கனடா தலைமையில் அந்நாட்டில் உள்ள ஆல்பர்ட்டா மாகாணம் கனானாஸ்கிஸ் பகுதியில் இரண்டு நாள்கள் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாடு செவ்வாய்க்கிழமை (17.06.2025) நிறைவடைந்தது.
ஜி7 கூட்டமைப்பில் கனடா, அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான், ஜெர்மனி, பிரிட்டன் ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன. இதன் உச்சிமாநாட்டில், அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டார்மர், பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, ஜெர்மனி பிரதமர் ஃபிரெட்ரிக் மெர்ஸ், ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா ஆகியோர் பங்கேற்றனர்.
அதேவேளையில், கனடா பிரதமர் மார்க் கார்னி அழைப்பின்பேரில் ஜி7 கூட்டமைப்பைச் சேராத இந்திய பிரதமர் மோடி மற்றும் பிற நாடுகளின் தலைவர்கள், ஐரோப்பிய யூனியன் பிரதிநிதிகள் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
இம்மாநாட்டில், ஜி7 நாடுகள் போர்வெறிப் பிடித்த இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்துள்ளன. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள கூட்டறிக்கையில், “மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மை மற்றும் அமைதி ஏற்பட வேண்டும் என்பதில் ஜி7 தலைவர்கள் உள்ளார்ந்த ஈடுபாடு கொண்டுள்ளனர். அதேவேளையில், தன்னை தற்காத்துக்கொள்ள இஸ்ரேலுக்கு உரிமை உள்ளது. இஸ்ரேலின் பாதுகாப்புக்கு ஜி7 தலைவர்கள் ஆதரவு அளிக்கின்றனர். மத்திய கிழக்கில் ஸ்திரமற்ற நிலைக்கும் பயங்கரவாதத்துக்கும் ஈரான் பிரதான காரணமாக உள்ளது. ஈரானிடம் அணு ஆயுதங்கள் இருக்கக் கூடாது என்பதே ஜி7 தலைவர்களின் நிலைப்பாடு“ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தன்னை ‘தற்காத்துக்கொள்ள’ இஸ்ரேலுக்கு உரிமை உள்ளதாம்!
ஈரானின் அணுசக்தி மற்றும் ஏவுகணைத் திட்டங்களால் அச்சுறுத்தல் இருப்பதாகப் பொய்யான குற்றசாட்டை முன்வைத்து இஸ்ரேல்தான் ஈரான் மீது முதலில் தாக்குதல் தொடுத்தது. ஏழு நாட்களாக தொடரும் இப்போரில், நூற்றுக்கணக்கான ஈரானிய மக்களை இஸ்ரேல் கொன்றொழித்துள்ளது. தன்னை தற்காத்துக்கொள்ள ஈரான் தொடுக்கும் தாக்குதலைக் கண்டிக்கும் மேற்கத்திய ஏகாதிபத்தியங்கள், ஈரானில் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்படுவது குறித்து வாய்திறக்க மறுக்கின்றன.
படிக்க: பொய்க்குற்றச்சாட்டு, போர் வெறிக் கூச்சல்!
ஈரான் அணு ஆயுதங்களை வைத்திருக்கிறது என அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் பேசுவது பொய் என்பதை அமெரிக்க உளவுத்துறை இயக்குநர் துள்சி கபார்ட்-டின் கருத்து அம்பலப்படுத்தியுள்ள நிலையிலும், பாசிஸ்ட் ட்ரம்பின் கட்டளைக்கிணங்க இஸ்ரேல் போரைத் தொடர்ந்து வருகிறது.
அதேசமயம், ஈரான் அணு ஆயுதம் வைத்திருப்பதாக பீதியூட்டும் மேற்கத்திய ஏகாதிபத்தியங்கள் இஸ்ரேலின் அணு ஆயுத இருப்பு குறித்து கேள்வியெழுப்புவதில்லை. அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் (NPT) கையெழுத்திடாத இஸ்ரேலிடம் 750 முதல் 1,110 கிலோ வரை புளூட்டோனியம் உள்ளது. இது 187 முதல் 277 அணு ஆயுதங்களை உருவாக்க போதுமானதாக இருக்கும் என்று செய்திகள் குறிப்பிடுகின்றன. “தங்களிடம் அணு ஆயுதம் உள்ளது என்பதை மறுக்கவும் மாட்டோம், ஒப்புக்கொள்ளவும் மாட்டோம்” என்ற கொள்கையை இஸ்ரேல் கொண்டுள்ளது.
எனவே, ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபடுகிறது என்று அமெரிக்கா – இஸ்ரேல் குற்றஞ்சுமத்துவது, தங்களுடைய போர்வெறியை நியாயப்படுத்துவதற்காக கூறப்படும் அப்பட்டமான பொய். இந்த பொய் குற்றச்சாட்டை காரணம் காட்டி ஜி7 கூட்டமைப்பில் உள்ள நாடுகளும் அமெரிக்கா – இஸ்ரேலின் போர்வெறிக்கு துணைநிற்கின்றன.
எனவே, மத்திய கிழக்காசிய நாடுகளை தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கும், ஈரானின் எண்ணெய் வளங்களை கொள்ளையடிப்பதற்கும் இஸ்ரேல் மூலம் ஈரான் மீது அமெரிக்க தொடங்கியுள்ள பதிலிப் போருக்கு எதிராக உலகம் முழுவதுமுள்ள மக்கள் குரலெழுப்ப வேண்டும்.
அகதா
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram