ஒடிசாவில் கடந்த ஒரு வார காலத்தில் 17 வயது சிறுமி உள்பட மூன்று பெண்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். சிறுமி வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவங்கள் அம்மாநிலத்தில் உள்ள பெண்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
பா.ஜ.க ஆட்சி செய்யும் ஒடிசா மாநிலத்தின் கஞ்சம் மாவட்டத்தில் புகழ்பெற்ற கோபால்பூர் கடற்கரை அமைந்துள்ளது. ஜூன் 15 ஆம் தேதி அன்று இரவு கல்லூரி மாணவியும் அவரது ஆண் நண்பரும் கடற்கரையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்துள்ளனர். அங்கே இருசக்கர வாகனத்தில் வந்த 10 பேர் கொண்ட கும்பல் ஆண் நண்பரிடம் ஆபாசமாகப் பேசி தகராறு செய்துள்ளனர். பின்னர் ஆண் நண்பரைக் கட்டிவைத்து அவரின் கண்முன்னே மாணவியைக் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர் மிருகக்கூட்டத்திடமிருந்து தப்பித்த மாணவியும் அவருடைய நண்பரும் போலீசில் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் போலீசார் நான்கு சிறுவர்கள் உள்பட 10 பேரைக் கைது செய்துள்ளனர்.
கியோஞ்சர் மாவட்டத்தின் ஹரிசந்தன்பூரில் ஜூன் 16 ஆம் தேதி அன்று இரவு 17 வயது சிறுமி வீட்டிற்கு அருகில் உள்ள திறந்தவெளி கழிப்பிடத்திற்குச் சென்றுள்ளார். ஆனால் ஜூன் 17 ஆம் தேதி அதிகாலை வரை சிறுமியைக் காணவில்லை. இதனால் பதறிப்போன பெற்றோர், உறவினர்கள் பல இடங்களில் தேடியும் சிறுமியைப் பற்றிய தகவல் கிடைக்கவில்லை. இறுதியாக ஊருக்கு அருகில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சிறுமியின் உடல் முழுவதும் ரத்தக்கறை படிந்துள்ளதால் சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என்று குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக போலீசார் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
படிக்க: கீழடி அகழாய்வு: முதல் இரு கட்ட ஆய்வறிக்கையை உடனே வெளியிடு! | பு.மா.இ.மு சுவரொட்டி
மேற்குவங்க மாநில எல்லை அருகே அமைந்துள்ள ஒடிசா மாநிலத்தின் மயூர்பஞ்ச் (Mayurbhanj) மாவட்டத்தில் பரிபாடா பகுதியில் ஜூன் 16 ஆம் தேதி அன்று இரவு 31 வயது பெண் தனியாக வீட்டிற்குள் இருந்துள்ளார். உறவினர்கள் அனைவரும் அருகில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்குச் சென்றுள்ளனர். இதனை அறிந்து நான்கு பேர் கொண்ட கும்பல் வீட்டிற்குள் புகுந்து பெண்ணை கடத்திச் சென்று கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பிறகு பெண் அளித்த புகாரின் அடிப்படையில் ஜூன் 19 ஆம் தேதி அன்று இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. நான்கு குற்றவாளிகளைத் தேடுவதற்குத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக பரிபாடா போலீஸ் ஆய்வாளர் ஆதித்ய பிரசாத் ஜெனா கூறியுள்ளார்.
இச்சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் “ஒடிசாவில் பெண்களுக்கு எதிரான வன்முறை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 44,000 பெண்கள் மற்றும் குழந்தைகள் காணாமல் போயுள்ளனர் என முதலமைச்சரே ஒப்புக்கொண்ட ஒரு மாநிலத்தில் பெண்கள் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்காதது பெண்களுக்கு எதிரான அட்டூழியம்” என்று பதிவிட்டுள்ளார்.
பா.ஜ.க ஆட்சி செய்யும் உத்தரப்பிரதேசம், குஜராத், மத்தியப்பிரதேசம், அசாம், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் நாள்தோறும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
இன்குலாப்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram