அரசு மருத்துவர்களின் நீண்ட கால கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அரசு மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பு (Federation of government Doctors Associations – FOGDA) சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஜூன் 1 ஆம் தேதி அன்று எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மருத்துவர்கள் அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்களை நியமனம் செய்ய வேண்டும், காலியாக உள்ள மருத்துவ பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் உள்ளிட்டு பல்வேறு மருத்துவமனைகளைச் சேர்ந்த மருத்துவர்கள் தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தி.மு.க அரசிற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்திற்குப் பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அரசு மருத்துவர் சங்கங்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன் “தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் ஆட்சியில் கடந்த 2009 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட அரசாணை 354-ஐ மறுசீராய்வு செய்து ஊதிய பட்டை 4 ஐ 13-வது ஆண்டில் வழங்கிட வேண்டும்.
ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு படித்தொகை ரூ.3000 உடனடியாக வழங்கிட வேண்டும். அரசாணை 4 (D) மூலம் நீக்கப்பட்ட 1500க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மருத்துவர் பதவிகளை மீண்டும் கொண்டு வர வேண்டும். நோயாளிகளின் எண்ணிக்கைக்கேற்ப மருத்துவர்களை நியமனம் செய்ய வேண்டும். தமிழ்நாட்டின் மக்கள்தொகை 8 கோடியாக இருக்கிறது. அதன்படி, சராசரியாக 80 ஆயிரம் மருத்துவர்கள் இருக்க வேண்டும். ஆனால் 20,000 மருத்துவர்கள்தான் உள்ளனர். போர்க்கால அடிப்படையில் 20 ஆயிரம் மருத்துவர்களை நியமித்திட வேண்டும்.
கரோனா தொற்றுக்குப் பிறகு அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதற்கேற்ப மருத்துவர்களை நியமனம் செய்யாமல் உள்ளனர். இதனால் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது. மேலும், மருத்துவர்கள் அதிக எண்ணிக்கையில் நோயாளிகளைப் பார்த்து சிகிச்சை அளிக்கும்போது, உடல்நலம் பாதிக்கப்பட்டு மாரடைப்பு ஏற்பட்டு இறக்கும் நிலையும் உருவாகிறது. எனவே மருத்துவத் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதுடன், நோயாளிகள் எண்ணிக்கைக்கேற்ப மருத்துவர்களை நியமனம் செய்ய வேண்டும்.
கடந்த 2019 ஆம் ஆண்டு மருத்துவர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டபோது தற்போதைய தமிழக முதலமைச்சர் எதிர்க்கட்சி தலைவராக இருந்தார். அப்போது அவர், ‘மருத்துவர்கள் உடலை வருத்திக் கொண்டு போராட வேண்டாம். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மருத்துவர்களின் பிரச்சினையைத் தீர்ப்போம்’ என்று கூறினார். ஆனால் தற்போது வரை தீர்க்கவில்லை. எங்களது கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இல்லை என்றால் கடந்த 2019 ஆண்டில் மேற்கொண்டதை போல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் நாங்கள் ஈடுபடுவோம்” என்று திமுக அரசிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பல ஆண்டுகளாக தங்களது கோரிக்கைகளுக்காகப் போராடி வரும் மருத்துவர்களின் போராட்ட குரல்களுக்கு திமுக அரசு செவிமடுக்கத் தயாராக இல்லை. ஆட்சிக்கு வந்தால் கோரிக்கைகளை நிறைவேற்றுவோம் என்று திமுக வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால் ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளைக் கடந்தும் மருத்துவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் தொடர்ந்து வஞ்சித்து வருகிறது.
இன்குலாப்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram