privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காமேற்குலகிற்காக கொல்லப்படும் வங்கதேச தொழிலாளர்கள் !

மேற்குலகிற்காக கொல்லப்படும் வங்கதேச தொழிலாளர்கள் !

-

டந்த ஏப்ரல் 24-ம் தேதி புதன் கிழமையன்று வங்கதேசம் தாக்காவின் சாவர் புறநகர் பகுதியில் ராணா பிளாசா என்ற வணிக வளாகம் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி 700-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்; 2500-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்; நூற்றுக்கும் அதிகமானோர் காணாமல் போனவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

rana-plazaராணா பிளாசாவின் 8 மாடி வளாகத்தில் ஐந்து ஆயத்த ஆடை தொழிலகங்கள் இயங்கி வந்துள்ளன. அவற்றில் 3,500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், பெரும்பாலானோர் பெண்கள் வேலை செய்து வந்துள்ளனர். விபத்தில் சிக்கி உயிரிழந்தோர், காயமுற்றோர் அனைவரும் ஆயத்த ஆடை தொழிற்சாலைகளின் தொழிலாளர்கள்; கீழ்த்தளங்களில் இயங்கிய வங்கி மற்றும் கடைகள் பாதுகாப்பு கருதி மூடப்பட்டிருந்ததால், அவற்றின் ஊழியர்கள் விபத்தில் சிக்கிக்கொள்ளவில்லை.

விபத்து நடந்ததற்கு முதல் நாள் (செவ்வாயன்று) கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு அனைத்து தளங்களிலிருந்தும் தொழிலாளர்கள், மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். வங்கதேச ஏற்றுமதி ஆடை உற்பத்தியாளர் சங்கம் மறு உத்தரவு வரும் வரை, ஆலைகளை இயக்கவேண்டாம் என்று அறிவுறுத்தியிருந்தது.

இந்த எச்சரிக்கைகளை பொருட்படுத்தாத தொழிலக உரிமையாளர்கள், விபத்துக்கு முதல் நாள் மட்டும் விடுப்பு வழங்கிவிட்டு மறுநாள் தொழிலாளர்களை வேலைக்கு அழைத்திருக்கின்றனர். ‘கட்டிடம் ஆய்வு செய்யப்பட்டதில் பாதுகாப்பாக இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது’ என்று பொய் சொல்லி பணிக்கு வந்தே தீர வேண்டும் என்று தொழிலாளர்களை கட்டாயப்படுத்தியிருக்கின்றனர். தமது மேற்கத்திய வாடிக்கையாளர்களுக்கு ஆடைகளை அனுப்பி வைக்க வேண்டிய கால அவசரத்திற்காக தொழிற்சாலை மேலாளர்கள் இதைச் செய்திருக்கின்றனர்.

தேடப்படும் தொழிலாளர்கள்
தேடப்படும் தொழிலாளர்கள்

விபத்தில் உயிர் தப்பிய திலரா பேகம் என்ற தொழிலாளர் “பாதுகாப்பற்ற கட்டிடத்தில் வேலைக்குச் செல்ல நாங்கள் விரும்பவில்லை, ஆனால் வேலைக்கு திரும்பவில்லையெனில் ஊதியத்தை பிடித்துக்கொள்வதாக மேலாளர்கள் அச்சுறுத்தினர்” என்கிறார். விபத்தன்று வேலைக்குச் சென்ற தொழிலாளர்களில் ஒருவரான அப்துல் ரஹீம், “கட்டிடத்தில் ஏற்பட்டுள்ள விரிசலினால் பாதிப்பு ஏதுமில்லை என்று மேனேஜர் அளித்த வாக்குறுதியை நம்பி ஐந்தாவது மாடியிலுள்ள தொழிலகத்துக்கு நாங்கள் வேலைக்கு சென்றோம். ஒரு மணி நேரத்திற்குள் கட்டிடம் குலுங்கி, திடீரென இடிந்து விழுந்தது, விழுந்த பின் நடந்தது எதுவும் எனக்கு நினைவில் இல்லை” என்கிறார். அவர் இப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

இராணுவம் மற்றும் தன்னார்வ குழுக்களின் உதவியுடனும் மீட்புப் பணிகள் நடைபெற்றன. இயந்திரங்களை பயன்படுத்தினால் கான்கிரீட் இடிபாடுகள் அதிர்ந்து சிக்கியிருப்பவர்களின் உயிருக்கு ஆபத்தாக அமையும் என்பதால் கைகள், மண் வெட்டிகள், கம்பிகளை வெட்டி எடுக்கும் சாதனங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டன. இடிபாடுகளிலிருந்து இதுவரை 2,437தொழிலாளர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். 400-க்கும் அதிகமான சடலங்கள் எடுக்கப்பட்டுள்ளன. இன்னும் 149 பேரின் நிலை என்னவென்றே தெரியாமலே உள்ளது.

ஆலை உரிமையாளர்கள் மஹ்பூபுர் ரஹ்மான் தபஸ், பல்சுல் சமத் அத்னான், கட்டிடத்தை ஆய்வு செய்து சான்றிதழ் வழங்கிய நகராட்சி என்ஜினியர்கள், கட்டிட உரிமையாளர் முஹமத் சொஹைல் ராணா உட்பட 12 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். ராணா பிளாசாவில் அனுமதிக்கப்படிருந்த ஐந்து தளங்களுக்கு மேல் கட்டுமான விதிமுறைகளை மீறி எட்டு தளங்கள் கட்டப்பட்டிருந்தன. அது இந்த இந்த கோர விபத்துக்கு காரணமாக இருந்திருக்கிறது.

இடிந்த கட்டிடம்
இடிந்த கட்டிடம்

குறைந்த கூலியில் வேலை செய்யும் தொழிலாளர் கூட்டத்தை தேடி இடம் பெயரும் பன்னாட்டு நிறுவனங்களுக்கான ஆடை உற்பத்தி வளையத்தில் வங்கதேசம் இப்போது முக்கியமான மையமாக உள்ளது. ஆடை ஏற்றுமதியில் சீனா, இத்தாலிக்கு பிறகு மூன்றாம் இடத்தில் இருந்த வங்கதேசம் இப்போது இரண்டாம் இடத்திற்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஆயத்த ஆடை தொழில் நாட்டின் மொத்த ஏற்றுமதியில் 77 சதவீதமாகவும், ஆண்டுக்கு $24 பில்லியன் வருவாயை ஈட்டுவதாகவும் இருக்கிறது.

இதற்கான அடிப்படை காரணத்தை தேடி அலைய வேண்டியதில்லை. பல்வேறு நாடுகளில் ஆடைத் தொழிலாளர்களின் மாத சம்பள வீதத்தை ஒப்பிட்டுப் பார்த்தால் போதும்:

சீனா  – $154 to $230 (சுமார் ரூ 8,000 முதல் ரூ 12,000 வரை)

கம்போடியா – $80 (சுமார் ரூ 4,400)

வங்கதேசம் – $38 (சுமார் ரூ 2,090)

சீன நிறுவனங்கள் கூட குறைந்த கூலி உற்பத்தியை தேடி வங்க தேசத்துக்கு இடம் பெயர்ந்துள்ளன.

செர்ரி பாடி பேஷன்ஸ் என்ற பெண்கள் உள்ளாடை மற்றும் நீச்சலுடை தயாரித்து விற்பனை செய்யும் ஹாங்காங் கம்பெனி, 10 வருடங்களுக்கு முன் சீனாவில் 3,500 தொழிலாளர்களை கொண்டு தனது விற்பனைக்கான ஆடைகளை உற்பத்தி செய்து வந்தது. இப்போது அந்த நிறுவனம், சீனாவில் வெறும் 200 தொழிலாளர்களை மட்டும் வைத்துக்கொண்டு, வங்க தேசத்தில் 2,500 தொழிலாளர்கள் மூலம் உற்பத்தி செய்து வருகிறது.

ஒரு நாளுக்கு 2 டாலருக்கும் குறைவான கூலிக்கு, ஆபத்தான சூழ்நிலையில் ஏற்றுமதி ஆடைகளை தயாரிக்கும் இந்த அப்பாவித் தொழிலாளிகளின் கடினமான உழைப்பும், மோசமான வாழ்க்கை நிலைமைகளும் தான், அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் ஆடைகளை விற்கும் வால் மார்ட், டார்கேட், H&M, லொப்லாவ் போன்ற பிராண்டுகளின் பின்னணியில் உள்ளன. இத்தொழிலகங்கள் 15 மணி நேர மிகை உழைப்பு, மிகக் குறைந்த கூலி, பாதுகாப்பு வசதிகள் இல்லாத கட்டிடங்கள், பாதுகாப்பற்ற பணிச்சூழல் என்று வியர்வைக் கூடங்களாக இருக்கின்றன.

தாக்காவின் ஆயத்த ஆடை தொழிலகங்களில் வேலை செய்யும் 35 லட்சம் தொழிலாளர்கள், புறநகர்ப் பகுதிகளின் அசுத்தமான தெருக்களில் காற்றோட்டத்திற்கு ஜன்னல் கூட இல்லாத ஒற்றை அறையில், இன்னொரு குடும்பத்துடன் பகிர்ந்து கொள்ளும் சமையல் அறை, கழிப்பறை கொண்ட வீடுகளில் வாழ்கிறார்கள். குடும்பமே வேலைக்குப் போனால்தான் குடியிருக்க அத்தகைய வீடும், ஒரு வேளை சோறும் கிடைக்கும் என்பதுதான் அவர்களது பொருளாதார நிலை. மூன்று பேர் வேலை பார்க்கும் ஒரு குடும்பத்தின் மாத வருமானம் $90 ஆக இருந்தால்தான், அதில் பாதியை வாடகைக்கு கொடுத்து வீடு எடுக்க முடியும்.

இறந்து போன தொழிலாளர்கள்
இறந்து போன தொழிலாளர்கள்

ராணா பிளாசா விபத்தில் இடிபாடுகளில் சிக்கிக்கொண்ட பல தொழிலாளர்களின் முறையீடு அவர்களது மோசமான பொருளாதார நிலையை காட்டுகிறது.

கான்கிரீட் கற்பலகைகளுக்கு இடையில் சிக்கிக்கொண்ட முஹமத் அல்டாப், “அண்ணா, எங்களை காப்பாற்றுங்கள்! உங்களை மன்றாடி கேட்கிறேன், எனக்கு வாழ வேண்டும்! எனக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்” என்று கதறியுள்ளார்.

இடிபாடுகளில் சிக்கி இறந்த இளம் பெண் ஒருவர், தன் பெற்றோர்களுக்கு தூண்டு காகித சீட்டில் எழுதிய கடிதம் உயிரற்ற அவளின் கைகளிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. அதில் “அம்மா, அப்பா, என்னை மன்னித்துவிடுங்கள். என்னால் இனிமேல் உங்களுக்கு மருந்து வாங்கி தர முடியாது. தம்பி! அப்பாவையும் அம்மாவையும் பார்த்து கொள்வாயா?” என்று அவர் எழுதியிருக்கிறார்.

இந்தத் தொழிற்சாலைகளின் பணிச்சூழலையும், தொழிலாளர் நலன்களையும் ஒழுங்குபடுத்தும் அதிகாரம் பெயரளவில் தான் வங்க தேச அரசிடம் இருக்கிறது. அரசையும் விஞ்சிய அதிகாரம் கொண்ட மேற்கத்திய பிராண்ட்களும் சில்லறை வர்த்தக பகாசுர கம்பெனிகளும் தமக்கு விற்கப்படும் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிலாளர்கள் ’வியர்வைக் கூடங்கள்’ எனப்படும் இது போன்று கிடங்குகளில் அடைக்கப்பட்டு மிருகங்களைப் போல வேலை வாங்கப்படுவதை கண்டு கொள்வதில்லை. அதன் மூலம் குறைந்த விலைக்கு பொருட்களை வாங்கி பெருமளவு லாபம் சம்பாதிப்பதை உறுதி செய்து கொள்கின்றன.

வங்க தேசத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் 10% பேர் ஆடை தொழிலகங்களை நடத்தும் முதலாளிகளாக இருக்கின்றனர். 50%க்கும் அதிகமான உறுப்பினர்கள் ஏதாவது ஒரு வகையில் ஆடைத் துறையுடன் தொடர்பு வைத்துள்ளனர். பன்னாட்டு நிறுவனங்களுக்கு தரகு வேலை பார்க்கும் அவர்கள் தம் சொந்த நாட்டு உழைக்கும் மக்களை சுரண்டி பன்னாட்டு நிறுவனங்கள் கொழுப்பதற்கு வழி செய்து கொடுக்கின்றனர். தொழிலாளர்களின் நலனை கண்காணிக்கும் துறையில் ஆடை ஆலைகளை ஆய்வு செய்வதற்கு வெறும் 18 இன்ஸ்பெக்டர்கள் மட்டுமே ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ராணா பிளாசாவின் உரிமையாளர் முகமது சகேல் ராணா, ஆளும் அவாமி லீக் கட்சியின் இளைஞர் அணி தலைவராக இருக்கிறார்.

பிரிமார்க்
வங்க தேசத்தில் ஆடைகள் வாங்கும் இங்கிலாந்தின் பிரிமார்க் கடை

30 ஆண்டுகளாக ஏற்றுமதி ஆடை உற்பத்தி தொழிலில் ஈடுபட்டுள்ள முஹமத் ஆசிம் என்ற முதலாளி 26,000 தொழிலாளர்களைக் கொண்டு வங்கதேசத்தில் பல ஆயத்த ஆடை தொழிற்சாலைகளை இயக்கிவருகிறார். நாடாளுமன்ற உறுப்பினரான இவர் இந்த ஆலைகளின் மூலம் ஆண்டுக்கு $200 மில்லியன் வருமானம் ஈட்டுகிறார். தாக்காவில் நீச்சல் குளத்துடன் கூடிய ஆடம்பர வீட்டில் வசிக்கும் அவர் “உற்பத்தியை அதிகரிக்க வலியுறுத்தும் மேற்கத்திய பிராண்ட்கள், விலையை அதிகரித்து தருவதில்லை. அதன் மூலம் வங்க தேச முதலாளிகளின் லாபம் குறைகிறது” என்று முறையிடுகிறார்.

அதிக அளவில் ஆர்டர்கள் பிடிப்பதற்காக தொழிற்சாலைகள் மத்தியில் நிலவும் போட்டியை பயன்படுத்திக் கொண்டு பன்னாட்டு நிறுவனங்கள் விலை சம்பந்தமாக பேரம் பேசக் கூட மறுக்கின்றனர். அவர்கள் சொல்லும் அடிமாட்டு விலை எதுவாக இருப்பினும், கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவேண்டும் என்ற நிலைக்கு தொழிற்சாலைகள் தள்ளப்படுகின்றன.

மேற்கத்திய பிராண்டுகள் கொள்முதல் விலையை ஒவ்வொரு வருடமும் குறைத்துக் கொண்டே வருவதாக வங்க தேச முதலாளிகள் கூறுகின்றனர். “2011-ல் ஒரு உருப்படிக்கு $5 விலை கொடுத்து வாங்கிய பன்னாட்டு நிறுவனங்கள் 2012-ல் ஒரு உருப்படிக்கு $4.50 மட்டுமே விலையாக தருகிறார்கள். கடந்த 2 வருடங்களாக ஏற்றுமதியாகும் ஆடைகளின் விலைகள் சுமார் 40% குறைந்துள்ளன” என்கின்றனர்.

“மேற்கத்திய பிராண்டுகள் வங்க தேச முதலாளிகளுக்கு பிச்சை போடுவது போல குறைந்த விலையை கொடுத்து, ஒரு அரசனை போல் உயர்வான தரத்தை எதிர்பார்க்கிறார்கள்” என்கிறார் முன்னாள் ஜவுளித் துறை அமைச்சர் அப்துல் மன்னன். இவர் தான் ஏற்றுமதி ஆடை உற்பத்தி தொழிலை வங்கதேசத்தில் துவங்குவதற்கு பெரும் உதவியாக இருந்தவர். இன்று உள்ளூரிலும் வெளிநாடுகளிலும் 2 டஜன் ஆலைகளுக்கு உரிமையாளராகவும் உள்ளார்.

துயரம்
கொல்லப்பட்ட தொழிலாளர்களின் உறவினர் துயரம்

பன்னாட்டு நிறுவனங்களின் லாப வேட்டையும், வங்க தேச முதலாளிகளின் கங்காணித்தனமும் அந்நாட்டு மக்களை கொத்தடிமைகளாக பலி வாங்கி வருகின்றன. இதற்கு முன்னர் 2005 ஏப்ரலில் ஸ்பெக்ட்ரம் தொழிற்சாலை இடிந்து 73 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்; 2006-ம் ஆண்டு ஆடை தொழிற்சாலை ஒன்றின் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 18 பேர் உயிரிழந்தனர்; 2010-ல் நடந்த கட்டிட இடிவில் 25 பேர் உயிரிழந்தனர்; 2012 நவம்பரில் தஸ்ரின் ஆயத்த ஆடை தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் 112-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்; கடந்த பத்தாண்டுகளில் ஆயத்த ஆடை தொழிற்சாலைகளில் நடந்த பேரழிவுகளில் 700-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

சாம் மேகர் என்று ஆர்வலர், “தொடர்ச்சியாக நிகழும் இது போன்ற பெரு விபத்துகள் கார்ப்பரேட்டுகள் பின்பற்றும் கண்காணிப்பு முறைகள் எந்த அளவுக்கு மோசடியானவை என்பதை காட்டுகின்றன. 2005-ல் ஸ்பெக்ட்ரம் தொழிற்சாலை இடிந்து 64-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட பின் உறுதியளிக்கப்பட்ட நடவடிக்கைகள் இன்று வரை நடைமுறைப் படுத்தப்படவில்லை” என்கிறார்.

ராணா பிளாசாவில் இயங்கி வந்த பேன்டம் அப்பேரல்ஸ் (Phantom Apparels), பேன்டம் டேக் (Phantom Tac), ஈதர் டெக்ஸ் (Ether Tex), நியூ வேவ் ஸ்டைல் (New wave Style), நியூ வேவ் பாட்டம்ஸ் (New Wave Bottoms) ஆகிய 5 நிறுவனங்களும் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான சட்டைகள், பேண்ட்கள் மற்றும் இதர ஆடைகளை உற்பத்தி செய்கின்றன.

விபத்து நடந்த பிறகு ராணா பிளாசாவை ஆய்வு செய்த தொழிற்சங்க அமைப்புகள் அங்கு இருந்த ஆவணங்கள் மற்றும் ஆடை முத்திரைகளைக் கொண்டு வால்மார்ட் (Walmart), ப்ரிமார்க் (Primark), மதலன் (Matalan), சீயர்ஸ் (Sears), கேப் (Gap), டாமி கில்பிகர் (Tommy Hilfiger), பெனட்டன் (Benetton) உள்ளிட்ட பிரபல சில்லறை வர்த்தகக் கடைகள், பிரபலமான ஆடை பிராண்டுகளுக்கான ஆடைகள் உற்பத்தி செய்யப்பட்டதை அம்பலப்படுத்தியுள்ளனர். இந்த நிறுவனங்கள் பிரிட்டன், அமெரிக்கா, டென்மார்க், பிரான்ஸ், ஜெர்மனி, கனடா, ஸ்பெயின் போன்ற நாடுகளைச் சேர்ந்தவை.

ஏழை நாடுகளைச் சேர்ந்த கொத்தடிமைக் கூடங்களில் இருந்து பொருட்களை அடிமாட்டு விலைக்கு வாங்கி மேற்கத்திய சந்தையில் பெரும் லாபத்துக்கு விற்கும் பன்னாட்டுக் கார்ப்பரேட் கம்பெனிகள், இது போன்ற பேரவலங்கள் நிகழும் போது அதற்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்று கைகழுவி விடுகின்றன. விபத்து நடந்த கம்பெனிகளில் தாங்கள் பொருட்கள் வாங்குவதில்லை என்று உடனடியாக மறுப்பு அறிக்கை வெளியிட்டு தங்கள் பிராண்டு இமேஜை காப்பாற்றிக் கொள்வதில் தான் அக்கறை செலுத்துகிறார்கள். பிரிட்டனின் ப்ரிமார்க் (Primark) தவிர மற்ற அனைத்து நிறுவனங்களும் இங்கு தமது பிராண்ட் ஆடைகள் விபத்து நடந்த தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படவில்லை என்று மறுத்துள்ளன.

மீட்புப் பணி
மீட்புப் பணி

ராணா பிளாசாவில் செயல்படும் தொழிற்சாலைகளில் வேலை செய்யும் தொழிலாளர்கள் சங்கமாக திரண்டிருந்தால், பாதுகாப்பற்ற சூழலில் வேலை செய்ய மறுத்து தமது உயிர்களை காப்பாற்றிக் கொண்டிருக்கலாம். ஆனால், பன்னாட்டு முதலாளிகளை திருப்திப்படுத்தி, நாட்டின் பொருளாதார உயிர்நாடியாக உருவாகக்கப்பட்டிருக்கும் ஏற்றுமதி ஆடை தயாரிப்பு தொழில் துறையை தக்கவைத்து கொள்ள, வங்கதேசத்தின் அனைத்து தொழிலாளர்கள் இயக்கங்களும் அரசால் நசுக்கப்படுகின்றன. ஊதியத்தையும் பணிச் சூழலையும் மேம்படுத்துவதற்கு சங்கமாக திரண்டு போராட முனையும் தொழிலாளர்கள் மீது அரசால் கடும் அடக்குமுறை அவிழ்த்து விடப் படுகிறது. 2010-ல் வெடித்த தொழிலாளர் போராட்டங்களைத் தொடர்ந்து தொழிலாளர் போராட்டங்களை உளவு பார்த்து வேரோடு அழிப்பதற்காக 2,990 பேரைக் கொண்ட தொழில்துறை போலீஸ் படையை வங்க தேச அரசு உருவாக்கியிருக்கிறது.

கடந்த ஆண்டு அமினுல் இஸ்லாம் (Aminul Islam) என்ற தொழிற்சங்க அமைப்பாளர் போலீசாரால் சித்திரவதை செய்து மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். இன்றும் விசாரணை நடந்து கொண்டிருக்கும் இக்கொலைக்கு, சந்தேகத்தின் பெயரில் கூட யாரும் கைது செய்யபடவில்லை.

நாட்டின் பிரதமர் ஷேக் ஹசினா பேகம், “உலகில் எந்த மூலையிலும் விபத்து நடக்கலாம், அவற்றை யாரும் யூகிக்க முடியாது” என்று தனது அடிமைத்தனத்தை பறைசாற்றியிருக்கிறார். “இந்த விபத்தினால் வங்கதேசத்துக்கு வரும் தொழில் வாய்ப்புகள் குறையப்போவது இல்லை, ஏனென்றால், இங்குதான் குறைவான கூலி கொடுத்து தரமான ஏற்றுமதி ஆடைகளை தயாரிக்க முடியும்” என்று உலக முதலாளிகளுக்கு அழைப்பு விடுக்கிறார். விபத்து தொடர்பான தனது நாடாளுமன்ற உரையில், “தொழிலாளர்கள் நடந்ததை எல்லாம் மறந்துவிட்டு, ஆலையில் உற்பத்தி நடக்க ஒத்துழைக்க வேண்டும், இல்லையெனில் பலர் வேலை இழக்க நேரிடும்” என்று முதலாளிகளின் மொழியில் பேசியிருக்கிறார்.

இந்நிலையில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கலந்து கொண்ட மே தினப் போராட்டங்களும் பேரணியும் தாக்காவில் நடைபெற்றன. திரளாக போராட்டத்தில் கலந்து கொண்ட தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரியும், குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்ககோரியும் முழக்கங்களை எழுப்பியுள்ளனர். கொல்லப்பட்ட தங்கள் சகோதர சகோதரிகளுக்கு நீதி வேண்டுமென்றும், அவர்கள் சிந்திய ரத்தம் வீணாகிவிடாது என்றும் முழக்கங்கள் எழுப்பியுள்ளனர்.

மீட்புப் பணி
மீட்புப் பணி

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மொங்கிதுல் ராணா என்ற 18 வயது இளம் தொழிலாளி “கட்டிட உரிமையாளருக்கு மரண தண்டனை வழங்க வேண்டும், அனைத்து தொழிலாளர்களுக்கும் சரியான ஊதியமும் பாதுகாப்பான பணிச்சூழலும் வேண்டும்” என்று கூறியுள்ளார்.

ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் விற்கப்படும் ஒரு சட்டையின் விலைதான் அதைத் தயாரிக்கும் வங்க தேச ஆலைத் தொழிலாளிக்கு மாதச் சம்பளமாக தரப்படுகிறது. அழுகிய உடல்களின் துர்நாற்றத்தினால் சூழப்பட்டு இருக்கும் சாவர் பகுதியில் இயங்கும் ஆலைகள், இன்றைய மறுகாலனியாக்க உலகத்தில் தொழிலாளியின் உயிர் கூட அவர்களுக்கு சொந்தமில்லை என்ற உண்மையை நம் கண்முன் நிறுத்துகின்றன!

மேற்கத்திய நாடுகளின் நுகர்வு வெறிக்குத் தீனி போடுவதன் மூலம் லாபத்தை வாரிக் குவிக்கும் வெறியோடு பன்னாட்டு நிறுவனங்கள் ஏழை நாடுகளின் மீது பாய்ந்து குதறுகின்றன. இந்த கொள்ளையை அந்த நாடுகளுக்கு உதவி, வளர்ச்சிக்கான ஊக்குவிப்பு, ஏழை மக்களுக்கு வேலை வாய்ப்பு என்று கலர் கலராக பெயர் சூட்டி கௌரவித்தாலும் அது ஏழை மக்களின் வாழ்க்கை நிலைமைகளை வேரோடு அழித்து, முதலாளிகளின் ஆளுமையின் கீழ் நிறுத்திவைக்கும் காலனி அடக்குமுறையே அன்றி வேறொன்றுமில்லை.

பொருட்கள் மலிவாய்க் கிடைக்கின்றன என்பதற்காக ரிலையன்ஸ், வால்மார்ட் உள்ளிட்ட தரகு முதலாளிகள் மற்றும் பன்னாட்டு கார்ப்பரேட் வணிக நிறுவனங்களின் முன் மண்டியிடும் ‘நுகர்வோர்’ இதன் இன்னொரு பக்கத்தைக் காண மறுக்கிறார்கள். தங்களது நுகர்வு வெறிக்குத் தீனியாக வரும் இந்தப் பொருட்களின் உற்பத்தியின் பின்னே ரத்தமும் சதையுமான மக்களின் வாழ்க்கை இருக்கிறது என்பதைக் காணத் தவறுகிறார்கள். மலிவாய்க் கிடைக்கும் பொருள் ஒவ்வொன்றின் பின்னும் ஒரு தொழிலாளியின் கண்ணீரும் வியர்வையும் கலந்திருக்கிறது.

நீங்கள் அணிந்திருக்கும் ஆயத்த ஆடையின் பின்னே உறைந்து போன ரத்தத்துளிகள் இருக்கலாம் என்பதை அறிந்திருக்கிறீர்களா?

-ஜென்னி, பாணன்

மேலும் படிக்க