வஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இடதுசாரி மாணவ அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் மீது கடந்த 2016-ம் ஆண்டு, இந்துத்துவ சக்திகள் நடத்திய தாக்குதல் தேசிய அளவில் பேசு பொருளானது. அந்த நேரத்தில் இந்துத்துவ மாட்டு மூளை ஒன்று, ஜே.என்.யூ-வில் தினமும் 3000 காண்டம்கள் கண்டெடுக்கப்படுவதாகக் கூறி ஊடக வெளிச்சத்துக்கு வந்தது. அவர் வேறு யாருமல்ல, ராஜஸ்தான் எம்.எல்.ஏ. கியான் தேவ் அகுஜாதான் அது.

ஜே.என்.யூ மாணவர் போராட்டம்

வரவிருக்கும் ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலில் நிற்க சீட்டு தரவில்லை என்பதால் தற்போது அவர் பாஜக-விலிருந்து விலகியிருக்கிறார். கட்சி தலைமை சர்வாதிகாரத்துடன் நடந்து கொள்வதால் கட்சியிலிருந்து விலகுவதாக தன்னுடைய விலகலுக்கு காரணம் சொல்கிறார் அகுஜா.

ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டத்தில் உள்ள ராம்கர் தொகுதி எம்.எல்.ஏ-வான அகுஜா, மீண்டும் அங்கு போட்டியிட பாஜக-வில் இம்முறை சீட்டு தரவில்லை. அதனால் சுயேட்சை வேட்பாளராக நிற்கப் போவதாக அறிவித்திருக்கிறார்.

“பாஜக-வின் சர்வாதிகாரத்தனமான நடத்தையை எதிர்த்து அடிப்படை உறுப்பினர் பதவிலிருந்தும்கூட விலகியிருக்கிறேன். ராம ஜென்ம பூமி, பசுப் பாதுகாப்பு, இந்துத்துவம் போன்ற விஷயங்களை முன்வைத்து சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுவேன்.” என்கிறார் அகுஜா. நூற்றுக்கும் மேற்பட்ட இந்துத்துவ அமைப்புகள் இந்த ஒரே அஜெண்டாவை வைத்து இயங்கும்போது, அகுஜாவுக்கும் அது பெரிய பிரச்சினை இல்லை.

படிக்க:
♦ பசுவின் பெயரால் படுகொலை செய்வது நாங்கள் தான் – பாஜக எம்.எல்.ஏ. ஒப்புதல்
♦ பெஹ்லு கான் கொலையாளிகளை பாதுகாக்கும் ராஜஸ்தான் அரசு !

சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில் ஆல்வார் மாவட்டத்தில் உள்ள மூன்று தொகுதிகளையும் காங்கிரஸ் கைப்பற்றியது. இதன்காரணமாக ராம்கர் தொகுதியில் சுக்வந்த் சிங் என்பவரை பாஜக வேட்பாளராக நிறுத்தியுள்ளது.

கியான் தேவ் அகுஜா

ஆல்வார், ஆஜ்மீர் ஆகிய மக்களவை தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக மண்ணைக் கவ்வியதற்கு முதல்வர் வசுந்தரா ராஜேதான் காரணம் என அகுஜா பேசிய ஆடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையானது.  வசுந்தரா ராஜேவுக்கும் அகுஜாவுக்கும் தொடர்ந்து புகைச்சல் இருந்து வந்தது.  இதன் காரணமாக அரசு பதவிகளிலிருந்து அகுஜா நீக்கப்பட்டார். ஆனால், தனது மீசையில் மண் ஒட்டவில்லை என்பதுபோல, தனது தொகுதி பணிகளில் கவனம் செலுத்த பதவிகளிலிருந்து விலகியதாக விளக்கம் சொன்னார் அகுஜா.

ஜே.என்.யூ-வில் 50,000 எலும்புத் துண்டுகளும் 3,000 காண்டம்களும், 500 கருக் கலைப்பு ஊசிகளும், 10,000 சிகரெட் துண்டுகளும் தினமும் கண்டெடுக்கப்படுவதாக சொல்லி ஊடக வெளிச்சம் தேடிக்கொண்ட அகுஜாவை வெறுமனே ஒரு இந்துத்துவ காமெடியனாக எண்ண வேண்டாம். அகுஜா ஒரு கடைந்தெடுத்த இந்துத்துவ வெறியர்.

ஆல்வாரில் இந்துத்துவ வெறியர்களால் மாடு கடத்தியவர்கள் என்கிற பெயரில்  அடித்துக் கொல்லப்பட்ட பெஹ்லு கானின் மரணத்தை நியாயப்படுத்தியவர். “பசுவை கடத்துகிறவர்களும் பசுவைக் கொல்பவர்களும் பாவம் செய்தவர்கள். அவர்கள் செய்த பாவத்துக்கான பலனை அனுபவித்துதான் ஆக வேண்டும்” என கொலையை ஆதரித்துப் பேசியவர் அகுஜா.  அதோடு, பசுவைக் கடத்தினாலோ, கொன்றாலோ நிச்சயம் கொல்லப்படுவீர்கள் என வெளிப்படையாக பேசியவர் இந்த அகுஜா.

மாட்டு மூளை வெறியர்களைக் கொண்டு இயங்கும் பாஜகவுக்கு அகுஜாவின் விலகலால் பெரிய இழப்பா? மொத்த கட்சியுமே இத்தகைய காவி வெறியேறிய ரவுடிகளால் நிறைந்திருப்பதால் இழப்பொன்றுமில்லை. ஆனால் பார்ப்பனிய முட்டாள்தனத்திலும், இந்துத்துவ வெறியிலும் போட்டி போட்டுக் கொண்டு முன்னேறுபவர்களுக்கே பாஜக-வில் பதவி நிச்சயம். அந்த இலட்சியத்தில் ஊறித்திளைத்த அகுஜா தற்போது தனிக்கடை ஆரம்பித்திருப்பதால் இத்தகைய கடைப் போட்டிகள் இனி பாஜக-வில் ஆங்காங்கே அதிகம் நடக்கும்!

செய்தி ஆதாரம்: Denied ticket, Rajasthan MLA behind ‘condoms in JNU’ claim quits BJP

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க