டப்பாடி, பாஜக புகழ் பாடும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை வர்த்தக மையத்தில் 23-24 ஆகிய தேதிகளில் நடந்து முடிந்துள்ளது. இந்த மாநாட்டின் மூலம் உலக அளவில் உள்ள வர்த்தக நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டு தொழிற்துறை வளர்ச்சியடையும் என்று தமிழக அரசும், ஊடகங்களும் சொல்கின்றன.

ஏற்கனவே 2015-ல் ஜெயலலிதா முதன் முதலாக இதே போன்றதொரு மாநாட்டினை நடத்தினார். அதில் 2.42 லட்சம் கோடி அளவிற்கு முதலீடு ஈர்க்கப்பட்டதாக கூறினார்கள். ஆனால் அந்த முதலீடு எங்கு, எதில் போடப்பட்டது… அதன் மூலம் அடைந்த வளர்ச்சி – வேலைவாய்ப்பு என்ன என்பதெல்லாம் தேவ ரகசியம்.

தொழிற்துறை அமைச்சர் சம்பத் வாழ்த்திய இந்த பேனர் தமிழிலும் ஆங்கிலத்திலும் பல இடங்களில் முதுகு சொறிந்து கொண்டிருந்தது.

அந்த தேவ ரகசியத்தின் பின்னே உள்ளபடியே ஒன்றுமில்லை. தற்போது நடைபெற்ற இந்த மாநாட்டினை தொடங்கி வைத்து பேசிய எடப்பாடி பழனிச்சாமி, “இந்த மாநாட்டின் மூலம் நிர்ணயித்த இலக்கினை விட கூடுதலாக முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளதாகவும், ஜெயலலிதாவின் தொலைநோக்குத் திட்டமான 2023” வளர்ச்சியை நோக்கி தமிழகம் சென்று கொண்டிருப்பதாக கூறினார். பாஜக-வின் அடிமை அரசாக நீடிக்கும் எடப்பாடி ஓபிஎஸ் அரசின் ஆட்சியில் ஊழல்களின் பட்டியல்தான் வெகுவேகமாக வளர்ச்சியடைவதை பார்க்கிறோம்.

அதேமாநாட்டில் தொழில்நிறுவனங்களின் கண்காட்சியையும் தொடங்கி வைத்தார் முதலமைச்சர்.  அதற்கு பெயர் “டிஜிட்டல் கண்காட்சியாம்”. அந்த அரங்கத்திற்குள் நுழைந்து பார்த்தால் இது உலக முதலீட்டாளர்கள் மாநாடா? இல்லை ஊறுகாய் விற்பவர்களின் சந்தையா? என்று சாலமன் பாப்பையா தலைமையில் பட்டி மன்றமே நடத்தலாம்.

கண்காட்சி என்றால் சும்மாவா….. டில்லி அப்பளம் கோன் ஐஸ், கரும்பு ஜூஸ் இதையே மாற்றி டிஜிட்டலில் உலக முதலீட்டாளர்கள் கண்காட்சியின் கண்கொள்ளா காட்சி.  கவின்ஸ், ஆவின், பிரிட்டானியா. சக்தி மசாலா, ஆச்சி மசலா, ஜி.பி.ஆர் என்று இப்படி மணக்க,ருசிக்க முதலீடு தமிழ்நாட்டில் பாயுமாம்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

இந்த ஊறுகாய் முதலாளிகளை சந்திக்கத்தான் கடந்த ஆறு மாதங்களாக அரசு செலவில் வெளிநாடுகளில் உல்லாச பயணங்கள் சென்றிருக்கிறார்கள் அமைச்சர்கள். மாநாட்டை கோடிக்கணக்கில் செலவு செய்து சிறப்பாக ஏற்பாடு செய்திருப்பதாக பெருமைப்படுகின்றன தமிழக ஊடகங்கள். உண்மையில் இந்தப் பெருமை விளம்பர வருவாய் என்ற நலனுக்காக அளிக்கப்பட்ட எழுத்து மொய்.

இந்த மாநாட்டிற்கு பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீத்தாரமனும், து.குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவும் சிறப்பு விருந்தினர்களாம்..! ஜெயலலிதா இறந்து போன நேரத்தில் இருந்து குத்துக்கல்லாக அரசியல் நகர்வுகளை இயக்கியவர் வெங்கையா நாயுடு. அந்த இயக்கம் இந்த மாநாட்டிலும் நீடிக்கிறது. நிர்மலா சீதாராமன் “வானூர்திக் கொள்கை”யை வெளியிட்டார். தமிழகத்தில் இத்துறை தொழில் மண்டலத்தை ஆரம்பிக்கிறார்களாம். சரி போகட்டும் அந்த வானூர்திக் கொள்கையில் ரஃபேல் விமான ஊழல் மாதிரிகள் உண்டா என்று தெரியவில்லை.

கொரியா, சிங்கப்பூர் என்று சில நாடுகளில் இருந்தும், அதிலும் சென்னையில் இருக்கும் வெளிநாட்டு தூதர்களே நிறைந்திருக்க, இந்த ‘முதலீட்டாளர்களை’ மகிழ்விக்க பல கோரி ரூபாயில் ஏற்பாட்டுச் செலவுகள். வெண்தோல் விருந்தினர்களை மகிழ்விக்க ஆட்டம்….பாட்டம்… கொண்டாட்டம் என நடந்து முடிந்திருக்கிறது இந்த மாநாடு. இறுதியாக இந்த மாநாட்டின் மூலம் 3.431 லட்சம் கோடி முதலீட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளாதாகவும், பத்து லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் எனவும் அறிவித்திருக்கிறார்கள். இந்த புள்ளிவிவரங்கள் அனைத்தும் மோசடி என்பது ஊரறிந்த உண்மை. ஏற்கனவே இருக்கும் நிறுவனங்கள் தமது தொழிலில் போட்டுள்ள சிறு எண்ணிக்கையிலான முதலீடு கூட இந்த பட்டியலில் இருப்பது ஒரு சோறு பதம்.

இந்த அறிவிப்பு குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “முதல் உலக மாநாட்டிற்கு பிறகு நாட்டிற்குள் வந்த அந்நிய முதலீடுகளில் தமிழகம் பெற்றது 0.79 சதவீதம் மட்டுமே. அதிமுக ஆட்சியின் வரலாறு காணாத “கமிஷன், கலெக்ஷன், கரெப்ஷன்” ஆகியவற்றால் நம்பிக்கையிழந்த முதலீட்டாளர்கள் வேறு மாநிலத்திற்குச் சென்று விட்டார்கள்” எனவும், இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு அரசின் செலவில் நடத்தப்பட்ட அதிமுகவின் தேர்தல் பிரச்சார மாநாடு எனவும், இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்டுள்ளதாக சொல்வதெல்லாம் வரைமுறையின்றி அளந்து விட்டிருக்க்கிறார்கள். இது “2019-ம் ஆண்டிற்கான” முதல் பொய் வாக்குறுதி என்றும்  தெரிவித்திருக்கிறார். இந்த பொய் வாக்குறுதி அரசாங்கத்தை தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒன்றுமே செய்ய முடியவில்லை என்பது இந்த அரசமைப்பின் தரத்தைக் காட்டுகிறது.

எடப்பாடி, ஓபிஎஸ்-ஐ வாழ்த்தி பிளக்ஸ் பேனர்கள், ஏராளமான போலீசு அதிகாரிகள், காவலர்கள், துப்புறவு தொழிலாளிகள், சமையற் கலைஞர்கள், வாகன ஓட்டுநர்கள் இவர்கள்தான் மாநாட்டின் ஜனத்தொகையில் 95% இருந்தனர். போலீசு அதிகாரிகள் அன்று சுத்தமான அல்லது புதிதாக தைக்கப்பட்ட சீருடையை அணிந்திருந்தார்கள். துப்புறவு தொழிலாளிகளின் ஃப்ளோரசண்ட் ஜாக்கட் புதிதாக இருந்தது. போலீசு அதிகாரிகள் அனைவரும் எந்த பதட்டமுமின்றி சாப்பிட்டுக் கொண்டும் அரட்டை அடித்துக் கொண்டும் இருந்தார்கள். வேலை என ஒன்று இருந்தால் அல்லவா பதட்டம் இருக்கும்.

மொத்தத்தில் மக்கள் பணம் கோடிக்கணக்கில் விரயமானதுதான் இந்த மாநாடு கண்ட பலன்.

அன்று மட்டும் கத்திப்பாரா பாலம் சுத்தபத்தமாக விளங்கியதோடு வராத முதலீடுகளுக்காக விளம்பரங்களையும் தாங்கியிருந்தது.

எடப்பாடி ஒப்பற்ற முதல்வராம், ஓபிஎஸ் ஈடில்லா துணை முதல்வராம் – துதிபாடுதலின் ஆக கடைத்தரமான கவிதை!

திரும்பிய பக்கமெல்லாம் மொபைல் டாய்லட்டுகள், தண்ணீர் டாங்குகள் – என்ன பலன்?

நந்தம்பாக்கம் டிரேட் சென்டரில் – அலங்கார வண்டி விளம்பரம்! எம்ஜிஆரின் நூற்றாண்டுக்கும் ஜப்பான் முதலீட்டாளருக்கும் என்ன தொடர்பு?

சிட்டி யூனியன் வங்கி, இந்தியன் வங்கி, ஸ்டேட் வங்கி… கல்விக் கடன், விவசாய குறுங்கடன் வாங்கியவர்களை கிரிமினலாக்கி தற்கொலைக்கு தூண்டும் வங்கிகள்… பன்னாட்டு முதலாளிகளுக்காக காத்திருக்கிறது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

நாமிருப்பது சென்னையா, இலண்டனா என சினிமா செட்டிங்கில் போட்டி போடும் அலங்கார வாயில்கள், சர்வதே நாடுகளின் கொடிகள், பில்டப்புகள்!

அதானி…! மோடிக்கு எஜமான்….. எடப்பாடிக்கு முதலீட்டாளர்…

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

மத்திய மாநில அரசுகள் மற்றும் தனியார் நிறுவனங்களின் அரங்குகள் – உலக முதலீட்டாளர்களை அசத்தும் அரிய அரங்குகள்!

நடைபாதை வைத்தியர் பாணியில் சர்வரோக நிவாரண கடை விரிப்பு….

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

குண்டும் குழியுமான சாலையில் இந்த வாகனங்களை யார் ஓட்ட முடியும்? குளோபல் இன்வெஸ்டர் மாநாட்டில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்கள் யாருக்காக ?

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

முதலீட்டாளர் மாநாட்டில் நாம் என்ன செய்வது எனப் குழப்பமடைந்து காஃபி கடைகளில் குழுமி இருக்கும் கூட்டம்…

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

அருகாமை பொறியியல் கல்லூரிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட மாணவ தொண்டர்கள் மற்றும் நுனி நாக்கு ஆங்கிலப் பேசும் இதர ‘தொண்டர்கள்’

நூல் நெசவு கண்காட்சி: கோவை ஜவுளித் துறையின் நலிவை மறைத்து விட்டு இங்கு வெட்டி பந்தா காட்டுவதில் என்ன பயன்?

ட்ரோன் டாக்ஸி….ஸ்டெர்லைட் போராட்டத்தை ஒடுக்க பயன்பட்ட ட்ரோன் காமராவின் வளர்ச்சி – ரஃபேல் புகழ் பாஜகவின் வானியல் துறை வளர்ச்சி!

ஐந்து நட்சத்திர விடுதி கொண்டாட்ட ஏற்பாட்டை பின்னால் இருந்து நிறைவேற்றிய உழைக்கும் மக்கள்… நிகழ்ச்சியின் முதுகெலும்பு…! இன்று மட்டும் புதிய சீருடை!