25.06.2025

அம்பேத்கர் சட்டப் பல்கலை நிர்வாகமே,
மாணவிகளுக்கு விடுதி வசதியை ஏற்படுத்திக் கொடு!

பத்திரிகை செய்தி

சென்னை தரமணியில் உள்ள தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவியர் விடுதி அமைந்துள்ளது. “பெருங்குடி வளாக விடுதி” என பரவலாக அறியப்படும் இவ்விடுதி இரண்டு கட்டடங்களையும், ஒரு கட்டடத்திற்கு தலா 76 அறைகளையும் கொண்டுள்ளது. ஒரு அறைக்கு மூன்று மாணவிகள் என்ற விகிதத்தில் மொத்தம் 456 மாணவிகள் இவ்விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.

இப்பல்கலைக்கழகத்தின் மற்றொரு கிளை விடுதி சென்னை சேப்பாக்கத்தில் செயல்பட்டு வந்தது. இவ்விடுதி பழுதடைந்ததால் அங்கு தங்கி படித்துவந்த 115 மாணவிகளை எந்தவொரு முன்னறிவிப்புமின்றி பெருங்குடி வளாக விடுதிக்கு நிர்வாகம் மாற்றியுள்ளது. இதன் விளைவாக மூன்று மாணவிகள் மட்டுமே தங்கக்கூடிய அறைகளில் நான்கு மாணவிகளை தங்கும்படி கூறியுள்ளனர். கழிப்பறை வசதி முதற்கொண்டு 600 மாணவிகள் தங்குவதற்கேற்ப எந்தவொரு அடிப்படை வசதியையும் மேம்படுத்தாமல் இம்மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது மட்டுமில்லாமல் தற்போது முதலாமாண்டு மாணவிகளுக்கான சேர்க்கையும் நடத்தப்பட்டு வருகிறது.

நிர்வாகத்தின் இந்த செயலானது மாணவிகளின் உடல் நலத்தின் மீதோ அவர்களின் படிப்பின் மீதோ துளியும் அக்கறையற்றதாகும். இதனையடுத்து நிர்வாகத்தின் இச்செயலை கண்டித்து நேற்று (24.06.2025) தமிழ்நாடு அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போராட்டத்தில், மாணவிகள் விடுதியின் தற்போதைய நிலையை உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும்; மாணவிகள் தங்குவதற்கேற்ப வசதிகளை விரைவாக மேம்படுத்த வேண்டும்; புதிய மாணவர் சேர்க்கைகளை தற்காலிகமாக நிறுத்த வேண்டும்; மாணவிகள் மற்றும் பெற்றோர்களுடன் கலந்தாய்வு நடத்தி இப்பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மாணவிகள் முன்வைத்தனர்.

போராடிய மாணவர்களையும் போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்த மாணவர் அமைப்புகளை சார்ந்த தோழர்களையும் வளாகத்திற்குள் அனுமதிக்காமல் போலீசை வைத்து வெளியில் தள்ளியிருக்கிறது, பல்கலைக்கழக நிர்வாகம். பல்கலைக்கழக நிர்வாகத்தின் இந்த மாணவர் விரோத போக்கையும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க வந்த மாணவர் அமைப்புகளை சார்ந்த தோழர்களை போலீசை கொண்டு வெளியே தள்ளியதையும் புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது.

இருப்பினும், அனைத்து தடைகளையும் மீறி உறுதியாக போராடிய மாணவிகள், நேற்று மதியம் முதல் நல்லிரவு வரை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் விளைவாக மாணவிகளின் கோரிக்கையை ஒரு மாதத்திற்குள் நிறைவேற்றுவதாக பல்கலைக்கழக நிர்வாகம் உறுதியளித்து சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. இது மாணவிகள் உறுதியாக போராடியதன் விளைவாகும்.

அந்தவகையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் அனைவருக்கும் புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்புக் குழு சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் மாணவர்களின் இக்கோரிக்கைகள் நிறைவேறும் வரை அடுத்தடுத்த கட்டங்களிலும் – போராட்டத்திலும் புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி துணை நிற்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.


மாநில ஒருங்கிணைப்புக் குழு,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு.
9444836642.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க