நெதர்லாந்து: காசா மீதான இஸ்ரேலின் இனவெறி படுகொலைக்கு எதிராக வீதியில் இறங்கிய மக்கள்!

காசாவில் இனப்படுகொலையை நிறுத்த உறுதியான தடைகளை விதிக்க வேண்டும் என்று கோரி நடைபெற்ற போராட்டத்தில் 1,50,000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதாக ஆக்ஸ்பாம் நோவிப் நிறுவனத்தின் இயக்குநர் மிச்சேல் சர்வேஸ் தெரிவித்துள்ளார்.

ஜூன் 15 ஆம் தேதி அன்று நெதர்லாந்தின் ஹேக் நகரில் காசா மீதான இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு எதிராகவும், இஸ்ரேலுக்கு எதிராக தங்களது அரசாங்கம் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வலியுறுத்தியும் 1,50,000 மக்கள் பங்கேற்ற மாபெரும் பேரணி நடைபெற்றது. தற்போது வரை நடைபெற்ற பேரணிகளில் இது மிகப்பெரிய பேரணியாகும்.

இனவெறி இஸ்ரேல் அக்டோபர் 8, 2023 முதல் காசா மீது இன அழிப்பு போரை நடத்திக் கொண்டிருக்கிறது. மருத்துவமனைகள், குடியிருப்பு கட்டிடங்கள், தற்காலிக தங்குமிடங்கள் உள்ளிட்டவற்றின் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. பட்டினியை ஆயுதமாகப் பயன்படுத்தி குழந்தைகள் உள்பட ஆயிரக்கணக்கான மக்களைப் படுகொலை செய்து வருகிறது. தற்போது சொற்ப அளவிலான நிவாரணப் பொருட்களை மட்டும் காசாவிற்குள் அனுமதித்து உணவுக்காகக் காத்திருக்கும் மக்கள் மீது மனிதாபிமானமற்ற முறையில் தாக்குதல் நடத்தி மக்களைப் படுகொலை செய்து வருகிறது.

இனவெறி இஸ்ரேலின் இக்கொடிய தாக்குதலைக் கண்டித்து ஜூன் 15 ஆம் தேதி அன்று காசா மீதான இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு எதிராகவும், இஸ்ரேலுக்கு எதிராக தங்கள் அரசாங்கம் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வலியுறுத்தியும், ஈரான் மீதான தாக்குதலை நிறுத்த வலியுறுத்தியும் சிவப்பு நிற உடை அணிந்து 1,50,000-க்கும் மேற்பட்ட மக்கள் நெதர்லாந்தின் ஹேக் (Hague) நகரில் பேரணியாகச் சென்று தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். நான்கு வாரங்களுக்குள்ளாக இஸ்ரேலுக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது மிகப்பெரிய பேரணி இது என்பது குறிப்பிடத்தக்கது.

பேரணியை ஏற்பாடு செய்த அம்னஸ்டி இன்டர்நேஷனல் (Amnesty International) மற்றும் ஆக்ஸ்பாம் (Oxfam) உள்ளிட்ட மனித உரிமைக் குழுக்கள் காசா மற்றும் அதன் பாலஸ்தீன மக்கள் மீதான இஸ்ரேலின் போரை நிறுத்த அரசாங்கம் தவறிவிட்டது என்பதைக் குறிக்கும் ஒரு குறியீட்டு “சிவப்புக் கோட்டை” ( Red line ) உருவாக்குவதே இந்த ஆர்ப்பாட்டத்தின் நோக்கமாகக் கொண்டிருந்ததாகத் தெரிவித்துள்ளன.

மேலும் காசாவில் இனப்படுகொலையை நிறுத்த உறுதியான தடைகளை விதிக்க வேண்டும் என்று கோரி நடைபெற்ற போராட்டத்தில் 1,50,000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதாக ஆக்ஸ்பாம் நோவிப் (Oxfam Novib) நிறுவனத்தின் இயக்குநர் மிச்சேல் சர்வேஸ் (Michiel Servaes) தெரிவித்துள்ளார்.


படிக்க: கீழடியை கருவறுக்கும் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பலின் தொல்லியல் துறை!


பேரணி குறித்து நெதர்லாந்து பிரதமர் டிக் ஸ்கூஃப் (Dick Schoof) தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் “வன்முறையை நிறுத்துவதற்கும் மனிதாபிமான முற்றுகையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் நெதர்லாந்து உறுதி பூண்டுள்ளது. களத்தில் நிலைமையை மேம்படுத்த, முன்னும் பின்னும் எங்கள் முயற்சிகளால் எவ்வாறு மிகவும் திறம்படச் செயல்பட முடியும் என்பதை நாங்கள் தொடர்ந்து ஆராய்ந்து வருகிறோம். ஹேக்கில் உள்ள அனைவருக்கும் நான் கூறுகிறேன்; ‘நாங்கள் உங்களைப் பார்க்கிறோம், கேட்கிறோம்’. எங்கள் இலக்கு இறுதியில் ஒன்றுதான்; காசாவில் உள்ள துன்பத்தை விரைவில் முடிவுக்குக் கொண்டுவருவது,”என்று பதிவிட்டுள்ளார்.

பேரணியில் பங்கேற்ற மருத்துவர் சாலிஹ் எல் சாடி (Salih el Saddy) அல் ஜசீரா செய்தி ஊடகத்திடம் ”ஒரு மருத்துவராக, காசாவின் காட்சிகளைப் பார்ப்பது மிகவும் வேதனையானது” என்று தன்னுடைய உணர்வினை வெளிப்படுத்தியுள்ளார்.

இதனைப் போன்று நெதர்லாந்தின் அண்டை நாடான பெல்ஜியத்தின் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் சிவப்பு நிற உடையணிந்த 75,000-க்கும் மேற்பட்ட மக்கள் காசா மீதான இஸ்ரேலின் இனவெறி தாக்குதலை நிறுத்த வலியுறுத்தி வீதிகளில் இறங்கிப் போராடியுள்ளனர். காசாவில் உடனடியாக போரை நிறுத்த வலியுறுத்தி பெல்ஜியம், துருக்கி, பிரேசில் மற்றும் கிரீஸ் ஆகிய நாடுகளிலும் மக்கள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகப் போராட்டங்களை நடத்தியுள்ளனர்.

இனவெறி இஸ்ரேலுக்கு எதிராக உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளில் மக்கள் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகிறது. அவை இனவெறிக்கு முடிவுரை எழுதுவதை நோக்கி வளர்த்தெடுக்கப்பட வேண்டும்.


ஆசாத்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க