என்.எல்.சி-யை ஒட்டிய கிராமங்களின் அவல நிலை!

கடலூரில் உள்ள பக்கிங்காம் கால்வாயில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட 115 மடங்கு பாதரசம் உள்ளதாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கூறுகிறது. இதன் நீர் குடிப்பதற்கும் பாசனத்துக்கும் ஏற்றதல்ல எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டலூர் மாவட்டத்தில் இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் (Neyveli Lignite Corporation – NLC) இயங்கி வருகிறது. இப்பகுதியில் சுமார் 64,000 ஏக்கர் பரப்பளவில் திறந்தவெளி சுரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு வெட்டியெடுக்கப்படும் நிலக்கரி நான்கு அனல்மின் நிலையங்களில் பயன்படுத்தப்படுகின்றன.

அனல் மின் நிலையத்தில் 3,390 மெகாவாட் மின்சாரம் உற்பத்தித் திறன் உள்ளதாக என்.எல்.சி-யின் வலைத்தளம் கூறுகிறது. நிலக்கரி சுரங்கத்துக்காக 1956-ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை 60-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன.

திறந்தவெளி நிலக்கரி சுரங்கங்கள் அமைந்துள்ள இடத்துக்கு சுமார் 2 கி.மீ தொலைவில் கம்மாபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட அம்மேரி, ஆதண்டார் கொல்லை, கரிவெட்டி, கூரைப்பேட்டை, மூலப்பட்டு ஆகிய கிராமங்கள் அமைந்துள்ளன.

2023 ஆம் ஆண்டு நெய்வேலி, பரங்கிப்பேட்டை ஆகிய பகுதிகளில் மக்கள் பயன்பாட்டில் உள்ள குடிநீர், நிலத்தடி நீர், நீர்நிலை, விவசாய நிலம் ஆகியவற்றில் ”பூவுலகின் நண்பர்கள்” என்ற சுற்றுச்சூழல் அமைப்பு ஆய்வு ஒன்றை நடத்தியது.

இங்கு சேகரிக்கப்பட்ட மாதிரிகளை ஆய்வகங்களுக்கு அனுப்பி சோதனை செய்தபோது, வடக்கு வெள்ளூரில் உள்ள குடிநீர்த் தொட்டியில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட பல மடங்கு பாதரசம் இருப்பது தெரியவந்தது என அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது. இதுதவிர, கிராமங்களில் உள்ள நீர் ஆதாரங்களில் காட்மியம், துத்தநாகம், போரான் (Boron), செலினியம் போன்ற கன உலோகங்கள் இருப்பது தெரியவந்ததாகவும் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியாகின. இதனைக் கண்டு தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரித்தது தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம். மத்திய, மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகங்கள், கடலூர் மாவட்ட ஆட்சியர், மெட்ரோ குடிநீர் வாரியம் ஆகியோர் எதிர் மனுதாரர்களாக வழக்கில் சேர்க்கப்பட்டனர்.

கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் கூடுதல் முதன்மை சுற்றுச்சூழல் பொறியாளர் விஜயலட்சுமி கூடுதல் அறிக்கை ஒன்றை தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்தார். அதில், நீர்நிலைகள் (Surface water), நிலத்தடி நீர், மண், சாம்பல் துகள் என 22 மாதிரிகள் சேகரிக்கப்பட்டதாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. ஆய்வில் 17 நீர்நிலைகளில் 15 இடங்களில் அனுமதிக்கப்பட்டதை விட அதிகளவில் பாதரசம் (0.0012 mg/L to 0.115 mg/L) இருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. கடலூரில் உள்ள பக்கிங்காம் கால்வாயில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட 115 மடங்கு பாதரசம் உள்ளதாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கூறுகிறது. இதன் நீர் குடிப்பதற்கும் பாசனத்துக்கும் ஏற்றதல்ல எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளையமாதேவி கூட்டுக் குடிநீர்த் திட்டம், வாலஜா ஏரி, அய்யன் ஏரி, பரவனாறு ஆகியவை குடிநீர் ஆதாரமாக இருந்துள்ளன. நீர்நிலைகளில் இயற்கையாக பாதரசம் உருவாகாது. அப்படியெனில் இவற்றில் எப்படி உருவானது என்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த பிரபாகரன் வீர அரசு கேள்வி எழுப்புகிறார்.

தமிழ்நாடு அரசு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் சோதனையில் 9 நிலத்தடி நீர் மாதிரிகளில் ஆறு இடங்களில் பாதரசம் இருந்துள்ளது. அதன் அனுமதிக்கப்பட்ட அளவு என்பது 0.001 mg/L என இந்திய அரசின் குடிநீர் தரக்கட்டுப்பாடு வரையறுத்துள்ளது. குடிநீரில் 0.006 mg/L என்ற அளவில் பாதரசம் இருக்கலாம் எனவும் செலினியத்தில் 0.01 என்ற அளவிலும் இருக்கலாம் எனவும் உலக சுகாதார நிறுவனம் (WHO) கூறுகிறது.

அப்படியிருக்கும்போது, இங்கு 0.0025 mg/L முதல் 0.0626 வரை பாதரசம் காணப்பட்டுள்ளது. இது அனுமதிக்கப்பட்ட அளவைவிட 2.5 முதல் 62 மடங்கு வரை அதிகமாகும். அதிலும், வானதிராயபுரம் பகுதிகளில் நிலத்தடி நீர் மாதிரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட 62 மடங்கு அதிகமாக பாதரசம் இருப்பது அரசின் ஆய்வில் தெரியவந்துள்ளது. நிலக்கரி சுரங்கங்களை ஒட்டி வாழும் மக்கள் இந்த நிலத்தடி நீரைத் தான் பயன்படுத்துகின்றனர்.

இந்நீர்நிலைகளில் பாதரசம் மிக அதிகமாக இருந்தும் இவை ”IS 2296 Class E” என வகைப்படுத்தப்பட்டதால், அதாவது குடிக்கவோ நீர்ப்பாசனத்திற்கோ தகுதியில்லாத நீர்நிலை என்பதால், பாதரசத்தின் அபாயகர அளவுகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை என மாசுக் கட்டுப்பாடு வாரியம் தனது அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது. இவ்வாறு அரசு தனது மெத்தனப்போக்கை வெளிப்படுத்தியுள்ளது.


படிக்க: நிலம் கையகப்படுத்துதல்: என்.எல்.சி-யின் அடாவடித்தனம் – பாதிப்புள்ளாகும் கடலூர் மாவட்ட மக்கள்! | வீடியோ


மக்கள் பயன்பாட்டில் உள்ள வளையமாதேவி கூட்டுக்குடிநீர் திட்டம், பரவனாறு, வாலஜா ஏரி, அய்யன் ஏரி ஆகிய நீர்நிலைகளை எப்படி குடிநீர் ஆதாரமாகக் கருதாமல் இருக்க முடியும்? இயற்கையாக ஒரு நீர்நிலையில் பாதரசம் உள்ளிட்ட கன உலோகங்கள் தோன்றாது என்கிற நிலையில் இந்நீர்நிலைகளில் எப்படி கன உலோகங்கள் கண்டறியப்பட்டுள்ளன? இவை மாசடைந்த நீர்நிலைகள் என்றால் மாசுபாட்டிற்கு யார் காரணம்? இந்நீர்நிலைகளில் நீர் அருந்தும் கால்நடைகளுக்கும் நீர்நிலைகளில் உள்ள மீன்களுக்கும் பாதரசத்தால் பாதிப்பு ஏற்படாதா? என்கிற கேள்விகளுக்கு மாசு கட்டுப்பாடு வாரியம் பதிலளிக்க வேண்டும். அப்பகுதி மக்கள் அனைவரும் இந்த நிலத்தடி நீரைத்தான் நீண்ட காலமாக குடிநீராகப் பயன்படுத்தி வருகின்றனர். இவ்வளவு அபாயகரமான அளவுகளில் பாதரசம் கண்டறியப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்களின் உடல்நிலை மற்றும் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு சார்பில் மருத்துவக் குழுவை நியமித்து பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என பூவுலகின் நண்பர்கள் வலியுறுத்துகின்றனர்.

இது வெறும் வாழ்வாதார பிரச்சினை மட்டும் அல்ல. மக்களின் ஆரோக்கியத்திலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஏராளமானோர் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலர் டயாலிஸிஸ் செய்து வருகின்றனர். அவர்களுக்கு முறையான மருத்துவ வசதிகள் கிடைப்பதில்லை.

அம்மேரி கிராமத்தில் மட்டும் சுமார் 700 குடும்பங்கள் வசிக்கின்றன. இக்கிராமத்திலிருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் என்.எல்.சி மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கு பொதுமக்கள் சென்றால் முதலுதவி சிகிச்சை மட்டும் செய்வார்கள். என்.எல்.சி ஊழியர்களுக்கு மட்டுமே அங்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. கிராமத்தில் எந்த மருத்துவ முகாம்களும் நடத்தப்படுவதில்லை.

நிலக்கரி சுரங்கத்திலிருந்து வெளியே வரும் தண்ணீரை சுத்திகரிப்பு செய்து என்.எல்.சி டவுன்ஷிப்புக்கு (TownShip) கொடுப்பதாகக் கூறுகின்றனர். ஆனால், கிராமங்களுக்கு அந்த நீர் வருவதில்லை. சுரங்கத்தில் மண்ணை இலகுவாக்குவதற்கு வெடி வைக்கின்றனர். அதன் கழிவுகள் ஓடை வழியாகச் செல்கிறது. அனல்மின் நிலையத்தின் கழிவுகள் வாலஜா ஏரியிலிருந்து பக்கிங்காம் கால்வாய் சென்று அங்கிருந்து பெருமாள் ஏரி மூலமாக கடலில் சென்று கலக்கிறது.


படிக்க: சேலம்: இந்தியன் ஆயில் தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டம்


பாதரசம் உள்ளிட்ட கன உலோகங்களால் மனித உடலுக்கு என்னென்ன பாதிப்புகள் வரும்?

சிறுநீரகங்களால் கன உலோகங்கள் வடிகட்டப்படும்போது அவை சிறுநீரகங்களில் தங்கி பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இவை மோசமான புற்றுநோய் பாதிப்பையும் ஏற்படுத்தும், தொழிற்சாலைக் கழிவுகளிலிருந்து ஆற்றில் கலக்கும் கன உலோகங்களால் புற்றுநோய், சிறுநீரக பாதிப்புகள் வரும் என்பதை சூழலியலுக்கான மருத்துவர் சங்கத்தைச் சேர்ந்த புகழேந்தி கூறுகிறார்.

தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் என்.எல்.சி பாதரச மாசுபாடு தொடர்பான வழக்கு விசாரணை ஜூன் 12 அன்று நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்யநாராயணா, நிபுணத்துவ உறுப்பினர் சத்ய்கோபால் ஆகியோர் கொண்ட அமர்வில் நடைபெற்றது. அதில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நீர்நிலைகளில் பாதரசம் கண்டறியப்பட்டது தொடர்பாக விரிவான ஆய்வு மேற்கொள்ள உயர்மட்டக்குழு ஒன்றை அமைத்திருப்பதாகவும் விரைவில் இக்குழு தனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்கும் என்று கூறியுள்ளார்.

இவ்விவகாரத்தின் தீவிரம் கருதியும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும் உயர்மட்டக்குழு முழுவதையும் அரசு அதிகாரிகளைக் கொண்டு மட்டும் அமைக்காமல் பொதுவான துறைசார் நிபுணத்துவம் பெற்ற பேராசிரியர்களைக் கொண்டும், உள்ளூர் மக்களின் பிரதிநிதிகளைக் கொண்டும் திருத்தியமைக்க வேண்டும் என பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வலியுறுத்துகிறது.

முன்னதாக மார்ச் 5 – 7 தேதிகளில் புதுடில்லியில் நடைபெற்ற 24வது உலகளாவிய சுற்றுச்சூழல் மற்றும் நிலைத்தன்மை உச்சி மாநாட்டில் (World Sustainable Development Summit – WSDS) என்.எல்.சி-யின் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறைக்கு இந்திய அளவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறப்பான செயல்பாட்டிற்காகவும் குறிப்பிடத்தக்க சாதனைக்காகவும் 2025 ஆம் ஆண்டின் 24வது ”கிரீன்டெக் சுற்றுச்சூழல்” என்ற உயரிய விருது வழங்கப்பட்டது. இது அரசின் அயோக்கியத்தனத்தைக் காட்டுகிறது. சுற்றுச்சூழல் சீர்கேட்டிற்குக் காரணமாக உள்ள நிறுவனத்திற்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான விருது வழங்கப்பட்டுள்ளது என்பது வேடிக்கையாக உள்ளது.

என்.எல்.சி நிர்வாகம் அதன் கழிவுகளை முறையாக அகற்றாமல் மக்கள் பயன்பாட்டில் உள்ள நீர்நிலைகளில் கலந்து மக்கள் விரோதப்போக்கை கடைப்பிடித்து வருகிறது. தேசிய நலன் மற்றும் முன்னேற்றம் என்று கூறிக்கொண்டு அங்குள்ள மக்களின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குள்ளாக்குகிறது. என்.எல்.சி மட்டுமல்லாமல் இது போன்ற பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்கள் அதனைச்சுற்றியுள்ள மக்களைத் துளியளவும் கருத்தில் கொள்வதில்லை. இதற்கு ஒன்றிய மாநில அரசுகளும் துணைபோகின்றன.

எனவே, இதற்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டியது இயற்கையை நேசிக்கும் இயற்கை ஆர்வலர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல் கட்சிகள், ஜனநாயக சக்திகள், பொதுமக்கள் ஆகிய அனைவரின் கடமையாகும்.


அசுரன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க