கடலூர் கல்லூரியில் பெரியார் பிரச்சாரம்

1

மோடி அரசின் சம்ஸ்கிருத வாரம்! இந்துத்துவா திணிப்பே அதன் சாரம்!

மோடி அரசின் சமஸ்கிருத வாரம் மற்றும் இந்தித் திணிப்புக்கு எதிராக வரும் 25-ம் தேதி நடக்கவிருக்கிற கருத்தரங்குக்கு கல்லூரி மாணவர்களை அழைப்பதற்காக பெரியார் பிறந்த நாள் அன்று கடலூர் பகுதியில் உள்ள பெரியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர் பெரியார் வேடம் அணிந்து சென்றார்.  கல்லூரி மாணவர்களுக்கு இனிப்பு கொடுத்தும், சமஸ்கிருத இந்தித் திணிப்புக்கு எதிராக தமிழ் மரபையும், கால்டுவெல்லின் மொழி ஆய்வு என்ற ஆயுதத்தையும் உயர்த்தி பிடித்துப்போராட வேண்டும் என்பதை உணர்த்தும் பிரசுரங்களை வினியோகித்தும் பிரச்சாரம் செய்தார்

கல்லூரி மாணவர்கள் ‘பெரியாரி’டம் மரியாதை உணர்வோடு அடக்கத்துடன் பிரசுரத்தை பெற்றுக் கொண்டனர். ஒருசில மாணவர்கள் அவருடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர். பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து பெரியார் வேடம் அணிந்த தோழருடன் நின்று சமஸ்கிருத திணிப்புக்கு எதிராக முழக்கம் இட்டார்கள். அதன் பிறகு ஒவ்வொரு துறையாக ‘பெரியாரே’ நேரில் சென்று துண்டு பிரசுரம் கொடுத்து பிரச்சாரம் செய்தார்.

“மாணவர்கள் சுயமரியாதையுடனும், சுயகட்டுப்பாடாகவும் இருக்க வேண்டும். இந்த மொழித் திணிப்புக்கு எதிராக, சமூக அக்கறையோடு ஆணும், பெண்ணும் ஒருங்கிணைந்து போராட வேண்டும்” என்று பேசியபோது மாணவர்கள் கைதட்டி வரவேற்றார்கள்.

அனைத்து துறை ஆசிரியர்களும் பெரியாரை நேரில் கண்ட மகிழ்ச்சியில் எழுந்து நின்று பிரசுரத்தை பெற்றுக் கொண்டார்கள். இந்த பிரச்சாரம் பார்ப்பனியத்துக்கு எதிராக பெரியாரின் மரபில் போராட வேண்டும் என்ற உணர்வை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கிறது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

தகவல்:
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி.
கடலூர் மாவட்டம்.