உ.வே.சாமிநாத அய்யரா முதன்முதலில் சிலப்பதிகாரத்தை வெளியிட்டார் ? பொ.வேல்சாமி

ஏற்கனவே வெளிவந்த ஒரு நூலை மீண்டும் கண்டுபிடிப்பதும் அதையே ஒரு ஆய்வாக பலரும் கருதுவதும் தமிழ்க் கல்வி உலகின் அவலநிலையாக உள்ளது.

1

நண்பர்களே….

பொ.வேல்சாமி
31.08.18 தமிழ் இந்துவில் ”களப்பிரன்” எழுதிய கட்டுரையில் 1892 இல் உ.வே.சாவின் முன் முயற்சியால் சிலப்பதிகாரம் அச்சு வடிவம் ஏறியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்தத் தகவல் குறைபாடு உடையது.

சிலப்பதிகாரத்தின் புகார்காண்டம் 1872, 1876, 1880 களில் அச்சில் வெளிவந்து விட்டது. உ.வே.சா 1892 இல்தான் சிலப்பதிகாரத்தை முழுமையாக வெளியிட்டார். அந்த நூலில் அரும்பத உரை பின்னிணைப்பாகத்தான் சேர்க்கப்பட்டுள்ளது. அந்தக் காலகட்டத்தில் (1872, 1876, 1880) சிலப்பதிகாரத்தின் புகார்காண்டம் முழுமையும் ஆங்கில அரசாங்கத்தால் சென்னைப் பல்கலைக் கழகத்தின் B.A. மாணவர்களுக்கு பாடமாக வைக்கபட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 1880 நூலில் புகார்காண்டம் மட்டும் அடியார்க்கு நல்லார் உரையுடனும் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஆதாரமான பக்கங்களை இணைத்துள்ளேன்.

உ.வோ.சாதான் தமிழ்நூல்களை “எல்லாம்” அச்சுக்கு கொண்டு வந்தார் என்ற பிம்பத்தை பலரும் பறைசாற்றி வந்ததின் விளைவுதான் ”களப்பிரன்” போன்ற படித்தவர்களும் இத்தகைய பிழையில் விழ நேர்ந்தது . உ.வே.சா., மற்றவர்களை விட பலபடி மேலே போய் மிகச் சிறப்பாகத் தன் நூல்களை ஆராய்ச்சியாளர்களுக்கு பெரிதும் பயன்படும்படி பதிப்பித்தார் என்பதை எவராலும் மறுக்கமுடியாது. அதே நேரத்தில் மற்ற பதிப்பாசிரியர்களின் பங்களிப்புகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

படிக்க:
கும்பகோணம் யாருக்குச் சொந்தம் ? சிறப்புக் கட்டுரை
கலை இலக்கியம் யாவும் மக்களுக்கே – மாவோ !

ஏற்கனவே வெளிவந்த ஒரு நூலை மீண்டும் கண்டுபிடிப்பதும் அதையே ஒரு ஆய்வாக பலரும் கருதுவதும் தமிழ்க் கல்வி உலகின் அவலநிலையாக உள்ளது. இத்தகைய நிலை நீடித்தற்கான காரணங்களும் சில உண்டு. ஆனால் இன்றைய கணினி யுகத்தில் எந்த அரிய நூலையும் சிறிது முயன்றால் யார் வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளமுடியும். அதற்கான முயற்சியில் அவர்கள் ஈடுபட வேண்டும்.

பொ.வேல்சாமி: தஞ்சாவூர் கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்றவர். தமிழக வரலாற்று ஆய்வில் ஈடுபாடு கொண்டவர். வரலாற்றுத் தரவுகளை மறுவாசிப்பு செய்வதும் மாற்று வரலாற்றை உருவாக்குவதும் இவரது எழுத்தின் முக்கிய நோக்கம். முகநூலில் தொடர்ச்சியாக எழுதுகிறார்.
எழுதிய நூல்கள்:

  • பொற்காலங்களும் இருண்ட காலங்களும்
  • கோவில் நிலம் சாதி
  • பொய்யும் வழுவும்