மருத்துவர் கனவை சிதைக்கும் நெக்ஸ்ட் (NExT) தேர்வு!

நான்கரை ஆண்டுகள் மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு ஒரு வருடம் மருத்துவப் பயிற்சியை முடிக்கும் எம்.பி.பி.எஸ். மற்றும் ஆயுஷ் மருத்துவ மாணவர்கள், மருத்துவர்களாக பணியாற்றவோ, மருத்துவராகப் பதிவு செய்யவோ வேண்டுமானால் இத்தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்ற அநீதியான நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

யுர்வேதம், யோகா மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி, சித்த மருத்துவம், ஹோமியோபதி  ஆகிய இந்திய மருத்துவ முறை (AYUSH) மருத்துவப் படிப்புகளைப் பயின்றுவரும் 2021-2022 கல்வியாண்டைச் சேர்ந்த மருத்துவ மாணவர்களுக்கு, 2027 மார்ச் முதல் “நெக்ஸ்ட்” (NExT – National Exit Test) என்னும் தகுதித் தேர்வு நடைபெறவுள்ளதாக “இந்திய மருத்துவ முறைகளுக்கான தேசிய ஆணையம்” (NCISM – National Commission for Indian System of Medicine) கடந்த டிசம்பர் 10 அன்று அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

மேலும், எம்.பி.பி.எஸ். (MBBS) பயிலும் மருத்துவ மாணவர்களுக்கு இத்தேர்வு 3 முதல் 4 ஆண்டுகள் ஒத்திவைக்கப்படுவதாக தேசிய மருத்துவ ஆணையம் (NMC – National Medical Commission) அறிவித்துள்ளது. இது மருத்துவ மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தையும் எதிர்ப்பையும் கிளப்பியுள்ளது.

இதன் மூலம், நான்கரை ஆண்டுகள் மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு ஒரு வருடம் மருத்துவப் பயிற்சியை முடிக்கும் எம்.பி.பி.எஸ். மற்றும் ஆயுஷ் மருத்துவ மாணவர்கள், மருத்துவர்களாக பணியாற்றவோ, மருத்துவராகப் பதிவு செய்யவோ வேண்டுமானால் இத்தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்ற அநீதியான நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

எம்.பி.பி.எஸ். மருத்துவ மாணவர்களுக்கு நெக்ஸ்ட் தேர்வானது இரண்டு படிநிலைகளாக நடைபெறும் (NEXT STEP-1 & STEP-2). இந்திய மருத்துவ முறை மாணவர்களுக்கு இத்தேர்வு ஒரே கட்டமாக நடைபெறும்.

எம்.பி.பி.எஸ். மருத்துவ மாணவர்கள் நெக்ஸ்ட் தேர்வில் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையிலேயே பட்ட மேற்படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும். ஆனால், இந்திய மருத்துவ முறையான ஆயுஷ் மாணவர்கள் மருத்துவராகத் தகுதி பெற நெக்ஸ்ட் தேர்வும், பட்ட மேற்படிப்பில் சேர “முதுகலை நீட்” (NEET-PG) தேர்வும் என இரண்டு தேர்வுகள் அடுத்தடுத்து எழுத வேண்டும்.

நெக்ஸ்ட் தேர்வில் தேர்ச்சி பெறாத மருத்துவ மாணவர்கள் மீண்டும் ஓராண்டு பயிற்சி மருத்துவராக பணிபுரிந்து மீண்டும் நெக்ஸ்ட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும்.

மேலும், ஆயுஷ் மருத்துவ மாணவர்களுக்கு முன்னதாக இத்தேர்வு நடத்தப்படுவதானது, ஆயுஷ் மருத்துவ மாணவர்களைச் சோதனை எலிகளாகப் பயன்படுத்தும் நோக்கம் கொண்டதாக உள்ளது.


படிக்க: ஆயுர்வேதம்-அலோபதி ஒருங்கிணைந்த மருத்துவப் படிப்பு: காவிமயமாகும் மருத்துவம்


மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து மருத்துவக் கல்வியைப் பயில ‘தகுதி’த் தேர்வாக நீட் தேர்வு கொண்டுவரப்பட்டு ஏழை, எளிய, பின்தங்கிய மாணவர்களின் மருத்துவக் கனவு சிதைக்கப்பட்டும், மாணவர்களின் உயிர் குடிக்கப்பட்டும் வருகிறது. தற்போது, மருத்துவக் கல்வியைப் பயின்று தேர்ச்சி பெற்ற மருத்துவ மாணவர்கள் மருத்துவராக பணியாற்றுவதற்கு நெக்ஸ்ட் எனும் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற வேண்டும் என்று மற்றொரு ஆட்கொல்லி தேர்வை பாசிச மோடி அரசு மருத்துவத்துறையில் திணிக்க முயல்கிறது.

மருத்துவத்துறையில் தனியார்மயம் – தாராளமயம் – உலகமயத்தோடு காவிமயத்தையும் திணிக்கும் நோக்கில் பாசிச மோடி அரசால் இதற்கு முன்னர் இருந்த ஆணையங்கள் (MCI & CCIM) கலைக்கப்பட்டன; என்.சி.ஐ.எஸ்.எம். (NCISM) சட்டம் 2020 மற்றும் என்.எம்.சி. (NMC) சட்டம் 2020 ஆகிய சட்டங்களின் அடிப்படையிலும் தேசியக் கல்விக் கொள்கை 2020-இன் அடிப்படையிலும் ஆயுஷ் படிப்புகளுக்கு “இந்திய மருத்துவ முறைகளுக்கான தேசிய ஆணையமும்” (NCISM) மற்றும் அலோபதி மருத்துவத்திற்கு “தேசிய மருத்துவ ஆணையமும்” (NMC) உருவாக்கப்பட்டன. இந்த ஆணையங்களின் உருவாக்கத்திற்குப் பிறகு யார் வேண்டுமானாலும் தனியார் மருத்துவக் கல்லூரிகளைத் துவங்கலாம் என்னும் நிலை உருவாகியுள்ளது. இவ்வாணையங்களே தற்போது நெக்ஸ்ட் தேர்வை அறிமுகம் செய்துள்ளன.

இத்தேர்வானது இந்திய மருத்துவக் கல்வியைச் சிதைப்பதாகவும், சுகாதார கட்டமைப்பைச் சீர்குலைப்பதாகவும் உள்ளதாக மருத்துவ அறிஞர்கள் பலர் இத்தேர்வுக்கு எதிராகக் கருத்து தெரித்துள்ளனர்.

இத்தேர்வில் தேர்ச்சிபெற முடியாவிட்டால் மீண்டும் ஓராண்டு காத்திருந்து தேர்வு எழுத வேண்டும் என்பது பின்தங்கிய, ஏழை, எளிய மருத்துவ மாணவர்களுக்கு பெரும் சுமையை உண்டாக்கும். பயிற்சி காலம் முடிந்ததும் சமூகத்திற்குச் சேவை செய்ய வேண்டிய அரும்பெரும் பணியிலும், தங்கள் குடும்பச் சுமைகளைத் தாங்க வேண்டிய சூழலிலும் இம்மருத்துவ மாணவர்கள் இருக்கிறார்கள். இச்சூழலில் இத்தேர்வு எழுதுவது என்பது பெரும் சுமையை உண்டாக்கக் கூடியதாக இருக்கும். நீட் தேர்வு போல் இத்தேர்வினால் மருத்துவ மாணவர்களின் தற்கொலைகள் அதிகரிக்கக் கூடும்.

முக்கியமாக, மாணவிகளுக்கு திருமணம், பேறுகாலம் ஆகிய காரணங்களால் இத்தேர்வு எழுதப் போகும் காலத்தில் கடினமான சூழலை உருவாக்குவதுடன், அவர்களை மருத்துவத்துறையை விட்டே வெளியேற்றும் சூழலையும் உருவாக்குகிறது. எனவே, பின்தங்கிய, ஏழை, எளிய, கிராமப்புற மாணவர்களுக்கும், பெண்களுக்கும் மருத்துவக் கல்வியை மறுக்கும் மனுநீதி அடிப்படையிலேயே இத்தேர்வைத் திணிக்கிறது இந்த பாசிச பா.ஜ.க கும்பல்.

இத்தேர்வால் மாணவர்கள் செயல்முறை மூலமாக மருத்துவம் கற்பது குறைந்து, புத்தகங்களை மனப்பாடம் செய்யும் மனநிலைக்குத் தள்ளப்படுவர். இது மருத்துவத்துறையில் மோசமான விளைவுகளை ஏற்படுத்துவதாக அமையும்.

கூடுதலாகப் பயிற்சி பெற நீட் பயிற்சி மையங்கள் போல் நெக்ஸ்ட் தேர்வு பயிற்சி மையங்களுக்குப் பின்னே மாணவர்கள் ஓடும் சூழல் உண்டாகும். இதனால் பயிற்சி மையங்கள் கோடிக்கணக்கில் லாபம் ஈட்ட இத்தேர்வு மிகப்பெரிய வாய்ப்பை உண்டாக்கித் தருகிறது.

மருத்துவக்கல்வியை தரமாக்கவும், தரமான மருத்துவர்களை உருவாக்கவும் இத்தேர்வைக் கொண்டு வருவதாக ஒன்றிய பா.ஜ.க அரசு தெரிவித்துள்ளது. ஆனால், மருத்துவக் கல்வி தனியார்மயம் ஆக்கப்பட்டதன் விளைவாக மருத்துவக் கல்லூரிகளில் போதுமான பேராசிரியர்களோ, மாணவர்கள் மருத்துவம் பயிலத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளோ இருப்பதில்லை.


படிக்க: அனிதா நினைவு நாள்: வேண்டாம் நீட்! வேண்டும் ஜனநாயகம்!


மருத்துவக் கல்லூரிகளை மேம்படுத்த போதுமான நிதியை ஒதுக்கீடு செய்யாதது, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் தேவையான அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் இயங்க அனுமதிப்பது (எ.கா: பல தனியார் ஆயுஷ் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவமனைகள் பெயரளவுக்கு ஓரிரு அறைகளைக் கொண்டதாக, நோயாளிகள் வருகையே இல்லாததாகவே இருக்கும்) போன்ற விசயங்களால் மருத்துவக் கல்வி படிப்படியாகச் சிதைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மாணவர்கள், ஆசிரியர்கள் மூலம் கற்பிக்கப்பட்டு மருத்துவராக உருவாவதை விடுத்து மாணவர்களே தங்கள் சொந்த முயற்சி மூலம் தங்களை மருத்துவர்களாக உருவாக்கிக் கொள்ளும் நிலையை இத்தேர்வு உருவாக்கியுள்ளது. இதனால் தரமான மருத்துவர்கள் உருவாவது என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

மேலும், இத்தேர்வானது மாநில அரசுகளின்கீழ் இயங்கும் பல்கலைக்கழகங்கள் நடத்தும் தேர்வுகள் மூலம், மருத்துவ மாணவர்கள் தேர்ச்சி பெறுவதைக் கேள்விக்கு உள்ளாக்குவதன் மூலம் சிறிதளவேனும் உள்ள மாநில அரசின் உரிமைகளையும் பறிக்கும் ஒன்றாகவே உள்ளது. இந்தியா என்பது பன்முகத்தன்மை கொண்ட நாடாகும். இங்கு நோய்களும் ஒவ்வொரு பகுதிக்கும், ஒவ்வொரு கால சூழலுக்கும் ஏற்றார்போல் வேறுபடும். எனவே, நாடு தழுவிய அளவில் ஒரே மாதிரியான கல்வி முறை என்பதும், தகுதித் தேர்வு நடத்துவதும் எந்த விதத்திலும் பயனுள்ளதாக அமையாது என்று மருத்துவ அறிஞர்கள் இத்தேர்வு குறித்து கருத்து தெரிவிக்கின்றனர்.

பொது மருத்துவக் கட்டமைப்பைச் சிதைக்கும், மருத்துவ மாணவ, மாணவிகள் மருத்துவராவதைத் தடுக்கும் மனுநீதி அடிப்படையிலான இத்தேர்வையும், மருத்துவத்துறையை கார்ப்பரேட்மயமாக்கி வரும் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க கும்பலை எதிர்த்து மக்களுக்கான மருத்துவக் கட்டமைப்பை உருவாக்க ஆயுஷ் மற்றும் எம்.பி.பி.எஸ். மருத்துவ மாணவர்கள், பேராசிரியர்கள், ஜனநாயக சக்திகள், பொது மக்கள் என அனைவரும் இணைந்து போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டும்.


சித்தன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க