privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்பிரதமர் பதவிக்கு மோடி : அருகதை என்ன ?

பிரதமர் பதவிக்கு மோடி : அருகதை என்ன ?

-

ரேந்திர மோடி என்ற பெயரைக் கேட்டவுடனேயே இந்திய மக்கள் பெரும்பாலோருக்கு நினைவுக்கு வருவது 2002-ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த பெருந்திரள் முசுலீம் படுகொலைதான். எத்தனை சிறப்புப் புலனாய்வுக் குழுக்கள் வந்து மோடியைக் குற்றமற்றவர் என அறிக்கை அளித்தாலும், அப்படுகொலையின் சூத்திரதாரி, தளபதி மோடிதான் என்ற உண்மையை, அவரது கரங்களில் ஆயிரக்கணக்கான அப்பாவி முசுலீம்களின் இரத்தக் கறை படிந்திருப்பதைப் பொதுமக்களின் மனதிலிருந்து, அவர்களின் நியாய உணர்ச்சியிலிருந்து துடைத்தெறிந்துவிட முடியாது. குஜராத் படுகொலைகளுக்காக நரேந்திர மோடி தண்டிக்கப்பட வேண்டும் எனப் பாதிக்கப்பட்ட முசுலீம்களும் சமூக ஆர்வலர்களும் பல்வேறு இடர்ப்பாடுகளுக்கு மத்தியில் போராடிவரும் வேளையில், அக்கிரிமினல் பேர்வழியைப் பிரதமர் நாற்காலியில் அமர்த்த வேண்டுமென்ற பிரச்சாரம் பத்திரிகைகளில், இணைய தளங்களில் தீவிரமடைந்திருக்கிறது.

விவசாயி குடும்பம்
குஜராத் ‘வளர்ச்சி’யின் கோரம் : விவசாயம் பொய்த்துப் போனதால், வங்கிக் கடனைக் கட்ட முடியாத அவமானத்தால் தற்கொலை செய்து கொண்ட ஜாம்நகர் மாவட்டம் – கிச்டாட் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி அனிருத் சிங் ஜடேஜாவின் குடும்பம் (இடது) மற்றும் விரம்டாட் கிராம விவசாயி தேவயார் ஹதபாய் அஹிரின் குடும்பம் (கோப்புப் படம்)

ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு வரை துக்ளக் சோ, அ.தி.மு.க. தலைவி ஜெயா உள்ளிட்ட ஒரு சிறு பார்ப்பன-பாசிச கும்பல் மட்டும்தான் நரேந்திர மோடிக்கு நெருக்கமானதாக இருந்து வந்தது. அந்த அளவிற்கு இந்திய அரசியல் அரங்கில் ஒதுக்கப்பட்டவராக இருந்த மோடியோடு இன்று இந்தியத் தரகு முதலாளிகள் மற்றும் தேசியப் பத்திரிகைகளில் ஒரு பிரிவு மிகவும் வெளிப்படையாகக் கைகோர்த்துக் கொண்டு, அவரைப் பிரதமர் பதவிக்கான தகுதி வாய்ந்த நபராக முன்னிறுத்துகின்றனர். 1930-களில் ஜெர்மன் முதலாளி வர்க்கம் அடால்ஃப் இட்லரை அந்நாட்டின் அதிபராக்க ஆதரவளித்துத் தீவிரமாகப் பிரச்சாரம் நடத்தியதைப் போன்று, இன்று இந்தியத் தரகு முதலாளி வர்க்கமும் அவர்கள் கட்டுப்பாட்டின் கீழுள்ள பத்திரிகைகள், செய்தி சேனல்களும் மோடியின் பிரச்சாரப் பீரங்கியாகச் செயல்பட்டு வருகின்றனர்.

“இந்தியப் பொருளாதாரம் சரிந்து கிடக்கும் நிலையிலும், குஜராத் மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் தள்ளிச் செல்லும் வித்தையை மோடி நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்; அம்மாநிலத்தில் ஊழலற்ற நல்ல நிர்வாகத்தை அவர் நடத்தி வருகிறார். இப்படிப்பட்ட திறமையை மூலதனமாகக் கொண்ட தலைவர் ஒருவர்தான் பிரச்சினைகள் நிறைந்த இன்றைய இந்தியாவை நிர்வகிக்க முடியும்” எனக் கூறி மோடியை முன்னிறுத்துகிறது, இக்கும்பல். சொல்லிக் கொள்ளப்படும் இந்த வளர்ச்சி குஜராத் மாநிலத்தில் நுழைந்துள்ள மூலதனத்தின் அளவையும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள சலுகைகளையும் அடிப்படையாக வைத்துதான் கணக்கிடப்படுகிறதேயொழிய, அம்மாநில மக்களின் வாழ்க்கைத் தரத்தை வைத்து மதிப்பிடப்படவில்லை.

அம்மாநிலத்தின் சௌராஷ்ட்ரா மற்றும் கட்ச் பகுதிகளில் இன்றும்கூடப் பொதுமக்கள் பல கிலோமீட்டர் நடந்து சென்றுதான் குடிதண்ணீரை எடுத்து வருகிறார்கள். மோடியின் ஆட்சியில் சாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் விவசாய வளர்ச்சி, சாதாரண விவசாயிகளின் வருமானத்தைப் பதம் பார்த்து விட்டது. பாதுகாப்பற்ற தினக்கூலி வேலை வாய்ப்புகள் பெருகிய அளவிற்கு, நிரந்தர வேலை வாய்ப்புகள் அம்மாநிலத்தில் உருவாக்கப்படவில்லை. பொது சுகாதாரம், குழந்தை இறப்பு விகிதம், ஆண்-பெண் பாலின விகிதம், ஊட்டச்சத்து குறைபாடு உள்ளிட்ட மனிதவள மேம்பாடு தொடர்புடைய இனங்களில் மோடியின் குஜராத் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதை மோடியால் கூட மறுக்க முடியவில்லை.

நிர்மா
நிர்மா நிறுவனத்தின் சிமெண்ட் ஆலை மற்றும் சுரங்கத்திற்காகத் தமது நிலங்களை வலுக்கட்டாயமாக அபகரித்துக் கொண்ட மோடி அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தும் மாஹூ பகுதி விவசாயிகள் (கோப்புப் படம்)

மேற்கு வங்கம்- சிங்கூர் பகுதியைச் சேர்ந்த விவசாயிகளால் அடித்துத் துரத்தப்பட்ட டாடாவை வரவேற்று, தனது மாநிலத்தில் நானோ கார் தொழிற்சாலையை அமைக்க விவசாய நிலங்களை அபகரித்துக் கொடுத்தவர் மோடி. சலவைத் தூள் தயாரிக்கும் நிர்மா நிறுவனம் மாஹூ பகுதியில் அமைத்துள்ள சிறப்புப் பொருளாதார மண்டலம் 15,000 வெங்காய விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பறித்துவிட்டு, வெறும் 416 பேருக்கு தினக்கூலி வேலை வாய்ப்பைத்தான் உருவாக்கிக் கொடுத்தது. அதானி குழுமம் முந்த்ரா பகுதியில் 10,000 ஹெக்டேர் பரப்பளவில் அமைத்துள்ள சிறப்புப் பொருளாதார மண்டலம் 56 மீனவ கிராமங்களையும் 126 குடியிருப்புப் பகுதிகளையும் அடியோடு அழித்தது. மாருதி நிர்வாகத்தின் கொடூர அடக்குமுறைகளுக்கு எதிராக குர்கான் தொழிலாளர்கள் வீரமிக்க போராட்டத்தை நடத்தியதைத் தொடர்ந்து, மாருதி தனது புதிய கார் தொழிற்சாலையை அமைக்கத் தேர்ந்தெடுத்த இடம் மோடியின் குஜராத்.

மோடி குஜராத்தில் உருவாக்கியிருக்கும் வளர்ச்சி ரிலையன்ஸ், எல் அண்ட் டி., எஸ்ஸார், அதானி போன்ற சில கார்ப்பரேட் நிறுவனங்களுக்குச் சாதகமாகவும், தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள் உள்ளிட்ட அடித்தட்டு மக்களுக்கு எதிராகவும் இருப்பதை இவை போன்ற பல உதாரணங்களைக் கொண்டு எடுத்துக் காட்டலாம். தனியார்மயம்-தாராளமயத்தின் கீழ் எட்டப்படும் வளர்ச்சி இதற்கு மாறாக, பொதுமக்களுக்கு நன்மை பயக்கும் விதத்தில் ஒரு போதும் இருக்கப் போவதில்லை; இருக்கவும் முடியாது. எனவே, ஆர்.எஸ்.எஸ். அம்பிகளும், முதலாளித்துவப் பத்திரிகைகளும், கார்ப்பரேட் முதலாளிகளும் வியந்தோதும் குஜராத்தின் வளர்ச்சி என்பது அடிப்படையிலேயே மக்கள் நலனுக்கு எதிரானது.

குஜராத்தின் கட்ச் வளைகுடாவை ஒட்டி அமைந்துள்ள முந்த்ரா பகுதியில் 7,500 கோடி ரூபாய் மதிப்புமிக்க 5 கோடி சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட நிலத்தை, மோடி தனக்கு மிகவும் நெருக்கமான அதானி குழுமத்திற்கு வெறும் 160 கோடி ரூபாய்க்கு வாரிக் கொடுத்திருக்கிறார். தொழில் தொடங்கப் போவதாகக் கூறி இந்த நிலத்தைப் பெற்ற அதானி குழுமம், அந்த நிலத்தின் பெரும்பகுதியை பிளாட்டு போட்டு விற்றதன் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாயை இலாபமாகச் சுருட்டிக் கொண்டது.

மோடியின் ஆட்சியில் இது போன்று பல நில பேர மோசடிகள் நடந்திருப்பதையும்; எஸ்ஸார், எல் அண்ட் டி., ஃபோர்டு இந்தியா, ரிலையன்ஸ் உள்ளிட்டுப் பல கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்த நிலக் கொள்ளையின் மூலம் கொழுத்த இலாபமடைந்திருப்பதையும் இந்தியத் தணிக்கைத் துறை அறிக்கையாகவே அளித்திருக்கிறது. இந்த நிலக்கொள்ளை ஒருபுறமிருக்க, மோடி அரசு ரிலையன்ஸ், எஸ்ஸார், அதானி, ஏ.பி.எல்., டொரண்ட் பவர் ஜெனரேஷன் ஆகிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கிய சட்ட விரோத சலுகைகளால் அரசிற்கு 580 கோடி ரூபாய் நட்டமேற்பட்டிருப்பதாகவும்; 2009-10 மற்றும் 2010-11 ஆகிய இரு நிதி ஆண்டுகளில் மட்டும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு காட்டப்பட்டுள்ள சட்ட விரோத சலுகைகளால் மாநில அரசிற்கு 17,000 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் தணிக்கைத் துறை தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது.

மன்மோகன் சிங் அரசும் மோடி அரசும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்பதைத்தான் குஜராத்தில் நடந்துள்ள இந்த கார்ப்பரேட் பகற்கொள்ளைகள் எடுத்துக் காட்டுகின்றன. இதில் மோடி தனிப்பட்ட விதத்தில் எந்தவிதமான ஆதாயமும் அடையவில்லையே என வாதாடுவது அபத்தமானது மட்டுமல்ல, அயோக்கியத்தனமானதும் கூட.

தண்ணீர்
ஒரு குடம் தண்ணீருக்காகக் காத்திருக்கும் பாடன் கிராம மக்கள்.

மன்மோகன் சிங்கிற்கும் மோடிக்கும் இடையே பொருளாதார வளர்ச்சி குறித்த கருத்திலும் நடைமுறையிலும் எந்தவிதமான வேறுபாடும் கிடையாது என்றாலும், ஊழலற்ற நல்ல நிர்வாகத்தைத் தர வேண்டும் என்ற நோக்கில்தான் தரகு முதலாளிகள் மற்றும் பத்திரிகைகள்/செய்தி சேனல்களின் ஒரு பிரிவு நரேந்திர மோடியை ஆதரிப்பதாகக் கூறுவது அபத்தமானது. ஏனென்றால், மன்மோகன் சிங் ஆட்சியில் நடந்துள்ள ஊழல்கள் அனைத்திலும் பங்குதாரர்களாக இருந்து, மிகப்பெரும் இலாபத்தைச் சுருட்டிக் கொண்டவர்கள் இந்த கார்ப்பரேட் கும்பல்கள்தான். எனவே, அவர்களின் பிரச்சினை ஊழல்ல.

தனியார்மய-தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளின் மக்கள் விரோதப் போக்கும் அதன் மோசடிகளும் ஆளுங்கட்சிகளை வெகுவிரைவிலேயே மக்களின் வெறுப்புக்கும் கோபத்திற்கும் ஆளாக்கிவிடுவதால், ஆளும் வர்க்கங்களுக்கும் அவர்களின் அறிவுசார்ந்த பிரதிநிதிகளுக்கும் வேறொரு கட்சியை, அதன் தலைவனை ஆளுங்கட்சிக்கு மாற்றாக, கவர்ச்சிகரமான முறையில் மக்கள் முன் நிறுத்த வேண்டிய தேவை ஏற்படுகிறது. இப்படி அடுத்த மாற்றாக முன்னிறுத்தப்படும் ஓட்டுக்கட்சித் தலைவர் ஆளும் வர்க்கங்களுக்குச் சாதகமாக நடந்து கொள்வதோடு, அதனின் சித்தாந்தத்தை வரித்துக் கொண்டவராகவும் இருப்பது பழம் நழுவிப் பாலில் விழுவதைப் போன்றது.

அந்த வகையில் நரேந்திர மோடி இந்திய ஆளும் கும்பலுக்கு லாட்டரி பரிசு போலக் கிடைத்திருக்கிறார். நரேந்திர மோடி பார்ப்பன-பாசிச சித்தாந்தமான ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளால் வார்க்கப்பட்டவர் என்பது ஒரு புறமிருக்க, அவர் காலாவதியாகிப் போன அரசு முதலாளித்துவக் கொள்கைகளை அடியோடு வெறுப்பவர். அரசும், தனியாரும் இணைந்து செயல்படுவதன் மூலம்தான், அதாவது அரசின் கட்டுப்பாட்டிலுள்ள நிலம், ரோடு, துறைமுகம், தண்ணீர், கனிமவளங்கள் போன்ற பொதுச் சொத்துக்களைத் தரகு முதலாளிகளுக்கு பட்டா போட்டுக் கொடுப்பதன் மூலம்தான் வளர்ச்சியைச் சாதிக்க முடியும்; இத்தகைய வளர்ச்சியின் மூலம்தான் வறுமையை, ஏழ்மையை ஒழிக்க முடியுமே தவிர, சமூக நலத் திட்டங்களின் மூலம் ஒழிக்க முடியாது என்ற புதிய பொருளாதாரக் கொள்கையை ஏற்றுக் கொண்டுள்ள மோடி, அதனைத் தனது மாநிலத்தில் கடந்த பத்தாண்டுகளாக மிகத் தீவிரமாக நடைமுறைப்படுத்தி வருகிறார்.

அரசுப் பதவிகளில் உட்கார்ந்துள்ள மற்ற தலைவர்கள் பல்வேறு கவர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்துவதைக் கைவிடாத பொழுது, மோடி அவற்றை வாக்குவங்கி அரசியல் என வெளிப்படையாகச் சாடி வருகிறார். குஜராத் மாநிலத்தில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படுவது கிடையாது; குப்பை அள்ளுவது கூட அங்கு இலவசமாக நடைபெறவில்லை என்பதெல்லாம் தனியார்மயத்தின்பால் அவருக்குள்ள வெறித்தனமான மோகத்தைத்தான் எடுத்துக்காட்டுகின்றன.

இந்தியா டுடே
பிரதமர் பதவிக்கான தகுதி வாய்ந்த நபர் குறித்து தான் நடத்திய கருத்துக் கணிப்பில் மோடி முதலிடத்தில் இருப்பதைக் குதூகலத்தோடு அறிவிக்கும் இந்தியா டுடே இதழின் முகப்பு அட்டை.

ஓட்டுப் போட்டுத் தம்மைத் தேர்ந்தெடுத்த மக்களுக்கு அரசாங்கம் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு மாறாக, முதலீட்டாளர்களுக்குத் தேவையான சலுகைகளையும் வசதிகளையும் செய்து கொடுப்பதுதான் அரசின் வேலை; இதற்கேற்ப அரசு நிர்வாகம் செம்மைப்படுத்த வேண்டும் என அறிவிக்கிறார், மோடி. அதாவது, மூலதனம் கூலித் தொழிலாளர்களையும், இயற்கை வளங்களையும் பொதுச் சோத்துக்களையும் சூறையாடுவதற்கு அரசு எந்த விதத்திலும் தடையாக இருக்கக் கூடாது என்பதுதான் இதன் பொருள். மேற்கு வங்கத்திலிருந்து துரத்தப்பட்ட டாடாவிற்கு இரண்டே நாளில் நானோ கார் தொழிற்சாலையை அமைக்க அனுமதி கொடுத்ததை இந்தப் பின்னணியிலிருந்துதான் பார்க்க வேண்டும். கார்ப்பரேட் முதலாளிகளும், படித்த நடுத்தர வர்க்கமும் அரசு நிர்வாகம் ஒரு கார்ப்பரேட் கம்பெனியைப் போல நடத்தப்பட வேண்டும் என்று கூறிவருவது இதைத்தான்.

இப்படிபட்ட சிந்தனைப் போக்கும் நடைமுறையும் கொண்ட மோடியை இந்தியாவின் பிரதமர் பதவியில் உட்கார வைத்தால், அரசியல் காரணங்களுக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பொருளாதாரச் சீர்திருத்த திட்டங்களை உடனடியாகவே நடைமுறைப்படுத்தி விடுவார். தனது கட்சிக்குள் இருந்த தனது எதிர்ப்பாளர்களை வீழ்த்தியதைப் போல, சீர்திருத்தங்களைச் சுயநலம் காரணமாக எதிர்க்கும் கூட்டணிக் கட்சிகளை மட்டுமல்ல, பழங்குடி இன மக்களின், மாவோயிஸ்டுகளின் எதிர்ப்புகளையும் ஒடுக்கி வனங்களை, அவற்றுக்கு அடியிலுள்ள இயற்கை வளங்களைத் தமது கரங்களுக்கு மாற்றி பட்டா போட்டுக் கொடுத்து விடுவார் எனக் கருதுகிறது, கார்ப்பரேட் முதலாளி வர்க்கம்.

இந்திய போலி ஜனநாயகத்தின் மீது இன்னும் நம்பிக்கை கொண்டுள்ள பலரும் இந்து மதவெறி பாசிஸ்டான நரேந்திர மோடியைப் பிரதமராக்கினால், குஜராத் போல நாடு முழுவதும் மத ரீதியான பிளவுகள் ஏற்பட்டுவிடும் என எச்சரிப்பதையெல்லாம் கார்ப்பரேட் கும்பல் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. ஏனென்றால், மறுகாலனியாக்கச் சூழலில் மக்களிடையே வர்க்க ஒற்றுமை ஏற்பட்டுவிடாதபடி, மதரீதியான பிளவுகள் உருவாவது அவர்களுக்குச் சாதகமானதுதானே!

மறுகாலனியாக்க கொள்கைகளின் அமலாக்கம் தோற்றுவித்து வரும் விலைவாசி உயர்வு, வேலையிழப்புகள், சிறு தொழில்களின் அழிவு போன்றவற்றால் கொந்தளிப்பு மிக்க ஒரு சூழலை நாடு எதிர்கொள்ளவிருக்கிறது. போராட்டங்களுக்கும் எதிர்ப்புகளுக்குமிடையிலும் தனியார்மய, தாராளமயக் கொள்கைகளின் அமலாக்கத்தை உத்திரவாதப்படுத்தக் கூடிய உறுதி நரேந்திர மோடி எனும் பாசிஸ்டுக்கே உள்ளது என்று இந்திய ஆளும் வர்க்கம் நம்புகிறது.

இப்படித்தான் நல்லவரு, வல்லவரு என்று போற்றித் துதிபாடி மன்மோகன் சிங் என்ற கல்லுளிமங்கனைப் பதவியில் அமர்த்தியது ஆளும் வர்க்கம். கல்லுளி மங்கனுக்கு அடுத்தபடியாக ஒரு காவிக்கிரிமினல்.

__________________________________

பெட்டிச் செய்தி – 1

விவசாயிகளை நசுக்கும் கருப்புச் சட்டம் : மோடி அரசின் வக்கிரம் !

விவசாயிகள் தமது நிலத்தில் 45 மீட்டர் ஆழத்திற்கு மேல் கிணறு தோண்டினாலோ, குழாய் இறக்கினாலோ அரசின் அனுமதி பெற வேண்டும்; விவசாயிகள் பாசனத்துக்குப் பயன்படுத்தும் தண்ணீரை எப்படி எடுத்தோம் என அரசுக்குக் கணக்கு காட்ட வேண்டும். தவறினால், 10,000 ரூபாய் அபராதமும் ஆறு மாதச் சிறைத் தண்டனையும் அளிக்க வகை செய்யும் கருப்புச் சட்டமொன்றை நிறைவேற்றியிருக்கிறது, மோடி அரசு.

நிலத்தடி நீரைப் பாதுகாப்பது என்ற பெயரில் நிலத்தடி நீர்வளம் அனைத்தையும் தன் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டு, அதனை முதலாளிகளுக்கு அள்ளிக் கொடுப்பதற்காகவே ஒரு ஆணையத்தை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது, மன்மோகன் சிங் அரசு. அவர் எள் என்றவுடன் எண்ணெயாகிச் சட்டத்தைக் கொண்டு வந்து விட்டார், மோடி.

வறட்சி மிக்க மாநிலமான குஜராத்தில் நிலத்தடி நீரைப் பாதுகாக்க வேண்டுமென்றால், நிலத்தடி நீரைப் புட்டிகளில் அடைத்து விற்கும் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு கம்பெனிகள், கோல்ப் மைதானங்கள், தண்ணீர் விளையாட்டு கேளிக்கை பூங்காக்களை நடத்தும் முதலாளிகள் மீது பாயும்படிதான் சட்டம் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், மோடியோ பொதுமக்களின் தண்ணீர்த் தேவையில் கைவைக்கிறார். அதனால்தான் மோடியைப் பிரதமராக்கிவிடத் தரகு முதலாளிகள் துடிக்கிறார்கள்.

_____________________________

பெட்டிச் செய்தி – 2

நரேந்திர மோடி – கெட்டிக்கார புளுகன் !

குஜராத் மாநில பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆந்திரா மாநிலக் கடற்கரைப் பகுதியையொட்டி அமைந்துள்ள கிருஷ்ணா-கோதாவரிப் படுகையில் 20 இலட்சம் கோடி கன அடி இருப்பு கொண்ட இயற்கை எரிவாயுவைக் கண்டுபிடித்திருக்கிறது; இதன் மதிப்பு 5,000 கோடி அமெரிக்க டாலர்கள் (இன்றைய மதிப்பின் படி 2,50,000 கோடி ரூபாய்) ஆகும்” என கடந்த 2005 ஜூனில் பத்திரிகையாளர்களையெல்லாம் அழைத்து டாம்பீகமாக அறிவித்தார், மோடி. இதனையடுத்து குஜராத் மாநில பெட்ரோலியம் கார்ப்பரேஷனை, தேசங்கடந்த தொழிற்கழகத்தினைப் போன்று மாற்றும் மோடிவித்தை தொடங்கப்பட்டது.

கிருஷ்ணா-கோதாவரி கண்டுபிடிப்பை ஆய்வு செய்து வந்த மைய அரசின் ஹைட்ரோகார்பன் இயக்குநரகம், “குஜராத் அரசு சோல்வது போல அந்த வயலில் 20 இலட்சம் கோடி கன அடி இருப்பு கொண்ட இயற்கை எரிவாயு காணப்படவில்லை. அங்கு இருப்பது வெறும் 2 இலட்சம் கோடி கன அடி இயற்கை எரிவாயுதான்” என்றஉண்மையை கடந்த 2012-ஆம் ஆண்டு போட்டு உடைத்தது.

மோடியின் இந்த அண்டப்புளுகைவிடக் கவனம் கொள்ளத்தக்கது அந்த நிறுவனத்தில் நடந்துள்ள ஊழல்கள்தான். மோடி அரசு அக்கார்ப்பரேஷன் குத்தகைக்கு எடுத்துள்ள எண்ணெய் வயல்களின் பங்குகளை பார்படோஸ் நாட்டில் ஒரு அனாமதேய முகவரியில் இயங்கிவரும் ஜியோ குளோபல் என்ற லெட்டர் பேட் நிறுவனத்திற்கு மிகவும் மலிவான விலையில் விற்றிருக்கிறது. இந்த விற்பனையால் அந்நிறுவனத்தின் சொத்து மதிப்பு வெறும் 64 டாலரிலிருந்து (ரூ.3,200/-) 10,000 கோடி ரூபாயாக அதிகரித்து விட்டதென அம்பலப்படுத்தி இருக்கிறார், அர்விந்த் கெஜ்ரிவால். அலைக்கற்றை ஊழலோடு கூட ஒப்பிட்டுப் பேச முடியாத பிரம்மாண்ட ஊழல் இது.

மோடியை வளர்ச்சியின் நாயகனாக அரிதாரம் பூசிக் காட்டுவதற்காகவே “துடிப்புமிக்க குஜராத்” என்ற பெயரில் முதலீட்டாளர்கள் பங்கு பெறும் கருத்தரங்குகளை குஜராத் அரசு நடத்திவருகிறது. 2003-2011 காலக்கட்டத்தில் நடத்தப்பட்ட ஐந்து கருத்தரங்குகளின் மூலம் 87,600 கோடி அமெரிக்க டாலர்கள் பெறுமான அந்நிய நேரடி முதலீடை குஜராத் ஈர்த்திருப்பதாகத் தம்பட்டம் அடித்துவருகிறது, மோடி அரசு. ஆனால், இந்திய ரிசர்வ் வங்கி 2000-2011 காலக்கட்டத்தில் குஜராத் மாநிலத்தில் நுழைந்துள்ள மொத்த அந்நிய நேரடி முதலீடு வெறும் 720 கோடி அமெரிக்க டாலர்கள்தான்என்றும், அந்நிய நேரடி முதலீடை ஈர்ப்பதில் குஜராத் அரசு கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களைவிடப் பின்தங்கி இருப்பதாகவும் அறிக்கை அளித்திருக்கிறது.

கோயபல்ஸ் பாணியில் நாக்கூசாமல் பொய்களை விற்பதுதான் மோடியின் நிர்வாகத் திறமை போலும்!

________________________________________________________________________________
புதிய ஜனநாயகம் – ஜூன் 2013
________________________________________________________________________________