண்டும் என்ற குண்டமலா கிராம மக்களின் கோரிக்கைக்குச் செவிமடுக்காமல், புனரமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட ரூ.8 கோடியைப் பயன்படுத்தாமல் அலட்சியப்போக்குடன் செயல்பட்ட மகாராஷ்டிர பா.ஜ.க. அரசே பால விபத்திற்கு முக்கிய காரணம்.

ஜூன் 15 அன்று மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்திலுள்ள குண்டமலா கிராமத்தில், இந்திரயானி ஆற்றின் மீது கட்டப்பட்டிருந்த 33 வருட பழமையான இரும்புப் பாலம் இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் 5 வயது குழந்தை உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்; 18 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இதுவரை ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 51 பேர் மீட்கப்பட்டுள்ளனர்; ஒருவர் காணவில்லை என செய்திகள் வெளியாகியுள்ளன. உயிரிழந்தவர்களில், சந்திரகாத் சத்லே, ரோஹித் மானே மற்றும் 5 வயது குழந்தை விஹான் மானே ஆகிய மூன்று பேர் போலீசால் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளனர். ஒருவரின் உடல் இன்னும் அடையாளம் காணப்படாமல் உள்ளது.

இந்த பால விபத்து குறித்து மகாராஷ்டிரா நீர்வளம் மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சர் கிரிஷ் மகாஜன் பேசியபோது, “பாலம் இடிந்து விழுந்த நேரத்தில் அதிகளவுக்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. சம்பவம் நடந்த நேரத்தில் பாலத்தில் நூறுக்கும் மேற்பட்டோர் கூடியிருந்ததால், அதன் எடை தாங்காமல் பாலம் இடிந்து விழுந்ததுள்ளது. இந்த கட்டமைப்பிற்குள் நுழைய வேண்டாம் என்று எச்சரிக்கை பலகை ஒன்றும் நிறுவப்பட்டிருந்தது, ஆனாலும், மக்கள் பாலத்தில் சென்றுள்ளனர்,” என்று மக்கள் மீது குற்றம் சுமத்தியுள்ளார். அதேபோல், மாவட்ட நிர்வாகமும் தன் பங்கிற்கு மக்கள் மீது அப்பட்டமாகப் பழிசுமத்தியுள்ளது.

ஆனால், உண்மையில் மக்களின் உயிர் குறித்து துளியும் அக்கறையின்றி செயல்படும் பா.ஜ.க தலைமையிலான மகாராஷ்டிர அரசின் மக்கள் விரோத போக்குதான் பால விபத்திற்கு முக்கிய காரணம். 1992-இல் கட்டப்பட்ட இந்த இரும்புப் பாலத்தைப் புனரமைக்கவும், வேறு பாலம் அமைக்கவும் குண்டமலா கிராம மக்கள் பலமுறை கோரிக்கை வைத்திருந்தபோதும், அதனைத் துளியும் கண்டுகொள்ளாமல் நடந்துகொண்டுள்ளது மகாராஷ்டிரா அரசு. எனவே, இதை விபத்து என்று கூறுவதை விட பா.ஜ.க தலைமையிலான மகாராஷ்டிர அரசின் படுகொலை என்று கூறுவதே சரியாக இருக்கும்.

இந்த விபத்து குறித்து சிவசேனா (உத்தவ் தாக்கரே பிரிவு) தலைவர் ஆனந்த் துபே பேசியபோது, “இச்சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது. பாலம் பலவீனமாக இருந்தபோது அதிகாரிகள் ஏன் தடுப்புகளை அமைக்கவில்லை? சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு ஏன் பலப்படுத்தப்படவில்லை? இந்த பாலத்தின் பராமரிப்புக்குப் பொறுப்பான அனைத்து உயர் அதிகாரிகளையும் கைது செய்து தண்டிக்க வேண்டும்,” என்று கூறியுள்ளார்.


படிக்க: மோர்பி நகர் தொங்கு பாலம் விபத்து – அழுகி நாறுகிறது குஜராத் மாடல்!


மேலும் “பழுதடைந்த பாலத்தைப் புனரமைப்பதற்காக ரூ. 8 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டது, ஆனால் அது காகிதத்தில் மட்டுமே இருந்தது. புனேவின் மோசமான நிலைமைகளைப் பார்க்கும்போது, ​​மக்கள் சுற்றுலாப் பயணிகளாகக் கூட பயணிக்க முடியாது. இதற்குப் பொறுப்பான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்; அனைத்து பழைய பாலங்களும் சரிசெய்யப்பட வேண்டும். இது விபத்தல்ல ஒரு கொலை” என விமர்சித்துள்ளார்.

மக்கள் எச்சரிக்கையை மீறி பாலத்தின் மேல் சென்றுள்ளதால்தான் இந்த விபத்து நடந்துள்ளதாக மகாராஷ்டிரா அரசு கூறுவது அப்பட்டமான பொய்யாகும். மாற்றுப்பாதை இல்லாததால், வேறு வழியின்றியே மக்கள் அப்பாலத்தைப் பயன்படுத்தி வந்துள்ளனர். புதிய பாலம் கட்ட வேண்டும் என்ற குண்டமலா கிராம மக்களின் கோரிக்கைக்குச் செவிமடுக்காமல், புனரமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட ரூ.8 கோடியைப் பயன்படுத்தாமல் அலட்சியப்போக்குடன் செயல்பட்ட மகாராஷ்டிர பா.ஜ.க. அரசே பால விபத்திற்கு முக்கிய காரணம் என்பது தெளிவாகிறது.

எனவே, இந்த விபத்திற்குக் காரணமான அதிகாரிகள், அமைச்சர்கள் உள்ளிட்டோர் மீது உரிய நடவடிக்கை எடுத்து தண்டனை வழங்கப்பட வேண்டும். மேலும், மாநிலத்திலுள்ள அனைத்து பாலங்களையும் பருவமழைக்கு முன்னதாகவே அரசு ஆய்வு செய்ய வேண்டும். உடனடியாக இதற்கான பணிகளை மேற்கொண்டு, பழுதடைந்துள்ள பாலங்களைச் சரிசெய்ய வேண்டும்.


மித்ரன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க