ஈரான் மீதான போரைக் கண்டிப்போம்!

ஈரான் மீதான அமெரிக்கப் பதிலிப் போரை அனைத்து வகையிலும் கண்டிக்க வேண்டியது போருக்கு எதிராக உலக அமைதிக்காகக் குரல் கொடுக்கும் அனைவரின் கடமையாகும்.

சில தினங்களுக்கு முன்னதாக (ஜூன் 13) ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் தொடுத்ததன் மூலம், அமெரிக்காவின் மூன்றாவது பதிலிப் போராக இந்தப் போர் அமைந்துள்ளது.

ரசியாவுக்கு எதிராக உக்ரைனை வைத்து நடக்கும் போர், பாலஸ்தீன மக்களைக் கொன்றொழித்து பாலஸ்தீனத்தை முற்றிலுமாக கைப்பற்றுவதற்கு இஸ்ரேல் நடத்தும் இன அழிப்புப் போர் ஆகியவற்றின் தொடர்ச்சியாக, இப்போரைத் தொடங்கியுள்ளது.

இப்போர் தொடங்கியது முதலாக, இணையத்தில் மிகப்பெரிய அளவில் விவாதங்கள் நடந்து வருகின்றன. இஸ்ரேல் பலமிக்கது, ஈரான் பலம் குறைவானது, அதனால் இந்தப் போரில் ஈரான் தோற்கடிக்கப்படுவது உறுதி; இரண்டு நாடுகளுமே கொடியவர்கள், இதில் யாரையும் ஆதரிக்க முடியாது; அன்று ஈராக் மீதான அமெரிக்கப் போரை ஈரான் ஆதரித்தது – அதன் விளைவை இன்று எதிர்கொள்கிறது; ஹமாஸ், ஹிஸ்புல்லா இயக்கங்களை இசுரேலுக்கு எதிராக ஈரான் வளர்த்துவிட்டது – இன்று, இஸ்ரேலுக்கு நெருக்கடி கொடுக்கும் நிலையில் இவ்வியக்கங்கள் இல்லை – ஆகையால், ஈரான் சரணடைவதைத் தவிர வேறு வழியில்லை; சிரியாவின் வீழ்ச்சியானது ஈரான் மீதான தாக்குதலுக்கு தொடக்கம் – என்று பலவாறாகக் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இக்கருத்துகள் அனைத்தும் மேலெழுந்தவாரியாகத் தெரியும் சில உண்மைகளையும் தங்களது பொதுவான புரிதல்களிலிருந்தும் தெரிவிக்கப்படுபவை. இஸ்ரேல் – ஈரானை சமமாக வைத்து பார்ப்பது, ஈரானின் மக்கள் விரோத அம்சங்களைக் காரணம் காட்டி இஸ்ரேலின் போரை நியாயப்படுத்தும் வகையில் பேசுவது போன்றவையெல்லாம் கண்டிக்கத்தக்கவை.

மேலும், போரைப் பற்றித் தெரிவிக்கப்படும் இவ்வகையான ஆரூடங்கள், விளையாட்டைப் போல போரில் யார் வெற்றி பெறுவார் என்று பேசப்படும் விவரணைகள், பார்வையாளராக ஒதுங்கி வேடிக்கை பார்க்கும் மனநிலை ஆகிய வகைகளில் வெளிப்படுத்தப்படும் அனைத்து கருத்துகளும் ஈரான் மீதான அமெரிக்காவின் பதிலிப் போரைக் கண்டிப்பதற்கான உணர்வைக் குறைக்கின்றன; அதனை இரண்டாம்பட்சமாக்குகின்றன.

போர் என்பது மிகவும் மோசமானது; அதிலும், ஏகாதிபத்தியங்கள் தங்களுடைய மேலாதிக்கத்திற்காகப் பிற நாடுகள் மீது தொடுக்கும் போர் அனைத்து வகையிலும் அநீதியானவையே.

எனவே, தனது உலக மேலாதிக்கத்திற்காக அமெரிக்கா, இஸ்ரேலைத் தூண்டிவிட்டு நடத்தும் இந்தப் போர் அனைத்து வகையிலும் எதிர்க்கப்பட வேண்டும் என்பதை உணர்த்துவதே இன்றைக்கு முக்கியமான அம்சமாகும்.


படிக்க: ஈராக்: புல்லுருவி அமெரிக்க ஏகாதிபத்தியம் ஆக்கிரமிப்புபோரை தொடுத்து 20 ஆண்டுகள் நிறைவு!


அணுசக்தி மற்றும் ஏவுகணைத் திட்டங்களால் இஸ்ரேலுக்கு அச்சுறுத்தல் இருப்பதாகச் சொல்லி, ஈரான் மீது இஸ்ரேல் நடத்தும் இந்தப் போர், அனைத்து வகையிலும் அமெரிக்காவின் தூண்டுதலில் நடத்தப்படும் போரே. இந்தப் போர் தொடங்குவதற்கு முன்பிலிருந்து தற்போது வரை அமெரிக்காவின் நடவடிக்கைகள் இதனை நன்கு உணர்த்துகின்றன.

அன்று, ஈராக் மீதும் இதே வகையான குற்றச்சாட்டை முன்வைத்து, ஈராக்கை ஆக்கிரமித்தது அமெரிக்கா. இன்றும் அதே குற்றச்சாட்டை முன்வைக்கிறது. ஆனால், ஈரானின் எண்ணெய் வளங்களை ஆக்கிரமிப்பதற்காகவும், மத்திய – கிழக்கு பிராந்தியம் முழுவதையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டுமென்ற அமெரிக்காவின் நோக்கத்திலிருந்தே இஸ்ரேல் மூலம் இந்த பதிலிப் போர் தொடங்கப்பட்டுள்ளது.

ஒற்றைத் துருவ மேலாதிக்க வல்லரசான அமெரிக்காவின் உலக மேலாதிக்கம் உச்சத்தில் இருந்த போதே, அமெரிக்காவின் டாலர் மேலாதிக்கத்திற்கு நேரடியாகவே சவால் விடும் வகையில் செயல்பட்டார் அன்றைய ஈராக் அதிபர் சதாம் உசேன். அமெரிக்காவின் மேலாதிக்கத்திற்கு அடிபணிய மறுத்தார். சதாம் உசேனின் மக்கள் விரோத செயல்பாடுகளை முன்வைத்து, அவர் சர்வாதிகாரி என்ற முத்திரை குத்தின, அமெரிக்க ஆதரவு ஊடகங்கள். அன்று, ஈராக் இருந்த நிலையில் இன்று ஈரான் உள்ளது. ஆனால், அன்று அமெரிக்காவிற்கு ஈரான் செய்த பணியைவிட இன்று இஸ்ரேல் பலமடங்கு ஆதரவான பணியைச் செய்துவருகிறது.

அன்றைய ஈராக் ஆக இருந்தாலும் சரி, இன்றைய ஈரானாக இருந்தாலும் சரி, உலக மேலாதிக்க வெறிபிடித்த அமெரிக்காவின் ஆதிக்கத்திற்காக அமெரிக்க ஊடகங்களால் முன்வைக்கப்படும் கருத்துகளையும் ‘நடுநிலையாளர்கள்’ என்ற போர்வையில் முன்வைப்பவர்களின் கருத்துகளையும் எவ்வகையிலும் ஆதரிக்க கூடாது.

இந்தியா போன்ற அமெரிக்க அடிமை நாடுகள் மீது அமெரிக்கா போர் தொடுக்காது என்பதுதான், இவ்வகையிலான அமெரிக்க ஆதரவு கருத்துகளுக்கு அடிப்படையாகும். நமது நாட்டின் உள்விவகாரங்கள் வரை அமெரிக்கா தலையிடுவதைக் கொஞ்சமும் வெட்கமின்றி சகித்துக் கொள்ளும் மனநிலைதான், ஈரான் மீதான அமெரிக்கப் போரைக் கண்டிக்கத் தடுக்கிறது.

ஈரான் ஒரு பிராந்திய வல்லரசாக வளரத் துடிக்கலாம்; ஆனால், அது ஒற்றை துருவ உலக மேலாதிக்க வல்லரசான அமெரிக்காவிற்கு எதிராக, மத்திய – கிழக்காசியவின் பேட்டை ரவுடியான, யூத இனவெறியான இஸ்ரேலுக்கு எதிராக நிற்கிறது. இந்த ஓர் அம்சத்தில் மட்டுமே, அமெரிக்கா – இஸ்ரேல் கூட்டணிக்கு எதிரான ஈரானின் நிலைப்பாட்டை ஆதரிப்பதன் அவசியம் அடங்கியுள்ளது.

இந்த ஒரு கோணத்திலன்றி வேறெந்த கோணத்திலும் நாம் ஈரானை ஆதரிக்க முடியாது. இந்த ஒரு கோணம் மட்டும்தான் இப்போது முதன்மையானது! இதனைத் தாண்டி வேறு கோணத்தில் பேசுவதெல்லாம், அமெரிக்காவிற்கு ஆதரவானது.

ஆகையால், ஈரான் மீதான அமெரிக்கா – இஸ்ரேலின் போரை எதிர்த்து குரல் கொடுப்பது நமது அனைவரின் கடமையாகும்.


மகேஷ்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க