Thursday, January 16, 2025
முகப்புவாழ்க்கைகுழந்தைகள்இந்தியக் குழந்தைகளை கொல்லும் தனியார்மயக் கிருமி !

இந்தியக் குழந்தைகளை கொல்லும் தனியார்மயக் கிருமி !

-

வறுமை… பட்டினி… காசநோய்…இந்தியக் குழந்தைகள் எதிர்கொள்ளும் அபாயம்!

நோயிலும் அது தொடர்பான சிகிச்சையிலும் வர்க்க வேறுபாடு காட்டப்படுகிறது எனக் கூறினால், நீங்கள் அதிர்ச்சியடையலாம். ஆனால், அதுதான் உண்மை. சர்க்கரை நோய், இதய நோய் போன்ற தொற்று வகையில்லாத நோய்களின் மீதும், அதனின் சிகிச்சை மீதும் குவிக்கப்படும் கவனம், ஏழை மக்களை எளிதாகத் தாக்கும் தொற்று நோய்கள் மீது குவிக்கப்படுவதில்லை. இந்தியாவில் சர்க்கரை நோய் வெகுவாகப் பரவி வருகிறது என்ற செய்தியை அறிந்திருக்கும் பலரும் காசநோயின் தலைநகரம் எனக் குறிப்பிடும் அளவிற்கு உலகிலேயே அந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் மற்றும் இறப்பவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே செல்கிறது என்பதைக் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள். இதிலும் இந்நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை உலகிலேயே இந்தியாவில்தான் அதிகம் என்றொரு புள்ளிவிவரத்தை சமீபத்தில் வெளியிட்டுள்ளது லான்செட் என்ற மருத்துவ இதழ்.

காசநோயால் பாதிக்கப்பட்ட சிறுவன்
காசநோயால் பாதிக்கப்பட்டு உருக்குலைந்து போயுள்ள ஒரு ஏழைச் சிறுவன்.

“உலக சுகாதார நிறுவனம் மதிப்பிட்டுள்ளதைக் காட்டிலும் உலக அளவில் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் எண்ணிக்கை 25 சதவீதம் அதிகமாக இருப்பதாகவும்; காசநோய் அதிக அளவில் காணப்படும் 22 நாடுகளில் இந்தியாதான் உச்சத்தில் இருப்பதாகவும், உலக அளவில் காசநோய் பாதிக்கப்பட்ட குழந்தைகளுள் 27 சதவீதக் குழந்தைகள் இந்தியாவைச் சேர்ந்தவர்களென்றும்” அம்மருத்துவ இதழ் புள்ளிவிவரங்களை வெளியிட்டிருக்கிறது. பொது சுகாதார தளத்தில் பணியாற்றி வரும் மனித உரிமை அமைப்புகள், இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 74,000 தொடங்கி 1,30,000 வரையிலான குழந்தைகள் காசநோய்க்குப் பலியாவதாக”க் குறிப்பிடுகின்றன.

சுற்றுப்புறச் சூழலில் காணப்படும் சுகாதாரக் கேடுகள், ஊட்டச் சத்தின்மை, புகை பிடிப்பது போன்ற தனிப்பட்ட பழக்க வழக்கங்கள் உள்ளிட்டவை இந்நோய் பரவுவதற்கு அடிப்படை காரணங்களாக இருந்தாலும், ஏதுமறியா குழந்தைகளைப் பொருத்தவரை அவர்கள் இந்நோய்க்குப் பலியாவதற்கு முதன்மையான காரணமாக இருப்பது ஊட்டச் சத்துக் குறைபாடுதான். இதனைக் கொஞ்சம் பச்சையாகச் சொன்னால், அரைப் பட்டினியாக அல்லது வெறும் சோற்றை மட்டுமே உண்டு வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட குழந்தைகள்தான் இந்நோய்க்குப் பலியாவதில் முதலாவது இடத்தில் உள்ளனர். விதவிதமான காய்கறிகள், இறக்குமதி செயப்பட்ட பழவகைகள், டின்களில் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்கள், பானங்கள் என ஒருபுறம் இந்தியச் சந்தை நிரம்பிவழியும்போது, இன்னொருபுறம் காட்டுக்கிழங்குகளையும் வேர்களையும் மட்டுமே உண்டு பசியாறும் பழங்குடியின மக்களைப் பற்றிய செய்திகளும் வந்துகொண்டுதான் இருக்கின்றன. இந்தியக் குழந்தைகளுள் சரிபாதிக் குழந்தைகள் ஊட்டச்சத்தின்றி நோஞ்சான்களாக, சவலைப்பிள்ளைகளாக இருப்பது இந்த உயிர்க்கொல்லி நோய் பல்கிப் பரவுவதற்கான நிரந்தர வாய்ப்பை வழங்கி வருகிறது.

ஏறத்தாழ இருபது, இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பே ஒழிக்கப்பட்டுவிட்ட நிலையில் இருந்த காசநோய், கடந்த சில ஆண்டுகளில் மிகவும் தீவிரமாகவும், மருந்துகளுக்குக்கூடக் கட்டுப்படாத வீரியமிக்கதாகவும் மாறி அடித்தட்டு பிரிவைச் சேர்ந்த பெரியவர்களையும் குழந்தைகளையும் தாக்கி வருவதை வெறும் மருந்து-மருத்துவம் சார்ந்த விசயமாக மட்டும் சுருக்கிப் பார்த்துவிட முடியாது. இந்தியப் பொருளாதாரம் உலகமயமான இந்த இருபது ஆண்டுகளில்தான் காசநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வந்திருக்கிறது என்பது தற்செயலானதல்ல. பொருளாதாரம், குறிப்பாக வேலைவாய்ப்புகள் நகரமயமாகியிருப்பது, நகரங்களுக்கு வேலை தேடிவரும் அடித்தட்டு மக்கள் அடிப்படை வசதிகள் ஏதுமற்ற நகர்ப்புற சேரிகளில் வாழ வேண்டியிருப்பது, உணவுப் பொருட்களின் விலையேற்றம், பொது சுகாதாரமும் மருத்துவமும் வேகவேகமாகத் தனியார்மயமாகிவருவது போன்றவற்றை ஒதுக்கிவைத்துவிட்டு காசநோய் பாதிப்புகளை மதிப்பிட்டுவிட முடியாது.

வீட்டு வாடகை, போக்குவரத்து, மருத்துவம் உள்ளிட்ட பிற அத்தியாவசிய செலவுகளைத் தீர்மானிக்கும் அதிகாரம் நம் கையில் இல்லாத நிலையில், வருமானத்திற்கும் விலைவாசி உயர்வுக்கும் இடையே ஏற்பட்டு வரும் பள்ளத்தைச் சரிக்கட்ட உணவுக்கான செலவைக் குறைத்துக் கொள்வதுதான் உழைக்கும் மக்கள் முன் உடனடி தீர்வாக அமைகிறது. உணவு பழக்கவழக்கத்தில் திணிக்கப்பட்ட மாற்றமும் எளிய மக்களின் உணவாக இருந்துவந்த சத்துக்கள் நிறைந்த சிறுதானிய வகைகளை அவர்களிடம் இருந்து தட்டிப்பறித்துவிட்டது. இந்த நிலைமைகள் அடித்தட்டு மக்களின் குழந்தைகளிடம் ஊட்டச்சத்து குறைபாடை நிரந்தரமாக்கி, அவர்களை காசநோய், போலியோ போன்ற கொடிய நோய்கள் எளிதாகத் தாக்குவதற்கான பலியாடுகளாக மாற்றிவிட்டது.

காசநோய் பாதித்த குழந்தை
காசநோயால் பாதிக்கப்பட்டுள்ள ஐந்து மாதக் குழந்தை

குழந்தைகளைத் தாக்கும் காசநோயைக் கட்டுப்படுத்த பி.சி.ஜி. தடுப்பூசி மற்றும் புதுப்பிக்கப்பட்ட தேசிய காசநோய் தடுப்புத் திட்டம், நேரடிக் கண்காணிப்பு சிகிச்சை முறை (டாட்ஸ்) ஆகியவை செயல்படுத்தப்பட்டாலும், அவை சமூகத்தின் மேல்தட்டை நோக்கி இந்நோய்கள் பரவிவிடக் கூடாது என்ற வர்க்க கண்ணோட்ட அடிப்படையில் மட்டுமே செயல்படுத்தப்படுகின்றன. அதனால்தான் இத்திட்டங்களால் இந்நோயை முழுமையாக ஒழித்துக் கட்டுவதில் வெற்றியை ஈட்ட முடியவில்லை. அதேசமயம், இந்தத் திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி குறைக்கப்படும்பொழுது நிலைமை மேலும் சிக்கலாகிவிடுகிறது. குறிப்பாக, கடந்த ஆண்டு அரசு மருத்துவமனைகள் மூலம் காசநோய்க்கான மருந்து வழங்குவதில் செயற்கையான தட்டுப்பாடு உருவாக்கப்பட்டு, நோயாளிகள் வெளிச்சந்தையில் மருந்தை வாங்கிக் கொள்ளும் நிலைக்கும் தள்ளப்பட்டனர். இந்நிலைமைகள் யாவும் காசநோய் கிருமியை ஒழிப்பதற்கு தனியார்மயம் என்ற சந்தைப் பொருளாதார கிருமியை ஒழித்துக்கட்டுவதை முன்நிபந்தனையாக நம் முன் நிறுத்துகின்றன.

– அழகு
____________________________________
புதிய ஜனநாயகம் – அக்டோபர் 2014
____________________________________

  1. //குழந்தைகளைத் தாக்கும் காசநோயைக் கட்டுப்படுத்த பி.சி.ஜி. தடுப்பூசி மற்றும் புதுப்பிக்கப்பட்ட தேசிய காசநோய் தடுப்புத் திட்டம், நேரடிக் கண்காணிப்பு சிகிச்சை முறை (டாட்ஸ்) ஆகியவை செயல்படுத்தப்பட்டாலும், அவை சமூகத்தின் மேல்தட்டை நோக்கி இந்நோய்கள் பரவிவிடக் கூடாது என்ற வர்க்க கண்ணோட்ட அடிப்படையில் மட்டுமே செயல்படுத்தப்படுகின்றன// non-sense.

    These schemes are by and large implemented without any class-bias. In fact, the haves do not join the poor in availing the facilities from the socital outlets; but, go for paid services of a (perceived) better quality.

    Let us not bring Privatisation and Globalisation into every problem.

    Minor cereals such as Ragi, Bajra (kambu), Maize (makkach cholam) and Corn(ven cholam)are not used by the poor, under the impression that their economically better position (than what they were) should justify migration to major cereals such as Rice and Wheat. Political parties, including the so-called party of the poor and exploited sections, such as Communists, do not advocate use of these cereals. They won’t hear any words of wisdom from people like us, thinking that we do not want their upliftment and enjoyment of comforts like us!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க