ழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீது தூத்துக்குடி போலீசால் ஜோடிக்கப்பட்ட ஹோண்டா சிட்டி கார் எரிப்பு வழக்கில், அவரது வீட்டிலும் அலுவலகத்திலும் தேடுதல் மேற்கொள்ள வாரண்ட் பிறப்பிக்க போலீசு கோரிக்கை முன்வைத்தது. போராட்டத்திற்கு பயன்படுத்திய கொடி, டீசர்ட், துண்டறிக்கைகளைக் கைப்பற்றும் நோக்கில் சோதனைகள் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை போலீசு முன்வைத்தது.

அக்கோரிக்கையை ஏற்றுக் கொண்டு, தேடுதலுக்கு சிறிதும் முகாந்திரம் இல்லாத இந்த வழக்கில், கடந்த 03-07-2018 அன்று, தூத்துக்குடி நடுவர் நீதிமன்ற எண் 3, தேடுதல் ஆணை பிறப்பித்தது. அவ்வாணையில் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் அவர்களின் வீடு மற்றும் அலுவலகத்தில் தேடுதல் நடத்த வள்ளியூர் ஆய்வாளர் சுரேஷ்குமாருக்கு அனுமதியளித்துள்ளது.

இதனையடுத்து 04-07-2018 காலை வழக்கறிஞர் வாஞ்சிநாதன் வீட்டிலும் அலுவலகத்திலும் தேடுதல் பணியை மேற்கொண்டது போலீசு. இத்தேடுதல் வேட்டை குறித்து மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் சென்னை பகுதி செயலர் வழக்கறிஞர் ஜிம்ராஜ் மில்டன் கூறுகையில்,  ”வேண்டுமென்றே வழக்கறிஞர் வாஞ்சிநாதனையும், அவரது குடும்பத்தினரையும் மன உளைச்சலுக்கு ஆளாக்குவதற்கென்றே இந்த தேடுதல் அனுமதியைக் கேட்டிருக்கிறது போலீசு. எவ்வித நியாயமும் இல்லாமல் நீதிமன்றமும் இந்த சோதனைக்கு உத்தரவு வழங்கியிருக்கிறது.

கொடி பேனரை தேடுவதற்காக சோதனை என்கிறார்கள். போலீசுதான் இங்கு முதன்மைக் குற்றவாளி, 13 பேரை கொலை செய்திருக்கிறது போலீசு. அதன் மீதான வழக்கு தூங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் போராடிய மக்களுக்கு சட்ட உதவி செய்த வாஞ்சிநாதனை பொய் வழக்குகளில் கைது செய்து துன்புறுத்துகிறது போலீசு” என்று கூறினார்.

தோழர் வாஞ்சிநாதன் வீட்டையும் அலுவலகத்தையும் சோதனையிட நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட அரசாணை

தகவல்:
மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்
சென்னை