privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்தேர்தல் – பிணத்துக்கு பேன் பார்த்து ஆவதென்ன ?

தேர்தல் – பிணத்துக்கு பேன் பார்த்து ஆவதென்ன ?

-

வாக்களிக்கச் சொல்லி மிரட்டுகிறார்கள்!

எர்வாமேட்டின் விளம்பரமும் மோடி விளம்பரமும் கடந்த இரண்டு ஆண்டுகளாகத்தான் நம்மை பிறாண்டிக் கொண்டிருக்கின்றன. ஆனால் நினைவு தெரிந்த நாள் முதலாய் பல்வேறு வழிகளில் செய்யப்படும் விளம்பரம் ”தவறாமல் வாக்களியுங்கள், அது நம் அடிப்படை உரிமை மற்றும் ஜனநாயக கடமை”. எர்வாமேட்டினின் தராதரத்தை ஒருமுறை வாங்கிப் பார்த்தால் தெரிந்துவிடும். என்ன, ஆயிரமோ ரெண்டாயிரமோ வீணாகித் தொலையும். மோடியின் லட்சணத்தை அறிந்துகொள்வது சற்றே சிரமம். அதற்கு கொஞ்சம் அறிவு, நியாய உணர்வு, மனிதாபிமானம் மற்றும் நாம் மந்தைகள் அல்ல எனும் தெளிவு என சில தகுதிகள் அவசியப்படுகின்றன, அது ஆயிரம் ரெண்டாயிரத்தில் முடியும் சமாச்சாரமல்ல. ஆனாலும் எர்வாமேட்டின் வளர்ச்சியும் மோடியின் வளர்ச்சியும் ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் அம்பலப்பட்டு விடும் என்பது நிதர்சனம்.

மோடி - சிவராஜ் வைத்தியர்
சேலம் சிவராஜ் வைத்தியர் விளம்பரங்கள் போல நம்மைத் துரத்தும் தேர்தல் விளம்பரங்கள்.

ஆனால் ஓட்டு போடச்சொல்லி நம்மை கேன்வாஸ் செய்யும் விளம்பரங்கள், சேலம் சிவராஜ் வைத்திய சாலை விளம்பரங்களைப் போல அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக நம்மைத் துரத்துகின்றன. ஊடகங்கள், நட்சத்திரங்கள் தொடங்கி ஹீரோ ஹோண்டா போன்ற பெருநிறுவனங்கள் வரை இத்தகைய விளம்பரங்களை மேற்கொள்கிறார்கள். மதக்கலவரங்கள் பற்றியோ, விவசாயிகள் தற்கொலைகள் பற்றியோ எந்த கருத்தையும் முன்வைத்திராத அரசு அதிகாரிகள், நடிகர்கள் மற்றும் மேட்டுக்குடி கனவான்கள் கூட இந்த வேள்வியில் மனமுவந்து பங்கேற்கிறார்கள். எல்லோரும் வாக்களித்தால் சகல பிரச்சனைகளும் தீர்ந்துவிடும் என சில அறிவுஜீவிகள் சொல்கிறார்கள். வாக்களிப்பது நம் கடமை, அதை செய்யாதவன் எந்த உரிமையையும் கேட்க தகுதியற்றவன் என அச்சுறுத்துகிறார்கள் சில சமூக ஆர்வலர்கள்.

தற்சமயத்துக்கு ஆனந்த விகடன் குழுமத்தின் தேர்தல் ஆலோசனை ரொம்பவே தூக்கலாக இருக்கிறது. வாக்களிப்பது நம் கடமை, உரிமை & பெருமை எனும் முழுப்பக்க விளம்பரம் விகடன் குழுமத்தின் சகல இதழ்களிலும் தவறாது இடம் பிடிக்கிறது. ஏப்ரல் இரண்டாம் தேதியிட்ட ஆனந்த விகடன் தலையங்கத்தில் “மாறிவரும் நவீன உலகுக்கு ஏற்ப இந்தியாவுக்கான பாத்திரத்தை வடிவமைக்கும் முக்கியமான பணி நம் கரங்களில் ஒப்படைக்கப்பட்டு உள்ளது” என குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஒட்டுமொத்தமாக இந்தவகை விளம்பரங்களைப் பார்க்கையில் ஒரு மனிதன் ஜட்டி போடுவதை விட ஓட்டு போடுவது முக்கியமானது எனும் முடிவுக்கு எல்லோரும் வந்தாக வேண்டும். நாட்டின் தலையெழுத்தையே மாற்றிவிடும் என சிலாகிக்கப்படும் இந்த வாக்குரிமை எப்படி நாட்டின் தலைவிதியை தீர்மானிக்கிறது என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமில்லையா? அதைப்பற்றி ஏன் இந்த கும்பல் பேச மறுக்கிறது?…

அவர்கள் பேச மறுப்பதை நாம் விவாதிக்கலாம்.

யார் இந்த தேர்தல் கமிஷன்? என்ன அதன் அருகதை?

முதலில் இந்த உலகின் மாபெரும் ஜனநாயக திருவிழாவை நடத்துபவர்களிடமிருந்து ஆரம்பிப்போம். பொதுவாக நம்பப்படும் கருத்து. இந்தியாவின் தேர்தலானது தேர்தல் கமிஷன் எனும் தன்னாட்சி பெற்ற அமைப்பால் நடத்தப்படுகிறது, தேர்தல் காலத்தில் நாட்டின் (அல்லது மாநிலத்தின்) நிர்வாகம் முழுதும் அவர்களது கட்டுப்பாட்டில் இருக்கும். இத்தனை பெரிய பொறுப்பை சுமக்கும் இந்தத்துறை எத்தனை பிரம்மாண்டமானதாக இருக்க வேண்டும்? ஆனால் உண்மையில் இங்கே பணியாற்றுபவர்கள் சில நூறு பேர்தான். கலெக்டர், போலீஸ், தாசில்தார் போன்ற அரசு அதிகாரிகளின் கண்காணிப்பின் கீழும் அவர்களிடம் பணியாற்றும் அரசு ஊழியர்களாலும்தான் தேர்தலானது நடத்தப்படுகிறது.

தேர்தல் ஆணையம்
கலெக்டர், போலீஸ், தாசில்தார் போன்ற அரசு அதிகாரிகளின் கண்காணிப்பின் கீழும் அவர்களிடம் பணியாற்றும் அரசு ஊழியர்களாலும்தான் தேர்தலானது நடத்தப்படுகிறது.

உங்களுக்குத் தெரிந்த நேர்மையான, அரசியல்வாதிகளின் ஊழலுக்கு துணைபோகாத அதிகாரிகள் பெயரை பட்டியலிடுங்கள். நாளெல்லாம் முக்கி முக்கி யோசித்தாலும் சகாயம், நரேஷ் குப்தா என ஒன்றிரண்டு பெயர்களுக்கு மேல் உங்களால் சொல்ல முடியாது. தமிழகத்தில் நடந்த மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாடு ஜெயலலிதாவுக்கு வாழ்த்துப்பா மட்டுமே பாடும் அதிமுக பொதுக்குழுவைவிட கீழான தரத்தில் நடந்தது. இந்த அதிகாரிகளது பங்கேற்பில்லாமல் எந்த ஒரு ஊழலும் மாவட்ட அளவிலோ மாநில அளவிலோ நடக்க வாய்ப்பில்லை. தேசிய அளவிலான ஊழல்கள் எல்லாவற்றிலும் அரசு அதிகாரிகள் சிக்குகிறார்கள். இது சுடுகாட்டு கொட்டகை முதல் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை வரை அனைத்து ஊழல்களுக்கும் பொருந்தும்.

போலீசைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை. மாலை ஆறு மணிக்கு மேல் ஒரு பெண் சினிமாவுக்கு போகலாம், வேலைக்குப் போகலாம் ஆனால் போலீஸ் ஸ்டேஷனில் மட்டும் இருக்கக்கூடாது என அரசாங்கமே கண்டிப்பாக சொல்லியிருக்கிறது. ஆக, ஒரு பெண்ணைக்கூட நம்பி ஒப்படைக்க முடியாத துறை என அரசாங்கத்தாலேயே ஒப்புக் கொள்ளப்பட்ட அரசின் ஓர் அங்கம் நம் காவல்துறை. இப்படி வருடத்தின் எல்லா நாட்களிலும் ஊழல் செய்கிற அதிகார துஷ்பிரயோகத்தில் ஊறித் தேறிய இந்த அரசு அதிகாரிகளை வைத்து தேர்தலை நேர்மையாக நடத்த முடியுமா? தேர்தல் கமிஷன் கட்டுப்பாட்டுக்குள் வந்தவுடன் இவர்கள் எல்லோரும் புனிதர்களாகி விடுவார்களா?

இன்னமும் உங்களுக்கு தேர்தல் கமிஷன் மீது நம்பிக்கை இருக்கும். அவர்கள் கடுமையாக கண்காணிக்கிறார்கள். பணம், பொருள் மற்றும் கள்ளச்சாராயம் என ஏராளமானவை கைப்பற்றப்படுகின்றன. எல்லா கட்சிகளும் தேர்தல் கமிஷனை கடுமையாக திட்டுகின்றன், ஆகவே தேர்தல் நேர்மையாக நடக்கிறது என நாம் உறுதியாக நம்பலாமென பரவலாக கருத்துக்கள் நிலவுகின்றன.

ஒவ்வொருவரும் இரண்டு முறை ஓட்டுப் போடுங்கள் என வெளிப்படையாக சொன்ன சரத்பவார், முஸ்லீம்களை பழிவாங்க எங்களுக்கு ஓட்டுபோடுங்கள் என்று சொன்ன அமித் ஷா ஆகியோரது பேச்சடங்கிய வீடியோ ஆதாரங்கள் தேர்தல் கமிஷன் வசம் இருக்கின்றன. ஆயினும் இவர்கள் மீது நடவடிக்கை இல்லை. இதுவரை நாற்பதாயிரத்துக்கும் மேலான விதிமீறல் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன, யாரும் இன்றுவரை தண்டிக்கப்படவில்லை. திருமங்கலம் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் வினியோகிக்கப்பட்டது என தலைமை தேர்தல் அதிகாரியே ஒப்புக்கொண்ட பிறகும் ஒருவர் மீதும் நடவடிக்கை எடுக்க இயலவில்லை. ஆக இந்த தேர்தல் கமிஷனால் நேர்மையானவர்களைக் கொண்டும் தேர்தலை நடத்த இயலாது, முறைகேடு செய்பவர்களை தண்டிக்கவும் முடியாது.

எந்த நடவடிக்கையும் எடுக்க இயலாத தேர்தல் கமிஷன், யாரும் பணம் வாங்கிக்கொண்டு ஓட்டு போடாதீர்கள் என வாக்காளர்களுக்கு அறிவுரை சொல்ல மட்டும் பெரிதும் சிரத்தை எடுத்துக் கொள்கிறது. காரணம் நீங்கள் பணம் வாங்கினால், அது அரசியல் கட்சியின் ஒரு முதலீடாகிவிடும். பிறகு அவர்கள் முதலீட்டுக்கு லாபம் பார்க்க ஊழல் செய்வார்கள். ஆகவே நீ நேர்மையாக இருந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்பதுதான் அதன் விளக்கம். உண்மையில் பெருமளவிலான பணம் வாக்காளர்களுக்கு கொடுப்பதில்தான் செலவாகிறதா?

ஒரு தேசிய நாளிதழின் முதல் பக்க முழு விளம்பரத்துக்கு தரப்படும் தொகை சற்றேறக்குறைய ஐம்பது லட்சம். ஒரு செய்திச் சேனலின் பத்துவினாடி விளம்பரத்துக்கான தொகை உத்தேசமாக இருபதாயிரம். நாமெல்லோரும் நரேந்திர மோடியின் முகரையை பார்ப்பதற்காக இந்தியா முழுவதும் வெளியாகும் நாளிதழ்களில் கடந்த இரண்டாண்டுகளில் மட்டும் ஆயிரத்து ஐந்நூறு முழுப்பக்க விளம்பரங்கள் தரப்பட்டிருக்கின்றன. இதனை இந்தியாவிலுள்ள எல்லா கட்சிகளும் தங்களது சக்திக்கேற்ற அளவில் செய்துகொண்டிருக்கின்றன. எல்லா கட்சிகளது டிவி விளம்பரங்களும் பெரிய சேனல்கள் எல்லாவற்றிலும் வருகின்றன.

ஐந்நூறு பேர் வரக்கூடிய ஒரு திருமணத்திற்கான சத்திர மற்றும் சாப்பாட்டு செலவு மட்டுமே குறைந்தபட்சம் இரண்டரை லட்சம் ஆகும் சூழலில்- சாராயம், போக்குவரத்து, சாப்பாடு, விளம்பரம் மற்றும் வருபவனுக்கு சம்பளம் என பணத்தை இறைக்க வேண்டிய நிகழ்வான மாநாடுகளும் பொதுக்கூட்டங்களும் லட்சக்கணக்கான மக்களைத் திரட்டி தினசரி நடத்தப்படுகின்றன. இணைய விளம்பரங்களுக்கான செலவே நூற்றுக்கணக்கிலான கோடிகள் ஆகிறது. மேடையமைப்பு மற்றும் கட்சி ஊழியர்களுக்கு ஆகும் பணம் என கடைநிலை செலவுகள் இருக்கின்றது. ஆக, வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை 100 சதவிகிதம் தடுத்தாலும்கூட தேர்தலுக்கு என கட்சிகள் செலவிடும் தொகை (எவ்வளவு குறைவாக கணக்கிட்டாலும்) ஆயிரக்கணக்கான கோடிகள் ஆகும். இவை அனைத்தும் சட்டபூர்வமாக தடுக்கவே முடியாத செலவுகள். இந்த பல்லாயிரம் கோடி முதலீட்டுக்கான ஒரே வருவாய் ஆதாரம் ஊழல்தான். ஆகவே நீங்கள் இந்த தேர்தல் முறையை ஏற்றுக்கொள்ளும்போதே அதன் விளைவான ஊழலையும் ஏற்றுக்கொள்ள வேண்டியவராகிறீர்கள்.

இந்த தேர்தல் எதற்காக நடத்தப்படுகிறது?

கோடீஸ்வர வேட்பாளர்கள்இதற்கு சொல்லப்படும் பதில் மக்கள் பிரதிநிதியை தேர்ந்தெடுக்க. அதிலும் குறிப்பாக, இருப்பவர்களில் நல்லவனைத் தேர்ந்தெடுக்க என்பதாக இருக்கும். அரசின் புள்ளிவிவரங்களின்படி இந்தியாவில் 70 சதம் மக்கள் போதுமான அளவு சாப்பாட்டுக்கு கூட செலவிட இயலாத ஏழைகள். அப்படியானால் மக்கள் பிரதிநிதிகளின் மொத்த எண்ணிக்கையில் 70 சதம் பேர் பரம ஏழைகளாக இருக்க வேண்டும். அதுதான் மக்கள் பிரதிநிதித்துவத்தின் நியாயமான விகிதாச்சாரம்.  ஆனால் இங்கே ஒரு வேட்பாளரது சின்னமும் முகமும் எல்லா வாக்காளர்களுக்கும் சென்றடையவே பல லட்சங்கள் செலவாகும்.

தமிழக வேட்பாளர்களில் ஓங்கி உலகளந்த உத்தமர் என பலராலும் சுட்டிக்காட்டவல்ல ஒரே வேட்பாளர் பத்திரிக்கையாளர் ஞாநி, தனது ஒருநாள் பிரச்சார செலவு ஐம்பதாயிரம் ஆவதாகச் சொல்கிறார். ஆகப்பெரும்பாலான பாராளுமன்ற வேட்பாளர்கள் கோடீஸ்வரர்கள். கட்சிக்கு தொடர்பே இல்லாத முதலாளிகளை வேட்பாளராக்கும் போக்கு இப்போது துவங்கியிருக்கிறது. சுருங்கச்சொன்னால் இந்த நாட்டின் பெரும்பாலானவர்களான ஏழை மக்களில் இருந்து ஒரு மக்கள் பிரதிநிதி உருவாக வாய்ப்பே கிடையாது. பிறகு என்ன மயிருக்கு இதனை மக்களாட்சி என நாம் அழைக்க வேண்டும்!

போகட்டும், இந்த எல்லா பிரச்சனைகளையும் தாண்டி ஒரு யோக்கியன் தேர்ந்தெடுக்கப்பட்டு பாராளுமன்றத்துக்கு போகிறான் என ஒரு வாதத்துக்கு வைத்துக்கொள்ளலாம். அவனால் உங்கள் பிரச்சனையை தீர்க்க முடியுமா? அவனது அதிகார எல்லை எத்தகையது?

மக்கள் பிரதிநிதிக்கு என்ன அதிகாரம்?

அதிகார வர்க்க நபர்களைக் கொண்ட ஒழுங்கு முறை ஆணையத்தால் மட்டுமே மின்சாரக் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. பெட்ரோல் விலை, எண்ணெய் நிறுவன அதிகாரிகளால் நிர்ணயிக்கப்படுகிறது. தொலைபேசித் துறையை டிராய் எனும் சுயேச்சையான அமைப்பு கட்டுப்படுத்துகிறது. நாட்டின் பொருளாதாரத்தின் போக்கை மாற்றும் ஒப்பந்தங்கள் பாராளுமன்றத்தின் கவனத்துக்கு வராமல் நிறைவேறுகின்றன (காட் ஒப்பந்தம், அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம்). பல ஒப்பந்தங்கள் பாராளுமன்றத்தின் ஒப்புதலின்றி நிறைவேற்றப்படுகின்றன. நாட்டு மக்களின் சொத்தான அரசுத்துறை நிறுவனங்கள் ஒரு அமைச்சரின் தனிப்பட்ட அதிகாரத்தின் மூலம் சுலபமாக விற்பனை செய்யப்படுகின்றன (பால்கோ, மாடர்ன் பிரெட்). கனிம வளங்கள் முதலாளிகளுக்கு இனாமாக தரப்படுகின்றன. இவை எல்லாமே நம் வாழ்வோடு பெரிதும் தொடர்புடைய விடயங்கள்.

நாடாளுமன்றம்
மக்கள் பிரதிநிதிகளுக்கு அதிகாரம் இல்லை.

ஆனால் இவற்றைப் பற்றி முடிவெடுப்பதில் உங்களது மக்கள் பிரதிநிதிக்கு எந்த அதிகாரமும் இருக்கப்போவதில்லை. உங்களது வேலை பறிபோனாலோ, உங்களது வாழிடம் பறிக்கப்பட்டாலோ ஒரு எம்.பியால் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்க இயலாது. உங்கள் ஊரின் ஏரியோ ஆறோ விற்பனை செய்யப்பட்டால் அதனை தடுத்து நிறுத்த உங்களது எம்.எல்.ஏவால் முடியாது. கார்ப்பரேட் நிறுவனங்கள் அரசோடு போடும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கூட அறிய முடியாது.

அரசின் எல்லா பேச்சுவார்த்தை விவரங்களும், வெளிநாட்டு ஒப்பந்தங்களும் முன்பே அதிகாரிகள் மட்டத்தினால் இறுதி செய்யப்பட்டு விடும், பிரதமர் மற்றும் அமைச்சர்கள் மட்டத்தில் அமையும் பேச்சென்பது ஒரு சம்பிரதாயமே என ஈழப்பிரச்சனை தொடர்பான ஒரு பேட்டியில் நேரடியாகவே குறிப்பிட்டார் ப.சிதம்பரம். வருடத்துக்கு ஒன்றிரண்டு கோடி பாரளுமன்ற/ சட்டமன்ற உறுப்பினர் நிதியை செலவு செய்யப் பரிந்துரைக்கலாம், அதுதான் ஒரு மக்கள் பிரதிநிதியின் இன்றைய அதிகபட்ச அதிகாரம் (அந்தப்பணமும் மாவட்ட ஆட்சியர் கட்டுப்பாட்டில்தான் இருக்கும், அவரே செலவு செய்யும் பொறுப்பிலிருப்பவர்). ஆனால் அந்தத் தொகையை பதவியில் இல்லாத உள்ளூர் பவர்ஸ்டார்களே செய்வார்கள். அதிகாரமற்ற மக்கள் பிரதிநிதிகளுக்கு உள்ளூர் அளவில் ஒரு செல்வாக்கு போய்விடக் கூடாது என்பதற்கே இந்த தொகுதி மேம்பாட்டு நிதி. இது ஒரு நாடகம். பிறகு உங்கள் ஓட்டுப்போடும் புனிதக் கடமையின் பலன்தான் என்ன?

இது அதிகார வர்க்கத்தால் ஆளப்படும் தேசம்!

கடந்த பத்தாண்டுகளாக பிரதமராக இருக்கும் மன்மோகன் ஒரு மக்கள் பிரதிநிதியல்ல. திட்டக்கமிஷன் துணைத்தலைவர் ஒரு மக்கள் பிரதிநிதியல்ல. ரிசர்வ் வங்கியின் இன்றைய தலைவர் ஒரு இந்தியரே அல்ல (பிறப்பின் அடிப்படையில் சொல்லவில்லை). ஆனால் இவர்கள் எல்லோரும் நம் நாட்டின் தலைவிதியை தீர்மானிப்பதில் முக்கிய பாத்திரத்தை வகிப்பவர்கள். ஆகவே நண்பர்களே, இது அதிகாரிகளால் ஆளப்படும் ஒரு தேசம். ஜனநாயக ஆட்சி என்பது வெறும் பெயர்தான்.

அதிகார வர்க்கம்
அதிகார வர்க்கத்தால் ஆளப்படும் தேசம்

ஒரு எளிய உதாரணத்தோடு இதனை விளங்கிக் கொள்ளலாம். இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஜார்ஜ் ஃபெர்ணாண்டர்ஸ் தென்னமெரிக்காவுக்கான சுற்றுப் பயணத்தின்போது அமெரிக்க அதிகாரிகளால் அம்மணமாக்கி சோதனை செய்யப்பட்டார், ஒருமுறையல்ல இரண்டு முறை. பின்னாளில் ஜார்ஜே அதனை ஒப்புக்கொண்ட பிறகும், ஒரு அமெரிக்க அதிகாரி தான் எழுதிய புத்தகத்தில் அச்செய்தியை பகடியாக எழுதி வெளியிட்ட பிறகும் இந்திய அரசு மட்டத்தில் எந்த சலனமும் இல்லை.

ஆனால் ஒரு பச்சை பிராடுத்தனம் செய்து அமெரிக்க போலீசிடம் சிக்கிக்கொண்ட தேவயானி கோப்ரகடேவின் கைதுக்கு இந்திய அரசு கொதித்தெழுந்தது. அமெரிக்கத் தூதரகத்தின் பாதுகாப்பு குறைக்கப்பட்டது, அவர்களது சலுகைகள் பறிக்கப்பட்டன, அதிகாரியொருவர் திருப்பியனுப்பப்பட்டார். இந்தியா வந்த அமெரிக்க அரசு விருந்தாளிகளை சந்திக்க அரசியல் தலைவர்களும் அமைச்சர்களும் மறுத்தார்கள். கிட்டத்தட்ட ஒரு போர்ச்சூழலே அந்த பித்தலாட்டக்கார அதிகாரிக்காக உருவாக்கப்பட்டது. பிரதமர், உள்துறை அமைச்சருக்கு அடுத்த நிலையில் உள்ள பாதுகாப்பு அமைச்சரைக் காட்டிலும் ஒரு அதிகாரிக்கு செல்வாக்கு இருக்குமானால், இது யாரால் நடத்தப்படுகிற ஆட்சியாக இருக்க இயலும்?

சரி, இது மக்களாலோ மக்கள் பிரதிநிதிகளாலோ நடத்தப்படுகிற ஆட்சியில்லை என்பது உறுதியாகி விட்டது. இப்போது இது யாருக்காக நடத்தப்படும் ஆட்சி என்பதை பார்க்கலாம்.

இது முதலாளிகளுக்கான அரசு – ஆட்சி!

தொழிலாளிகளை ஒடுக்கும் மாருதி கார் நிறுவனம் உங்கள் ஓட்டை விற்காதீர்கள் என ஒழுக்கமாய் சொல்கிறது. அஞ்சு வருசமா எதையுமே செய்யாத உனக்கு என் ஓட்டு இல்லை என யாருக்கோ எதிராக வாக்களிக்க தூண்டுகிறது டாலர் பனியன்-ஜட்டி கம்பெனி. இது டேலண்டுக்கான தேர்தல் என்கிறது ஹீரோ ஹோண்டா. ஒயர் கம்பெனி முதல் ஊறுகாய் கம்பெனிவரை எல்லா நிறுவனங்களும் ஓட்டுபோடுவதன் மகாத்மியத்தைப் போற்றி விளம்பரம் கொடுத்த வண்ணமிருக்கின்றன. அது அவர்களது சமூக அக்கறை என கொள்ளலாமா? என் பொருளை வாங்கினால் அதன் லாபத்தில் ஒருபாகம் ஏழைக்குழந்தைகள் படிப்புக்கு தரப்படும் என்கிறது இந்துஸ்தான் லீவர் நிறுவன விளம்பரம். அதாவது அவர்கள் சமூக அக்கறையை காட்டவேண்டுமானால் நீங்கள் அவர்களது பொருளை வாங்கியாக வேண்டும்.

ஓட்டுக்கு நோட்டு
தொழிலாளிகளை ஒடுக்கும் மாருதி கார் நிறுவனம் உங்கள் ஓட்டை விற்காதீர்கள் என ஒழுக்கமாய் சொல்கிறது.

ஆனால் ஓட்டுபோடு எனும் விளம்பரத்துக்கு மட்டும் எந்த பிரதிபலனும் பாராமல் இவர்கள் விளம்பரம் செய்கிறார்களே.. ஏன்? காரணம் இது இவர்களுக்கான அரசு. இந்த அரசமைப்பானது அவர்களது நலனுக்காகவே கட்டமைக்கப்பட்டது. ஆகவே அதன்மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை தக்கவைக்கும் அக்கறையும் பொறுப்பும் அவர்களுக்கு இருக்கிறது. அதற்கான முயற்சிதான் இந்த விளம்பரங்கள்.

பட்ஜெட் போடும்போது விவசாயிகளையோ நெசவாளர்களையோ நமது நிதியமைச்சர்கள் ஆலோசனை செய்ததாக கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஆனால் எல்லா பட்ஜெட்டுக்கு முன்பும் முதலாளிகளோடு அவர்கள் ஆலோசனை செய்கிறார்கள். இந்தியாவுக்கு வந்த பில் கிளிண்டன் பாராளுமன்றத்தில் செலவிட்ட நேரத்தைவிட அம்பானி சகோதரர்களை சந்திக்க ஒதுக்கிய நேரம் அதிகம் என்பதை அறிவீர்களா? ஒரு சாமானிய மனிதன் பேருந்து நிலைய கழிப்பறையில் சிறுநீர் கழிக்கவே மூன்று ரூபாய் செலவழிக்கும் நாட்டில் ஒரு சதுர மீட்டர் விளைநிலம் ஒரு ரூபாய் விலையில் முதலாளிகளுக்கு தாரை வார்க்கப்படுகிறது. அரை லிட்டர் பால் இருபது ரூபாய் விலையுடைய நாட்டில் நூறு ஏக்கர் தாதுமணல் சுரங்க நிலம் பதினாறு ரூபாய் ஆண்டு குத்தகைக்கு விடப்படுகிறது. உங்கள் தெருவில் உள்ள கடைக்காரர் திடீரென அரிசி விலையை இரண்டு மடங்காக்கினால் நாம் அமைதியாக இருப்போமா? அதே அண்ணாச்சி பக்கத்து தெருவுக்கு பழைய விலைக்கே அரிசி விற்றால் அவரை நீங்கள் விட்டுவைப்பீர்களா? இயற்கை எரிவாயு விலை விவகாரத்தில், எந்த இடையூறும் இல்லாமல் இதைத்தான் அம்பானி செய்கிறார்.

2ஜி ஊழல், நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டு ஊழல், தாதுமணல் ஊழல் போன்ற எண்ணற்ற ஊழல்களின் அடிப்படை, முதலாளிகளுக்கு நாட்டின் செல்வம் அடிமாட்டு விலைக்கு விற்கப்பட்டிருக்கிறது என்பதுதான். இவற்றால் பலன் பெற்றவர்கள் எல்லோருமே டாடா, அம்பானி, அதானி, பிர்லா போன்ற  தரகு முதலாளிகள். இவர்கள் முறைகேடாக பெற்ற பணத்தை திரும்பப் பெற முடியாது என்பது ஒரு பக்கம் இருக்கட்டும், இவர்களது அந்த ஆதாயத்துக்காக தரகு வேலை பார்த்த நீரா ராடியாவைக்கூட நம் அரசால் கைது செய்ய முடியாது என்பதுதான் யதார்த்தம். ஆக, அரசாங்கம் என்பது முதலாளிகளுக்காவே நடத்தப்படுகிறது. எல்லா ஊழல்களும் அந்த முதலாளிகளின் லாபத்துக்காகவே செய்யப்படுகின்றன. ஊழலின் மூலவர்கள் பாதுகாப்பாக இருக்கும் நாட்டில் ஊழலை மட்டும் எப்படி ஒழிக்க முடியும்?

முதலாளிகளுக்கான நீதிதான் நீதித்துறையின் நீதி!

இவை எல்லாம் இருந்தாலும் நாட்டைக் காப்பாற்றும் வல்லமை நம் நாட்டு நீதிமன்றத்துக்கும் சட்டத்துக்கும் உண்டு என வாதிடுவோர் பலர் இருக்கிறார்கள். நாட்டின் சகல பாவங்களையும் போக்கும் பெரிய தோஷபரிகார ஸ்தலமாக உச்ச நீதிமன்றம் கருதப்படுகிறது. ஆனால் உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் எட்டுபேர் ஊழல்வாதிகள் என்பதற்கு என்னிடம் ஆதாரம் இருக்கிறது என, தான் தொடுத்த வழக்கொன்றில் குறிப்பிட்டார், பிரஷாந்த் பூஷன் (மற்ற நீதிபதிகள் நியாயவான்கள் என அவர் சொல்லவில்லை, ஆதாரம் இல்லை அவ்வளவே). அவர் சொன்னது உண்மை என கருதினால் உச்சநீதிமன்றம் ஒரு விசாரணைக் கமிஷனை நியமித்திருக்க வேண்டும். அல்லது பொய்யென்றால் பிரஷாந்த் பூஷன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கைதாயிருக்க வேண்டும். இரண்டையும் செய்யாமல் உச்ச நீதிமன்றம் அவரிடம் சமரசத்துக்கு முன்வந்தது, குறைந்தபட்சம் வருத்தத்தையாவது பதிவு செய்யுங்கள் நாம் வழக்கை முடித்துக்கொள்ளலாம் என கெஞ்சியது. ஏன்?

கஙகுலி
பாலியல் குற்றம் சாட்டப்பட்ட உச்சநீதிமன்ற நீதிபதி கங்குலி.

ஸ்டெர்லைட் வழக்கு உள்ளிட்ட பெரும்பாலான பெருநிறுவனங்களோடு தொடர்புடைய வழக்குகளில் உச்ச நீதிமன்றம் முதலாளிகளுக்கு சாதகமான தீர்ப்பையே வழங்குகின்றது, பல பிரச்சனைகளில் தலையிடவே மறுக்கின்றன நீதிமன்றங்கள். அரிதினும் அரிதான நிகழ்வாக, வோடாஃபோன் நிறுவனம் வரிமோசடி செய்தது உறுதியாகி அவர்கள் பதினோராயிரம் கோடி அபராதம் செலுத்தவேண்டுமென நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் இத்தீர்ப்புக்கு கட்டுப்பட முடியாது என்று சொல்லி அவர்கள் சர்வதேச நீதிமன்றங்களை அணுகுகிறார்கள். சர்வதேச மருந்து நிறுவனங்கள் இந்தியாவின் சட்டங்களுக்கெதிராக, தீர்ப்புக்கெதிராக சர்வதேச நீதிமன்றத்தை நாடுகின்றன. 2ஜி ஊழல் காரணமாக ரத்து செய்யப்பட்ட ஸ்பெக்ட்ரம் உரிமங்களால் தங்களுக்கு ஏற்பட்ட நட்டத்துக்கு ஈடு கேட்டு தொலைத்தொடர்பு நிறுவனங்களும் சர்வதேச தீர்ப்பாயங்களை அணுகுகின்றன. உள்நாட்டில் செயல்படும் சிறப்பு பொருளாதார மண்டலங்களிலோ இந்தியாவின் தொழிலாளர் சட்டங்கள் செல்லுபடியாகாது.

இருக்கும் மிச்ச சொச்ச தொழிலாளர் சட்டங்களையும் ஒட்டுமொத்தமாக நீக்கு என முதலாளி வர்க்கம் அரசுக்கு கட்டளையிடுகிறது. தொலைத்தொடர்பு நிறுவங்களின் வருவாய் குறித்து தணிக்கை செய்ய சி.ஏ.ஜிக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியிருக்கிறது. இது நிறுவன ஒப்பந்தங்களின் புனிதத்தன்மையை கேள்விக்குள்ளாக்கும். மேலும் இது மற்ற துறைகளுக்கும் விரிவாக்கப்படும் என அஞ்சுகிறோம் என சொல்லியிருக்கிறார் ஃபிக்கி (இந்திய வர்தக சபைகள்-தொழிலகங்களின் சம்மேளனம்) தலைவர் சித்தார்த் பிர்லா. என் வருமானத்தைக்கூட நீ ஆய்வு செய்யக்கூடாது என நீதிமன்றத்தை மறைமுகமாக கண்டிக்கிறது முதலாளிகள் கூட்டம். கார்ப்பரேட் கம்பெனிகளால் நம் சட்டத்தை வளைக்கமுடியும் சூழல் ஒருபக்கம், அவர்கள் நம் நாட்டின் நீதிமன்ற தீர்ப்புக்கு கட்டுப்பட மாட்டார்கள் எனும் கள யாதார்த்தம் மறுபக்கம் என இந்திய சட்டத்தின் மாண்பு சந்தி சிரிக்கிறது.

முதலாளிகளால் பராமரிக்கப்படும் ஊடகங்கள்!

முதலாளிகளுக்கு சேவை செய்யும் ஊடகங்கள்
பன்னாட்டு ஊடக முதலை முர்டோச்சின் வழித்தடத்தில் முதலாளிகளுக்கு சொந்தமான, முதலாளிகளுக்கு சேவை செய்யும் ஊடகங்கள்

இந்த எல்லா பிரச்சனைகளையும் மக்களிடம் தெரியப்படுத்தி அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே இருக்கிற ஊடகங்களின் நிலை என்ன? இன்று அவர்களும் பெருமுதலாளிகள் கைபொம்மையாகத்தான் இருக்கிறார்கள். அனேக ஊடகங்கள் பெருமுதலாளிகளால் கைப்பற்றப்பட்டிருக்கின்றன, அம்பானி வசம் மட்டும் சுமார் நாற்பது சேனல்கள் இருக்கின்றன. மற்ற ஊடகங்களும் அவர்களது கட்டுப்பாட்டில் இயங்குகின்றன. நீங்கள் எதைப் பார்க்க வேண்டும் என்பதை அவர்கள்தான் தீர்மானிக்கிறார்கள். நாம் யாருக்காக அழவேண்டும் என்பதை அவர்கள்தான் முடிவு செய்கிறார்கள். அவர்கள் தீர்மானித்ததால்தான் நாம் நிர்பயாவுக்காக மெழுகுவர்த்தி ஏந்தினோம். அவர்கள் விரும்பியதால் அன்னா ஹசாரேவின் ஏழுநாள் உண்ணாவிரதத்தின் ”நியாயம்” நம் எல்லோரையும் வந்தடைந்தது. அவர்கள் விரும்பவில்லை, ஆகவே பத்து வருடமாக நடக்கும் இரோம் ஷர்மிளாவின் உண்ணாவிரதப்போராட்டம் நம் யாரையும் சலனப்படுத்தவில்லை. விற்பனைச் சரக்காக அவர்கள் செய்தியை மாற்றியது மட்டும் பிரச்சனை அல்ல, சுவாரஸ்யமான செய்தியை மட்டும் நாடும் இழிவான ரசிகனாக நம்மையும் மாற்றியிருக்கிறார்கள்.

இப்படி இந்திய அரசு அமைப்பின் எல்லா தரப்பும் சீரழிந்திருக்கிறது. அதனை கண்காணிக்கவும் தண்டிக்கவும் உள்ள அமைப்புக்கள் ஊழல்மயமாகிவிட்டன. சுருக்கமாக சொன்னால் இன்னதென்று குறிப்பிட்டு சொல்ல முடியாதபடி இந்திய ஜனநாயகத்தின் ஸ்பேர் பார்ட்ஸ் எல்லாமே புரையோடிப்போய் அழுகி நாற ஆரம்பித்திருக்கிறது. அது மக்களின் விவாதப் பொருளாவதை தவிர்க்கவே இந்த ஓட்டுப்போடும் புனிதக் காரியத்தின் மகிமைகளை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது விளம்பரம் செய்கிறார்கள்.

மன்மோகன் சிங் காலாவதியாகி மோடி திணிக்கப்படுவது ஏன்?

மன்மோகன் சிங், மோடி
மன்மோகன் சிங் காலாவதியாகி மோடி திணிக்கப்படுவது ஏன்?

இந்திய முதலாளித்துவ ஜனநாயகத்தின் இறுதி இலக்கு நாட்டை மொத்தமாக முதலாளிகள் சொத்தாகவும் மக்களை வெறும் நுகர்வோராகவும் மாற்றுவதே. அதனை விரைவாக செய்ய திணிக்கப்பட்டவர்தான் மன்மோகன். முதலாளித்துவத்தின் யூஸ் அண்டு த்ரோ விதிப்படி இனி அவர் உபயோகமற்றவர். ஒரு பெரிய தாதாவின் கீழிருக்கும் கும்பலில், ஸ்கெட்ச் போடும் ஆளைப் போன்றவர் மன்மோகன். கார்ப்பரேட்டுகளுக்கு நாட்டை பலியிடும் திட்டத்துக்கு ஸ்கெட்ச் போடும் அடிப்படைப் பணிகளை அவர் செவ்வனே செய்துவிட்டார், இது கழுத்தறுக்க வேண்டிய கட்டம். இப்போது ஸ்கெட்ச் போட்ட மன்மோகனுக்கு இங்கு வேலையில்லை, இனி இந்த அசைன்மெண்டுக்கு மோடி போன்ற மூளையற்ற அடியாள் அதிகாரத்தில் இருப்பதுதான் முதலாளிகளுக்கு வசதி.

அதனால்தான் பத்து ஆண்டுகளுக்கு முன்னால் பொருளாதார மீட்பராக அறிமுகமான மன்மோகன் இன்று அப்படி ஏற்றி விடப்பட்டவர்களாலேயே செயல் திறனற்றவர் என தூற்றப்படுகிறார். முதலாளிகளின் ஃபாசிஸ்ட் தேர்வில் முதல் வகுப்பில் தேறிய மோடி, புதிய மீட்பராக அறிமுகம் செய்யப்படுகிறார். அங்கிங்கெனாதபடி எல்லா ஊடகங்களிலும் அவர் வளர்ச்சி நாயகனாக முன்னிறுத்தப்படுகிறார். தெகல்கா கூட அவருக்கு எதிரான ஆதாரங்களை இப்போது வெளியிட மறுக்கிறது. ஒருவேளை மோடியை கொண்டுவரும் திட்டத்தில் பிசகு ஏற்படும் சாத்தியத்தை கவனத்தில் கொண்டு களமிறக்கப்பட்டிருக்கும் டம்மி வேட்பாளர்தான் ஆம் ஆத்மி அரவிந்த் கெஜ்ரிவால். குறைந்தபட்ச அவநம்பிக்கை இருப்பின் அதை சமன் செய்யவும் அது அதிகமாகி விட்டால் அதனை அறுவடை செய்யவுமே அவர் களத்துக்கு அழைத்து வரப்பட்டிருக்கிறார்.

ஆம் ஆத்மி – ஆளும் வர்க்கத்தின் பிளான் பி

நாடு முழுக்க இருக்கும் இரண்டு லட்சம் என்.ஜி.ஓக்களின் ஏக பிரதிநிதிதான் கெஜ்ரிவால். அவரது வேட்பாளர்கள் பலரும் என்.ஜி.ஓ ஓனர்கள்தான். பொதுவான நபர்களை ஆ.ஆ கட்சிக்கு கொண்டுவரும் பிள்ளை பிடிக்கும் வேலையை செய்வதும் என்.ஜி.ஓக்கள்தான். ஒரு வருடத்துக்குள் கட்சி ஆரம்பித்து நாடுமுழுக்க வேட்பாளர்களை நிறுத்தும் வல்லமை, இவர்களால்தான் ஆம் ஆத்மிக்கு சாத்தியப்பட்டிருக்கிறது. இந்த நிறுவனங்களில் பெரும்பாலானவை ஏகாதிபத்திய நிதியால் இயங்குபவை. தங்களை ஒரு மாற்று என சொல்லிக்கொள்ளும் போலிக் கம்யூனிஸ்டு கட்சிகளும் மற்ற பெயர்ப்பலகை இடதுசாரிக் கட்சிகளும் இவர்களுக்கு எவ்வகையிலும் மாற்றல்ல. அவர்களது முதலாளித்துவ சார்பை விளங்கிக்கொள்ள சிங்கூர் நந்திகிராம உதாரணங்களே போதும்.

இந்தியா இனியும் ஒரு நாடல்ல, அது ஒரு ஐஎன்சி  (INC) கம்பெனி – இங்கே வளர்ச்சி என்பது என்ன?

அரசு என்பது ராணுவம், போலீஸ் போன்ற துறைகளை மட்டும் வைத்திருந்தால் போதும் மற்ற எல்லாவற்றையும் எங்களுக்கு கொடு என்பதுதான் முதலாளிகளின் உத்தரவு. மக்கள் பிரதிநிதிகள் எனும் பெயரில் அரசியல் கட்சிகளினால் ஏற்படும் சிறிய அளவு தாமதத்தை தவிர்க்கவும் அவர்களுக்கு கொடுக்கவேண்டிய லஞ்சத்தின் அளவை குறைக்கவும் முதலாளிகள் “லெஸ் கவர்மெண்ட், மோர் கவர்னென்ஸ்” எனும் செயல் திட்டத்தை முன்மொழிகிறார்கள். அரசின் பங்கைக் குறை, அதிகாரிகளின் அதிகாரத்தை அதிகமாக்கு என்பதாக அதனை புரிந்துகொள்ளலாம். இங்கே அடுத்து யார் ஆட்சிக்கு வந்தாலும் இந்த செயல்திட்டம்தான் அமுலுக்கு வரும். இந்த காரணிகள் அனைத்தையும் பரிசீலித்தால் நாம் சிக்கியிருக்கும் வலையின் எல்லா கண்ணிகளும் ஏகாதிபத்தியத்தோடு இணைக்கப்பட்டவை என்பது புலனாகும். இந்த அமைப்புக்குள் உருப்படியான மாற்றத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு அறவே இல்லை என்பதும் விளங்கும்.

இந்தியா இன்க்
இந்தியா ஒரு நாடு அல்ல, முதலாளிகள் முதல் போட்டு லாபம் சம்பாதிக்க பயன்படும் கம்பெனி.

இவை எல்லாவற்றுக்கும் மேல் நம் நாடு கணிசமான வளர்ச்சியை சந்தித்திருப்பதாக நம்ப வைக்கப்படுகிறோம். மன்மோகன், சிதம்பரம், கோபண்ணா போன்ற காங்கிரஸ்காரர்களும் பத்ரி, வெங்கடேசன் போன்ற பா.ஜ.க சார்பு “அறிவுஜீவிகளும்” நாடு வளர்ந்திருப்பதாகவே சொல்கிறார்கள். பா.ஜ.க வந்தால் அது இன்னும் வேகமாக இருக்கும் என்பதுதான் பத்ரி மாதிரியானவர்களின் அபிப்ராயம். அவர்களது பார்வையில் வளர்ச்சி என்பது அகலமான சாலைகள், பெருமளவுக்கான அன்னிய முதலீடு, பெரிய ஷாப்பிங் மால்கள் ஆகிய கட்டுமானங்களும் ஜி.டி.பி, அன்னிய செலாவணி கையிருப்பு ஆகிய எண்களும்தான்.

உண்மையில் இவை நமக்கு என்ன வளர்ச்சியை தந்திருக்கின்றன? சாலைகள் அகலமாகியிருக்கின்றன, ஆனால் இலவசமாக பயணித்த சாலைகளை பாவிக்க பணம் செலுத்த வேண்டிய நுகர்வோராக இன்று நாம் மாற்றப்பட்டு விட்டோம். சொந்த ஊரில் பிழைக்கும் வாய்ப்பு நம்மில் பெரும்பாலானோருக்கு இன்றில்லை. நாம் பெருநகரங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் ஓடுகிறோம். வட இந்திய பணியாளர்கள் நம் நகரங்களுக்கு வருகிறார்கள்.

பயணங்கள் இலகுவாகியிருக்கின்றன, ஆனால் அவை நமக்கு செலவு மிக்கதாகியிருக்கின்றன, அது தவிர்க்க இயலாததாகி நாம் நவீன நாடோடிகளாக வாழ நிர்பந்திக்கப்பட்டிருக்கிறோம். வாழ்வின் இனிமையான பருவமாக கருதப்பட்ட குழந்தைப் பருவம் இன்றைய மாணவர்களுக்கு பெரும் சுமையாகவும் வெறும் போட்டியாகவும் மாறியிருக்கிறது. முன்பு தண்ணீர் விலைபொருளாக இருந்திருக்கவில்லை, அது அதிகபட்சமாக கோரியது உங்கள் உழைப்பை மட்டுமே. இன்று கிராமம் நகரம் என பாரபட்சமில்லாம் தண்ணீர் ஒரு விற்பனைப் பண்டம். கேன் தண்ணீர் கவர்ச்சிக்கு நாம் ஆட்படுத்தப்பட்ட வேளையில் அரசு தந்திரமாக குடிநீர் வழங்கும் கடமையில் இருந்து விலகிவிட்டது.

இன்று டிவியும் வாகனமும் இலகுவாக கிடைக்கிறது ஆனால் நாளைய நம் வேலை என்பது அனேகருக்கு உத்திரவாதமற்றதாக மாறிவிட்டது. பெரிய அதிநவீன மருத்துவமனைகள் எல்லா நகரங்களிலும் முளைக்கின்றன, ஆனால் மருத்துவம் ஏழைகளுக்கு கைக்கெட்டாததாக இருக்கிறது. சகல வசதிகளோடு இருக்கும் பள்ளி கல்லூரிகள் எல்லா இடங்களிலும் இன்று இருக்கின்றன, ஆனால் கல்விச்செலவானது நடுத்தர வர்க்க மக்களுக்குகூட பெருஞ்சுமையாய் மாறியிருக்கிறது.

பொருள், வசதி என்றில்லை, வாழ்க்கை முறையும் பெருமளவு சிதைக்கப்பட்டிருக்கிறது. லஞ்சம் வாங்குவது குற்றம் எனும் சிந்தனையை மக்களில் பலரும் கைவிட்டாயிற்று. இயல்பான மனித அற உணர்ச்சிகள் குறைந்து போய்க் கொண்டிருக்கிறது, அதன் விளைவாக சாமானிய மக்கள் ஈடுபடும் குற்றச் செயல்கள் பெருகுகின்றன. இளைஞர்கள் பலர் சமூக சிந்தனையற்றவர்களாக வளர்க்கப்பட்டிருக்கிறார்கள். அதனால் தோல்வியடையும் வேளையில் தான் தனித்து விடப்பட்டதாக இளையோர்கள் உணர்கிறார்கள். விளைவு, முப்பது வயதுக்குட்பட்டோரது மரணத்திற்கான முதல் காரணியாக தற்கொலை மாறியிருக்கிறது. குடிக்கும் தண்ணீரில் இருந்து கேட்கும் செய்திவரை எல்லாவற்றையும் ஒரிஜினல்தானா என சந்தேகிக்க வேண்டிய அளவுக்கு நாம் நம்பிக்கையற்றவர்களாக மாற்றப்பட்டிருக்கிறோம். மனசாட்சியோடு நேர்மையாக சிந்தித்தால் இந்த வளர்ச்சி நம்மை பாதுகாப்பற்றவர்களாக, சக மனிதர்கள் மீது நம்பிக்கையற்றவர்களாக, நிம்மதியில்லாதவனாக, கடனாளியாக மாற்றியிருப்பது புரியும். இது வளர்ச்சியா, வளர்ச்சியென்றால் இந்த வளர்ச்சிதான் நமக்கு வேண்டுமா?

மேற்சொன்ன உண்மைகளை விவாதிக்கும் எல்லா தருனங்களிலும் நாம் எதிர்கொள்ளும் கேள்வி, இந்த அரசமைப்பு பிரயோஜனமற்றது என்றால் வேறு மாற்றுதான் என்ன?

புழுத்து நாறும் இந்த அரசமைப்பிற்கு தீர்வு என்ன?

நாம் சந்திக்கும் எல்லா பிரச்சனைகளுக்குமான ஆணிவேர் தனிச் சொத்துடைமைதான். பெண்ணடிமைத்தனம், வறுமை, மதம் என எல்லா சிக்கல்களும் தனியுடைமையால்தான் உருவாகின்றன. ஒருவன் எவ்வளவு வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம் எனும் சூழலே இன்னொருவனிடம் இருந்து அபகரிக்கவும், அடுத்தவனை அடிமையாக்கவும் தூண்டுகிறது. அதற்கான கவசமாக மதம் பயன்படுத்தப்படுகிறது. பணக்கார வர்கத்தின் வளர்ச்சி என்பது ஏழைகளை மேலும் ஏழையாக்காமல் சாத்தியப்படாது. இந்தியாவில் வீடற்றவர்களின் எண்ணிக்கை இருபது கோடி, வசிக்க ஆளற்ற வீடுகள் சற்றேறக்குறைய ஐந்துகோடி. தஞ்சையில் விவசாய வேலைக்கு ஆளில்லை, ஓசூர் போன்ற தொழில் நகரங்களில் தொழிலாளர்களுக்கு வேலையில்லை. இந்த அபாயகரமான முரண்பாடுதான் முதலாளித்துவம் தரும் பரிசு. ஆகவே நம் பிரச்சனைகளின் தீர்வென்பது தனிச்சொத்துடமையை ஒழிக்கும் கோட்பாட்டின் வாயிலாகத்தான் கிடைக்கும்.

சோசலிசப் புரட்சியின் சாதனைகள்

1917 புரட்சிக்குப் பிறகு அரசமைத்த லெனின், முதலில் மூன்று காரியங்களை செயலாக்குகிறார்.

  • நிலங்களை விவசாயிகளுக்கு பிரித்தளிப்பது.
  • பெரிய நிறுவனங்களை அரசுடமையாக்குவது.
  • சமனற்ற வெளிநாட்டு ஒப்பந்தங்களை ரத்து செய்வது.
லெனின் - ஸ்டாலின்
உழைக்கும் மக்களுக்கான அரசை உருவாக்கிய முன்னோடி தலைவர்கள் – லெனின், ஸ்டாலின்

பிறகு தமது அரசின் முக்கியமான உடனடி இலக்குகளாக அனைவருக்கும் உணவு, இலவசக் கல்வி மற்றும் மருத்துவம் ஆகிவற்றை நிர்ணயித்தார் . இவற்றை அடைந்த பிறகே மற்றவற்றின் மீது கவனம் செலுத்தப்படும் எனவும் அறிவித்தார். கல்வி புகட்டுவது ஒரு மக்கள் நடவடிக்கையாக மாற்றப்படுகிறது. கற்ற ஒவ்வொருவரும் இன்னொருவருக்கு கற்றுத் தரவேண்டும் எனும் முயற்சி தொடங்குகிறது. தொழிலாளர்கள் அதிகம் கூடும் ஆலைகளிலும் பண்னைகளிலும்கூட பள்ளிகள் துவங்கப்படுகின்றன. முதியோருக்கான கல்வி தனியே செயல்படுத்தப்படுகிறது. 1918 அரசியல் சட்டத்தில் அனைவருக்கும் ஒரே தரத்திலான இலவசக் கல்விச் சட்டமாக்கப்படுகிறது. அதுவரை இருந்த வசதிக்கு ஏற்ப இருந்து வந்த பாரபட்சமான கல்விமுறை ஒழிக்கப்பட்டது.

எழுத்தறிவை மூன்று சதவிகிதத்தில் இருந்து நூறு சதவிகிதமாக்க சோசலிச ரஷ்யா எடுத்துக்கொண்ட காலம் வெறும் பத்தாண்டுகள். புரட்சி நடந்து இருபதாண்டுகளுக்குள் ரசியாவில் வரிவடிவம் இல்லாதிருந்த நாற்பது தேசிய இனங்களின் (சிறுபான்மை இனங்கள் உட்பட) மொழிகளுக்கு வரிவடிவம் உருவாக்கப்பட்டது. நாடு முழுக்க கிராமங்களிலும் நகரங்களிலும் பெரிய நூலகங்கள் உருவாக்கப்பட்டன. ஸ்டாலின் காலத்தில், ஏழை நாட்டு மாணவர்களுக்கு அறிவு மறுக்கப்படக் கூடாது என்பதற்காக அறிவியல் நூல்கள் மிக மிக மலிவான விலையில் அவர்கள் மொழியிலேயே தயாரித்தளிக்கப்பட்டது. யுத்தத்தினால் ஆதரவற்றோராகிவிட்ட ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு ஏராளமான காப்பகங்கள் நாடெங்கும் கட்டப்பட்டன. அவர்களில் இருந்து பல ஆய்வாளர்களும் கல்வியாளர்களும் பின்னாட்களில் உருவானார்கள்.

மற்ற இலக்குகளான அனைவருக்கும் உணவு, குடியிருப்பு, மருத்துவம் ஆகியவை ஸ்டாலின் காலத்தில் முழுமையாக நிறைவேற்றப்பட்டன. 1940 மற்றும் 1950-க்கும் இடையேயான பத்தாண்டுகளில் ரசியாவின் மருத்துவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்து ஐம்பத்தைந்தாயிரத்தில் இருந்து இரண்டு லட்சத்து அறுபத்தைந்தாயிரமாக உயர்ந்த்து. பத்தாண்டுகளில் 1.10 லட்சம் புதிய மருத்துவர்கள். கர்ப்பிணிகள் மருத்துவமனையை நாடிச் செல்ல வேண்டியதில்லை, அவர்களை நாடி மருத்துவப் பணியாளர்கள் வருவார்கள். பிரசவத்திற்கான உத்தேசமான தேதிக்கு ஒரு வாரம் முன்னதாக அரசே அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துக் கொண்டு வரும் வழக்கம் நடைமுறையில் இருந்தது. கர்ப்பிணிகளுக்கு ஓராண்டுவரை முழு ஊதியத்துடனான விடுமுறையும், இரண்டாம் ஆண்டு அரை சம்பளத்துடன் கூடிய விடுமுறையும் வழங்கப்பட்டது. 1916-ல் ரசியாவின் தனிமனித சராசரி ஆயுள் 32 ஆண்டுகள். 1960-ல் அது 70 வருடமாக அதிகரிக்கப்பட்டது. அதே வருடத்தில் ரசியாவில் பத்தாயிரம் பேருக்கு 20 மருத்துவர்கள் இருந்தார்கள், உலகிலேயே இதுதான் அதிகம். மற்ற நாடுகளின் அன்றைய தரவுகள் கீழே,

  • அமெரிக்கா – 10,000 பேருக்கு 12 மருத்துவர்கள்
  • பிரான்ஸ் –  10,000 பேருக்கு 10.7 மருத்துவர்கள்
  • இங்கிலாந்து – 10,000 பேருக்கு 10 மருத்துவர்கள்
  • பாகிஸ்தான் – 10,000 பேருக்கு 0.7 மருத்துவர்கள்??!!

1941 மற்றும் 1951 -க்கும் இடையேயான பத்தாண்டுகளில் மட்டும் கட்டப்பட்ட மக்கள் குடியிருப்புக்களின் அளவு நகர்ப்புறத்தில் நூற்று பத்து கோடி சதுரஅடி. கிராமப்புறங்களில் உருவாக்கப்பட்ட புதிய குடியிருப்புகளின் எண்ணிக்கை 27 லட்சம். இது ரசியாவின் அன்றைய ஐந்தாண்டு திட்ட இலக்கைக் காட்டிலும் 21 சதவிகிதம் அதிகம். இதே காலகட்டத்தில் உருவாக்கப்பட்ட புதிய வேலைவாய்ப்புக்களின் எண்ணிக்கை 77 லட்சம். 1947-ல் உணவுப்பொருட்கள் உள்ளிட்ட நுகர்பொருட்கள் மீதான ரேஷன் கட்டுப்பாட்டுமுறை முழுமையாக நீக்கப்படுகிறது.

இந்தியாவில் போலி ஜனநாயகத்தின் ‘சாதனைகள்’!

ஆனால் ஜனநாயகத்தின் கோயிலான இந்தியாவில் அனைவருக்கும் கல்வி உரிமைச்சட்டம் நிறைவேறவே 65 ஆண்டுகள் ஆனது, அதனை சாத்தியமாக்கும் முயற்சிகள் இன்றைக்குவரைக்கும் ஆரம்பமாகவில்லை. இன்றும் இந்தியாவில் எழுபது விழுக்காடு மக்களே எழுத்தறிவு பெற்றவர்களாக இருக்கிறார்கள்.  70 சதம் மக்களுக்கு இரண்டு வேளை உணவு மட்டுமே கிடைக்கிறது. முக்கால்வாசி மக்களுக்கு ஒழுங்கான சாப்பாடே இல்லாத நாட்டின் மொத்த மருத்துவ செலவில் அரசின் பங்கு 16 விழுக்காடுதான். 86 சதவிகித செலவை மக்களே செய்கிறார்கள். வீடற்றவர்கள் எண்ணிக்கை 20 கோடி. கிராமங்களில் வாழ வழியின்றி நகரங்களுக்கு இடம்பெயர்ந்த மக்களின் எண்ணிக்கை கடந்த பத்தாண்டுகளில் பத்து கோடி. சரியான உணவில்லாததால் நாட்டின் பெண்களில் பாதிபேர் ரத்த சோகையுடையோராக இருக்கிறார்கள். கிட்டத்தட்ட இதே சதவிகிதத்திலான இந்திய குழந்தைகள் போதிய ஊட்டச்சத்தற்றவர்கள். இவை அனைத்தும் சிலநூறு முதலாளிகளால் முடக்கப்படும் செல்வத்தின் காரணமாக உருவாகின்றன. ஆகவே முதலாளித்துவத்தை ஒழிக்காமல் மக்கள் நலன் என்பது எக்காலத்திலும் சாத்தியமில்லை.

மக்களுக்கு எல்லாவற்றையும் கொடுத்த சோசலிசத்தை தோற்ற ஃபார்முலா என கிண்டலடிப்பதும் மக்களுக்கு எதையுமே செய்ய முடியாத செத்த பிணமான இந்தியாவின் போலி ஜனநாயகத்தை போற்றிப் புகழ்வதும் அறிவுடையோர் செய்யும் காரியமல்ல. தோல்வியிலிருந்து பாடம் கற்பதில் சிறுமையும் இல்லை பிணத்துக்கு பேன் பார்ப்பதில் பெருமையும் இல்லை.

தேவர் பிலிம்ஸ் நிறுவனத்தார் பாம்பின் பெருமையை சொல்லும் “வெள்ளிக்கிழமை விரதம்” என்ற படத்தை எடுத்தார்கள். ஆனால் அந்த படத்தை எடுக்க கொல்லப்பட்ட பாம்புகளின் எண்ணிக்கை உத்தேசமாக நூறு (இதனை அதன் கதாசிரியர் கலைஞானம் நக்கீரன் இதழ் தொடர்கட்டுரையில் குறிப்பிடுகிறார்). அதே கதைதான் இங்கேயும், சாமானிய மக்களை தேர்தல் மூலம் அரசு கவுரவிப்பதாக ஒரு தோற்றம் நமக்கு காட்டப்படலாம். ஆனால் பின்னணியில் நம்மைப் போன்ற மக்களில் பலர் அழிக்கப்படுகிறார்கள் என்பதே உண்மை. மாமாக்களை மாற்றினால் விபச்சாரத்தை ஒழித்துவிட இயலும் என்பதை உங்களால் நம்ப இயலுமெனில் இந்தத் தேர்தல் மூலம் மக்கள் நல அரசை அமைத்துவிட முடியும் என்றும் நீங்கள் நம்பலாம்.

தேர்தலை புறக்கணியுங்கள்!
புதிய ஜனநாயக் புரட்சிக்கு பணியாற்ற புரட்சிகர அமைப்புகளில் இணையுங்கள்!
வினவுடன் தொடர்பு (vinavu@gmail.com அல்லது 9941175876) கொள்ளுங்கள்!