பட்டினியின் பிடியில் 30 கோடி மக்கள்: முதலாளித்துவத்தின் கோரத்தாண்டவம்

போர் மற்றும் மோதல்களால் 20 நாடுகளில் 13 கோடியே 98 லட்சம் மக்கள் உணவுப் பஞ்சத்தை எதிர்கொள்கிறார்கள். காலநிலை மாற்றம் காரணமாக 18 நாடுகளில் 9 கோடியே 61 லட்சம் மக்கள் வறட்சி, வெள்ளம், புயல் போன்ற இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். 15 நாடுகளில் 5 கோடியே 94 லட்சம் மக்கள் பொருளாதார நெருக்கடியால் உணவு வாங்க முடியாமல் பட்டினியை எதிர்கொள்கின்றனர்.

ணவு நெருக்கடிகளுக்கு எதிரான உலகளாவிய அமைப்பு (Global Network Against Food Crises – GNAFC) மற்றும் உணவு பாதுகாப்பு தகவல் வலையமைப்பு (Food Security Information Network – FSIN) ஆகியவை இணைந்து 2025-ஆம் ஆண்டின் உலகளாவிய உணவு நெருக்கடிகள் குறித்த அறிக்கையை (Global Report on Food Crise – GRFC) வெளியிட்டுள்ளன. கடந்த மே 16 அன்று வெளியிடப்பட்ட இவ்வறிக்கை உணவு நெருக்கடி குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.

இவ்வறிக்கையின்படி, தற்போது 53 நாடுகளில் 29 கோடியே 53 லட்சம் மக்களுக்கு உடனடி உணவு தேவைப்படுகிறது. இஸ்ரேலின் தொடர் பட்டினிப் போரால் பாலஸ்தீனத்தின் காசா பகுதி உலகின் மிக மோசமான உணவு நெருக்கடியை எதிர்கொள்ளும் பகுதியாக உள்ளது. இங்கு நூறு சதவிகித மக்களுக்கும் உடனடி உணவு உதவி தேவைப்படுகிறது.

மேலும் சூடான், தென் சூடான், யேமன், ஹைட்டி ஆகிய நாடுகளில் சுமார் 50 சதவிகித மக்கள் கடுமையான உணவுப் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 கோடியே 77 லட்சம் குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 1 கோடியே 2 லட்சம் குழந்தைகள் மிக மோசமான நிலையில் உள்ளனர். இவர்கள் அனைவரும் ஆறு மாதம் முதல் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஆவர். இஸ்ரேலின் பட்டினிப் போரால் காசா பகுதியில் உள்ள குழந்தைகள் எலும்பும் தோலுமாக மாறியுள்ளனர். நூற்றுக்கணக்கான குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் இறந்துள்ளனர்.


படிக்க: காசா மீது பட்டினிப் போரை தொடுத்திருக்கும் பாசிச இஸ்ரேல் அரசு! | தோழர் அமிர்தா


இவ்வறிக்கை உணவுப் பஞ்சத்திற்கான மூன்று முக்கிய காரணங்களாக போர், காலநிலை மாற்றம் மற்றும் பொருளாதார நெருக்கடியை குறிப்பிடுகின்றது. போர் மற்றும் மோதல்களால் 20 நாடுகளில் 13 கோடியே 98 லட்சம் மக்கள் உணவுப் பஞ்சத்தை எதிர்கொள்கிறார்கள். காலநிலை மாற்றம் காரணமாக 18 நாடுகளில் 9 கோடியே 61 லட்சம் மக்கள் வறட்சி, வெள்ளம், புயல் போன்ற இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். 15 நாடுகளில் 5 கோடியே 94 லட்சம் மக்கள் பொருளாதார நெருக்கடியால் உணவு வாங்க முடியாமல் பட்டினியை எதிர்கொள்கின்றனர்.

இவ்வாறு பல்வேறு நாடுகளில் நிலவுகின்ற உணவுப் பஞ்சத்தால் 9 கோடியே 85 லட்சம் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இவர்களில் 75 சதவிகிதம் பேர் தங்கள் நாட்டுக்குள்ளேயே அகதிகளாக்கப்பட்டுள்ளனர்.

2018-ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை தீர்மானம் 2417-ஐ நிறைவேற்றியது. இத்தீர்மானத்தின்படி, போரின்போது மக்களுக்கு உணவு மறுப்பது சர்வதேச சட்ட மீறலாகும். ஆனால் தற்போது இஸ்ரேல், சூடான் உள்ளிட்டு பல நாடுகள் மக்களுக்கு உணவு வழங்காமல் சட்டத்தை மீறி தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கின்றன. உணவையும் மருந்தையும் ஆயுதமாக பயன்படுத்துவது “இடைக்கால முற்றுகைப் போர்” முறையாகும். இவை நவீன காலத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், உலகின் கண் முன்பே இஸ்ரேல் காசா மக்களுக்கு தேவையான உணவு, மருந்துகளை வழங்காமல் இனவெறிப் போரை நடத்திக் கொண்டிருக்கிறது இஸ்ரேல் அரசு.

மேலும் இந்த அறிக்கையானது 1943-ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியில் வங்காளத்தில் ஏற்பட்ட பஞ்சத்தை நினைவுப்படுத்துகிறது. அப்போது ஆங்கிலேயர்களின் கொடுமையால் லட்சக்கணக்கான மக்கள் பட்டினியால் இறந்தனர். அதே போன்று இன்று பல நாடுகளில் நடந்து கொண்டிருக்கிறது. இந்தாண்டில் இந்நிலைமை மேலும் மோசமாகும் என்றும் அறிக்கை எச்சரிக்கிறது. குறிப்பாக மே-செப்டம்பர் மாதங்களில் பட்டினி நெருக்கடி மேலும் தீவிரமடையும் என்று தெரிவித்துள்ளது.

மேலும், பல்வேறு நாடுகளில் நடைபெறுகின்ற போர்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்; அனைத்து பகுதிகளுக்கும் உணவு மற்றும் மருந்துகள் வழங்கப்பட வேண்டும்; இதனை அனைத்து நாடுகளும் இணைந்து வலியுறுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்வுகளையும் பரிந்துரைக்கிறது. ஆனால், உயிர்களின் அடிப்படை தேவையான உணவுக் கூட மறுக்கப்பட்டு மக்கள் பட்டினியால் கொல்லப்படுவதும் ஏகாதிபத்தியப் போர்களாலும் நெருக்கடிகளாலும் பல நாடுகளில் மனிதக்குல நெருக்கடி ஏற்படுவதற்கும் முதலாளித்துவ சுரண்டலே காரணமாகும். லாப வெறிக்காக இயற்கையை வரைமுறையின்றி சுரண்டுவது, பிற நாடுகளின் மீது பொருளாதாரத் தடை விதிப்பது, உலகம் முழுவதும் போர்களை நடத்துவது என முதலாளித்துவம் உலகை சூறையாடிக் கொண்டிருக்கிறது.

இவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள போர், காலநிலை மாற்றம் மற்றும் பொருளாதார நெருக்கடி ஆகியவற்றிற்கு முதலாளித்துவ லாபவெறியே ஊற்றுக்கண்ணாக உள்ளது. எனவே முதலாளித்துவத்தை வீழ்த்தி சோசலிச உன்னத சமுதாயத்தை படைப்பதும் அதற்கான போராட்டங்களை முன்னெடுப்பதும் காலத்தின் கட்டாயமாகும்.



இன்குலாப்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க