பார்ப்பனிய அதிகார முறைகேடுகளுக்கும், மாணவர்களின் உரிமைபறித்து சித்திரவதை செய்வதற்கும் எதிராக மாணவர்கள்-பேராசிரியர்கள் இணைந்து புதுவை மத்திய பல்கலையில் போராட்டம் நடத்துகின்றனர்.
கடந்த 2014-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இராதாகிருஷ்ணன் என்கிற முதலாம் ஆண்டு தமிழ் முதுகலை எம்.ஏ மாணவரை 27 மணி நேரம் இருட்டு அறையில் அடைத்து வைத்து சித்திரவதை செய்த ஹரிஹரன் (director acadamic staff collage), பூசன் சுதாகர் (பொருளாதாரத்துறை துணை பேராசிரியர்) மற்றும் விடுதிகள் தலைமை வார்டன், பாதுகாப்பு அதிகாரி உட்பட 5 பேர் பற்றிய செய்தி ஏற்கனவே வினவு இணையதளத்தில் வெளிவந்துள்ளது. மாணவர்கள் இந்த முறைகேடுகளுக்கு எதிராக போராடி விசாரணை கமிசன் அமைக்கப்பட்டது பற்றிய செய்தியும் வினவு இணையத்தில் வந்துள்ளது.
இப்போது இந்தியன் எக்ஸ்பிரஸ் (மும்பை பதிப்பு) வலைத்தளத்தில் புதுவை மத்திய பல்கலைக் கழகத்தில் முறைகேடுகள், மாணவர் மீது நடத்தப்பட்ட சித்திரவதை பற்றி வீடியோ ஆதாரத்துடன் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
போலீஸ் விசாரணையின்படி, பெண்கள் விடுதியில் அன்னியர் நுழைந்ததாக கூறப்படும் நேரத்தில் குற்றம் சாட்டப்படும் மாணவர் நூலகத்தில் இருந்ததாக கூறியது CCTV பதிவுகளிலிருந்து உறுதி செய்யப்பட்டுள்ளது. மாணவரை மிரட்டி அவரை குற்றங்களை ஏற்றுக் கொள்ளும்படி செய்திருக்கிறது ஹரிஹரன் கும்பல்.
இது பற்றி பூசன் சுதாகரிடம் விசாரித்த போது, “துணைவேந்தரின் உத்தரவுபடிதான் அதைச் செய்தோம்” என பேட்டி அளித்திருக்கிறார். இந்த வீடியோவை எடுத்தது பூஷன் சுதாகர் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் குறிப்பிடுகிறது.
இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்ட வீடியோவை பார்த்த பல்கலைக் கழக ஆசிரியர் சங்கமும், அலுவலக ஊழியர்கள் சங்கமும் இணைந்து 09-06-2015 மாலை 4.30 மணிக்கு விரிவான பத்திரிகை சந்திப்புக்கு, பல்கலைக் கழக இராசாயனத் துறை கட்டிடத்திற்கு எதிரில் உள்ள புல்வெளியில் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தக் கூட்டத்தில் சுமார் 50 மாணவர்களும், ஆசிரியர்களும் கூடினார்கள்.
பல்கலைக் கழக நிர்வாகமோ மெயின்கேட் கதவை இழுத்து மூடி பத்திரிகையாளர்களை உள்ளே விட மறுத்தது. ஆனால் இந்த ஜனநாயக மறுப்புக்கு முன்பாகவே TIMES NOW, INDIA TODAY ஆகிய ஊடகத்தார் வளாகத்திற்கு உள்ளே வந்திருந்தார்கள். உள்ளே வரமுடியாத மற்ற செய்தியாளர்கள் முதலாவது நுழைவு வாயில் வழியாக வந்து சேர்ந்தனர்.
கூடியிருந்த மாணவர்கள், பேராசிரியர்கள் “துணைவேந்தர் சந்திராகிருஷ்ணமூர்த்தியை பல்கலைக் கழகத்தில் இருந்து நீக்க வேண்டும்” என முழக்கமிட்டனர். பல்கலைக் கழக ஆசிரியர் சங்க செயலாளர் தஸ்தகிர் ரெட்டி ஆங்கில மீடியாவிற்கு பேட்டியளித்தார். பின்னர் நூலகர் சம்யுக்தா தமிழ் மீடியாவிற்க்கு பேட்டியளித்தார்.
மாணவர் இராதாகிருஷ்ணன் மீதான சட்டவிரோத கடத்தல், சித்திரவதை தொடர்பாக இன்றுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. ஆனால் இந்தப் போக்கை எதிர்த்து போராடிய மாணவர்களை பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. 70, 80 ஆய்வாளர்கள் ஆய்வு அறிக்கையை சமர்பித்து பத்து மாதங்கள் ஆகியும் அறிக்கையை மதிப்பீடு செய்வதற்காக அனுப்பும் எந்த நடவடிக்கையும் இல்லை.
துணைவேந்தர் பொய்யான ஆவணங்கள் கொடுத்து பதவியை பெற்றுள்ளார் என்பதற்கான ஆதாரங்களை திரட்டி பிரதமர், ஜனாதிபதி, கல்வி மந்திரி ஆகிய அனைவருக்கு அனுப்பி வைத்தும் பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் எந்த நடவடிக்கையும் இல்லை. துணைவேந்தர் உத்தரவின் பேரில் ஹரிஹரன், பூஷன் சுதாகர் ஆகியோரால் 27 மணி நேரம் சித்திரவதை செய்யப்பட்ட மாணவர் மனித வளத் துறை அமைச்சகத்துக்கும், தேசிய மனித உரிமை ஆணையத்துக்கும் அனுப்பிய மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ஒரு மொட்டை கடிதாசிக்கு தலைவணங்கி அம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்டத்திற்கு உடனடியாக ஐ.ஐ.டி நிர்வாகத்தின் மனிதவள மேம்பாட்டுத் துறை சந்திராகிருஷ்ணமூர்த்தியின் தகிடுதத்தங்களை ஆதாரபூர்வமாக அம்பலப்படுத்தியும் அதை பரிசீலிக்கக்கூட முடியாது என்று பார்ப்பன பாசத்தோடு தெனவெடுத்து திரிகிறது இந்த கும்பல்.
காங்கிரஸ் ஆட்சியில் பதவிக்கு வந்த சந்திராகிருஷ்ணமூர்த்தி, மோடி ஆட்சியிலும் நீடிப்பதற்கு என்ன காரணம்? பார்ப்பனர்களை யாரும் தண்டிக்கமுடியாது என்ற மனுநீதியே…
பேராசிரியர்களின் பதவி உயர்வு, அலுவலக ஊழியர்களின் பதவி உயர்வு, மற்றும் பணிபாதுகாப்பு உட்பட எந்த பொருளாதார பாதுகாப்பிற்கான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாணவர்கள் பட்டம் பெற்றுச் சென்றாலும் கூட அவர்களின் ஆய்வறிக்கையை பரிசீலிக்காமல் மாதக்கணக்கில் கிடப்பில் போட்டு பழிவாங்குகிறது சந்திரா கும்பல்.
இவரின் சட்டவிரோத மனித உரிமை மீறலுக்கு எதிராக போராடிய குற்றத்திற்கு மாணவர்களின் வாழ்வை பறிக்கும் வேலையை செய்து வருகிறது.
இரண்டு பெண் மாணவிகள் பாலியல் ரிதியில் பாதிக்கப்பட்டு நீதி மன்றம் சென்று நீதி பெற்ற பின்பும் அவர்களுக்கான இழப்பீடு மற்றும் நியாயத்தை இன்று வரை சந்திராகிருஷ்ணமூர்த்தி வழங்கவில்லை. பாதிக்கப்பட்ட மாணவிகளுக்காக துணை நின்று உறுதியாய் போராடிய கேரள மாணவிகளை பழிவாங்கும் நோக்கோடு கேரளாவில் விரிவாக இருந்த நுழைவுத் தேர்வு மையங்களை ரத்து செய்துவிட்டு பாண்டிச்சேரி வந்து தேர்வு எழுத வேண்டும் என உத்தரவிட்டது, பாண்டிச்சேரிக்கு தேர்வு எழுத வந்த மாணவிகளை காலை 10:00 மணிக்கு மேலே எழுதுஙகள் என்று எஸ்.எம்.எஸ் அனுப்பிவிட்டு அந்த மாணவிகளை அலைக்கழித்து தேர்வு எழுத விடாமல் பல்கலைக் கழகத்திற்கே நுழைய விடாமல் தடுத்து அவர்களின் வாழ்வை பறித்தது ரசித்தது பார்ப்பன பாசிச சந்திராகிருஷ்ணமூர்த்தி கும்பல்.
ஜெயலலிதாவை எப்படி சட்டப்படி தண்டிக்க முடியாதோ அது போல புதுவை பல்கலைக் கழக தில்லாலங்கடி பார்ப்பன சந்திராகிருஷ்ணமூர்த்தியை சட்டத்தின் மூலம் தண்டிக்க முடியாது. எல்லா கல்வி நிலையங்களையும் கைப்பற்றி பார்ப்பன பாசிச மயமாக்கும் சதியின் ஒரு பகுதியாகத்தான் சந்திராகிருஷ்ணமூர்த்தியின் சட்ட விரோத நடவடிக்கைகளையும் பா.ஜ.க அரசு பாதுகாத்து வருகிறது.
எனவே மக்கள் விரோத அரசானாலும் பல்கலைக் கழக கிரிமினல் பாசிச பார்ப்பன கும்பலானாலும் இவர்களை தண்டிக்க அரசியல் அதிகாரம் கொண்ட மக்கள் அமைப்பின் மூலமே தண்டிக்க முடியும்.
தகவல்
புதிய ஜனநாயகம் செய்தியாளர்,
புதுச்சேரி.
மிக மிக சரியான கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட கட்டுரை. இந்த கதையின் வில்லி சந்திராவின் அதிகாரபூர்வ இல்லத்தில் , கடந்த மாதம் மூன்று நாட்கள் அங்கேயே தங்கி இருந்து , மகாதேவா சுப்பிரமணிய ஐயர் (எ) ஜெயேந்திர சரஸ்வதி பல்வேறு பூஜை பரிகாரங்கள் செய்தார். ஆடிட்டர் குருமூர்த்தி துணையுடன் இவர் பதவியை தக்கவைத்துக் கொண்டிருப்பதாக நம்பப் படுகிறது. பல்கலைக் கழகத்தை குட்டி சுவராக்கி நாசம் செய்தாயிற்று. இனிமேல் அழிப்பதற்கு ஒன்றும் இல்லை