பிப்ரவரி 2-ஆம் தேதி அமெரிக்காவுடன் மோடி அரசு மேற்கொண்ட ‘இரகசிய’ வர்த்தக ஒப்பந்தம், இந்திய மக்களின் நலனை ஏகாதிபத்தியத்தின் காலடியில் சமர்ப்பித்ததற்கான சாட்சியமே.
இதுகுறித்து தனது சமூக ஊடகப்பக்கத்தில் அறிவித்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியா தனது சந்தையை அமெரிக்கப் பொருட்களுக்குத் திறந்துவிட்டு, வரிகளை ‘பூஜ்ஜியம்’ அளவுக்குக் குறைக்கச் சம்மதித்துள்ளது என்றும், எரிசக்தி, நிலக்கரி மற்றும் விவசாயப் பொருட்கள் என 500 பில்லியன் டாலர் அளவுக்கு இறக்குமதி செய்ய உறுதியளித்துள்ளது என்றும் குதூகலித்துள்ளார். மேலும், ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்திவிட்டு, அமெரிக்கா மற்றும் வெனிசுலாவிடமிருந்து அதிகமாக எண்ணெய் வாங்க இந்தியா ஒப்புக்கொண்டதாகவும் அறிவித்துள்ளார்.
இது இந்திய நாட்டு மக்களையும் விவசாயிகளையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. ஏனெனில் டிரம்ப் அறிவித்துள்ள இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தால், அமெரிக்காவின் மானிய விலை பால் மற்றும் விவசாயப் பொருட்கள், மரபணு மாற்றப்பட்ட உணவுப் பொருட்கள் இந்திய சந்தையை ஆக்கிரமித்து, நம் நாட்டு பால் உற்பத்தியாளர்கள், ஏழை விவசாயிகள் வாழ்வாதாரத்தை அடியோடு அழித்துவிடும். அமெரிக்கப் பொருட்களை 500 பில்லியன் டாலருக்கு இறக்குமதி செய்வது இந்திய சந்தையை அமெரிக்காவின் குப்பைத் தொட்டியாக்கும். இது, ஏற்கெனவே பெருந்துயரத்தில் உள்ள உழைக்கும் மக்களையும், அமெரிக்க கார்ப்பரேட்டுகளுடன் போட்டியிட முடியாத சிறு-குறு வணிகர்களையும் ஒரேயடியாக நசுக்க அனுமதிக்கும் அயோக்கியத்தனமாகும்.
ஆனால், இந்திய விவசாயிகளின் நலனை காக்க என்ன விலை கொடுக்கவும் தயாராக இருப்பதாக ஜம்பமடித்து வந்த மோடி, டிரம்பின் அறிவிப்புகள் குறித்து மூச்சுக் கூட விடவில்லை; “ஏற்றுமதி வரியை 50 சதவிகிதத்திலிருந்து 18 சதவிகிதமாகக் குறைத்ததற்கு டிரம்புக்கு நன்றி” என்று மட்டும் தெரிவித்துள்ளார்.
சங்கிக் கும்பலோ “குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை” என்பதைப் போல மோடிக்கு மாலை போட்டு பாராட்டு விழா நடத்தியுள்ளது. தற்போது வரி குறைந்துவிட்டது என கூப்பாடு போடும் சங்கிக் கும்பல், டிரம்பின் அடாவடித்தனமாக வரிவிதிப்பிற்கு முன்னர், இந்தியப் பொருட்களுக்கு வெறும் 2-3 சதவிகிதம் வரியே விதிக்கப்பட்டிருந்தது என்பதையும், சில பொருட்களுக்கு வரி பூஜ்ஜியமாக இருந்ததையும் சாதூரியமாக மறைக்கப் பார்க்கிறது. ‘பொருளாதார நிபுணர்’களோ மற்ற ஆசிய நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவிற்கு குறைவான வரி என்று ஆறுதல் கூறுகின்றனர்.
ஆனால், இந்த வரிக்குறைப்புக் கூட எப்போது நடைமுறைக்கு வரும்? இது முழுமையான இருதரப்பு ஒப்பந்தமா அல்லது வரிகளை நீக்குவதற்கான குறுகிய ஒப்பந்தமா? இனி ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்திவிடுமா? என எந்தக் கேள்விக்கும் அதிகாரப்பூர்வமாக மோடி அரசு பதில் அளிக்கவில்லை.
000
ரஷ்ய – உக்ரைன் போர் தொடங்கிய போது, அமெரிக்காவின் உத்தரவையும் மீறி ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கியது. அப்போது, ‘எதற்கும் பணியாத அஞ்சாநெஞ்சன் மோடி’, ‘தேசபக்தன் மோடி’ என்றெல்லாம் சங்கிக் கும்பல் தம்பட்டம் அடித்தது. ஆனால், எப்போது ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதற்காக அமெரிக்கா இந்தியாவிற்கு 25 சதவிகித தண்டத்தொகை விதித்ததோ அப்போதே மோடியின் ‘தேசபக்தி’, ஆட்டம் கண்டுவிட்டது. ரஷ்யாவின் எண்ணெய் நிறுவனங்கள், கப்பல்கள் மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளையடுத்து, ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை இந்தியா சத்தமில்லாமல் குறைத்துக் கொண்டது.
குறிப்பாக, டிரம்பின் இந்தியா-பாகிஸ்தான் போர்நிறுத்த அறிவிப்பு, அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி ஊழல் வழக்கு விசாரணையை தீவிரப்படுத்தியது, ஹெச்-1-பி விசா கட்டண உயர்வு என அடுத்தடுத்து மோடி கும்பலுக்கு டிரம்ப் அரசு நெருக்கடி கொடுத்து வந்தது.
இந்நிலையில், இந்நெருக்கடிகளை சமாளிப்பதற்காக ஜனவரி 27-ஆம் தேதி ஐரோப்பிய ஒன்றியத்துடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை (FTA) இறுதி செய்து, அதனை மாபெரும் சாதனை போலக் கொண்டாடியது மோடி அரசு. இது அமெரிக்காவை மேலும் எரிச்சலூட்டுவதாக அமைந்தது.
இதனையடுத்து, ஜனவரி 30-ஆம் தேதி “எப்ஸ்டீன் பாலியல் குற்றக்கோப்பு”களில் (Epstein Files) மோடியின் பெயர் இடம்பெற்றிருப்பது, மோடி சார்பாக அனில் அம்பானி எப்ஸ்டீனை சந்தித்திருப்பது தொடர்பான செய்திகள் வெளியாகி மோடி கும்பலுக்கு பெரும் தலைவலியை உண்டாக்கியது. இதற்குமேல் போனால் தனது ‘தூய பிரம்மச்சாரி’ பிம்பமும் சுக்குநூறாகிவிடுமோ என்ற அச்சத்தில் மோடி அமெரிக்காவிடம் சரணடைந்துள்ளார் என்பதே உண்மை. மோடி ‘கெஞ்சிக் கேட்டுக் கொண்டதால்தான்’ (Modi’s Request) ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டேன் என டிரம்ப் குறிப்பிட்டுள்ளதே இதற்கு சாட்சி.
இந்த ‘இரகசிய’ ஒப்பந்தத்திற்கான முன்னேற்பாடாகவே, பிப்ரவரி 1 அன்று தாக்கல் செய்யப்பட்ட 2026-27-ஆம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், மின்னணுப் பொருட்கள், குறைக்கடத்திகள் (Semiconductor), மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட பல பொருட்களுக்கான இறக்குமதி வரி குறைக்கப்பட்டது.
இந்திய-அமெரிக்க இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தின் பேச்சுவார்த்தையில் மேற்குறிப்பிட்ட பொருட்கள் மீதான வரிகளை குறைக்க வேண்டும் என்றே அமெரிக்கா தொடர்ந்து வற்புறுத்தி வந்தது. அமெரிக்காவை திருப்திப்படுத்தும் இவ்வாறான ‘சலுகை’களை அளித்த பிறகே பிப்ரவரி 2-ஆம் தேதி இந்த ‘இரகசிய’ ஒப்பந்தம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஒட்டுமொத்தத்தில், ‘விஸ்வகுரு’, ‘தூய பிரம்மச்சாரி’ என இதுவரை கட்டமைத்துவந்த தனது பிம்பம் நொறுங்கிவிடுமோ என்ற அச்சம் ஒருபக்கம்; அமெரிக்காவால் சூறையாடப்பட இருக்கும் வெனிசுலா எண்ணெய் அம்பானியின் இலாபத்திற்குத் தரப்போகும் உத்தரவாதம் மறுபக்கம் என ‘சமயோசிதமாக’ சிந்தித்த மோடி, உடனடியாகச் சரணடைந்துள்ளார் என்பதே உண்மை.
இதற்கு முன்பும் பல ஒப்பந்தங்கள் இந்திய நாடாளுமன்றத்தில் காட்டப்படாமலேயே நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. அவை எல்லாவற்றையும் விஞ்சிவிட்டது ‘அஞ்சாநெஞ்சன்’, ‘தேசபக்தன்’ மோடியின் இந்த கேடுகெட்ட ‘இரகசிய’ அடிமைச் சாசனம்.
எனவே, இந்த அடிமைச் சாசனத்தால் இந்திய நாட்டு விவசாயிகளுக்கும் உழைக்கும் மக்களுக்கும் ஏற்படப்போகும் பேரழிவை தடுத்துநிறுத்த – பெருந்திரளான மக்கள் போராட்டங்களை கட்டியமைக்க வேண்டியது புரட்சிகர – ஜனநாயக சக்திகளின் உடனடி கடமையாகும்.
![]()
தலையங்கம்
(புதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2026 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











