சிந்தனைக் குழாம் – புரட்சி வேடத்தில் புல்லுருவி அறிஞர் படை

2

ஆம் ஆத்மி: பிறப்பு இரகசியம் – 2

ஆம் ஆத்மி: பிறப்பு இரகசியம் – முதல் பகுதியைப் படிக்க அழுத்தவும்

ரலாறு நெடுக ஒன்றைக் கண்டு வந்திருக்கிறோம். மிகச் சிறுபான்மையினரான ஆளும் வர்க்கத்தினர் தமது அதிகாரம், ஆதாயம், செல்வாக்கைத் தக்கவைத்துக் கொள்வதற்காக அரசு நிறுவனங்களையும் சமூக அமைப்புகளையும் சார்ந்து நிற்கின்றனர். குறிப்பாக, கடந்த காலத்தில் காலனிய நாடுகளில் சுரண்டப்படும் மக்களைக் கட்டுப்படுத்தவும் ஆட்சியாளர்களுக்கு எதிரான மக்கள் ஆத்திரத்தை மத, சமூக முரண்பாடுகள், மோதல்களின் பக்கம் திசைதிருப்பிவிடுவதற்காக ஏகாதிபத்திய ஆளும் வர்க்கத்தினர் உள்நாட்டு, வெளிநாட்டு மத நிறுவனங்களுக்கு நிதி மற்றும் ஆதரவளித்து வந்தனர்.

மோடி அரசு அதிகாரிகள்
(இடமிருந்து) மோடி அரசில் தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள விவேகானந்தா இண்டர்நேஷனல் ஃபவுண்டேஷனின் இயக்குநர் அஜித் தோவால்; மோடியின் முதன்மைச் செயலராகியுள்ள அந்த ஃபவுண்டேசனின் உறுப்பினர் நிர்பேந்திர மிஸ்ரா; கூடுதல் முதன்மைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ள அதனின் நிர்வாகக்குழு உறுப்பினர் பி.கே.மிஸ்ரா

இந்நிறுவனங்கள் தம்மைப் பொதுவில் சேவை-தொண்டு அமைப்புகள் என்று சொல்லிக்கொண்டாலும், தமது மத அடையாளங்களையும் மத மாற்ற நோக்கங்களையும் ஏகாதிபத்திய எஜமானர்களுக்காக ஊழியம்-உளவு வேலை செய்ய்வதையும் மறைத்துக் கொள்ளவில்லை. ஆன்மீக-மதபோதனைகளோடு, உணவு, உடை, கல்வி, மருத்துவம் போன்றவைகளை இலவசமாக வழங்கி மக்களை ஈர்த்தார்கள். காலனிய நாடுகளில் நிலவிய முதலாளித்துவத்திற்கு முந்தைய அடக்குமுறை, சுரண்டல், சமனற்ற சமூக உறவுகள் காரணமாக இந்த வகை சேவை-தொண்டு அமைப்புகள் செல்வாக்குப் பெற்றன.

ஆனால், காலனிய விடுதலை, ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கங்கள் இந்நாடுகளில் வலுப்பெற்ற பிறகு இந்த வகை சேவை-தொண்டு அமைப்புகள் மீது மக்களுக்குச் சந்தேகங்கள் தோன்றி, அவற்றின் செல்வாக்கு குறையத் தொடங்கியது. சீனா, கியூபா புரட்சிகளின் வெற்றி, ஆசிய – ஆப்பிரிக்க நாடுகளில் காலனிய எதிர்ப்பு இயக்கங்களின் எழுச்சிகள், குறிப்பாக, வியத்நாம் – லாவோஸ் – கம்போடியாவில் விடுதலைப் போர்களில் பாய்ச்சல் ஆகியவை காரணமாக தனது நேரடி ஆதிக்கத்தை இழக்கும் நாடுகளில் (முன்னாள் காலனிய நாடுகள், சோவியத் ஆதரவு நாடுகள்) ஏகாதிபத்தியங்கள் தொடர்ந்து தலையீடு செய்ய்வதற்கும், சமூக ஆதரவு-அடித்தளத்தைப் பெறுவதற்கும் ஏகாதிபத்திய எஜமானர்களுக்காக ஊழியம்-உளவு வேலை செய்ய்வதற்கும் வசதியாக புதிய வகை சேவை-தொண்டு அமைப்புகளாக அரசுசாரா தொண்டு நிறுவனங்களைத் (NGO) திட்டமிட்டு உருவாக்கிக் கொண்டனர்.

விவேகானந்தா ஃபவுண்டேஷன்
பிரதமர் அலுவலகத்திற்கு ஆள் சேர்ப்பு மையமாக மாறியுள்ள தில்லியிலுள்ள விவேகானந்தா இண்டர்நேஷனல் ஃபவுண்டேஷனின் தலைமை அலுவலகம்.

அவற்றுக்குப் புதிய சித்தாந்த விளக்கத்தையும் நடைமுறை வழிகாட்டுதல்களையும் ஏகாதிபத்தியக் கொள்கை வகுப்பாளர்கள் முன்வைத்தார்கள். ஆன்மீக-மத போதனைகளைவிட மக்கள் தமது உடனடி, அன்றாடப் பொருளாயதத் தேவைகளையே முக்கியமானவையாகக் கருதுகின்றனர். அதனாலேயே அவற்றுக்கான போராட்டங்களில் மக்களை இடதுசாரி இயக்கங்களால் திரட்ட முடிகிறது. ஆகவே, இடதுசாரி இயக்கங்களிடமிருந்து மக்களையும் அதன் முன்னணியாளர்களையும் ஈர்ப்பதற்காக அவர்களின் உடனடி, அன்றாடப் பொருளாயதத் தேவைகளுக்கான சீர்திருத்தங்களைக் கோரும் போராட்டங்களைக் கையிலெடுக்க வேண்டும். பழையவகை சேவை – தொண்டு அமைப்புகள் மக்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொடுத்தன; அதாவது, இலவசமாக வழங்கின. அதற்கு மாறாக, மக்கள் தமது தேவைகளைத் தாமே போராடிப் பெறுவதற்கு அவர்களை அமைப்பாக்கி, வழிநடத்தும் புதிய வகை சேவை-தொண்டு அமைப்புகளாக அரசுசாரா தொண்டு நிறுவனங்களை (NGOs) உருவாக்கிக் கொண்டனர். அதேசமயம், அவை அரசியலற்றதாகவும் கம்யூனிஸ்டுகளையும், வன்முறைப் புரட்சிப் போராட்டங்களையும் விலக்கி வைப்பதாகவும் இருக்கவேண்டும் என்று வரையறுத்துக் கொண்டனர். (ஆதாரம்: Paulo Freire: Paeday of the Oppressed; Peruvian priest Gustavo Gutierrez : Liberation Theology; WSF reports; பிற….)

இத்தகைய சித்தாந்தம், கொள்கைகள் அடிப்படையில் நிறுவப்பட்ட புதிய வகை சேவை-தொண்டு அமைப்புகள் கடந்த 50,60 ஆண்டுகளாக மக்களைக் கட்டுப்படுத்துவதற்காகவும் அரசியல், சித்தாந்தபூர்வமான பிரமைகளைத் தோற்றுவிப்பதற்காகவும் அரசுசாரா தொண்டு நிறுவனங்கள் (NGOs) என்று தம்மைத் தாமே அழைத்துக் கொள்ளுபவை புற்றீசல்களைப் போன்று பல்கிப் பெருகிப் போயுள்ளன.

கார்ப்பரேட் அறக்கட்டளைகளின் பண மூட்டைகளால் ஆயுதபாணியாக்கப்பட்ட இந்த என்.ஜி.ஓ-க்கள் உலகின் மூலைமுடுக்கெல்லாம் சிரமப்பட்டு ஊடுருவியிருக்கின்றனர். புரட்சியாளர்களாக உருவாகும் ஆற்றல் கொண்டவர்களைச் சம்பளம் வாங்கும் களப்பணியாளர்களாக மாற்றினர். கலைஞர்கள், அறிவுஜீவிகள், பேராசிரியர்கள், பத்திரிக்கையாளர்கள் மற்றும் திரைத்துறைக் கலைஞர்களை பெருநிதியால் வருடிக்கொடுத்து, முற்போக்கான கருத்துகள், விவாதங்களில் இருந்து திசைதிருப்பினர். அடையாள அரசியல், மனித உரிமைகள் எனும் மொழியில் முன்வைக்கப்படும் பன்மைப் பண்பாட்டுவாதம், பெண்ணியம், தலித்தியம், சுற்றுச்சூழல், சமூக முன்னேற்றம் போன்ற கருத்தாக்கங்களை நோக்கி அவர்களை அழைத்துச் சென்றனர்.

10-c-1

பல்வேறு பிரிவு மக்களுடைய நியாயமான தேவைகளுக்காகவும் கோரிக்கைகளுக்காகவும், வாழ்வியல் உரிமைகளுக்காகவும் தேவைகளுக்காகவும் நீதிக்காகவும், சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராகவும் சமூக உரிமைகளுக்காகவும் பாடுபடப் போவதாகக் கூறிக்கொண்டு அரசுசாராத் தொண்டு நிறுவனங்கள் (NGOs) அமைக்கப்படுகின்றன. ஆனால், அந்நிறுவனங்கள் கையிலெடுக்கும் பல பிரச்சினைகளை அதிகரித்த அளவில் நிறைவேற்ற முடியாமல் தோற்றுப் போகின்றன. அப்படி அவற்றை முழுமையாக நிறைவேற்றித் தருவது அரசுசாரா தொண்டு நிறுவனங்களின் நோக்கமுமல்ல. அதற்காக இறுதிவரை போராடி வெற்றி பெறுவதற்கான வழிமுறையும் அவற்றிடம் இல்லை. அவற்றுக்காக இறுதிவரை போராடுவது அரசுசாராத் தொண்டு நிறுவனங்களின் எல்லாவகையிலான புரவலர்களான ஏகாதிபத்திய எஜமானர்களுக்குத் துரோகமிழைப்பதாகும். இதனால் அரசுசாரா தொண்டு நிறுவனங்கள் கையிலெடுக்கும் பல பிரச்சனைகளைத் தொங்கலில் விடுவதும் இடையிலேயே கைகழுவி விடுவதும் அதிகமாகி வருகின்றன.

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான டாலர்கள் பணம் புரளும் பல லட்சம் அரசுசாரா தொண்டு நிறுவனங்கள், அவற்றில் நமது நாட்டில் மட்டும் பல பத்தாயிரம் அரசுசாரா தொண்டு நிறுவனங்கள் உள்ளன. அவை மிகப்பெரும்பாலும் ஐரோப்பிய-அமெரிக்க-ஜப்பானிய அரசு மற்றும் நிதி நிறுவனங்களிடமிருந்து பெருந்தொகையாக ஆண்டுதோறும் பெறுபவை. பெரிய அரசுசாரா தொண்டு நிறுவனங்களின் நிர்வாகிகள் எல்லாம், கொள்ளை இலாபமடிக்கும் ஏகபோக கார்ப்பரேட் தொழில் கழகங்களின் தலைமை நிர்வாகிகளுக்குச் சமமான ஊதியம், சொகுசுக் கார், அடுக்குமாடி பங்களாக்கள் முதலான வசதிகளும் பெறுகிறார்கள். அவர்கள் பல்வேறு நாடுகளில் நடக்கும் சர்வதேச மாநாடுகளுக்கு விமானங்களில் பறக்கிறார்கள்; பன்னாட்டு கார்ப்பரேட், நிதி நிறுவனங்களின் உயர் அதிகாரிகளின் தோளோடுதோள் உரசிக் கொண்டு உலகின் பல நாட்டு அரசுகளின் கொள்கை முடிவுகளை விவாதிக்கிறார்கள், அவற்றுக்கு ஆலோசனைகள் வழங்குகிறார்கள். இந்தக் கொள்கை முடிவுகள் பெரும்பாலும் அந்நாடுகளின் ஏழை-எளிய உழைக்கும் மக்களுக்கு எதிரானவையாக இருக்கின்றன. இந்த நிலையில், அரசுசாரா தொண்டு நிறுவனங்கள் (NGOs) ஒரு பரிணாமத்தை அடைந்தன. பல்வேறு பிரிவு மக்களுடைய அடையாள அரசியல் சார்ந்த பகுதிக் கோரிக்கைகள், வாழ்வியல் உரிமைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பிற சமூகச் சீர்திருத்தங்களுக்கான செய்யல்திட்டங்களை முதன்மையாகக் கொண்டிருந்தன. பொதுவில் அரசியல், அரசியல்வாதிகளுக்கு எதிராக மக்களிடையே நிலவும் அரசியலுக்கு அப்பாற்பட்ட பிழைப்புவாத நோக்கிலான கருத்தாக்கங்களை அடிப்படையாகக் கொண்டு மக்களைத் திரட்டி வந்தனர்.

விவேக் தோப்ரா நூல் வெளியீடு
விவேகானந்தா இண்டர்நேஷனல் ஃபவுண்டேஷனின் பொருளாதார ஆய்வு மைய துணைத்தலைவர் விவேக் தேப்ராவை இணை ஆசிரியராகக் கொண்ட “இந்தியாவை மீண்டும் தடகளத்திற்குக் கொண்டு வந்து நிறுத்துவது” என்ற நூலை வெளியிடும் மோடி.

ஆனால், இவை அரசுசாரா தொண்டு நிறுவனங்கள் மற்றும் அவற்றின் ஏகாதிபத்திய எஜமானர்களுடைய பன்னாட்டு அரசியல் நலன்களுக்குப் போதுமானவையாக இல்லை. அரசுசாரா தொண்டு நிறுவனங்களையும் உள்ளடக்கிய குடிமைச் சமூகங்கள் (Civil Society Organizations) என்ற புதிய மேடைகளை உலகின் பல நாடுகளிலும் அவர்கள் கையிலெடுத்துக் கொண்டார்கள். அரசுசாராத் தொண்டு நிறுவனங்கள் கடந்த காலத்தில் தாம் அறிவித்துக் கொண்ட அரசியல் வரம்புகளைத் தாண்டி, தற்போது நிறுவப்பட்டுள்ள அரசுகளுக்கு அரசியல் அழுத்தம் கொடுக்கவும், அரசு அமைப்புக்குள்ளாகவே நுழைந்து அதன் கொள்கை வகுப்பு -அமலாக்க அமைப்புகளில் பங்கேற்கவும் குடிமைச் சமூகங்கள் என்ற அரசியல்-அமைப்புக் கருவியை ஏற்படுத்திக் கொண்டார்கள்.

இந்த அடிப்படையில், இந்த நோக்கில், இந்தப் பின்னணியில் தோற்றமெடுத்ததுதான் ஆம் ஆத்மி கட்சி. அக்கட்சியின் கொள்கைப் பிரகடனங்களும்” நடைமுறைகளும் இக்கருத்துக்கு ஆதாரமாக விளங்குகின்றன.

சொல்லப்போனால், குடிமைச் சமூகங்கள் (Civil Societies) எனும் அரசியல்-அமைப்புக் கருவி முற்றிலும் புதியதான கண்டுபிடிப்பு அல்ல. சோவியத் யூனியன், கிழக்கு ஐரோப்பிய நாடுகள் முதலான முன்னாள் சோசலிச நாடுகளில் ஆட்சிக் கவிழ்ப்புகளை நடத்துவதற்கான அரசியல்-அமைப்புக் கருவிகளாக மேலை ஏகாதிபத்தியங்கள் பயன்படுத்தியவைதாம். முன்னாள் சோசலிச நாடுகளில் ஆட்சி மாற்றங்கள் எவ்வாறு நிகழ்ந்தன என்ற கேள்வி உலகமெங்குமுள்ள முற்போக்காளர்கள் பலரிடம் இன்னும் நீங்காத கேள்வியாகவே நீடிக்கிறது. ஆனால், இக்கேள்விக்கான பதில்கள் இன்றைய இணையத் தளங்களில் கொட்டிக்கிடக்கின்றன. அவற்றில் ஒன்று போலந்தில் அரசுசாரா தொண்டு நிறுவனங்கள் (NGOs) நிறுவிக் கொள்வதற்கான அனுமதி 1989-ன் மத்தியில் முழு நடைமுறைக்கு வந்தது. ஆனால், பழைய கட்டமைப்புக்குள்ளாகவே அதன் இறுதிக் கட்டத்தில் அங்கே குடிமைச் சமூகங்கள் மிக விரைவான வளர்ச்சி காணத் தொடங்கி விட்டன.” (http://www.cbos.pl/PL/wydarzenia/04_konferencja/Civil%20society%20in%20Poland.pdf)

சோவியத் யூனியன், கிழக்கு ஐரோப்பிய நாடுகள் முதலான முன்னாள் சோசலிச நாடுகளில் மட்டுமல்ல, ஜனநாயமில்லாத நாடுகளில்” ஆட்சிக் கவிழ்ப்புகளை நடத்துவதற்கும் அல்லது இந்தியா போன்ற வளரும் ஜனநாயக நாடுகளில்” (தனது முழுக்கட்டுப்பாட்டுக்குள் வராத நாடுகளை ஏகாதிபத்தியங்கள் இப்படித்தான் அழைக்கின்றன) ஆட்சி மாற்றங்களை அரங்கேற்றுவதற்கும் அரசுசாராத் தொண்டு நிறுவனங்களை உள்ளடக்கிய குடிமைச் சமூகங்களை அரசியல் – அமைப்புக் கருவிகளாக ஏகாதிபத்தியங்கள் பயன்படுத்துகின்றன.

10-c-2குறை வளர்ச்சியுள்ள நாடுகளில் ஆட்சி மாற்றம் (Regime Change) என்ற அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலகப் போர்த் தந்திரத்தில் குடிமைச் சமூகங்கள் முக்கிய அரசியல் -அமைப்புக் கருவிகளாக உள்ளன. குறிப்பாக, தனியார்மயம் – தாராளமயம் – உலகமயமாக்கம் என்கிற புதிய பொருளாதாரக் கொள்கையும், அமெரிக்க மேல்நிலை வல்லரசின் உலக மேலாதிக்கம் நோக்கிலான மறுகாலனியாக்கம் என்கிற அரசியல் கொள்கையும் திணிக்கப்பட்ட பிறகு இந்நாடுகளில் அரசின் சமூக, அரசியல், பொருளாதாரப் பாத்திரம் குறித்து புதிய விளக்கங்களும் வரையறைகளும் அளிக்கப்படுகின்றன.

பொதுவில் நாட்டின் பாதுகாப்பு, சட்டம்-ஒழுங்கு முதலான சில விவகாரங்கள் தவிர சமூகம், மதம், கல்வி-மருத்துவம், பண்பாடு போன்றவற்றிலோ, குறிப்பாக மக்கள் நலன், திட்டமிடுதல், வளர்ச்சி என்ற பெயரில் நாட்டின் பொருளாதார விவகாரங்களிலோ அரசு தலையீடு செய்ய்யக்கூடாது; இந்த விவகாரங்களைச் சந்தையும் சமூகமும் மூலதன நிர்வாகிகளும் (அதாவது கார்ப்பரேட் முதலாளிகளும்) கவனித்துக் கொள்வார்கள்; சாரமாகச் சொல்வதானால், கார்ப்பரேட் தரகு முதலாளிகள், ஏகாதிபத்தியப் பன்னாட்டு தொழிற் கழகங்களின் நலன்களுக்கேற்ப செய்யல்படும் எலும்புக் கூடு போன்ற அரசு அமைப்பு மட்டுமே இருக்க வேண்டும்; இந்த வரம்பைத் தாண்டி அவற்றின் செயல்பாடுகளில் தலையிடுவது குடிமைச் சமூகத்தின் பொருளாதார-தொழில் உரிமைகளை மறுப்பதும் எதேச்சதிகாரமும் ஆகும். – இவைதாம் அரசின் கடமைகள், பணிகள், வரம்புகள் குறித்த ஏகாதிபத்திய கைக்கூலிகளது பிரச்சாரம்.

அரசியல் கட்சிகளின், தலைவர்களின் இலஞ்ச- ஊழல், அதிகார முறைகேடுகள், நம்பிக்கைத் துரோகங்கள், கிரிமினல் குற்றங்கள் முதலான சீரழிவுகள், அவர்களுக்கெதிரான மக்கள் வெறுப்பு ஆகியன மேற்படி பிரச்சாரத்துக்குச் சாதகமாக அமைகின்றன. இவ்வாறு அரசும், அரசியல் தலைவர்களும் இழிவுற்று, சிறுமைப்பட்டுப் போகும் நிலையில், நாட்டின் அரசியல், பொருளாதார வாழ்வில் சிந்தனை குழாம்கள்- குடிமைச் சமூகங்களின் பங்குபாத்திரம் முன்தள்ளப்படுவதையும் முக்கியத்துவம் பெறுவதையும் புரிந்து கொள்ள முடியும்.

சிந்தனைக் குழாம் உச்சிமாநாடு
சிந்தனைக் குழாம்கள்-குடிமை சமூகங்கள் நிறுவனங்களின் திட்டம் (TTCSP) என்ற அமைப்பும் ஆசிய வளர்ச்சி வங்கியும் இணைந்து ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் 2013 ஜூன் 12-14 தேதிகளில் நடத்திய ஆசிய சிந்தனைக் குழாம் உச்சி மாநாடு.

கடந்த ஏப்ரல்(2014) புதிய ஜனநாயகம் இதழில் இடம் பெற்றிருந்த “ஆம் ஆத்மி கட்சியின் பிறப்பு இரகசியம்” என்ற கட்டுரையில் சிந்தனைக் குழாம்கள் மற்றும் குடிமைச் சமூகங்கள் ஆகிய இரு புதிய விசயங்களை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியிருந்தோம். அதில் கீழ்க்கண்ட கருத்துக்களைக் குறிப்பிட்டிருந்தோம்.

மத்திய, மாநில அரசுகளின் அரசியல், பொருளாதாரம், சமூகம், மருத்துவம்-சுகாதாரம், கல்வி-பண்பாடு உட்பட அனைத்து அரசுத் துறைகளிலும் “கொள்கை” முடிவெடுக்கவும், “திட்டங்கள்” வகுக்கவும் பொறுப்பேற்கும் மந்திரிகளில் ஏறக்குறைய எவருக்குமே அந்தத் “தகுதி” கிடையாது என்பதைச் சொல்லத் தேவையில்லை. இந்த காலியிடத்தை நிரப்பவும் இந்த உண்மையை இப்போது அப்பட்டமாகவே ஒப்புக்கொள்ளவும் வேண்டிய நிலைமை உருவாகியிருக்கின்றது. சிந்தனைக் குழாம்கள் (‘‘திங்க் டாங்க்ஸ்’’) என்ற பெயரில் தொழில்முறை கொள்கை ஆய்வாளர்கள்-ஆலோசகர்களைக் கொண்ட அமைப்புகள் ஏற்படுத்தப்படுகின்றன. ஒரு சிந்தனைக் குழாம் (அல்லது ஒரு கொள்கை வகுப்புக் கழகம், ஆய்வுக் கழகம் மற்றும் பிற) என்பது சமூகக் கொள்கைகள், அரசு நிர்வாகம், அரசியல் போர்த்தந்திரம், பொருளாதாரம், இராணுவம், தொழில்நுட்பம், பண்பாடு முதலான துறைகளில் ஆய்வுகளையும் பரிந்துரைகளையும் செய்ய்யும் ஒரு அமைப்பாகும். அரசுக்கும், தொழிலகங்களுக்கும், நிறுவனங்களுக்கும் தேவையான ஆய்வுகளும், ஆலோசனைகளும் கட்டணம் பெற்றுக்கொண்டு வழங்கும் சேவை நிறுவனங்கள் ஆகும்.

ரக்ஷாக் ஃபவுண்டேசன், விவேகானந்தா இன்டர்நேஷனல் ஃபவுண்டேசன், இந்தியன் கவுன்சில் ஆன் குளோபல் ரிலேஷன்ஸ் போன்றவை இந்தியாவிலுள்ள சிந்தனைக் குழாம்களில் சில. மொத்தம் 269 சிந்தனைக் குழாம்களைக் கொண்டுள்ள நமது நாடு, அவற்றின் எண்ணிக்கையில் உலகிலேயே மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்திய அரசின் அயலுறவுத்துறை, போலீசு, இராணுவத்துறை, பல்கலைக்கழகக் கல்வி, உணவுப் பதனிடும் திட்டங்கள், வேலைவாய்ப்புத் திட்டங்கள், சட்டச் சீர்திருத்தங்கள், தொழிலுறவு, அரசு நிர்வாகச் சீர்திருத்தங்கள், அவற்றைக் கனினிமயமாக்கம்-நவீனமயமாக்கம் செய்ய்தல் – இப்படிப் பன்முகப் பணிகளில் இந்தச் சிந்தனைக் குழாம்கள் ஈடுபடுகின்றன.

இந்தப் பன்முகப் பணிகளில் சிந்தனைக் குழாம்கள் எப்போதும் தனித்துச் செயல்படுவதில்லை. சிந்தனைக் குழாம்களும் அரசுசாரா தொண்டு நிறுவனங்களை உள்ளடக்கிய குடிமைச் சமூக அமைப்புகளும் சேர்ந்துதான் செய்யல்படுகின்றன. சிந்தனைக் குழாம்களுக்குத் தேவையான கள ஆய்வுகள் செய்ய்வது, தகவல்களைத் திரட்டித் தருவது, அவை பரிந்துரைக்கும் கொள்கைளையும், திட்டங்களையும் அரசை ஏற்கச் செய்யும் அழுத்தம் கொடுக்கும் இயக்கங்களைக் கட்டமைப்பது, அவற்றின் அமலாக்கத்தில் பங்கேற்பது மற்றும் அந்த அடிப்படையிலான அரசின் சட்ட திட்டங்கள் மக்களுக்கு ஏற்புடையவைதானா, இல்லையென்றால் மாற்றுக்களைப் பரிந்துரைப்பது – என்று பலவாறு அரசுசாரா தொண்டு நிறுவனங்களை உள்ளடக்கிய குடிமைச் சமூக அமைப்புகளும் சேர்ந்துதான் இயங்குகின்றன.

சிந்தனைக் குழாம்கள், குடிமைச் சமூகங்கள், அரசுசாரா தொண்டு நிறுவனங்கள் முதலான இவையெதுவும் பலரும் நம்புவதுபோல தனிநபர் முன்முயற்சியால் தன்னியல்பாக உருவானவை அல்ல. பன்னாட்டு தொழிற்கழகங்கள், உலக வங்கி, சர்வதேச நிதியம் போன்ற நிறுவனங்கள், ஏகாதிபத்திய அரசுகளின் அரசியல், இராணுவ-உளவு, சமூக, கல்வி-பண்பாட்டு ஆய்வு நிறுவனங்களால் திட்டமிட்டு உருவாக்கி, நெறிப்படுத்தி, இயக்கப்படுபவை.

அமெரிக்காவின் ஃபிலடெல்பியாவில் உள்ள அயலுறவுக் கொள்கை ஆய்வகத்தில் 1989-ம் ஆண்டு “சிந்தனைக் குழாம்கள்-குடிமைச் சமூகங்கள் நிறுவனங்களின் திட்டம்” (TTCSP) அமைக்கப்பட்டது; அது, 2008-ம் ஆண்டு பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் சர்வதேச உறவுகள் திட்டத்துக்கு மாற்றப்பட்டது. அத்திட்டத்தின் கீழ் கடந்த 20 ஆண்டுகளாகச் சிந்தனைக் குழாம்கள்-குடிமைச் சமூகங்கள் நிறுவனங்களை மதிப்பீடு செய்கிறது. சர்வதேச அளவிலான கொள்கை-ஆய்வு, கொள்கை-திட்டங்கள் வகுப்பு மற்றும் ஆலோசனை நிறுவனங்களையும் மற்றும் அரசுசாரா தொண்டு நிறுவனங்களை உள்ளடக்கிய சமூக அமைப்புகளையும் கொண்ட ஒரு வலைப்பின்னல் உலகம் முழுவதும் கட்டமைக்கப்படுகிறது. அவை உலகின் பற்பல நாடுகளின் அரசுகளோடு நெருக்கமாக இணைந்து செயல்படுகின்றன.

இந்தியாவிலுள்ள சிந்தனைக் குழாம்களில் ஒன்றாக பு.ஜ. இதழ் குறிப்பிட்டிருந்த “விவேகானந்தா இன்டர் நேஷனல் ஃபவுண்டேசன்” இப்போது ஆட்சியைப் பிடித்திருக்கும் மோடி நிர்வாகத்தில் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது. “தில்லியிலுள்ள ‘சிந்தனைக் குழாம்’ புதுப் பிரதமர் அலுவலகத்துக்கான ஆள்சேர்ப்பு மையமாகத் தற்செயலாக உருவாகியிருக்கிறது” என்ற தலைப்பிட்டு கடந்த ஜூன் 17-ந்தேதி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏடு செய்தியொன்று வெளியிட்டிருக்கிறது. அதில்,

தலைநகரின் இதயம் போன்ற பகுதியில் அமைந்துள்ளது, “விவேகானந்தா இன்டர்நேஷனல் ஃபவுண்டேசன்”. தொடங்கி ஐந்தாண்டுகளான இந்த சிந்தனைக் குழாம் புதுப் பிரதமர் அலுவலகத்துக்கான ஆள்சேர்ப்பு மையமாகத் தற்செயலாக உருவாகியிருக்கிறது. விவேகானந்தா இன்டர்நேஷனல் ஃபவுண்டேசனுடைய இயக்குநரான அஜித் தோவால் தேசியப் பாதுகாப்பு ஆலோசகராகியுள்ள அதேசமயம், பிரதமர் நரேந்திர மோடியின் முதன்மைச் செயலராக விவேகானந்தா இன்டர்நேஷனல் ஃபவுண்டேசனுடைய உறுப்பினர் நிரிப்பேந்திர மிஸ்ராவும், கூடுதல் முதன்மைச் செய்யலராக அதன் நிர்வாகக் குழு உறுப்பினர் மற்றும் மூத்த இணையர் பி.கே. மிஸ்ராவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மோடி கடந்த வாரம் பிரதமரான பிறகு வெளியிட்ட முதல் நூல் “இந்தியாவை மீண்டும் தடகளத்திற்குக் கொண்டு வந்து நிறுத்துவது”; இது விவேகானந்தா இன்டர்நேஷனல் ஃபவுண்டேசனுடைய பொருளாதார ஆய்வு மையத்தின் துறைத்தலைவர் (டீன்) விவேக் தேப்ராயை இணை ஆசிரியராகக் கொண்டது. ஃபவுண்டேசனுடைய அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் துறைத்தலைவர் (டீன்) வி.கே. சரஸ்வத் (இராணுவத்தின் ஆயுதத் தளவாட ஆய்வக முன்னாள் பொது இயக்குநர்) மோடி அரசாங்கத்தின் முதன்மை அறிவியல் ஆலோசகர் ஆர். சிதம்பரத்திற்குப் பதிலாக நியமனம் பெறுவார்.

“விவேக் தேப்ராயினுடைய நூலை வெளியிட்ட மோடி, சிறந்த கொள்கை கட்டுமானங்களை உருவாக்குவதற்காக அறிவுஜீவிகளது சிந்தனைக் குழாம்களைக் கணிசமான அளவு செழுமைப்படுத்த வேண்டும்” என்று கூறினார்.

(இந்த விவேகானந்தா இன்டர்நேஷனல் ஃபவுண்டேசன் என்ற சிந்தனைக் குழாம், விவேகானந்தா கேந்திரம் ஆகியன ஆர்.எஸ்.எஸ்.ஸின் ஒரு பிரிவு அமைப்பினால் தொடங்கி நடத்தப்படுவது. இந்த விவேகானந்தா கேந்திரத்தின் தோற்றம் குறித்த விவரங்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு புதிய ஜனநாயகத்தில் எழுதி தனி வெளியீடாகவும் கொண்டு வந்திருக்கிறோம்.)

விவேகானந்தா இன்டர்நேஷனல் ஃபவுண்டேசன் தன்னைக் கட்சி சார்பற்ற அமைப்பென்று சொல்லிக்கொண்டாலும் அது காங்கிரசு கூட்டணிக்கு எதிரான இயக்கங்கள் நடத்திய சக்திகளை அணிதிரட்டுவதற்கு மேடை அமைத்துத் தருவதில் ஒரு முக்கிய பங்காற்றிக் கொடுத்துள்ளது. யோகாகுரு ராமதேவ் தலைமையில் ஒரு ஊழல் எதிர்ப்பு முன்னணியை உருவாக்குவது என்ற முடிவு விவேகானந்தா இன்டர்நேஷனல் ஃபவுண்டேசனில்தான் எடுக்கப்பட்டது என்று 2012 ஆகஸ்டில் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏடு எழுதியது. அதற்கு ஓராண்டுக்கு முன்பு ஆர்.எஸ்.எஸ். சித்தாந்த தலைவர் கோவிந்தாச்சார்யாவின் ராஷ்ட்ரீய சுவபிமான் அந்தோலன் என்ற அமைப்போடு விவேகானந்தா இன்டர்நேஷனல் ஃபவுண்டேசன் இணைந்து ஊழலுக்கும் கருப்புப் பணத்துக்கும் எதிரான ஒரு கருத்தரங்கம் நடத்தியது. ராமதேவ், அரவிந்த் கெஜரிவால், கிரண் பேடி ஆகியோர் அதில் பங்கேற்றனர். அக்கருத்தரங்கின் முடிவில் ராமதேவைப் புரவலராகவும் கோவிந்தாச்சார்யாவை ஒருங்கிணைப்பாளராகவும் கொண்ட ஒரு “ஊழல் எதிப்பு முன்னணி” அமைக்கப்பட்டது. அஜித் தோவாலும் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத் தலைவர் எஸ். குருமூர்த்தியும் அதன் உறுப்பினர்களாயிருந்தனர். (ஆதாரம்: ஜூன் 17-ந்தேதி இந்தியன் எக்ஸ்பிரஸ்)

சிந்தனைக் குழாம்கள் – குடிமைச் சமூகங்கள் நமது நாட்டில் எந்த அளவு, எவ்வாறு வேரூன்றியுள்ளன என்பது இதிலிருந்து தெளிவாகும் என்று நம்புகிறோம்.

– தொடரும்
______________________________
புதிய ஜனநாயகம் – ஜூலை 2014
______________________________