இரட்டை வாய்க்கால் : ஊர் தாலியறுக்கும் டாஸ்மாக் சாராயக் கடையை புதிதாகத் திறக்காதே !

  • பூரண மதுவிலக்கு, படிப்படியாக கடை நேரம் குறைப்பு…
    என்பதெல்லாம் ஏமாற்று !
  • சாராயம், கஞ்சா போதையில் ஆழ்த்தி மக்களை நாசமாக்காதே !
  • அதிகாரத்தை கையிலெடுப்போம் ! டாஸ்மாக்கை விரட்டியடிப்போம் !

திருச்சி மேற்கு தாலுக்கா ரெட்டைவாய்க்கால் பகுதியில் புதிதாக டாஸ்மாக் சாராயக் கடை திறப்பதை கண்டித்து, மேலத்தெரு ஊர் பொதுமக்கள் மற்றும் மக்கள் அதிகாரம் தோழர்கள் இணைந்து திறக்கப்பட உள்ள கடை வாசலில் நேற்று (30.09.2019) மாலை 6.30 மணியளவில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் பெண்கள், சிறுவர் – சிறுமியர், இளைஞர்கள், தோழர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். “பெண்களின் தாலியறுக்கும், இளைஞர்களை சீரழிக்கும் சாராயக் கடையை மூட வேண்டும்!” என முழக்கமிட்டனர். போலீசார் வந்து “கடை இங்கு திறக்கப்படாது…” என உறுதியளித்த பிறகு போராட்டத்தை மக்கள் கைவிட்டனர்.

கடை திறந்தால் வந்து மூடுவோம். என ஆவேசத்துடன் சென்றனர். இதில் மக்கள் அதிகாரத்தின் மண்டல ஒருங்கிணைப்பாளர் செழியன் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

இந்நிலையில் இன்றும் (01.10.2019) போலீசாரின் வாய்வழி உத்திரவாதங்களை நம்ப முடியாது என்பதை தங்கள் அனுபவத்தில் உணர்ந்துள்ள பொதுமக்கள், மீண்டும் போராட்டத்தை துவங்கியுள்ளனர். இதில் விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த அய்யா சின்னத்துரை, மற்றும் மக்கள் அதிகாரம் தோழர்கள் என போராடும் அமைப்புகள், மக்களுடன் இணைந்துள்ளனர்.

இங்கு புதிதாக டாஸ்மாக் திறக்கப்படாது என்பதை எழுத்து பூர்வ உத்திரவாக வட்டாட்சியர் தரவேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தற்போது போராட்டம் நடக்கும் பகுதிக்கு வட்டாட்சியர் நேரில் வந்துள்ளதால், அவரிடம் மக்கள் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிகாரத்தை கையிலெடுப்போம் என்ற மக்கள் அதிகாரம் அமைப்பின் முழக்கமானது, மக்களைப் பற்றிக் கொண்டுள்ளது. வாருங்கள் இனி உங்கள் ஊரில், உங்கள் தெருவில் உள்ள சாராயக்கடைகளையும் அகற்றுவோம்… !

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மேலத்தெரு ஊர் பொதுமக்கள் (மற்றும்) 
மக்கள் அதிகாரம்
திருச்சி, தொடர்புக்கு : 94454 75157.