மோடியின் முதல் ஐந்தாண்டு ஆட்சிக் காலத்தில் கார்ப்பரேட்டுகளுக்கு ரூ. 4.3 இலட்சம் கோடிக்கும் அதிகமான வரிச்சலுகை அளிக்கப்பட்டிருக்கிறது. அதே சமயத்தில் இதை ஈடுகட்டும் விதமாக பல்வேறு மக்கள் நலத்திட்டங்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிதியை குறைத்துள்ளது மோடி அரசு.

2014-15 ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் கார்ப்பரேட்டுகளுக்கு அளிக்கப்படும் வரிச்சலுகை அதிகரித்துக்கொண்டே வந்துள்ளது ‘கார்ப்பரேட் நல மோடி அரசு’.  2014-ம் ஆண்டு ரூ. 65,067 கோடியாக இருந்த வரிச்சலுகை, 2018-19-ம் ஆண்டுகளில் ரூ. 1.09 இலட்சம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.  இது மத்திய அரசின் நிகர வரி வருவாயில் 7.6% ஆகும்.

ஒரு பக்கம் கார்ப்பரேட்டுகளுக்கு அள்ளிக்கொடுத்துவிட்டு, இன்னொரு பக்கம் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக திட்டங்கள் அல்லது அவர்களின் நலனை நிலைநிறுத்துவதற்கான திட்டங்களுக்கு அளிக்க வேண்டிய நிதியை மடை மாற்றியுள்ளது இந்த அரசு. ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்துக்கு ரூ. 60,000 கோடி மட்டுமே 2019-20 ஆண்டுக்கான பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. அதுபோல, அங்கன்வாடி சேவை திட்டங்களுக்கு ரூ. 23, 234 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதுபோல, இந்த ஆண்டு முக்கியமான துறைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி, கார்ப்பரேட்டுகளுக்கு அளிக்கப்பட்ட வரிச்சலுகையோடு ஒப்பிடும்போது மிகக் குறைவானதாகும். உதாரணத்துக்கு, சுகாதாரம் மற்றும் குடும்ப நல துறைக்கு ரூ. 62,659 கோடியும் பள்ளி மற்றும் கல்வியறிவு துறைக்கு ரூ. 56,537 கோடியும் உயர்கல்வி துறைக்கு ரூ. 38,317 கோடியும் குடிநீர் மற்றும் துப்புரவு துறைக்கு ரூ. 20,016 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. கார்ப்பரேட்டுகளுக்கு மட்டும் எதற்கு இந்த வரிச்சலுகை என்பதற்கு மத்திய அரசு அளித்திருக்கும் விளக்கம், ‘முன்வந்து வரி செலுத்துகிறவர்களுக்கு அரசு அளிக்கும் மறைமுக மானியம்’ என்பதாகும்.  கார்ப்பரேட்டுகளுக்கு அள்ளி வழங்குவதை ‘வரி சலுகைகள்’,  ‘வரி செலவுகள்’ என 2015-16 முதல் சொல்லிவருகிறது அரசு. நிதியமைச்சகத்தில் உள்ள நிபுணர்கள் கார்ப்பரேட்டுகளுக்கு அளிக்கப்படும் இதுபோன்ற வரிச்சலுகைகள், வேலைவாய்ப்பை உருவாக்கும் என்றும் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தும் என்றும் கூறுகின்றனர்.

கார்ப்பரேட்டுகளுக்கு தாராள வரிச்சலுகை அளிப்பதை மோடி அரசு மட்டும் செய்யவில்லை. 2006-07-ம் ஆண்டு பட்ஜெட்டிலிருந்துதான் இதுபற்றி வெளியே தெரிய வந்தது. ஐமுகூ-2 அரசின் மொத்த கார்ப்பரேட் வரிச்சலுகை  ரூ. 3.52 இலட்சம் கோடி. மோடி முந்தைய அரசின் வழியைப் பின்பற்றியதோடு, அதை தனது ஆட்சிக்காலத்தில் 22% அதிகமாக வாரி வழங்கினார்.

கல்வி அல்லது சுகாதாரக் கட்டுமானத்துக்கு அதிக நிதி தேவைப்படும் நிலையில், ரயில்வே துறைக்கு அதிக மூலதன முதலீடு தேவைப்படும் நிலையில், விவசாயிகளுக்கு கால்வாய்கள் வழியாக மேற்பரப்பு நீரை அடிப்படையாகக் கொண்ட நீர்ப்பாசன அமைப்புகள் தேவைப்படும் நிலையில், அரசுகள் தொடர்ந்து கார்ப்பரேட்டுகளுக்கு வாரி வழங்குவதற்கு பல்வேறு ‘காரணங்களை’ சொல்லிவருகின்றன.

படிக்க:
ஆக்ஸ்ஃபாம் சர்வே : ஏழை இந்தியாவை ஒழிக்கும் பணக்கார இந்தியா !
கார்ப்பரேட் – காவி பாசிசம் ! மோடி ஆட்சியின் ஐந்தாண்டு தொகுப்பு ! அச்சுநூலை ஆன்லைனில் வாங்கலாம்

கார்ப்பரேட்டுகளை ஊக்கப்படுத்தினால், அவர்கள் அதிகம் முதலீடு செய்வார்கள் அதனால் வேலைவாய்ப்பு பெறும் என வாதிட்டார்கள். முகத்தில் அடித்தாற்போல கடந்த ஐந்தாண்டுகளில் உற்பத்தி திறன்களில் தனியார் முதலீடு தேங்கிப் போயுள்ளது, வளரவேயில்லை.  கார்ப்பரேட்டுகளுக்கு தரப்படும் வரிச்சலுகைகள் அவர்களுடைய இலாபத்தை அதிகரிக்கச் செய்கிறதே அன்றி, வேலைவாய்ப்பையோ வளர்ச்சியையோ உண்டாக்கவில்லை.

சுருக்கமாகச் சொல்வதென்றால் கார்ப்பரேட்டுகளுக்கு அளிக்கப்படும் சலுகைகள் அல்லது விலக்குகள் என்பது மத்திய அரசு பிரதிநிதித்துவப்படுத்தும் அதானி – அம்பானி உள்ளிட்ட பெருமுதலாளிகளுக்கு உதவும் ஒரு வழியாகும்.


கலைமதி
நன்றி : நியூஸ் க்ளிக்