கர்நாடகா: கார்ப்பரேட், ரியல் எஸ்டேட் மாஃபியாக்களுக்கு எதிரான தேவனஹள்ளி விவசாயிகள் போராட்டம்!

போராட்டங்கள் ஏற்படுத்திய நெருக்கடிகளின் விளைவாக, முதல்வர் சித்தராமையா, ஒரு வாரத்தில் இப்பிரச்சினையைத் தீர்ப்பதாக வாக்குறுதி அளிக்க வேண்டிய நிலை உருவானது. ஜூலை 4 அன்று, மக்கள் இயக்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ர்நாடக மாநிலம் தேவனஹள்ளியில் விமானநிலைய விரிவாக்கத்திற்கெதிராக அப்பகுதி விவசாயிகள் தொடர்ச்சியான போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

தேவனஹள்ளி தாலுக்கா, சன்னராயபட்னாவில் உள்ள 13 கிராமங்களைச் சேர்ந்த 800 விவசாயக் குடும்பங்கள் அங்கு வாழ்ந்து வருகின்றனர். அந்நிலத்தை உருவாக்க அவர்கள் பல ஆண்டுகளாக தங்கள் வியர்வையையும், குருதியையும் சிந்தியுள்ளனர்.

தற்போது கார்ப்பரேட் மற்றும் ரியல் எஸ்டேட் மாஃபியாக்கள் கொள்ளையடிப்பதற்காக விவசாயிகளை வெளியேற்ற கர்நாடக அரசு முயன்று வருகிறது.

கர்நாடக தொழில்துறை பகுதிகள் மேம்பாட்டு வாரியம் (KIADB), ஏற்கெனவே ஹரலூரு தொழில்துறை பகுதிக்காக (Haraluru Industrial Area) அதனைச் சுற்றியுள்ள 6,000 ஏக்கர் நிலத்தை 2022 இல் வாங்கியது.

அப்போதைய பி.ஜே.பி அரசாங்கம் 1,777 ஏக்கர் நிலத்தை மேற்சொன்ன தேவனஹள்ளி விவசாயிகளிடம் இருந்து பிடுங்கி கார்ப்பரேட் மற்றும் ரியல் எஸ்டேட் கும்பலிடம் ஒப்படைக்கும் வகையிலான அறிவிப்பை வெளியிட்டது.

இத்தகைய கையகப்படுத்தலின் மூலம் தங்கள் வாழ்க்கை மோசமடையும் என்பதை அதற்கு முந்தைய கையகப்படுத்தல் அனுபவங்களிலிருந்து புரிந்து கொண்ட விவசாயிகள் ஆரம்பத்திலிருந்தே அதற்கெதிராக போராடத் தொடங்கினர். ”KIADB நில கையகப்படுத்தலுக்கு எதிரான போராட்டக் குழு” என்ற பதாகையின் கீழ் ஒன்றிணைந்தனர்.

அப்போது காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்தது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் கையகப்படுத்தல் அறிவிப்பு திரும்பப் பெறப்படும் என்று உறுதியளித்தார் சித்தராமையா. ஆனால் தற்போது பி.ஜே.பி-யின் அடிச்சுவட்டைப் பின்பற்றி விவசாயிகளுக்குத் துரோகம் செய்து கொண்டிருக்கிறது காங்கிரசு அரசாங்கம்.

ஏறக்குறைய 80 சதவிகிதம் விவசாயிகள் நிலம் கையகப்படுத்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 1,180 நாட்களுக்கு மேலாக (3.5 ஆண்டுகள்) காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசாங்கத்தின் கையகப்படுத்தல் முயற்சியானது, நிலம் கையகப்படுத்தல் மற்றும் புனர்வாழ்வு கொள்கை – 2013க்கு எதிரானதாகும்.

அண்மையில் கர்நாடக காங்கிரஸ் அரசாங்கம் விவசாயிகளுக்குக் கெடு விதித்து இறுதி அறிவிப்பை வெளியிட்டதானது கடும் எதிர்ப்பை உருவாக்கியது. இதனையடுத்து போராட்டத்தைத் தீவிரப்படுத்த முடிவெடுக்கப்பட்டது.


படிக்க: தேவனஹள்ளி சலோ: கர்நாடகா விவசாயிகள் போராட்டம் வெல்லட்டும்!


சம்யுக்த கிசான் மோர்ச்சா (SKM) இன் அங்கமான சம்யுக்தா ஹொரட்டா கர்நாடகா (Samyukta Horata Karnataka – SHK)) ”தேவனஹள்ளி சலோ” என்ற முழக்கத்தின் கீழ் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. (SHK என்பது விவசாயிகள், தொழிலாளர்கள், தலித் மக்கள், மாணவர் – இளைஞர்கள் மற்றும் பெண்கள் அமைப்புகளின் ஒருங்கிணைப்புக் குழுவாகும்)

எதிர்ப்பு ஏற்படுத்திய நெருக்கடியின் காரணமாக அரசாங்கம், வசிப்பிடம் மற்றும் நீர்ப்பாசனம் உள்ள மூன்று கிராமங்களில் 495 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட மாட்டாது என நயவஞ்சகமாகப் பேசியது. உண்மை என்னவென்றால், அரசாங்கத்தின் நடவடிக்கையானது 1978 ஆம் ஆண்டின் எஸ்.சி – எஸ்.டி சட்டத்தை மீறும் வகையில் உள்ளதாகக் கூறி இந்த நிலங்களைக் கையகப்படுத்துவதற்கு எதிராகத் தொடுக்கப்பட்ட ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது. முந்தைய காங்கிரஸ் முதல்வர் தேவராஜ் உர்ஸ் ஆட்சியில் வழங்கப்பட்ட இந்நிலங்களைக் கைப்பற்ற முயல்வது வெட்கக் கேடானது என ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர். “எங்கள் ஒற்றுமையைச் சிதைப்பதற்கு அரசாங்கம் தந்திரமாகப் பேசுகிறது. ஆனால் நாங்கள் விட மாட்டோம்” என்று கூறுகிறார், போராட்டக் குழுத் தலைவர்களில் ஒருவரான நரசிம்ஹா.

ஜூன் 24 அன்று நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த M.B பாட்டீல் மற்றும் முனியப்பா ஆகியோர், நிலங்களுக்கு இழப்பீடாக வணிகக் கட்டிடங்களில் இடம் ஒதுக்கித் தருவதாகவும், அதாவது ஒரு ஏக்கருக்கு 10,771 சதுர அடி என்ற அளவில் ஒதுக்குவதாகவும் ஆசை காட்டினர். ஆனால் கிராம மக்கள் இதை நிராகரித்தனர். ”எங்கள் நிலங்களை இழந்துவிட்டு, கட்டிடங்களை வைத்து என்ன செய்யப் போகிறோம்?” என்று கேட்கிறார் 67 வயதான லச்சம்மா. “எங்கள் துக்கத்தில் வணிகக் கட்டிடங்களை உருவாக்கப் போகிறீர்களா?” என்றும் கேட்கிறார் அவர்.

”தேவனஹள்ளி சலோ” அழைப்பானது, ஆயிரக்கணக்கான ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு இயக்கங்களின் தலைவர்கள், வழக்கறிஞர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்களிடமும் தாக்கம் செலுத்தியது. ஜூன் 25 அன்று தேவனஹள்ளியில் நடைபெற்ற அமைதியான எதிர்ப்புப் போராட்டத்தில் பலரும் கலந்து கொண்டனர். நடிகர் பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோரும் இதில் கலந்து கொண்டனர்.


படிக்க: தேவனஹள்ளி விவசாயிகளின் நிலங்களைப் பறிக்கும் கர்நாடக அரசு | தோழர் அமிர்தா


கர்நாடக அரசாங்கத்தின் கெடு குறித்த அறிவிப்பைப் போராட்டக்காரர்கள் எரித்து, தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர். ’’கையகப்படுத்தல் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும், இல்லாவிட்டால் போராட்டத்தைத் தீவிரப்படுத்துவோம்” என போராட்டக் குழு அறிவித்துள்ளது.

அதற்கு முன்னால், இப்போராட்டத்தை ஒடுக்குவதற்கு ஆயிரக்கணக்கான போலீசை கொண்டு மக்களை அச்சுறுத்த காங்கிரஸ் அரசாங்கம் முயன்றது. இது மக்களை மேலும் கோபத்தை நோக்கித் தள்ளியது. ஜூன் 26 அன்று, போலீசின் மிருகத்தனமான அடக்குமுறையைக் கண்டித்து, பல மாவட்டங்களிலும், தாலுக்காக்களிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டன. டி.ஜி.பி சச்சின் குமாரை இடைநீக்கம் செய்யக் கோரிக்கைகள் எழுப்பப்பட்டன. நடிகர் பிரகாஷ்ராஜின் தலைமையில், கலைஞர்கள், எழுத்தாளர்கள், முற்போக்கு ஜனநாயக சக்திகள் கர்நாடக முதலமைச்சர் இல்லம் நோக்கி பேரணி நடத்தப்பட்டது.

போராட்டங்கள் ஏற்படுத்திய நெருக்கடிகளின் விளைவாக, முதல்வர் சித்தராமையா, ஒரு வாரத்தில் இப்பிரச்சினையைத் தீர்ப்பதாக வாக்குறுதி அளிக்க வேண்டிய நிலை உருவானது. ஜூலை 4 அன்று, மக்கள் இயக்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றுவார்கள் என்று போராடக் கூடிய மக்களும், இயக்கங்களும் நம்பத் தயாராக இல்லை. கார்ப்பரேட்டுகள், ரியல் எஸ்டேட் மாஃபியாக்கள், அரசியல்வாதிகளின் கூட்டுக் கொள்ளைக்கான இந்த நில அபகரிப்பு முயற்சிக்கு எதிராகப் போராட்டத்தைத் தொடர்வதில் உறுதியாக உள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக தற்போது, போராட்டக் குழுவினர் பெங்களூருவில் உள்ள ஃபிரீடம் பூங்காவில் (Freedom Park) கோரிக்கை நிறைவேறும் வரை காலவரையற்ற போராட்டத்தை எடுத்துச் சென்று வருகின்றனர்.  இப்போராட்டத்தை அர்ப்பணிப்போடு ஒருங்கிணைத்து எடுத்துச் செல்லும் SHK (Samyukta Horatta Morcha) தோழர்கள் பாராட்டுக்குரியவர்கள்.

கர்நாடகம் மட்டுமல்ல, நாடு முழுவதும் அதானி, அம்பானி, அகர்வால் வகையறா கார்ப்பரேட் மாஃபியாக்களின் சுரண்டலுக்காக மக்களின் நிலங்களைப் பறிப்பது தொடர்கதையாகி உள்ளது. அதே போல அதற்கெதிரான போராட்டங்களும் தீவிரமடைந்து வருகின்றன. போராடும் மக்களைக் கொடூரமாக ஒடுக்குவதும் தீவிரமடைந்துள்ளது. பிராந்திய அளவிலான ஒருங்கிணைப்புகளை வலுப்படுத்தும் அதே சமயம், நாடு தழுவிய அளவில் எதிர்ப்புக்கான ஒருங்கிணைப்புகளை வலுப்படுத்த வேண்டிய தேவை உள்ளது.

அதேசமயம், கார்ப்பரேட் நலன் சார்ந்து திட்டங்களைத் தீவிரமாக நடைமுறைப்படுத்துவதில், பி.ஜே.பி யும், காங்கிரசும் அணுகுமுறைகளில் சில வேறுபாடுகளைத் தாண்டி உணர்வுப்பூர்வமாகச் செயல்படுகின்றன என்பதே உண்மை. எதிர்க்கட்சிகளின் இத்தகைய கார்ப்பரேட் சார்பு நடைமுறைகள் பாசிசத்தின் வேர்களுக்கு வலு சேர்ப்பதற்கே பயன்படும்.

உண்மையில், விவசாயிகளின் வாழ்க்கையை மேம்படுத்தவும், இத்தகைய நெருக்கடிகளிலிருந்து நிரந்தரமாக விடுவிக்கவும் வேண்டுமெனில் கார்ப்பரேட் கொள்கைகளுக்கு மாற்றான, மக்களுக்கான மாற்று அரசியல், பொருளாதாரத் திட்டங்களை முன்வைத்து இத்தகைய போராட்டங்களை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதும், மக்களுக்கான மாற்று அரசியல் தலைமையைப் போராட்டங்களின் ஊடாக உருவாக்குவது என்பதும் அவசியமானது. இதன் மூலமே நிரந்தரத் தீர்வை நோக்கி நகர முடியும். இதற்கான விவாதங்களை முன்நகர்த்துவோம்.


அய்யனார்

மூலம்: கவுண்ட்டர் கரண்ட்ஸ்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க