திருவாரூர் மாவட்ட விவசாயிகள் பருத்தி விவசாயத்தில் பெரியளவில் ஈடுபட்டுவரும் நிலையில், இந்தாண்டு அவர்கள் மிகப்பெரும் நட்டத்தைச் சந்தித்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில் 30,000 ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி செய்யப்படுகிறது. பருத்தி சாகுபடிக்கு உகந்த சொட்டு நீர்ப் பாசனத்திற்குத் தேவையான 24 மணிநேர மின்சாரம் மற்றும் பூச்சிக்கொல்லி, உரம் போன்றவை தடையின்றி கிடைப்பதில் பல சவால்களை எதிர்கொண்டுதான் விவசாயிகள் இதில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்தாண்டு காலம் தவறிப் பெய்த கன மழை காரணமாகப் பருத்தி விவசாயம் மிகவும் பாதிப்படைந்து விவசாயிகள் மாபெரும் இழப்பைச் சந்தித்துள்ளனர்.
இந்தாண்டு மே மாதத்தில் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் மழைப் பொழிவு ஏற்பட்டது. இதில் திருவாரூர் மாவட்டத்தில் சூறாவளிக் காற்றுடன் கனமழை பெய்ததால் ஏறக்குறைய ஆயிரம் ஏக்கர் பருத்திச் செடிகள் வேருடன் சாய்ந்தன. ஏற்கெனவே இந்தாண்டில் இருமுறை பருத்தி பயிரிட்டு அவை முற்றிலுமாக சேதமடைந்த நிலையில், மூன்றாவது முறை பயிரிடப்பட்ட பருத்தியும் மழையால் நாசமடைந்ததால் பருத்தி விவசாயிகளின் நிலை மிகவும் மோசமடைந்தது.
ஏக்கருக்கு ரூ.15,000 மேல் செலவு செய்யப்பட்டுள்ள நிலையில், செலவு செய்த பணத்தைக்கூட மீட்க முடியாத அவல நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பயிர்களை வேளாண் அதிகாரிகள் பார்வையிட வேண்டும்; உடனடியாக கணக்கெடுப்பு நடத்தி இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் தொடர் கோரிக்கை வைத்து வந்தாலும் ஆளும் தி.மு.க. அரசு அதற்கு செவி சாய்க்கவில்லை.
படிக்க: கிருஷ்ணகிரி மா விவசாயிகளின் அவலநிலை
இதுகுறித்து மக்கள் அதிகாரக் கழகத்தின் மாவட்டக் குழு உறுப்பினர் தோழர் வாஞ்சிநாதன் கூறியதாவது:
”பாதிக்கப்பட்ட விவசாயிகளை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளைக் கண்டறிந்து தமிழ்நாடு அரசு இழப்பீடு வழங்க வேண்டும். இந்த ஆண்டு விவசாயிகள் மூன்று முறை பருத்தி விதைப்பு செய்துள்ளதால் ஒவ்வொரு விதைப்பிற்கும் கூடுதல் ஆட்செலவு ஏற்பட்டுள்ளதைக் கருத்தில்கொண்டு இழப்பீடு வழங்கப்பட வேண்டும். அதேபோல், விளைந்த பருத்தி ரூ.44 முதல் ரூ.50 என்ற அற்ப விலைக்கு விவசாயிகளிடமிருந்து வாங்கப்படுகின்றது. சந்தை விலையுடன் ஒப்பிடுகையில் இது பாதி விலைக்கும் குறைவாகும். எனவே, தமிழ்நாடு அரசு உடனடியாக பருத்தி கொள்முதல் நிலையங்களை அமைத்து விவசாயிகளிடமிருந்து நேரடியாக பருத்தியைக் கொள்முதல் செய்ய வேண்டும். மேலும், விவசாயிகளிடமிருந்து தனியார் நிறுவனங்கள் பருத்தியை கொள்முதல் செய்யும் போது அதற்கு நியாயமான விலை கிடைப்பதையும் அரசு உத்தரவாதப்படுத்த வேண்டும். குறிப்பாக, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் கடைகளும் வாட்ஸ்-ஆப் குழுக்கள் அமைத்து அன்றைய நாளுக்கான விலை (எடுத்துக்காட்டாக ரூ.50) நிர்ணயம் செய்து விவசாயிகளிடமிருந்து அடிமாட்டு விலைக்கு பருத்தியை வாங்குகின்றன. மாவட்ட நிர்வாகமும் தமிழ்நாடு அரசும் இதில் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.”
இந்தாண்டு மட்டுமின்றி, கடந்த ஆண்டிலும் மே மாதத்தில் கோடை மழை பெய்ததால் திருவாரூர் மாவட்ட பருத்தி விவசாயிகள் நட்டமடைந்தனர். நெல், உளுந்து, பயிர், சோளம், வாழை விவசாயிகளும் காலநிலை மாற்றம் காரணமாகவும் இயற்கை பேரிடர்கள் காரணமாகவும் கடும் நட்டமடைந்து வேறு விவசாயத்திற்கு மாறுவது, விவசாயத்தை விட்டு வெளியேறுவது போன்ற நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். காலநிலை மாற்றத்தால் விவசாயம் எதிர்நோக்கியிருக்கும் சவால்கள் குறித்து ஆய்வாளர்கள் எச்சரித்தாலும், ஆளும் அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடாமல் விவசாயிகள் மீது நவீன தீண்டாமையைக் கடைப்பிடிக்கின்றன.
மேலும், ஒன்றியத்தில் ஆட்சியிலிருக்கும் பாசிச மோடி அரசு விவசாயத்தில் கார்ப்பரேட்மயமாக்கத்தை ஊக்குவித்து வருவதும் விவசாய-விரோத நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருவதும் இந்தியா முழுவதும் விவசாயிகளைப் பேரழிவுக்குள் தள்ளியுள்ளது. விவசாயிகளின் தற்கொலையை தீவிரப்படுத்தியுள்ளது. இவ்வாறு விவசாயிகள் பாதிக்கப்படுவது அந்த வர்க்கத்தினரின் தனிப்பட்ட பிரச்சினை அல்ல. இது இந்தியாவின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வது தொடர்பானதாகும். எனவே விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்காகக் குரல் கொடுக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.
யூசுப் சாய்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram