ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் சிலிண்டர்களில் எரிவாயுவை நிரப்பும் ஆலை சேலம் கருப்பூரில் இயங்கி வருகிறது. இந்த ஆலையில் 80 ஒப்பந்த தொழிலாளர்கள் இந்தப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நாளொன்றுக்கு 20,000 சிலிண்டர்கள் வீதம் எரிவாயு சிலிண்டர்களை நிரப்பி சேலம், கிருஷ்ணகிரி, நாமக்கல், தர்மபுரி ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு இங்கிருந்து எரிவாயு சிலிண்டர் விநியோகம் நடந்து வருகிறது.
தொழிலாளர்கள் 12 பேரை நிர்வாகம் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென்று வேலையிலிருந்து இடை நீக்கம் செய்து விட்டது. நிர்வாகத்தின் இந்த தன்னிச்சையான முடிவை எதிர்த்து சி.ஐ.டி.யு தொழிற்சங்கத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் பெட்ரோலியம் மற்றும் எரிவாயு தொழிலாளர்கள் சங்கம் ஜூன் 12 முதல் வேலை நிறுத்த போராட்டத்தை நடத்தி வருகிறது. தொழிலாளர்களின் ஒற்றுமையுடன் ஒரு வாரமாக இந்த போராட்டம் உறுதியுடன் தொடர்கிறது.
அந்த தொழிலாளர்கள் 12 பேரும் தங்கள் கடமையிலிருந்து தவறிவிட்டதாக, அதாவது சரியாக வேலை செய்யவில்லை என்கிற காரணத்திற்காக இந்த இடை நீக்க நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறது நிர்வாகம். இதனைத் தொடர்ந்து அரசின் வருவாய்த் துறை அதிகாரிகள் முன்னிலையில் நிர்வாகத்துடன் தொழிற்சங்கத் தலைமை பேச்சுவார்த்தை நடத்தியது. அதன் முடிவில் இடை நீக்கம் செய்யப்பட்ட 12 தொழிலாளர்களில் 10 பேர் மீதான நடவடிக்கையை மட்டும் வாபஸ் பெற்றுக் கொள்ள ஏற்றுக் கொண்ட நிர்வாகம் மற்ற இரண்டு பேர் மீதான நடவடிக்கையைக் கைவிட முடியாது என்று கூறிவிட்டது. இதனால் பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது.
நிர்வாகம் மேற்சொன்ன நான்கு மாவட்டங்களுக்கும் தற்காலிகமாக பிற மாவட்டங்களிலிருந்து எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை மேற்கொண்டு வருகிறது. ஆனால் வேலை நிறுத்தம் ஒரு வாரத்திற்கும் மேலாக நீடிக்கும் நி்லையில் நான்கு மாவட்டங்களிலும் சிலிண்டர் வினியோகம் தடைப்பட்டு நெருக்கடி ஏற்பட்டு இருக்கிறது. மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நிர்வாகம் இடை நீக்க உத்தரவை முழுவதுமாக ரத்து செய்யாதவரை சி.ஐ.டி.யு தொழிற்சங்கம் போராட்டத்தைத் தொடர்வதில் உறுதியாக இருப்பதுடன், தங்கள் தலைமையில் பிற மாவட்டங்களில் இயங்கும் தொழிற்சங்கங்களுக்கும் போராட்டம் பரவும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
தொழிலாளர்கள் போராட்டத்தில் ஊன்றி நிற்க வேண்டியது அவசியம் ஆகும். அதே சமயம் தொழிலாளி வர்க்கம் என்ற முறையில் மற்ற நிறுவனத் தொழிலாளர்களின் ஆதரவைப் பெற வேண்டியதும் அவசியம் ஆகும். முன்னணித் தொழிலாளர்களைத் தனி நபர்களாகப் பிரித்து ஒதுக்கும் நிர்வாகத்தின் முயற்சிகளை தொழிலாளி வர்க்கம் வர்க்க உணர்வுடன் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும். வர்க்க ஒற்றுமைதான் தொழிலாளர்களுக்கு இருக்கும் ஒரே வலிமை என்பதை உணர வேண்டும். அதேபோல் எரிவாயு சிலிண்டர்கள் கிடைக்காமல் பாதிக்கப்படும் மக்கள் தொழிலாளர்களுக்கு ஆதரவாக நின்று நிர்வாகத்தின் திமிர் தனத்தைக் கண்டிக்க முன் வர வேண்டும்.
ஆதி
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram