privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்மதுரவாயல் ரவுடி யோசுவாவை வீழ்த்திய பள்ளி மாணவர்கள் !!

மதுரவாயல் ரவுடி யோசுவாவை வீழ்த்திய பள்ளி மாணவர்கள் !!

-

இரண்டு பள்ளி மாணவர்களுக்கு எதிராக, அனைத்து   ஓட்டுக் கட்சிகளூம், ஆளும் வர்க்கமும் ஓரணியில் சேர்ந்து நிற்பதை உங்களால் நினைத்துப் பார்க்க முடியுமா? நினைத்துப் பார்ப்பதென்ன? நேரிலேயே பார்க்க முடியும், சென்னை, மதுரவாயில் பகுதிக்கு வந்தால்; காரணம் வேறொன்றுமில்லை, அவர்கள் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியில் இருப்பவர்கள் என்பதுதான்.

தமிழகத்திலேயே தரங்கெட்ட பள்ளிகளைப் பட்டியலிட்டால், அதில் முதலிடம் பிடிப்பது மதுரவாயல் அரசு மேல்நிலைப் பள்ளியாகத்தான் இருக்கும். வகுப்பறை, கழிப்பறை, ஆசிரியர் எல்லோமே பிரச்சனைதான். பதின்வயது மாணவர்களைப் பண்பாட்டுச் சீரழிவின் உச்சகட்டத்தில் ஆழ்த்தியிருப்பதும் இங்குதான். இந்த லட்சணத்தில் பெற்றோர் ஆசிரியர் கழகம் என்ற பெயரில், கட்டாய நன்கொடையாக பல லட்சம் ரூபாயைக் கொள்ளையடித்தனர். இவை எல்லாவற்றிற்கும் தலைமை தாங்கி நடத்தி வந்த “மகாத்மா” பகுஜன் சமாஜ் கட்சியின் சிறுபான்மையினர் பிரிவின் மாநிலத் தலைவரும், உள்ளுர் ரவுடியுமான டி.பி. யோசுவா.

மதுரவாயல், பிள்ளையார் கோவில் பகுதியை மையமாகக் கொண்டு, சுற்றுப் பகுதிகளில் இயங்கிவரும் பு.மா.இ.மு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு, பள்ளி மாணவர்களையும், பகுதி மக்களையும் திரட்டி, பள்ளியை முற்றுகையிட்டு, கட்டாய நன்கொடையை ஒழித்துக்கட்டியது, மேலும் யோசுவா உள்ளிட்டோரின் சாதி அரசியலை முறியடிக்கும் விதமாக, பகுதி இளைஞகளைத் தன் கீழ் அணி திரட்டவும் தொடங்கியது.

பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்க துணைத் தலைவராக இருந்து கொள்ளை அடித்து வந்த யோசுவா, வருமானமும் இல்லாமல் அரசியல் அடித்தளமும் ஆட்டம் காணத் தொடங்கியதால் எப்படியேனும் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளவும், வஞ்சம் தீர்க்கவும் துடித்து கொண்டிருந்த சமயத்தில், அவனுக்கு வாய்ப்பாக அமைந்தது, கடந்த 13ஆம் தேதி பள்ளியில் நடந்த சம்பவம்

13ஆம் தேதி காலை 10.30 மணியளவில், வழக்கம் போல, ஆசிரியர் ஒருவர், 11ஆம் வகுப்பு மாணவன் ஒருவனை தரக்குறைவாகப் பேசி, அடித்திருக்கிறார், இந்த சம்பவம் பற்றி பள்ளியில் உள்ள பு.மா.இ.மு தோழர்களுக்கு தெரியவந்ததும், சம்பந்தப்பட்ட அசிரியரிடம் சென்று தட்டிக் கேட்டனர். அவரோ மீண்டும் தனது பாணியில்  ஏளனமாகப் பேசவே, சக மாணவர்களை அழைத்துக் கொண்டு தலைமை ஆசிரியரிடம் முறையிட, அவரும் முதலில், மதிக்காமல், திட்டியிருக்கிறார். பின்னர் முறையீடு, முற்றுகையாக மாறியது. நூற்றுக்கணக்கான மாணவர்கள் திரளவே தலைமை ஆசிரியர் சமாதானம் பேச இறங்கியிருக்கிறார்

மாணவர்களோ, “சம்பந்தபட்ட ஆசிரியர் மன்னிப்பு கேட்க வேண்டும், இனி இது போல நடக்காமலிருக்க உறுதி கூற வேண்டும்” என்று ஜனநாயக முறையில் கோரிக்கையை முன்வைத்தனர். ஆசிரியர்களின் “பாரம்பரிய உரிமையைப்” பறிக்கும் இந்த கோரிக்கையையும், மேலும் மேலும் ஒன்று சேரும் மாணவர்களையும், கண்ட, யோசுவாவின் விசுவாசிகளான சில ஆசிரியர்கள், யோசுவாவிற்கு தகவல் தந்தனர்.

தலைமையாசிரியர் முன்னிலையில், மாணவனை அடித்த ஆசிரியர் மன்னிப்பு கேட்பதாக கூறினார். பிரச்சினை முடிவுக்கு வரும் நேரத்தில், யோசுவா தலைமையில் 10 பேர் கொண்ட கும்பல் திடீரென உள்ளே நுழைந்து, எதுவும் பேசாமல் கண்மூடித்தனமாக குழுமியிருந்த மாணவர்களைத் தாக்கத் தொடங்கியது. பு.மா.இ.முவைச் சேர்ந்த ஆனந்தன், யோசுவாவிடம், “உனக்கும், இந்த பள்ளிக்கும் என்ன தொடர்பு? எந்த அடிப்படையில் எங்களை அடிக்கிறாய்?” என்று கேட்டதுதான் தாமதம், “என்னையே கேள்வி கேட்கிறாயா? நான் யார் தெரியுமா?” என வசனம் பேசிய யோசுவா, கையில் கிடைத்த கட்டை, கம்பி, செங்கல்,செருப்பு என எடுத்து வீசினான். தடுக்க வந்த தலைமை ஆசிரியர், மற்ற ஆசிரியர்களுக்கும் அடிவிழுந்தது, தனது வெறி தீர அடித்த பின்பு எல்லோரையும் மிரட்டி விட்டுச் சென்றான் யோசுவா.

தகவல் அறிந்து உடனடியாகப் பள்ளிக்கு வந்த, மதுரவாயல் பகுதி பு.மா.இ.மு செயலாளர் தோழர் செந்திலிடம், தலைமையாசிரியர் வருத்தமும் மன்னிப்பும் தெரிவித்து, தங்களையும் மீறி இச்சம்பவம் நடந்து விட்டது, இனி இதுபோல் நடக்காமல் பார்த்துக் கொள்வதாக உறுதியளித்தார். மேலும் பள்ளி நேரத்தில் வெளியே நின்ற மாணவர்கள், தோழர் செந்தில் சொன்னவுடன் வகுப்பறைக்கு அமைதியாக சென்றது கண்டு ஆசிரியர்கள் ஆச்சரியப்பட்டனர்.

தலைமையாசிரியர், மாணவர்களை சமாதானப் படுத்தி அனுப்பி வைத்து பிரச்சினையை முடித்திருக்கலாம். ஆனால் யோசுவாவிற்கோ, தன்னை எதிர்து ஒரு சிறுவன் கேள்வி கேட்டுவிட்டானே, என்று உறுத்தத் தொடங்கியது. தன்னை ஒரு ரவுடியாக நிலைநாட்ட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்ட யோசுவா, தனது மகன் சாந்த குமார் தலைமையில், உள்ளூர் பொறுக்கிகள் 30 பேரை திரட்டி பள்ளிக்கு வெளியே நிற்க வைத்தான்.

யோசுவாவின், அல்லக்கைகள் எல்லோருமே அவனை’அப்பா’ என்றுதான் கூப்பிடுவார்கள். ‘அப்பாவையே எதிர்த்து ஒருவன் அதுவும் ஒரு பள்ளி மாணவன் பேசிட்டானா? என்று ஆத்திரம் பொங்கியது அவர்களுக்கு.

மாலை 3 மணிக்கு பள்ளி இடைவெளியின்போது ஆனந்தனிடம் சக வகுப்பு மாணவன், வா வெளியே சென்று பேசலாம் என அழைக்க, கூடவே மணியும் உடன் சென்றார். காம்பவுண்டு சுவரை எட்டிப் பார்த்ததும், யோசுவாவின் ஆட்கள், இருவரையும் வெளியே இழுத்துக் கொண்டனர். பள்ளிக்குப் பின்புறம் உள்ள யோசுவா வீட்டருகே இழுத்துச் சென்று அடிக்கத் தொடங்கினர். பரமபிதாவின் தூதர் பெயரைக் கொண்டவனும் மாயாவதி கட்சியின் சிறுபான்மைப் பிரிவு மாநிலத் தலைவனான யோசுவா, இருபள்ளி மாணவர்களை உருட்டுக்கட்டையால் அடிபடுவதைக் கண்டு பரமானந்தம் கொண்டான். மயங்கி விழுந்தவர்களைத் தட்டியெழுப்பி , “இனிமேல் ஏதாவது பேசினால் கொன்றுவிடுவேன்” என்று மிரட்டி, மீட்க வந்த ஆசிரியர்களுடன் அனுப்பினான்.

“முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்” என்பது யோசுவாவிற்கு பாரதூரமாகப் பொருந்தி விட்டது. 3 மணிக்கு, ஆள் வைத்து அடித்து , தன்னை ரவுடியாக நிலைநாட்டிக் கொண்டதாக நினைத்தவனின் சந்தோசத்தில் மண்ணள்ளிப்போட , பு.மா. இ.மு தோழர்கள் சற்று நேரத்தில் வந்து விட்டனர்.

தலைமை ஆசிரியர்,தனது பழைய பல்லவியை மீண்டும் பாட,தோழர்கள், இனி நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என, அடிப்பட்டவர்களை உடனடியாக முதலுதவிக்கு அழைத்துச் சென்று , பின்பு மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்து வழக்கு பதிவு செய்தனர்.

சென்னைப் பொது மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட அந்த மாணவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கபட்டனர் .

அன்று மாலையே பள்ளி மாணவர்கள் சுமார் நூறுபேர் , காவல் நிலையம் வந்து , தோழர்களைச் சந்தித்து, யோசுவாவை உதைக்காமல் விடக்கூடாது என வலியுறுத்தத் தொடங்கினர். பகுதி முழுவதும் பரபரப்பாகி விட , வழக்கைப் பதிவு செய்த போலிசு, பொறுக்கி யோசுவாவிற்கு பு.மா.இ.மு.வின் அரசியலைப் போதனை செய்திருக்கிறது. அதனால் உஷாரான மாநிலத்தலைவரும் , மகனும் மாயமாகிவிட்டார்கள்.

தோழர்களுக்கு யார் யாரோ போன் போட்டு , “சமாதானமாகப் போகலாம்/ வழக்கை வாபஸ் பெறுங்கள்” என்று , பேச”எதை , எப்படிச் செய்வதென எங்களுக்குத் தெரியும்” என்றார்கள் தோழர்கள். வேறு வழியின்றி , யோசுவாவின் அடியாட்கள் இரண்டுபேரை உடனடியாகக் கைது செய்தது போலிசு. பு.மா.இ.மு பற்றி யோசுவாவுக்கு தெரியுமோ இல்லையோ மதுரவாயல் போலீசுக்கு நன்றாகவே தெரியும். அடுத்து என்ன செய்யப் போகிறிர்கள்? என நச்சரிக்கத் தொடங்கினர்.

15 ம் தேதி காலையில் , பள்ளி மாணவர்கள் , கல்லூரி மாணவர்கள் , பகுதி இளைஞர்களும் என 500 க்கும் மேற்பட்டோர் பு.மா.இ.மு தலைமையில் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு , கொலைகார ரவுடி யோசுவாவையும் , அவன் மகனையும் கைது சிறையிலடைக்க வேண்டுமென முழக்கமிட்டனர்.

கூட்டத்தை கலைக்க வந்த அதிரடிப்படை போலீசை மதுரவாயல் போலீசார் திருப்பி அனுப்பினார். யோசுவாவை கைது செய்து, துணைக் கமிஷ்னர் அலுவலகத்தில் வைத்திருப்பதாகக் கூறி , தோழர்களை அழைத்துச்சென்று நேரில் காட்டி , விரைவில் அவன் மகனையும் பிடித்து விடுவதாகவும் , போராட்டத்தைக் கைவிடுமாறும் கூறினர். நமக்கு போலீசை பற்றியும் தெரியும். ஆனால் மதுரவாயலில் எல்லாரையும் பயமுறுத்தி வந்த , உள்ளுர் பொறுக்கிகளால் சிங்கம் போல சித்தரிக்கப்பட்ட ஒரு ரவுடி இப்போதும் பயந்து போய் போலீசிடம் தஞ்சம் புகுந்திருக்கிறான். என்பது தான் முக்கியம். இப்போது யோசுவாவிற்கு வேண்டப்பட்டவர்களே, பள்ளி மாணவர்களை அடித்தது கண்டு காறித்துப்புகிறார்கள். அல்லக்கைகளே பயத்தில் கிலியாகி பதுங்கி கொண்டிருக்கிறார்கள்.

இப்போது யோசுவாவிற்கு ஆதரவாக அனைத்துக் கட்சி ஆர்ப்பாட்டம் நடக்க போவதாய் தகவல் வந்திருக்கிறது. இதுவரை தமக்குள் அடித்துக் கொண்ட ஓட்டுப் பொறுக்கிகள், இப்போது ஒன்று சேர்கிறார்கள். அதற்கு உறுதுணையாய் நிற்கப் போவது அரசுதான் என்பது சந்தேகமில்லை. ஏனெனில் அவர்களுக்கு எதிராக நிற்பது வெறும் பள்ளி மாணவர்கள் அல்ல, பு.மா.இ.மு வால் புடம் போடப்பட்ட பகத்சிங்கின் வாரிசுகள்.

ஏதாவது ஒரு அரசியல் கட்சியில் இணைத்துக் கொண்டு உள்ளூர் அரசு நிறுவனங்கள், பள்ளிகள், ரியல் எஸ்டேட் என்று மோசடி செய்து சம்பாதிக்கும் இத்தகைய ரவுடிகள் ஒவ்வொரு ஊரிலும் இருக்கத்தான் செய்கின்றனர். அந்த பகுதியின் எந்த பிரச்சினையும் இவர்களது கட்டப்பஞ்சாயத்தில்தான் அபராதத்துடன் தீர்க்கப்படும். சமூகத்தின் ஒட்டுண்ணிகளாக பெருத்து நிற்கும் இத்தகைய கழிவுகளை மக்கள் சக்தியைத் திரட்டினால் நிச்சயம் வீழ்த்த முடியும் என்பதற்கு மதுரவாயில் மாணவர்கள் பு.மா.இ.மு தலைமையில் வழிகாட்டியிருக்கின்றனர்.

__________________________________________________________
படங்களை பெரியதாக பார்க்க அதன் மீது சொடுக்கவும்

RSYF-Maduravoyal-புமாஇமு-மதுரவாயல்RSYF-Maduravoyal-புமாஇமு-மதுரவாயல்RSYF-Maduravoyal-புமாஇமு-மதுரவாயல்RSYF-Maduravoyal-புமாஇமு-மதுரவாயல்RSYF-Maduravoyal-புமாஇமு-மதுரவாயல்RSYF-Maduravoyal-புமாஇமு-மதுரவாயல்RSYF-Maduravoyal-புமாஇமு-மதுரவாயல்RSYF-Maduravoyal-புமாஇமு-மதுரவாயல்RSYF-Maduravoyal-புமாஇமு-மதுரவாயல்RSYF-Maduravoyal-புமாஇமு-மதுரவாயல்RSYF-Maduravoyal-புமாஇமு-மதுரவாயல்RSYF-Maduravoyal-புமாஇமு-மதுரவாயல்RSYF-Maduravoyal-புமாஇமு-மதுரவாயல்RSYF-Maduravoyal-புமாஇமு-மதுரவாயல்RSYF-Maduravoyal-புமாஇமு-மதுரவாயல்RSYF-Maduravoyal-புமாஇமு-மதுரவாயல்RSYF-Maduravoyal-புமாஇமு-மதுரவாயல்RSYF-Maduravoyal-புமாஇமு-மதுரவாயல்RSYF-Maduravoyal-புமாஇமு-மதுரவாயல்RSYF-Maduravoyal-புமாஇமு-மதுரவாயல்

_________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்